குறிஞ்சி மலர்.. 54
கோதையும் வியாகேசும் பேசிக் கொண்டிருந்த போதே, கையில் அர்ச்சனை தட்டோடு வந்து சேர்ந்தார் நீலரூபி.
தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு, வியாகேசு அங்கிருந்து போய் விட்டார்.
நீலரூபிக்கு கோதையைப் பார்த்ததுமே அத்தனை சந்தோஷமாகி விட்டிருந்தது.
“அடி பிள்ளை எப்போடி வந்தனீ..”
“நீங்கள் கோயிலுக்கு போய் கொஞ்ச நேரத்துலயே வந்திட்டன் நீலும்மா..”
“என்னடி சரியா மெலிஞ்சு போனாய்.. ஒழுங்கா சாப்பிடுறேலையோ..”
“அங்கத்தையான் சாப்பாடு எனக்கு பிடிக்கேல்லை நீலும்மா..”
“சரி விட்டுத் தள்ளு.. இங்க நான் என்னத்துக்கு இருக்கிறன்.. இனி வடிவா சமைச்சுப் போடுறன் நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிற வழியைப் பாரு.. மருமகன் தம்பி எங்க.. அவரும் மெலிஞ்சு போயிட்டாரோ..”
“அவர் நல்லா தான் இருக்கிறார் நீலும்மா..”
“அவர் அங்கினை அடிக்கடி போயிட்டு வாரவர் தானே.. அதனால அவருக்கு அங்கத்தையான் சாப்பாடு ஓகேயா இருக்கும் என்ன..”
“ஓமம்மா ஓம்.. நான் உங்களோட கொஞ்சம் முக்கியமா கதைக்கோணுமே..”
“சரி கதை.. என்ன விசியம்..”
“நீங்கள் கோயிலுக்கு போன இடையில ரூபா இங்க வந்திருந்தாளம்மா..”
“ஆ.. என்னவாம்..”
“அவளிந்தை வாழ்க்கையை நான் தட்டிப் பறிச்சிட்டனாம்.. போதாக்குறைக்கு தில்லையப்பா வேறை அவரிட்டை என்னை விட்டிட்டு ரூபாந்தை கழுத்துல தாலி கட்டுங்கோவன் எண்டு கூசாமல் சொல்லுறார்.. எப்பவும் போல நான் அவளுக்கு எல்லாத்தையும் விட்டு குடுக்கிறது போல.. இப்ப என்ரை புருஷனையும் விட்டுக் குடுக்க முடியுமோம்மா..”
“உன்னை ஆரடி விட்டுக் குடுக்கச் சொன்னது.. நீ விட்டுக் குடுத்துட்டு போகவோ அம்மா ரொம்ப கஷ்டப் பட்டு பிளான் எல்லாம் போட்டு உனக்கு அந்தத் தம்பியைக் கட்டி வைச்சனான்..”
“என்னம்மா சொல்லுறியள்.. நீங்களும் பிளான் போட்டனியளோ..”
“பின்னே.. நானும் மருமகனும் உன்ரை வியாகேசப்பாவும் திட்டம் போட்டு தான் ரூபாவை இங்க இருந்து போக செஞ்சிட்டு.. உன்னை ஒரு வழியா இந்தக் கலியாணத்துக்கு சம்மதம் சொல்ல வைச்சதே..”
“ஏனம்மா ஏன்..”
“ஏனெண்டால் நீ சந்தோஷமாயும் நிம்மதியாயும் இருக்கோணும் எண்டுறது தான் என்ரை ஆசை..”
“அப்போ ரூபா..”
“ரூபா தானும் சந்தோஷமா இருக்க மாட்டாள்.. மற்றவையையும் சந்தோஷமா இருக்க விடமாட்டாள்.. அவளுக்கு ஒரு இடத்தில நிலைச்சு நிண்டு மற்ற ஆக்களை நிம்மதியா வைச்சிருக்க தெரியாது.. எப்பவுமே பணம் பணம் எண்டு பறக்கிற புத்தி.. எல்லாம் அவளிந்தை அப்பன் புத்தி..”
“என்ன இருந்தாலும் அவளை நீங்கள் தானேம்மா பத்து மாதம் சுமந்து பெத்தியள்..”
