அசுரனின் குறிஞ்சி மலரே.. 14

4.9
(16)

குறிஞ்சி மலர்.. 14

அறையில் இருந்த மின்குமிழ்களில் இருந்து கசிந்து வந்த வெளிச்சத்தில், மூலைக்கு மூலையாக இருந்த இரண்டு பெண்மணிகளையும் தான் கோதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அழுக்கேறிய புடவையும், வாரப்படாமல் சிக்கேறிய தலைமுடியும், மங்கிப்போன கண்களும், காயம் பட்டுக் கிடந்த கைகாலும், வெளிறிப் போன முகமும் என பார்ப்பதற்கே பயந் தரக் கூடிய தோற்றத்தில் தான் இரண்டு பெண்மணிகளுமே இருந்தார்கள்.

அதிலும் வலது பக்க மூலையிலிருந்த ஜேம்ஸின் அப்பம்மா செபமாலை கோதையையே தலையைத் திருப்பி திருப்பி பார்த்த வண்ணம் இருந்தார். அறையினுள் ஒரு புதியவளை பார்த்ததும் அவரின் கரங்கள் தாமாகவே பக்கத்தில் கிடந்த இரும்பு பொருள் ஒன்றை இறுகப் பற்றிக் கொண்டது.

அவரது கைகள் தேடிப் பிடித்த இரும்புப் பொருளை சற்று தொலைவிலிருந்து கண்டு கொண்ட கோதை, புத்தி சுவாதீனமானவர்களுக்கு அருகில் யார் இந்த இரும்புக் கம்பியை வைத்த அதிமேதாவி என்பது போல யோசனை செய்து கொண்டு அசையாமலே நின்றிருந்தாள்.

எப்படியும் அருகில் சென்றால் தானே ஏதாவது பொருளை எடுத்து தூக்கி அடிப்பார்கள், அதனால் இங்கேயே சிறிது நேரம் நின்று கொள்ளலாம் என நின்று கொண்டவள். அடுத்த கட்டமாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதை பலமாக யோசனை செய்ய, அந்த நேரம் பார்த்து அவளது மூளைக்கு எந்த யோசனையும் எட்டவில்லை.

சரி இப்படியே நின்றால் வேலைக்காகாது ஏதாவது கதைத்து பார்ப்போம், அவர்கள் அதற்கு என்ன எதிர் வினையை காட்டுகிறார்கள் என்பதை பொறுத்து அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வோம் என முடிவெடுத்து, தன்னுடைய பாதுகாப்பு கருதி சற்று தள்ளி நின்றபடி பேச்சுக் கொடுத்தாள்.

“அம்மாச்சி..”
எனக் கோதை அழைக்க, செபமாலை நிமிர்ந்து அவளை ஆராய்வது போலப் பார்த்தார்.

“நான் உங்களை ஒண்டும் செய்ய மாட்டன்.. நான் உங்களுக்கு உதவி செய்யத்தான் வந்தனான்.. உங்களுக்கு பிடிச்ச சமையல் செய்து பிடிச்ச சாப்பாடு குடுக்கிறது.. பாட்டு பாடிக் காட்டுறது.. உங்களுக்கு கதைப் புத்தகங்கள் வாசிச்சுக் காட்டுறது.. இந்த மாதிரியான வேலையள் செய்யத் தான் நான் வந்தனான்.. நான் உங்களை ஒண்டுமே செய்ய மாட்டன்.. என்னைய நம்புங்கோ.. உங்கடை பேரன் தான் என்னைய உங்களுக்கு வேலை செய்ய அனுப்பினவர்..”
என்று சொல்லியபடியே கோதை மெல்ல முன்னே நகர்ந்து இரண்டு பெண்மணிகளுக்கும் நடுவே அமர்ந்து கொண்டாள்.

அவள் அவ்விதம் பேசிய வண்ணம் தங்களுக்கு நடுவே அமர்ந்து கொள்ளவும், இரும்பு கம்பியின் மேல் இருந்த செபமாலையின் கரம் மெல்ல தளர்ந்தது. இது நாள் வரை யாருமே அவர்களிடம் இந்த மாதிரி பேசியது இல்லை. ஆதரவாக இரண்டு வார்த்தை சொன்னதும் இல்லை. அதனாலோ என்னவோ கோதை அவ்விதம் பேசிய வண்ணம் அருகே வர செபமாலை அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கீழே சுவரின் ஓரமாக அமர்ந்து கொண்ட கோதை, செபமாலையின் பக்கமாக மெல்ல நகர்ந்து, அவருக்கு பக்கத்தில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்துத் தூரமாகத் தள்ளி விட்டு
“இதெல்லாம் வேண்டாம் அம்மாச்சி.. இதைத் தூக்கினால் உங்கடை கை தான் வலிக்கும்..”
என்று கொண்டு அவரது கரத்தை மெல்லப் பற்றித் தன் கரத்தால் வருட, செபமாலையின் மேனி அந்த மிருதுவான ஸ்பரிசத்தில் மெல்ல சிலிர்த்து அடங்கவே, அவர் கோதையிடம் இருந்து தன் கரத்தை வேகமாக உருவிக் கொண்டார்.

