குறிஞ்சி மலர்.. 52
கோதையும் ஜேம்ஸும் ஜீவோதயம் வந்து இறங்க, அடுத்த பிரச்சினையும் கூடவே வந்து இறங்கியிருந்தது.
இருவரும் வருவதற்கு முன்னரே ரூபவர்ஷி அங்கே வந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள்.
அவளது வருகையை வியாகேசும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஜேம்ஸ் மற்றும் கோதையின் திடீர் வருகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
ரூபவர்ஷியை ஆள் வைத்து தூக்காது போனாலும், ஜேம்ஸ் கோதையின் கழுத்தில் தான் தாலி கட்டியிருப்பான். ஆனாலும் கோதை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் கழுத்தை நீட்ட வேண்டுமென்றால் அதற்கு ரூபாவே ஜேம்ஸை வேண்டாம் என்று சொல்லி விட்டு போக வேண்டும் என வியாகேசு எதிர்பார்த்தார். அதனால் தான் ரூபா காணாமல் போனாள்.
அவள் இத்தனை நாள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காததன் காரணம், ரூபாவை ஐந்து நாட்கள் ஒரு அறையில் வைத்து, சகலவிதமான சுகபோகங்களும் வழங்கப் பட்டது. ரூபா சந்தோஷமாக அதை அனுபவித்தாள். இதை வியாகேசு தன் இரண்டு நண்பர்கள் மூலம் கச்சிதமாக முடித்திருந்தார்.
அவரின் நண்பர்கள் அவளிடம் போய், உனக்கு இவ்வளவு தொகை பணம் கொடுக்கிறோம், நீ இந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் என்று சொல்லி விட, காசு காசென ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த ரூபா சட்டென்று சரி சொல்லி விட்டு, அவர்கள் கேட்டது போல கையெழுத்து போட்டு விட்டு அங்கிருந்து அவர்களோடு போய் விட்டாள்.
அதன் பிறகு வியாகேசு அவளின் கை நிறைய பணம் கொடுத்து, உன் இஷ்டம் போல எங்கும் போகலாம் என அவளை தண்ணீர் தெளித்து விட, அந்த பணத்தை வைத்துக் கொண்டு தன் நண்பர்களோடு என்ஜாய் செய்த ரூபாவுக்கு இரண்டு தினங்களின் முன்னர் தான் கையில் கொடுத்த அத்தனை பணமும் தீர்ந்து போயிருந்தது.
ரூபாவின் கையில் கொடுத்த பணத்தை அவள் சரியாகப் பயன்படுத்தி இருந்தால், பத்து மாதங்களுக்கு மேல் கூட அவளது செலவுக்கு கண்டிருக்கும். அவள் தான் பணத்தைக் கண்டாலே கண்ணை மூடிக் கொண்டு வாரி இறைப்பவள் ஆயிற்றே, இப்போது பேசாமல் இருப்பாளா. அது தான் கொடுத்த பணத்தை மூன்று மாதத்தில் தொலைத்து விட்டு, இங்கே பிடுங்க வந்திருக்கிறாள்.
ரூபாவுக்குமே ஜேம்ஸை கட்டிக் கொள்ள துளியும் விருப்பம் இருக்கவில்லை. அவனைக் கட்டிக் கொண்டால், தன் நண்பர்களுக்கு மத்தியில் இருக்கும் தனது நிறம் தொடர்பான பெருமை அடிபட்டு போய்விடும் என நினைத்துக் கொண்டாள்.
அது மட்டும் இல்லாமல் அவனது ஆக்ரோஷத்தை ஒரே ஒரு தடவை பார்த்த போது அவள் ஆடிப் போய் விட்டிருந்தாள், இவனுடன் எப்படி குடும்பம் நடத்த முடியும், இவனை கட்டிக் கொண்டாலும் தான் நினைத்தது போல எங்கும் வெளியே சுற்ற முடியாது, பணத்தை நினைத்த போது நினைத்த விதத்தில் செலவு செய்ய முடியாது என நினைத்து இந்த திருமணத்தை அவள் வெறுத்தாள்.
