அசுரனின் குறிஞ்சி மலரே.. 56

4.9
(15)

குறிஞ்சி மலர்.. 56

லாரன்ஸ்ரோமியோவுக்கு கோதையை முதலிலேயே தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவனின் தாய் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது, அவரை ஒரு வாகனம் அடித்துப் போட்டு விட்டு போய் விட்டது.

அரைமணி நேரமாக தெருவிலேயே கிடந்தவரை யாருமே கவனிக்கவில்லை. அதே நேரத்தில் சந்தைக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்த கோதை, அடிபட்டுக் கிடந்தவரைப் பார்த்து விட்டு, தன் காசில் ஆட்டோ பிடித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போய் சேர்த்தாள்.

அங்கே ட்ரீட்மெண்ட் செய்வதற்கு, உறவுக்காரரின் கையெழுத்து கேட்க, கொஞ்சமும் யோசனை செய்யாமல் மகள் என கையெழுத்து வைத்து விட்டு, அது மட்டுமில்லாமல் அவருக்கு இரத்தமும் கொடுத்திருந்தாள்.

அவர் கண்முழித்து பார்க்கும் வரை கூடவே இருந்து அவரைப் பார்த்துக் கொண்டவள், அவர் கண் விழித்த பின்னரே அவரிடம் அவரது மகனது நம்பர் வாங்கி அவனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள். விசயம் கேட்டு பதறித் துடித்து ஓடி வந்தான் லாரன்ஸ்.

“அம்மா.. இதுக்கு தான் நான் சொல்லுறனான் தனிய கோயிலுக்கு போகாதேங்கோ எண்டு.. நான் சொல்லுறதை நீங்கள் கேட்டால் தானே.. உங்கடை சாமி உங்களை இப்புடி நடு ரோட்டுல விழ வைச்சிட்டு தானே.‌. இதுக்காகவே கோயில் குளம் எண்டு சுத்துறியள்..”

“அடேய் கொஞ்சம் மூச்சு விட்டுக் கதையடா.. இப்ப என்ன நடந்து போட்டுதெண்டு உப்புடி கத்துறாய்.. நடு ரோட்டில விழ வைச்ச தெய்வம் தான்.. தெய்வம் மாதிரி ஒரு பிள்ளையை அனுப்பி என்னைய ஹாஸ்பிடல்ல சேத்து.. மகள் எண்டு கையெழுத்து போட்டு.. தானே ரத்தமும் குடுத்து தானே என்னைய நல்லாப் பாத்தும் கொண்டிச்சு..”

“யாரும்மா அது..”

“தெரியேலையடா எந்த புண்ணியவதி பெத்த பிள்ளையோ.. என்னைய எப்புடி பாத்திச்சுது தெரியுமோ.. நான் அடிபட்டு கன நேரமாகியும் அந்த இடத்தால போன ஒருத்தன் கூட என்னைய திரும்பிக் கூடப் பாக்கேல்லை.. அந்தப் பிள்ளை தான் வந்து தூக்கி பறிச்சு இங்கினை வரை கொண்டு வந்திச்சு.. அந்த மாதிரி பிள்ளையால தான்டா இந்த பூமி இப்பவும் சுத்திக் கொண்டு கிடக்கு..”

“எங்கேம்மா அந்தப் பிள்ளை..”

“இப்ப வரை இங்க தான் நிண்டது.. இப்ப தான் எனக்கு குடிக்க குடுக்க யூஸ் வாங்கப் போனது..”

“ஓ.. பாத்ததுக்கு காசைக் குடுத்து அனுப்பி வையுங்கோம்மா..”

“உன்ரை காசை நீயே வைச்சிரு.. அது செஞ்ச உதவியை காசு குடுத்து கொச்சைப் படுத்தப் பாக்காத.. நீ சொல்ல முந்தியே நான் ஒரு செக் எழுதி நீட்ட.. உங்கடை காசுக்காக நான் இதை செய்யேல்லையம்மா.. உங்களுக்கு அந்த நேரத்துல உதவி செய்யோணும் எண்டு எனக்கு தோணிச்சுது நான் அதை செய்தன்.. மத்தபடி உந்த காசு எனக்கு தேவையில்லை.. உதை நீங்கள் ஏதாவது ஆசிரமத்துக்கு குடுங்கோண்டு சொல்லிப் போட்டுது..”

“என்னம்மா சொல்லுறியள்.. உண்மையாவோ..”

“பின்னே நான் என்ன பொய்யே சொல்லுறன்.. அவளைப் பாக்க சின்ன வயசுல என்னைப் பாத்த போலயே கிடக்கடா.. பாவம் வெள்ளைப் புடவை கட்டி இருக்குது.. சின்ன வயசுலயே புருஷன் செத்திட்டு எண்டு நினைக்கிறன்..”