“நான் இல்லை எண்டு சொல்லேலையேடி.. ஆனா என்னோட குணத்துல ஒரு வீதம் கூட அவளுக்கு இல்லை எண்டுறது தான் என்ரை கவலை.. அவளை எல்லாம் பத்து நாளைக்கு பட்டினி போட்டாள் தான் திருந்துவாள்.. அது தான் நான் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு வாரன்.. எனக்கு தான் சுமக்காத பிள்ளை நீ இருக்கியே..”
“அம்மா.. உண்மையாலுமே நான் செஞ்ச பாவங்களுக்க ஏதவோ பெரிய புண்ணியம் ஒண்டு என்னைய அறியாமல் செய்திருக்கிறன் போலம்மா.. அது தான் நீங்கள் எனக்கு அம்மாவா வந்து இருக்கியள்..”
“இல்லைடி.. நான் தான் பாவம் செஞ்சிட்டு நடுவுல புண்ணியம் செஞ்சிருக்கன்.. அது தான் நீ எனக்கு மகளா வந்திருக்கிறாய்..”
“இல்லையம்மா..”
என கோதை அவரை மறுத்துப் பேசப் போக
“சரி சரி ரெண்டு பேருமே புண்ணியம் செஞ்சனியள் தான் போதுமா..”
என்று கொண்டு அவர்களைக் கடந்து வஞ்சி போனான்.
இருவரும் சிறு சிரிப்போடு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள, தன் மனதில் இருந்த அந்த விசயத்தை கோதை கேட்டே விட்டாள்.
“நீலும்மா.. ஒண்டு கேக்கட்டோ..”
“ம்ம் கேளடி..”
“தில்லையப்பாவும் ரூபாவும் கோவிச்சுக் கொண்டு வெளியால போயிட்டினம்.. அவை நினைச்சது போல என்ரை மனுஷன் ரூபாவை திரும்ப கலியாணம் கட்டேல்லை எண்டுற கோபம்..”
“அதுகளுக்கு விசர்..”
“நீங்கள் என்னோட இங்கேயே இருக்கிறியளோ..”
என தயங்கி தயங்கி கோதை கேட்க, ஒரு நொடி அசையாமல் நின்ற நீலரூபி, மகளை ஏறெடுத்து பார்த்தார்.
“கண்டிப்பா உன்கிட்டே வருவேன்டி.. அதுக்கு முதல் அந்த வீட்டுல சில கடமையள் இருக்கு எனக்கு.. அதை முடிச்சிட்டு ஒரேயடியா வந்திருவன்.. சரியா..”
“நீலும்மா.. அவங்க கிட்டே நீ தனியா போக வேண்டாம்..”
“அதுகள் என்னைய என்ன செஞ்சிடுங்கள் எண்டு நீ பயப்பிடுறாய்..”
“சொல்லத் தெரியேல்லையம்மா.. ஆனா ஏதவோ உள்ளுக்க பயமா இருக்கு.. அதோட உங்களிட்டை ஒரு ரகசியமும் சொல்லோணும்..”
“ஒண்டும் பயப்பிடத் தேவையில்லை.. நான் வந்தாப் பிறகு ஆறுதலா ரகசியம் பேசுவம்.. இப்ப நான் அங்க போயிட்டு வாரன் சரியோ..”
என்று கொண்டு நீலரூபி அங்கிருந்து புறப்பட, சரி அவரின் விருப்பம் போல் சென்று விட்டு வரட்டுமே என்பது போல கோதை இருந்தாள்.
நீலரூபி சென்றதும் வியாகேசு கோதையிடம் வந்தார்.
“என்ன பிள்ளை.. இப்ப போய் பீட்டரிந்தை அம்மாவையும் அப்பம்மாவையும் பாப்பமோ..”
“ஓமப்பா..”
“சரி வா.. ஆக்கள் இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. ஆனா ஒரு விசியம் பிள்ளை.. நீ மட்டும் இங்கினை வந்து இருக்காட்டிக்கு.. இதுகளுக்கு அந்தக் கழிசடையள் போதை ஊசியள் ஏத்தி தான் இதுகள் இப்புடி இருக்குதுகள் எண்டுறதே எங்களுக்கு தெரியாமல் போயிருக்கும்..”
“உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரேலையோ அப்பா..”
“வரேல்லை பிள்ளை.. அப்புடி எங்களுக்கு சந்தேகம் வராத போல செட்டப் செஞ்சி வைச்சிக்காங்கள்..”