ஆனால் அவளை ஜேம்ஸுகு கட்டிக் கொடுத்து, அவள் மூலமாக அவனின் அனைத்து சொத்துக்களையும் சுருட்டுவதற்கு திட்டம் போட்டு இருந்த தில்லையம்பலம், மகள் தன்னிடம் வந்து அவனை தான் கட்டிக் கொள்வதற்கு விருப்பமில்லை என்று சொன்னபோது, தன்னுடைய கடைசி ஆயுதமான அவனை கட்டினால் தான் சொத்தில் உனக்கு பங்கு உண்டு என்ற விஷயத்தை சொல்ல, அதனால் தான் இந்த திருமணத்திற்கே ரூபா அரை மனதாக சம்மதம் சொல்லி இருந்தாள்.
இப்படி வேண்டா வெறுப்பாக இருந்தவளுக்கு திருமணம் அதுவாகவே தடைப்பட்டு, தன் கையிலும் காசு வந்துவிட யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் நண்பர்களோடு கிளம்பி போய்விட்டாள். இப்போது தான் காசு முழுவதும் தீர்ந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என யோசனை செய்த போது கோதைக்கும் ஜேம்ஸுக்கும் திருமணமான செய்தி அவளது காதுகளை எட்டி இருந்தது.
எதேச்சையாக கோதையும் ஜேம்ஸும் ஒன்றாக நின்றபடி இருந்த ஒரு படத்தை பார்த்தவளுக்கு, அதில் இருவரும் மிகவும் சந்தோஷமாக நின்றிருப்பதை பார்த்ததும் வயிறு எரிய ஆரம்பித்து இருந்தது.
நான்தான் அவனைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு தேவை இல்லாமல் வெளியே வந்து விட்டேனோ, இவளுடனேயே சந்தோசமாக இருப்பவன் தன்னுடனும் கண்டிப்பாக சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்தாள். அதோடு தன்னுடைய அழகைக் காட்டியும் அவனை தனது வலைக்குள் சிக்க வைக்கலாம் என்ற எண்ணத்திலும் தான் ரூபா அன்று ஜீவோதயத்திற்கு வந்திருந்தாள்.
ஜீவோதயம் வந்தவளுக்கு அங்கிருந்த தில்லையம்பலம் ஆடிய கூத்து எரிச்சலைக் கொடுத்தது.
“எனக்கெண்டு வந்து பிறந்த ஒண்டுக்கும் உதவாதவளே.. உன்னைய வைச்சு எவ்வளவு கனவு கண்டன்.. எத்தினை கனவு மாளிகை கட்டினன்.. அதையெல்லாம் எட்டிக் காலால உதைச்சிட்டு எவனோ ஒரு உதவாக்கரையோட ஓடியிட்டு.. எல்லாம் முடிஞ்சு போன பிறகு இப்ப என்னத்துக்கடி வந்து நிக்கிறாய்..”
“சும்மா வாயை மூடுங்கோப்பா.. பெத்த பிள்ளை இத்தனை நாள் கழிச்சு வாராளே.. அவளைக் கண்டிட்டு சந்தோஷப் பட்டு.. எதையாவது குடிக்க தின்ன குடுத்து ஆசுவாசப் படுத்தாமல்.. வெட்டிக் கதை கதைச்சுக் கொண்டு நிக்கிறியள்..”
“வாயை மூடடி ஓடிப் போன கழுதை.. செய்றதையும் செய்திட்டு உனக்கு உபசாரம் இல்லாதது தான் ஒரு குறையோ..”
“சும்மா ஓடிப் போனது ஓடிப் போனது எண்டு சொல்லாதேங்கோ..”
“ஓடிப் போன உன்னை ஓடிப் போனவள் எண்டு சொல்லாமல்.. உருண்டு போனவள் எண்டு சொல்லுறதோ..”
“நான் ஒண்டும் நானா ஓடிப் போகேல்லை..”
“அப்ப அந்த உதவாக்கரை கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு ஓடினவனோ..”
“ஐயோ அப்பா.. எனக்கு காசு குடுத்து இந்த கலியாணத்தை கட்டக் கூடாது எண்டு சொன்னவங்கள்.. அப்ப இருந்த மனநிலைக்கு இந்த கலியாணம் எனக்கு தேவை தானா எண்டு யோசிச்சிட்டு.. அவை கேட்டபடி லெட்டர் எழுதிக் குடுத்திட்டு நான் வெளுக்கிட்டு போயிட்டன்..”
“என்னடி பிள்ளை சொல்லுறாய்..”
“ஓமப்பா.. நான் எவன் கூடயும் ஓடேல்லை.. நிறைய பணம் தாரம் இந்த கலியாணத்தை கட்டாமல் நீ காணாமல் போகோணும் எண்டு சொன்னான் ஒருத்தன்.. எனக்கும் அப்ப அந்த கலியாணத்துல விருப்பம் இல்லை.. அதான் போயிட்டன்..”