“ஓ..”

“காசு தாரன் அது இதெண்டு சொல்லி அந்தப் பிள்ளையை கஷ்டப் படுத்தாத..”
என்று சொன்ன லாரன்ஸின் அன்னை வளர்மதி, அப்போது உள்ளே வந்த கோதையை காட்டி
“அவ தான்டா என்னைய காப்பாத்த வந்த தேவதை..”
என கண்கலங்க காட்டினார்.

உள்ளே வந்த கோதையைப் பார்த்த லாரன்ஸுக்கு முதல் பார்வையிலேயே அவளைப் பிடித்துப் போய் விட்டது. அதற்கு காரணம் அவள் தன் தாய்க்கு செய்த உதவியோ அல்லது அவள் காசை வேண்டாம் என்று மறுத்த விதமோ அல்ல, முகத்தில் ஒட்ட வைத்த புன்சிரிப்போடு தன்னைப் பார்த்து சிநேகிதமாக முறுவலித்த அவளது பாவனையே அவனுக்குப் பிடித்திருந்தது.

பெண்களைக் கண்டாலே எரிச்சல் படும் அவனுக்கு அவளைப் பார்க்க எரிச்சலே வரவில்லை. உரிமையோடு அவளின் கையைப் பிடித்து
“ரொம்ப நன்றிம்மா..”
என அவன் சொல்ல, புன்னகை மாறாமல் அவனது கையை மெல்லத் தட்டிக் கொடுத்து
“பரவாயில்லண்ணா..”
என அவள் சொல்லவும், அவள் சொன்ன அந்த அண்ணாவும் அவனுக்கு பிடித்துப் போய் விட்டிருந்தது.

தன்னுடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்து அவளிடம் நீட்டி
“உனக்கு என்ன உதவி வேணும் எண்டாலும் என்னட்டை தயங்காமல் கேக்கலாம்.. உனக்கு உதவி செய்றதை என்ரை பாக்கியமா யோசிச்சு உன் அழைப்புக்காக காத்து இருப்பன்..”
என லாரன்ஸ் உண்மையான கனிவோடு சொல்ல, புன்னகை மாறாமல் அதை மறுத்தாள் கோதை.

“திரும்பவும் சொல்லுறேண்ணா.. நான் உதவியை எதிர்பார்த்து எதையும் செய்யேல்லை.. அது எனக்கு வேண்டாம்..”

“சரி சரி.. உன்னை மாதிரி ஒரு தங்கச்சி இருந்தால் எனக்கு சந்தோஷமா நிம்மதியா இருக்கும்.. அதுக்காகவே உன்ரை நம்பரையாவது குடு..”

“அது..”

“ஏன் தங்கச்சி என்னைய பாக்க உனக்கு நம்பிக்கை வரேலையோ.. தேவையில்லாமல் நம்பரை குடுத்து எதுக்கு வம்பு எண்டு யோசிக்கிறியோ..”

“ஐயோ அப்புடி எல்லாம் இல்லையண்ணா.. என்னோட நம்பர் பாடம் இல்லை அது தான்..”

“ஹா ஹா.. நல்ல பிள்ளை தான்.. ஃபோனை இப்புடி குடு..”
என அவளின் ஃபோனை வாங்கி அதில் தன் நம்பரை டயல் செய்து, அவளது நம்பரை தன் ஃபோனில் தங்கச்சி எனப் பதிவு செய்து கொண்டான்.

அதன் பிறகு இருவருமே உண்மையிலும் நல்ல அண்ணன் தங்கையாகவே அடிக்கடி பேசிக் கொள்ள, இடையில் கோதைக்கு ஜேம்ஸோடு திருமணம் ஆன போது மட்டும் இருவரும் பேசிக் கொள்வது கொஞ்சம் குறைந்து போயிருந்தது. அந்த நேரத்தில் லாரன்ஸ் கனடாவில் இருந்ததால் சரியாகப் பேசிக் கொள்ள முடியவில்லை.

……………….

லாரன்ஸ் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த கோதை அவனோடு பேசிக் கொண்டே வர, அவனோ ஆம், இல்லை, ம்ம் என்று மட்டும் பதில் கொடுத்து விட்டு எதையோ தீவிரமாக யோசனை செய்து கொண்டு வந்தான்.

“அண்ணா.. திருகோணமலை ஹாஸ்பிடல்ல விடுறியளா என்னைய.. அம்மாவை அங்க தான் அட்மிட் செஞ்சிருக்கு..”

“சரி..”

