எண்ணம் -29

4.9
(8)

எண்ணம் -29

“எங்க கிளம்புற தியா!” என்ற குரலில் பதறி திரும்பினாள் தியாழினி.

“ஆஃபிஸுக்கு தான் அண்ணா!” என்றவள், முயன்று முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டாள்.

“தியாமா! அதான் நேத்தே கொட்டெஷன் அமவுண்ட எனக்கு வாட்ஸ்அப் பண்ணிட்டியே. நானும் நேத்தே கோட் பண்ணிட்டேன். அப்புறம் ஏன் ஆஃபிஸுக்கு போற. நீ செய்த வேலை மட்டும் அந்த ஆர்.கே க்கு தெரிஞ்சிருச்சுன்னா, தொலைச்சிடுவான். நான் சொன்னது போல அவனுக்கு தெரியாமல் ரெஸ்ட் ரூம்ல போய் தானே எனக்கு வாட்ஸ் அப் பண்ண.”

“ ஆமாண்ணா!” என்றவளுக்கு தான் என்ன செய்தோம் என்பதே நினைவில் இல்லை. அந்த எண்கள் கண் முன்னே பறந்தது மட்டுமே ஞாபகம் இருக்க. மற்றது எதுவும் நினைவில் இல்லை.

“இனி அந்த ஆஃபிஸுக்கு நீ போக வேண்டாம் தியா. அந்த ப்ராஜெக்ட் நம்ம கைக்கு கிடைச்சதும், வர்ஷி வீட்ல பேசப் போறேன். எங்க கல்யாணம் முடிஞ்சதும், அவங்க சர்குள்ல நல்ல மாப்பிள்ளையா பார்த்து உனக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்றேன். அந்த ரித்திஷ்ப்ரணவ் நமக்கு செட்டாக மாட்டான். அண்ணன் உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன். புரியுதா?”

“புரியுது அண்ணா! ரித்திஷ்ப்ரணவோட நம்பிக்கைக்கு நான் உண்மையா இல்லை. எதிர்காலம் இல்லாத காதல்ல நான் விழ மாட்டேன். நீ பயப்படாதே. அப்புறம் உடனே வேலையை விட்டு நின்னா சந்தேகம் வந்துரும். டிரைனிங் முடியுற வரைக்கும் போயிட்டு வர்றேன்ணா.” என்றவள், விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினாள்.

‘கூடப் பிறந்த அண்ணனை விட, இப்போ வந்த அவன் முக்கியமா போயிட்டான். நல்லவேளை வர்ஷி ஏதோ பேசி, அந்த கொட்டெஷன் அமவுண்ட தியாவை சொல்ல வச்சுட்டா. இனி என்னமோ பண்ணிக்கட்டும். நம்ம சொல்ற பேச்சை கேக்குறாளா பாரு.’ என்று எண்ணி தலையசைத்த நேத்ரன் அவனது வேலையை கவனிக்கச் சென்றான்.

தன்னை சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அறியாமல் அலுவலகத்திற்குள் நுழைந்த தியாழினி கண்டது என்னவோ ரித்திஷ்ப்ரணவின் கோபமான முகத்தைத் தான்.

அவன் யாரிடமோ கடுமையாக பேசிட்டு இருக்க.

‘ என்னாச்சு சாருக்கு உண்மைத் தெரிஞ்சுடுச்சோ!’என்று எண்ணியவளுக்கு,

பயத்தில் கால்கள் தடுமாற, கீழே விழப் போனாள்‌.

வொர்க்கர்ஸிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தவன் இவள் தடுமாறுவதை பார்த்ததும், வேகமாக வந்து தாங்கிக் கொண்டான்‌.

“யாழினி! என்னாச்சு? நேத்து ஈவினிங்கும் நீ சரியில்லை. உடம்பு சரியில்லைன்னா, ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியது தானே. இல்லைன்னா வா, நம்ம பேமிலி டாக்டர் கிட்ட போய் ஃபுல் செக்கப் பண்ணிக்கலாம்.” என்று பதற்றத்துடன் ரித்திஷ்ப்ரணவ் வினவ.

அவனது அன்பில் நெக்குறுகி போனவளோ, ‘ இந்த அன்பு தொடர்கதையில்லை. தான் செய்த செயல் தெரிய வந்தால் அவ்வளவு தான்.’ என்று எண்ணி, அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்.