“என்னட்டையாவது சொல்லி இருக்கலாம் தானே..”
“சொல்லி இருந்தால் பக்கம் பக்கமா வகுப்பெடுத்து என்ரை உசிரை வாங்கியிருப்பியளே தவிர.. என்னைய போக விட்டிருக்க மாட்டியள்..”
“சரி இப்ப ஏன்டி வந்தனீ.. நான் இருக்கிறனோ செத்திட்டனோ எண்டு பாக்கவோ..”
“இப்போ கொஞ்சம் நாளுக்கு முதல் தான்.. அந்த ஜேம்ஸும் கோதையும் சந்தோஷமா இருக்கிறதை பார்த்தன்.. அவன் அவளோடையே சந்தோஷமா இருக்கும் போது என்னோட இருக்க மாட்டானா என்ன.. அது தான் அவளை விலகச் சொல்லீட்டு நான் அவனை திரும்ப கலியாணம் செய்யலாம் எண்டு வந்தன்..”
“அடி விசரி.. அவன் அதுக்கு சரி எண்டுவானோ..”
“ஓம் ஏன் சரியெண்டாமல்.. என்ரை வடிவுல அவன் தானே முதல் என்னைய கலியாணம் கட்ட கேட்டவன்.. பிறகு நான் போன பிறகு கௌரவத்தை விட்டு குடுக்க கூடாது எண்டிட்டு தான் அவளை கட்டினவன்..இப்ப நான் போய் அவனுக்கு முன்னால நிண்டால் கண்டிப்பா அவளை துரத்தீட்டு என்னைய கட்டுவான்..”
“கட்டினால் சந்தோஷம் தான்..”
“அவன் எங்க..”
“அவுஸ்திரேலியா போயிட்டான் இண்டைக்கு வருவான்..”
“வரட்டும்..”
என்றபடி ஜேம்ஸின் குணம் பற்றியோ அவனது கோதை மீதான அளவு கடந்த காதல் பற்றியோ அறியாத ரூபா அவனுக்காக காத்திருந்தாள்.
…………….
மனைவியின் தூக்கி வைத்த முகத்தையே பார்த்தபடி, அவளை டிசைன் டிசைனாக சமாதானம் செய்து, வெற்றிகரமாக தோல்வியைத் தழுவியபடி ஜீவோதயம் வந்து சேர்ந்தான் ஜேம்ஸ்.
“இப்போ எதுக்கு பேபீ முகத்தை தூக்கி வைச்சிருக்கிறாய்..”
“……………”
“ஓ பேச மாட்டியோ..”
“…………….”
“இப்போ நீ சிரிச்சிக்கிட்டே பேசலைனா..”
“பேசலைனா என்ன செய்வியளாம்..”
“ஓடுற பிளேன்ல இருந்து கீழ குதிச்சிருவன்டி..”
“அப்ப நானும் பின்னாலயே குதிப்பன்..”
“உந்தக் கதை கதைக்காதே பேபீ..”
“தொடங்கி வைச்சதே நீங்கள் தான்..”
“சரி சரி.. அப்ப இப்போ என் மேல கோபம் போச்சுதோ..”
“…………..”
“என்னடி மறுபடி அமைதி ஆயிட்டாய்..”
“…………..”
“பேபீஈ..”
என்ற ஜேம்ஸ் அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும் அவளது தோளிலேயே சாய்ந்து கொண்டு கண்களை மூட, அவன் அறியாமல் சிரித்தவள்
“உங்களை எப்புடி என்ரை வழிக்கு கொண்டு வாரன் எண்டு மட்டும் பாருங்கோ..”
என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
இருவரும் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டபடியும், ஜேம்ஸ் மட்டும் அவளை சமாதானம் செய்தபடியும் ஜீவோதயம் வந்து சேர்ந்த போது தான் அங்கிருந்த ரூபவர்ஷியை பார்த்தனர்.
ரூபாவை திடீரென அங்கு பார்த்ததும் கோதைக்கு இயல்பான பாசம் தலைதூக்க, சந்தோஷமாக ரூபா என அவளை அணைத்துக் கொண்டாள்.