“நீலும்மாவுக்கும் திடீரெண்டு ஆக்சிடென்ட் ஆயிட்டுது.. அதைக் கேட்ட நேரத்துல இருந்து எனக்கு ஒரே டென்ஷன்.. அது தான் அவாவை பாக்க வெளுக்கிட்ட நேரம்.. வெள்ளை வானில தூக்கிப் போட்டுக் கொண்டு போயிட்டாங்கள்..”

“ஓ.. ஏன்..”

“என்னத்தை சொல்ல.. எல்லாம் என்ரை நேரம் அண்ணா.. உங்களிட்டை சொன்னால் என்ன.. என்ரை வீட்டுக்காரர் இருக்கிறாரே அவரு நல்லவரு தானண்ணா.. ஆனா அவரும் பாருங்கோ போதை கடத்துற தொழில் செய்யிறாரு.. அது பிழை எண்டு அவருக்கு விளங்குது இல்லை.. அவரு உப்புடி பிழை செஞ்சதால கர்மா அவரையே திருப்பி அடிச்சிட்டு.. அது தான் அவரிந்தை அம்மாக்கும் அப்பம்மாக்கும் அவரிந்தை சொந்தக்காரரே போதை ஊசி அடிச்சு மனநோயாளி மாதிரி வைச்சிக்காங்கள்..”

“ஓ..”

“இப்ப கூட அவரிந்தை சொத்துபத்தை எழுதி தரச் சொல்லி பிளாக்மெயில் செய்ய.. அவரிந்தை அம்மாவையும் அப்பம்மாவையும் கடத்தி வைச்சிக்காங்கள்.. அவையளை மீட்க தான் அவர் போட்டார்.. அங்க என்னாகப் போகுதோ ஏதாகப் போகுதோண்டும் ஒரே பயமாக் கிடக்கு..”

“உன்ரை மனசுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும் தங்கச்சி..”

“அண்ணா.. நீங்களும் ஒரு பிஸிநெஸ்காரன் தானே.. அனுபவசாலியும் கூட.. நீங்கள் என்ரை வீட்டுக்காரருக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைச்சு.. அவரை அந்தத் தொழிலை விட வைக்க ஏலாதோ..”

“நான் சொன்னால் உம் புருஷன் கேப்பானோ..”

“பிளீஸண்ணா.. எனக்காக..”

“உனக்காக மட்டும் தான் இதைச் செய்யிறன்..”
என்று கொண்டே வைத்தியசாலை வளாகத்தினுள் நுழைந்தவன்
“கூட வரட்டோ.. தனியா போவியோ..”
என உண்மையான அக்கறையோடு கேட்க,
“வாங்களேன் அண்ணா.. கொஞ்சம் பயமாக் கிடக்கு..”
என அவனது கையைப் பிடித்துக் கொண்டு கோதை கேட்க, அடுத்த நொடியே அவளை அழைத்துக் கொண்டு நீலரூபியைப் பார்க்க உள்ளே விரைந்தான் லாரன்ஸ்.

அங்கே உள்ளே கண்களை மூடிப் படுத்திருந்த நீலரூபியைப் பார்த்ததுமே கோதைக்கு, அழுகை வந்து விட்டது‌.

“ஹேய்.. கோதைம்மா அழக் கூடாது.. அவங்களுக்கு ஒண்டுமில்லை.. நீ தைரியமான பொண்ணு தானே..”

“பாவம் அண்ணா.. இப்போ தான் அவங்களை நான் வைச்சு வடிவாப் பாக்கோணும் எண்டு கனவு கண்டன்.. அதுக்குள்ள இப்புடி வந்து படுத்திருக்கிறா..”

“நீ வந்திட்டாய் எல்லோ.. இன்னும் கொஞ்சம் நேரத்துல அவாவே எப்புடி எழும்பி இருக்கப் போறா எண்டு மட்டும் பாரு..”
என லாரன்ஸ் கோதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே அவளை நீலரூபியின் பக்கத்தில் அமர வைத்தான்.

லாரன்ஸின் மனதில் ஏகப் பட்ட கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால் பதில் தான் ஒழுங்காகக் கிடைக்கவேயில்லை.

அவனுக்கு ஜேம்ஸ் மீது பகை இருந்தது உண்மை தான். ஆனால் அவனையோ அவன் மனைவியையோ கொலை செய்கின்ற அளவுக்கு பகை இருக்கவில்லை.

அதிலும் கோதைதான் ஜேம்ஸின் மனைவி என்பதை அறிந்ததும், இனிமேல் ஜேம்ஸோடு எந்த விதமான சண்டை சச்சரவுகளும் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற முடிவுக்கு இப்போது வந்திருந்தான்.