கோதையும் அதற்கு பிறகு அவரின் கரத்தை பற்றிக் கொள்ளாமல், சுவரோரமாகச் சாய்ந்து கொண்டு அவரையே பார்க்க, இருவரது விழிகளும் ஒரு கோட்டில் சந்தித்துக் கொள்ள, செபமாலையின் கண்களில் தெரிந்த அலைப்புறுதலை கோதை நொடியில் கண்டு கொண்டாள்.

சுவரில் சாய்ந்தபடியே அடுத்த பக்கம் இருந்த ஜேம்ஸின் அம்மாவைப் பார்க்க, அவரோ தன்னை மறந்து துயின்று கொண்டிருப்பது போல இருந்தது.

இரண்டு பெண்மணிகளையும் மாறி மாறிப் பார்த்த கோதை வேகமாக எழுந்து வெளியே சென்று, சமையற்கட்டினுள் நுழைந்தாள்.

அடுத்த நொடியே சேலையை இழுத்துச் செருகிக் கொண்டு பம்பரமாய்ச் சுற்றி அவள் செய்த வேலையில், அடுத்த இருபது நிமிடங்களில் இடியப்பமும், சிவப்பு மிளகாய் இடி சம்பலும், மஞ்சள் சொதியும் தயாராகின.

அதை தட்டுகளில் வைத்து எடுத்துக் கொண்டு, மீண்டும் மாடியில் இருந்த அறை நோக்கி கோதை நடக்கத் தொடங்க, அல்போன்ஸும் ஜோசப்பும் அவளை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்கள்.

அந்தச் சிரிப்பின் அர்த்தம், போன வேகத்தில் திரும்பி ஓடி வராமலா இருக்கப் போகிறாய். வகை வகையாகச் சமைத்தா கொண்டு போகிறாய். அதை அவர்கள் சுழட்டி உன் முகத்திலேயே தான் விட்டெறிவார்கள். அந்த அழகிய நிகழ்வைத் தானே பார்க்கக் காத்துக் கொண்டு நிற்கிறோம் என்பது தான். அதனால் இரண்டு ஆண்களுமே மாடியைப் பார்த்தபடி கீழேயே அமர்ந்திருக்க, கோதை அவர்களைக் கண்டு கொள்ளாமல் தன் காரியத்தை கண்ணுங் கருத்துமாகச் செய்யத் தொடங்கினாள்.

மாடியேறி அறையினுள் புகுந்த கோதை, முதல் காரியமாக அந்த அறையை உட் பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

அறைக்கதவின் சத்தத்தில் மீண்டும் நிமிர்ந்து பார்த்த செபமாலை, அவளைக் கண்டதும் மூலையோடு ஒட்டிக் கொண்டார்.

எடுத்த எடுப்பிலேயே அவர்கள் தன்னோடு சுமுகமாக மாட்டார்கள் தானே எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட கோதைக்கு, தனது பாட்டு இருக்கிறதே அதை ஒரு முறை முயற்சி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வரவே, சாப்பாட்டு தட்டுக்களுடன் மீண்டும் போய் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.

சில நொடிகள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவள், தொண்டையைச் செருமிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினாள்.

“தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப் போல அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்..”
எனக் கோதை கண்களை மூடி அழகாய் மனதுருகிப் பாட, செபமாலையின் கண்களில் கண்ணீர் வடிய, அடுத்த மூலையில் படுத்துக் கிடந்த எலிசபெத் மெல்லக் கண்களைத் திறந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்.

கோதை விடாமல்
“முத்தே என் முத்தாரமே சபையேறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று..”
எனப் பாடிக் கொண்டே இருக்க, செபமாலையும் எலிசபெத்தும் தங்களை மறந்து அந்தப் பாடலை இரசிக்கவே தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் அந்த அறைக்கு முன்பாக இருந்த அறையினுள் குறுக்கும் நெடுக்கமாக நடை பயின்று கொண்டிருந்த ஜேம்ஸும் ஒரு நொடி தயங்கி, பின்னர் வெளியே வந்து மாடியின் சுவரோடு காலூன்றி நின்று, கோதையின் குரலில் ஒலித்த பாடலைக் கண்களை மூடிக் கேட்கத் தொடங்க, அவனை அறியாமலேயே அவன் வலக் கரம் மாடிச் சுவற்றில் தாளம் போடத் தொடங்கியது. இது ஒரு நிமிடம் மட்டுமே நீடித்தது. அடுத்த கணமே வலது கையை மடக்கி, சுவற்றிலே ஓங்கிக் குத்தி விட்டு, வேகமாகப் போய்த் தன்னறையினுள் புகுந்து கதவையடைத்து விட்டு, காதுகளுக்கு பஞ்சை எடுத்து அடைத்து விட்டு, மெத்தையில் குப்புற விழுந்து படுத்துக் கொண்டான்.

ஜேம்ஸ் நினைத்திருந்தால், கோதை பாடுவதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஏனோ அவனால் அதை மட்டும் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை.