ரூபாவின் பார்வை முழுவதும் கோதையின் பின்னால் நின்றிருந்த ஜேம்ஸின் மேலேயே இருக்க, அவளோ கோதையைக் கண்டு கொள்ளவும் இல்லை, அவளின் அணைப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
“ரூபா.. இப்ப தான் இங்க வர உனக்கு தோணினதோ.. அம்மா தான் உன்னைய நினைச்சு கவலைப் பட்டுப் போனா.. நீ எப்புடி இருக்கிறாய்.. உன்ரை வீட்டுக்காரர் எங்க.. சந்தோஷமா இருக்கியோ நீ..”
“எனக்கு வர வேண்டிய வாழ்க்கையை நீ தட்டிப் பறிச்சிட்டு இங்க சந்தோஷமா இருக்க.. நான் எப்புடி சந்தோஷமா இருக்க முடியும்..”
“என்னடி சொல்லுறாய்.. நான் எங்க உன்ரை வாழ்க்கையை தட்டிப் பறிச்சன்..”
“என்ரை ஜேம்ஸை நீ கலியாணம் கட்டினதை சொல்லுறன்..”
“உன்ரை ஜேம்ஸா.. புரியேல்லை..”
“உனக்கு என்ன தான் புரிஞ்சு இருக்குது.. இது புரிய..”
என்று கத்திய ரூபா, தான் ஒன்றும் தானாக ஜேம்ஸை விட்டு போகவில்லை என்றும், தனக்கு பணம் கொடுத்து தான் கடிதம் எழுதி வைத்து விட்டு போகச் சொன்னார்கள் என்றும், அது தான் தான் அங்கிருந்து போனேன் என்றும் எல்லாவற்றையும் போட்டு உடைக்க, அவள் சொல்லுவதையே விழி விரிய பார்த்திருந்தாள் கோதை.
“காசு தந்தவை போகச் சொன்னவை எண்டு வார்த்தைக்கு வார்த்தை அவை அவை எண்டு சொல்லுறியே ஆரு அவை..”
என கோதை விளக்கம் கேட்க, எதையும் யோசிக்காமல் சட்டென்று வியாகேசை கை காட்டினாள் கோதை.
ரூபா கை காட்டிய வியாகேசை திகைப்போடு பார்த்த கோதை, அடுத்த நொடியே
“சரி அவரு காசு குடுத்தாரு.. நீ ஏன் போனனீ.. உங்கடை காசு வேண்டாம் எனக்கு இந்த கலியாணம் தான் வேணும் எண்டு சொல்லி திடமா நிண்டிருக்க வேண்டியது தானே..”
என ரூபாவை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
கோதையின் அந்தக் கேள்வியை ரூபா சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள்.
மகள் திணறுவதைப் பார்த்திருந்த தில்லையம்பலம், முன்னால் வந்து
“ஏய் நீ வாயை மூடு.. அவளை கேள்வி கேக்கிற அளவுக்கு நீ வந்திட்டியோ.. வாயைப் பொத்திக் கொண்டு நில்லு..”
என கோதையை அதட்டி விட்டு, ஜேம்ஸின் பக்கம் திரும்பி
“தம்பி.. அந்த மனுஷன் பாத்த வேலையால ஏதவோ சுத்துமாத்து நடந்து இப்புடி உங்களுக்கு பிடிக்காதவள் கழுத்துல தாலி கட்ட வேண்டிப் போச்சுது.. இப்ப ஒண்டும் கெட்டுப் போகேல்லை.. அதைக் கழட்டி போட்டிட்டு என்ரை பிள்ளையிந்தை கழுத்துல தாலியைக் கட்டுங்கோ.. அவள் மட்டும் தான் உங்களுக்கு எல்லா விதத்துலயும் ஏற்ற ஜோடி..”
என்று பல்லைக் காட்டினார்.
அவரது பேச்சில் கோதை ஆடிப் போய் நின்று விட, கைகளை மடக்கி தன்னை நிதானப் படுத்த முயன்ற ஜேம்ஸை, வியாகேசு ஓடி வந்து பிடித்துக் கொள்ள
“அவர் எந்த சுத்துமாத்தும் செய்யேல்லை.. நான் தான் அவரிட்டை சொல்லி உங்கடை பொண்ணுக்கு பணம் குடுத்து அவளை அப்புறப் படுத்தச் சொன்னன்..”
என ஜேம்ஸ் அழுத்தமாகச் சொல்ல, எல்லோரும் அவனைத் திகைப்போடு பார்த்தனர்.