லாரன்ஸ் அன்பு வைத்திருக்கும் இரண்டே இரண்டு பெண்கள் அவனின் தாயும் கோதையும் மட்டும் தான்.

நீலரூபிக்கு பக்கத்தில் கோதையை அமர வைத்து விட்டு வெளியே வந்த லாரன்ஸ், ஜேம்சுக்கு தான் ஃபோன் எடுத்திருந்தான்.

“ஜேம்ஸ் நான் லாரன்ஸ்..”

“ம்ம்.. தெரியுது சொல்லு..”

“சொந்தக்காரங்கள் எண்டுற பேரில துரோகியளை வீட்டுக்குள்ள விட்டிட்டு நீபாட்டுக்கு சுத்தித் திரியிரே..”

“புரியலை..”

“அல்போன்ஸு உம் பொண்டாட்டியை என் கிட்டே விட்டிட்டு கோடி கோடியா பணம் வாங்கிட்டு போறான்..”

“ஹேய் என்ன சொல்லுறே..”

“நான் பொய் சொல்ல மாட்டேனு உனக்கு தெரியும் தானே..”

“இப்போ பேபி எங்கே.. இதைப் பாரு லாரன்ஸ் என் பேபி மேல தூசு கூடப் படக் கூடாது..”

“அவ என் கிட்டே பத்திரமா தான் இருக்கா.. ஆனா பாரு என் கிட்டே அவளைக் குடுக்கிறதுக்கு பதில் வேறை யார்க் கிட்டேயாச்சும் அவளைக் குடுத்திருந்தான்னா அவ கதி என்னாகியிருக்கும்.. நீ பாட்டுக்கு கவனக்குறைவா இருக்காய்..”

“இப்போ நீ எங்க..”

“ரிங்கோ ஹாஸ்பிடல்ல..”

“ஓ நானும் அங்க தான்.. இதோ வாரன்..”
என்ற ஜேம்ஸ் அடுத்த ஐந்து நிமிடத்தில் லாரன்ஸின் முன்னால் நின்றான்.

“பேபி எங்க..”

“அவ உள்ள இருக்கிறா..”

“அவளுக்கு என்ன..”

“அவளுக்கு ஒண்டுமில்லை.. அவங்கம்மாக்கு தான் ஆக்சிடென்ட்..”

“யாரு நீலாம்மாக்கா..”

“ம்ம்..”

“என்ன அதிசயமா என் பொண்டாட்டி மேல அக்கறை உனக்கு கூடிக் கிடக்கு..”

“அவ உன் பொண்டாட்டி என்றதுக்காக அக்கறை கூடலை.. அவ என்னோட தங்கச்சி..”

“புரியலை..”
என்ற ஜேம்ஸுக்கு லாரன்ஸ் தனக்கும் கோதைக்குமான பந்தத்தைச் சொன்னான்.

அதைக் கேட்டதுமே மெல்லப் புன்னகைத்த ஜேம்ஸ்
“நான் சொல்லலை என் பேபியோட சக்தி அப்புடினு.. பாரு நீயே அவளுக்கு நல்லவிதமான சேட்டிபிகர்ட் குடுத்திட்டாய்..”
என்று சொல்ல, அவனின் தோளில் தட்டி
“உண்மையிலேயே அவ கையெடுத்து கும்பிட வேண்டிய பொண்ணு தான்.. நீ குடுத்து வைச்சவன்.. அவளை நல்லாப் பாத்துக்கோ ஏன்னா அவ இந்த லாரன்ஸோட தங்கச்சி.. அவளுக்கு ஒண்ணுனா நான் வந்து நிப்பன்..”
என்று சொல்லி விட்டு, போகத் திரும்பிய லாரன்ஸ் மீண்டும் ஜேம்ஸிடம் திரும்பினான்.

“ஜேம்ஸு.. தங்கச்சிக்கு நீ போதைகடத்துற தொழில் சுத்தமா பிடிக்கலை.. இத்தனை நாள் எப்புடியோ ஆனா இனிமேல் அந்த வேலையை விடப் பாரு.. அது தான் உங்க வாழ்க்கைக்கு நல்லது.. அவ ஒரு பொக்கிஷம் அந்த பொக்கிஷத்தை அந்தக் கண்றாவியான தொழிலால இழந்திராத சொல்லீட்டன்..”
என்று கொண்டு அவன் போய் விட, அவன் சொன்னது எதையும் கேட்கும் மனநிலையில் ஜேம்ஸ் இருக்கவில்லை. அவன் மனைவியை பார்க்க உள்ளே ஓடினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!