உள்ளே தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த கோதை, பாடி முடித்து விட்டுக் கண்களைத் திறந்து கொள்ள, மூலையில் முடங்கிக் கிடந்த இரண்டு பெண்களுமே, தங்களைக் கட்டிப் போட்டிருந்த இரும்புச் சங்கிலியை இழுத்துக் கொண்டு நகர்ந்து வந்து, அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட கோதை, சட்டென்று இடியப்பத்தை பிய்த்துச் சம்பலோடும் சொதியோடும் தொட்டு செபமாலையின் வாய்க்கருகே வைக்க, அவளது கையையும் அவளது முகத்தையும் ஒரு நொடி பார்த்த செபமாலை மறு நொடியே வாயைத் திறந்து அவள் கொடுத்த உணவை வாங்கிக் கொள்ள, அடுத்த இடியாப்பத் துண்டை எலிசபெத்தின் வாயருகே நீட்டினாள் கோதை.

எலிசபெத்தோ செபமாலையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு தானும் அந்த உணவை வாங்கிக் கொண்டார். கடகடவென இருவருக்கும் உணவை ஊட்டி விட்டு, இருவரது வாயையும் துடைத்து விட்டு, தண்ணீரைப் பருக்கி விட்டு கோதை எழுந்து கொள்ள, செபமாலை அவளை ஏக்கமாகப் பார்த்தார். அந்தப் பார்வையைச் சட்டென்று கண்டு கொண்ட கோதைக்கு இங்கே ஏதோ சரியில்லை என்று ஆழ்மனம் சொன்னது.

ஆனால் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் நிதானமாக தான் இங்கே நடப்பதைக் கவனிக்க வேண்டும் என நினைத்தவள், நடந்தபடியே
“நான் இனிமேல் உங்கள் ரெண்டு பேரோடையும் இந்த அறைக்குள்ள தான் இருப்பன்.. எங்கேயும் போக மாட்டன்..”
என்று சொல்ல, செபமாலையின் முகம் சட்டென்று மலர்ந்தது. கோதையின் விழிகள் அதையும் கணக்கெடுத்துக் கொண்டது.

அறையை விட்டு வெளியே வந்தவள் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, கைகளில் இருந்த தட்டுகளை வேண்டும் என்றே கீழே விட்டு வீச, மாடிக்குக் கீழேயிருந்த அல்போன்ஸ் மற்றும் ஜோசப்பின் முகம் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்ள, அதையும் மாடி வளைவில் இருந்து பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டாள் கோதை.

அவர்கள் இருவரது நடவடிக்கைகளில் கோதைக்கு எதிர்மறையான எண்ணமே தோன்றிக் கொண்டிருந்தது. அதனால் அவர்களிடம் ஏதோ ஒரு பொய், கபடம் இருக்கிறது என்றே அவளது ஆழ்மனம் அவளுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தது.

“பாப்பம் இன்னும் சரியா நாலரை மாசத்துக்கு இங்கினை தானே குப்பை கொட்டப் போறன்.. உவையளைப் பத்தி பாத்துக் கொள்ளுவம்.. அது வரை பொறுமையா இருப்பம்..”
என முணுமுணுத்துக் கொண்டே கீழே போனவள், போன வேகத்திலேயே மீண்டும் அந்த அறைக்குள் திரும்பி வந்து அறையை உட் பக்கமாகப் பூட்டிக் கொண்டாள்.

இப்போது கோதையைப் பார்த்த அந்த இரண்டு பெண்மணிகளின் பார்வையிலும் முன்பு இருந்த பயம் துளி கூட இருக்கவில்லை. மாறாக ஒரு மலர்ச்சி தான் இருந்தது. ஒரு வேளை பசியாறிய தென்பாக இருக்கலாம் என யோசித்த கோதை அந்த அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள்.

அறை பெரிய அறையாகத் தான் இருந்தது. பொருட்கள் எல்லாம் சிதறிப் போயும், சுவரில் மாட்டப் பட்டிருந்த படங்கள் எல்லாம் அழுக்குப் படிந்து போயும் அலங்கோலமாகத் தான் அந்த அறை இருந்தது.

அறையின் கோலம், இயல்பிலேயே தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் கோதையை இரு கரம் நீட்டி அழைக்கவே, சேலையை வழமை போல இழுத்துச் செருகிக் கொண்ட கோதை, ‘வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா..’ எனப் பாடிக் கொண்டே அறையைச் சரிப் படுத்தத் தொடங்கினாள்.

கீழே அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்த பொருட்கள் உரிய இடத்துக்குக் குடிபெயர, சுவரில் தொங்கிய படங்கள் பளிச்சென்று ஆகத் தொடங்க, சரியாக அரை மணி நேரத்தில் அந்த அறையே, சற்று முன்பு இருந்த அறையா இது என்பது போல சட்டென்று மாறி அழகாக உருமாறி இருந்தது.

செபமாலையும் எலிசபெத்தும் தங்களை மறந்து அவள் பாடும் பாடலையும், அவள் செய்யும் வேலைகளையும் தான் விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!