“சரி வாங்கோ போய் பாப்பம்.. இண்டைக்கு எப்புடியும் அவரிட்டை இதைப் பத்தி கதைச்சே ஆகோணும்.. இவ்வளவு நாளும் வீணா போயிட்டு எண்டுற கவலை எனக்கு நிறையவே இருக்குப்பா..”
“சூழ்நிலை அப்புடி ஆகிப் போச்சுது.. அதுக்கு நீ என்ன செய்ய முடியும் சொல்லு..”
என கோதையை சமாதானம் செய்தபடி, எலிசபெத் மற்றும் செபமாலை இருக்கும் அறைக்குச் சென்றார் வியாகேசு.
அங்கே அறையினுள் எலிசபெத் மற்றும் செபமாலையை காணவில்லை. அறையே வெறிச்சோடிக் கிடந்தது.
“என்னப்பா.. ரெண்டு பேரையும் காணேல்லை.. வேறை அறைக்கு ஆரும் மாத்தியிட்டினமோ..”
“ஆரு பிள்ளை மாத்துறது.. இங்க தானே நீங்கள் வர முதல் இருந்தவை.. தேவாவை கூப்பிடு..”
“அவை ரெண்டு பேரும் வஞ்சியண்ணாச்சியோட நிண்டவையள்..”
என்ற கோதை, கீழே எட்டிப் பார்த்து தேவாவை கூப்பிட, அவன் வேகமாக ஓடி வந்தான்.
“என்ன தங்கச்சி..”
“தேவாண்ணா.. இங்க அறைக்குள்ள இருந்தவையைக் காணேல்லை..”
“காணேல்லையோ.. விலத்துங்கோ பாப்பம்..”
“இந்த அறையை விட்டு வேறை எங்கையும் போறவையோ..”
“இல்லையே தங்கச்சி.. நீங்கள் வர முந்தி கூட இங்க தானே இருந்தவை..”
என்று கொண்டு தேவாவும் தன் பங்குக்கு அறை முழுவதையும் தேடினான்.
அதன் பிறகு விசயம் மெல்ல மெல்ல கசிய, எல்லோரும் ஜீவோதயம் முழுவதும் தேடினார்கள்.
உள்ளே அறைக்குள் படுத்திருந்த ஜேம்ஸ், தூக்கம் கலைந்து மனைவியை தேடிக் கொண்டு வந்தான்.
அப்போது தான் எல்லோரும் பரபரப்பாக யாரையோ தேடுவதைப் பார்த்ததும், வியாகேசிடம் என்ன விசயம் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
தேவா மீதும் ரகுமான் மீதும் கோபம் வந்தது. அறைக்குள்ள இருந்தவர்கள் காணாமல் போகும் வரை அப்படி என்ன கிழித்துக் கொண்டு இருந்தீர்கள் என்ற கோபத்தில் ஜேம்ஸ் எதையோ தூக்கியடிக்க போக, கணவனின் கையை இறுகப் பற்றி அவனை முறைத்துப் பார்த்தாள் கோதை.
“என்னடி..”
“என்ன என்னடி..”
“இப்ப என்னத்துக்கு என்ரை கையைப் பிடிக்கிறாய்..”
“ஆ ஆசையில பிடிக்கிறன்..”
“பேபி.. அவங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை.. எவ்வளவு கவனக்குறைவா இருந்திருக்காங்கள்..”
“அதுக்கு இதை தூக்கி அடிச்சால் எல்லாம் சரியாயிடுமோ..”
“இல்லைடி.. எனக்கு கோபம் வருது..”
“கோபம் வந்தால் போய் இழுத்து மூடிக் கொண்டு படுங்கோ.. அது தன்னால போயிடும்..”
“பேபீஈ..”
“கத்தாதேங்கோ.. இப்ப அவையள் ரெண்டு பேரும் எங்க எண்டுறதை முதல் தேடுவம்.. பிறகு ஆற அமர இருந்து கோபப் படுவம் சரியோ.. முதல்ல அதைக் கீழை வையுங்கோ..”
என்றபடி கணவனைச் சமாதானம் செய்ய, வீட்டு லான்ட்லைன்னுக்கு ஒரு அழைப்பு வந்தது.