அவளது பரிதவிப்பில் குழம்பிப் போனான் ரித்திஷ்ப்ரணவ்.

“சொல்லுடா!” என்றவனது அணைப்பு இறுக.

அப்பொழுது தான் இன்னும் அவனது அணைப்பிலே இருப்பதுப் புரிய, பதறி விலகினாள் தியாழினி.

அவளது விலகலில் சுய உணர்வுக்கு வந்த ரித்திஷ்ப்ரணவ், சுற்றி உள்ளவர்களை பார்த்து விட்டு, தலையை உலுக்கிக் கொண்டான்.

வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்த கோபியை பார்த்ததும்,’ ம்! போச்சு… இனி வீட்டுல வேற இன்வெஸ்டிகேஷன் நடக்கும். நம்ம மனசு தெரிஞ்சுட்டா, கல்யாணத்தையே நடத்தி முடிச்சிடுவாங்க. முதல்ல யாழினி கிட்ட காதலை சொல்லணும்.’ என்று தலையசைத்தவன், திரும்பி கோபியை பார்க்க.

இன்னும் அதே பொசிஷனில் இருக்க.

“கோபி அங்கிள்!”என்று சத்தமாக அழைக்க.

“ஹான்! கூப்பிட்டீங்களா சார்?” என்று பதற்றத்துடன் வினவ.

“இன்னும் எவ்வளவு நேரம் வாய் பார்த்துக் கிட்டு நிக்கப் போறீங்க.”என்று கோபியிடம் வினவினாலும், அவனது பார்வை, அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் வலம் வர‌‌.

எல்லோரும் அவரவர் வேலையை கவனிக்க செல்ல.

தியாழினியை தன் பின்னே வருமாறு சைகை செய்தவன், அறையை நோக்கிச் சென்றான்.

தயக்கத்துடனே சென்றாள் தியாழினி.

அங்கோ கண்மூடி, புன்னகையுடன் சுழல் நாற்காலியில் சுழன்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ்.

முகம் முழுவதும் புன்னகையில் பளபளத்திருக்க, அவனையே விழுங்குவதுப் போல பார்த்துக் கொண்டிருந்தாள் தியாழினி.

அவளது வருகையை உணர்ந்து கண்ணைத் திறந்துப் பார்க்க. அவன் திடீரென்று தன்னைப் பார்ப்பான் என்று நினைத்திராத தியாழினியோ, திரு திருவென முழிக்க.

அவளது பாவனையில் அடக்கமாட்டாமல் நகைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.

எதற்கெடுத்தாலும் சிரிக்கும் ரித்திஷ்ப்ரணவ்வை தன் மனப் பெட்டகத்தில் சேகரித்துக் கொண்டாள்.

ரித்திஷ்ப்ரணவ் புருவத்தை உயர்த்தி,”என்ன?” என்று வினவ.

“ஒன்னும் இல்லை சார்! வேலை இருக்கு. நான்… போறேன்.” என்று உளறிக் கொட்டி அவளது கேபினுக்கு ஓடினாள் தியாழினி.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிற்குள், ‘இது என்ன புது வித அவஸ்தையா இருக்கு. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும். அதுக்கு முதல்ல யாழினிக் கிட்ட காதலை சொல்லணும். எப்படி சொல்றது?’என்று எண்ணியவாறே அன்றைய பொழுதை கழித்தான் ரித்திஷ்ப்ரணவ்.

மாலை வீட்டிற்கு செல்லும் போதும் இதே யோசனையுடனே சென்றான் ரித்திஷ்ப்ரணவ்‌.

 அங்கு அவனை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“ அண்ணாவுக்கும், லவ்வுக்கும் செட்டாகாது. அண்ணா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.” என்று தன்வி சொல்லி சிரிக்க.

“ இல்லை தனு! கோபி தெரியாமல் எதுவும் சொல்ல மாட்டார். என்னங்க நீங்க ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க‌.” என்று தீபா, மகளிடம் ஆரம்பித்து, கணவரிடம் முடித்தார்.

‘ஆமாம் நான் சொன்னா மட்டும் ஏத்துக்கவா போற. எனக்கும் ப்ரணா லவ் பண்றாங்குறதுல நம்பிக்கை இல்லை.’ என்று மனதில் புலம்பியவாறே, “ஆமாம் தீபு நீ சொல்றது சரி தான்.” என்றார்.