வஞ்சி தான் அதை எடுத்து பேசினான். எதிர் முனையில் சொல்லப் பட்ட விசயத்தைக் கேட்டதும் அவனது முகமே வெளிறிப் போனது.
அவனையே பார்த்திருந்த வியாகேசு அவனிடம் ஓடிச் சென்று, ஃபோனை பிடுங்கி தன் காதில் வைத்துக் கேட்டார்.
கோதையும் அப்போது அவரிடம் செல்ல, ஃபோனை கீழே வைத்தவர், செபமாலையும் எலிசபெத்தும் கடத்தப் பட்ட விசயத்தை எல்லோரிடமும் சொன்னார்.
“என்னப்பா.. ஆரு ஃபோனில..”
“அல்போன்ஸ்..”
“இவரிந்தை சித்தப்பாவோ..”
“அந்த சாக்கடை தான்..”
“என்னவாம் சொல்லுறார்..”
“ரெண்டு பேரும் தங்கடை கஸ்ரடியில தான் இருக்கினமாம்.. தாங்கள் சொல்லுறதை கேட்டால் அவையளை உயிரோட விடுவமாம்.. இல்லாட்டிக்கு..”
“இல்லாட்டிக்கு..”
“நாளைக்கு காலையில ஜீவோதயம் வாசலில அவையிந்த உடல் தொங்குமாம்..”
என வியாகேசு சொல்லி முடிக்கவும், ஒரு கண்ணாடி ஜாடி பறந்து வந்து சுவற்றில் மோதி சுக்குநூறானாது.
அந்தச் சத்தத்தில் பதறிப் போய் காதுகளைப் பொத்திக் கொண்டாள் கோதை. நீலவிழிகள் பழுப்பு நிறமாக மாறி நின்றிருந்த கணவனைப் பார்த்தவளுக்கு உடல் லேசாக உதறியது. அத்தனை ஆக்ரோஷத்திலும் மனைவியின் நிலையை நொடியில் படித்தவன்,
“பேபீ.. உள்ள போ..”
என உறுமினான்.
அதற்கு பிறகும் வெளியே நிற்க கோதைக்கு என்ன பைத்தியமா உடனே அவள் உள்ளே போய் விட்டாள்.
அவளுக்கு தான் இந்த நிலையில் டென்ஷன் ஆவது கூடாது என்பது நன்கு புரிந்திருந்தது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது, தான் வன்முறையான விஷயங்களை பார்க்க கூடாது என்பதாலும் அவள் கணவனை எதிர்த்து பேசாமல் உள்ளே வந்து விட்டாள்.
உள்ளே வந்தவளுக்கு, கீழே விழுந்து நொறுங்கிய கண்ணாடி ஜாடியின் சத்தம், இன்னமும் கூட காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்க, தன் வயிற்றை மெல்ல தடவிக் கொடுத்துக் கொண்டாள்.
“செல்லம்.. பயந்திட்டியளோ உங்கப்பா இப்புடி தான் எதையாவது போட்டு போட்டு உடைப்பாரு.. அவருக்கு சீக்கிரமே உள்ள நீங்கள் இருக்கிறியள் எண்டு சொல்லி.. இப்புடி சத்தம் போட்டு உங்களை டென்ஷன் படுத்த வேண்டாம் எண்டு சொல்லுறன்.. சரியா..”
என தன் குழந்தைக்கு சமாதானம் சொன்னாள்.
கீழே நின்றிருந்தவனோ வியாகேசை பார்த்த பார்வையில் அவருக்கே மூச்சடைத்தது.
“பீட்டர்.. கோபப் பட இது நேரமில்லை.. அதுகள் என்ன சொல்லுதுகள் எண்டு பொறுமையா கேப்பம்..”
“அவனுங்கள் சொல்லுறதை நான் என்ன கேக்கிறது.. இப்பவே எனக்கு லொகேஷன் வரணும்..”
என கர்ஜித்த ஜேம்ஸை அவரால் நிதானத்துக்கு கொண்டு வரவே முடியேல்லை.
அடுத்த நிமிடமே, வஞ்சி ஜேம்ஸுக்கு லொகேஷனை காட்ட, ஒரேயொரு ஃபோன் மட்டுமே ஜேம்ஸ் கதைத்தான். அடுத்த அரைமணி நேரத்தில் அல்போன்ஸ் எங்கிருந்து பேசினானோ அந்த இடம் சுத்தி வளைக்கப் பட்டது.