“என்ன சரி?” என்றவாறே வந்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“அது வந்து…” என்று கேசவ் இழுக்க.

அவரை முறைத்த தீபா,” ப்ரணா! நீ நம்ம தியாவை லவ் பண்றியா? கோபி சொன்னாரு. தியாவை உனக்கு புடிச்சிருக்கா சொல்லுப்பா. நானும், உங்க அப்பாவும் அவங்க வீட்ல போய் நாளைக்கே பேசுறோம். முதல் முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணனும். மண்டபம் பார்க்கணும்.” என்று ஆர்வமாகக் கூற.

“நான் லவ் சொன்னதை கோபி அங்கிள் பார்த்தாராமா?” என்று வினவியவன், ‘ நானே யாழினி கிட்ட எப்படி லவ் சொல்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்‌ அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க. எல்லாம் இந்த அங்கிளலா வந்தது. முதல்ல அவரைத் தூக்கணும்.’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆர்வமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த தீபாவிற்கோ ஏமாற்றம் ஆனது.

தன்வி நமட்டு சிரிப்புடன் இருக்க.

 அவளை முறைத்து விட்டு, “ அப்புறம் ஏன் அந்த கோபி சொன்னாரு. இருக்கு அவருக்கு நாளைக்கு கச்சேரி. சரி நான் கோவிலுக்கு கிளம்புறேன்.” என்று ஏமாற்றத்தோடு, தீபா கிளம்ப.

“நானும் வரேன் தீபு.” என்று கேசவ்வும் கிளம்பினார். தீபாவின் ஏமாற்றம் சுமந்த முகத்தைப் பார்த்து ஆறுதலுக்காக கூட சென்றார்.

தன்வியும் அங்கிருந்து நழுவ பார்க்க.

“ தனு! காபி குடிச்சிட்டியா?”

“இல்லண்ணா!”

“குட்! அப்போ உனக்கும், எனக்கும் காஃபி எடுத்துட்டு என்னோட ரூமுக்கு வா. கொஞ்சம் பேசணும்.” என்றுக் கூற.

தன்விக்கு திக் என்றானது.

காஃபியை போட்டுக் கொண்டிருக்கும் போதே, மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. ஐயோ! அம்மா கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நக்கல் பண்ணோமே, அதை கேட்டுட்டாரோ. ச்சே இருக்காது. இல்ல போன வாரம் செமஸ்டர் ஒழுங்கா எழுதலன்னு சொன்னமே. அது அண்ணனுக்கு தெரிஞ்சுருச்சோ. தெரிஞ்சாலும் ரிசல்ட் வந்தததுக்கப்புறம் தான் வச்சு செய்வார். இல்லை! அம்மாவை பார்த்து கிண்டலா சிரிச்சமோ அதைப் பார்த்திருப்பாரோ‌. ஐயோ! ஒன்னும் புரியலையே. நான் மட்டும் சிவனேனு தானே இருந்தேன் .இந்த அம்மா கூப்பிட்டு வச்சு, என்ன அண்ணனோட கோர்த்து விட்டுட்டு, அந்த சிவனைப் பார்க்க ஜாலியா போயிட்டாங்களே.’ என்று புலம்பியவாறே ரித்திஷ்ப்ரணவின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கும், இங்கும் நடைபயின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ்.

இவளது வருகையை கவனிக்கவே இல்லை. தொண்டை அடைத்துக் கொள்ள, மெல்ல செறுமி, “அண்ணா! காபி…” என்றாள்.

மவுனமாக அதை வாங்கியவன்‍, அவளையும் குடிக்குமாறு சைகை செய்ய.

பலியாடு போல் தலையாட்டியவள், காஃபியை அருந்தத் தொடங்கினாள்.

தங்கையைப் பார்ப்பதும், பிறகு காஃபியை அருந்துவதுமாக இருந்தான்.

பிறகு தலையை உலுக்கியவன், “தனு! லவ் எப்படி ப்ரபோஸ் பண்ணுனா, இப்போ உள்ள ஜெனரேஷனுக்குப் பிடிக்கும்?” என்று ஒரு வழியாக வினவ.

குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேற அதிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தாள் தன்வி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!