அசுரனின் குறிஞ்சி மலரே.. 58

4.9
(14)

குறிஞ்சி மலர்.. 58

எலிசபெத் மனதளவில் மிகவும் கலங்கிப் போயிருந்தார். எங்கே தன் மகனோடு மனது விட்டுப் பேச முடியாமலேயே தான் இறந்து விடுவேனோ என அவர் பயந்து போனதால் தான், இப்போது மகனைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டத் தொடங்கினார்.

அல்போன்ஸும் ஜோசப்பும் தன்னையும் தன் மாமியாரையும் மிரட்டி, வாயைத் திறந்து உண்மையை யாரிடமாவது சொன்னால் உன் மகனைக் கொன்று விடுவோம் என அவரை இத்தனை நாளும் ஊமையாக்கி, மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள்.

அதனாலேயே இரு பெண்மணிகளும் வாயிருந்தும் ஊமைகளாகிப் போனார்கள். ஆனால் இன்று தாங்கள் கடத்தப் பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அனுபவித்த கொடுமையில் மகனைப் பாராமலேயே அவனிடம் தங்களின் நிலமையைச் சொல்லாமலேயே இறந்து போய் விடுவேனோ என ஏகத்துக்கும் பயந்து விட்டார்.

அதனால் என்னவானாலும் பரவாயில்லை அவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை இன்று மகனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டியது தான் என அவர் முடிவு செய்திருந்தார்.

தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்த மகனை இறுக அணைத்து விடுவித்தவர், அவனின் கன்னத்தில் முத்தமிட்டு
“இந்த அம்மாவால நீ எப்பவுமே நிம்மதியாவே இருந்ததில்லை தம்பி.. நான் உன்னோட இங்க வராமல் என்ரை மனுஷனோட அங்கயே இருந்ததில உனக்கு என்னில கோபம் எண்டு தெரியும்.. பிறகு நானா விருப்பப் பட்டு தான் இங்க உன்னட்டை வந்தனான்.. ஆனா இங்க வந்த என்னையும் உன்ரை அப்பாச்சியையும் அந்த அல்போன்ஸும் ஜோசப்பும் சேர்ந்து போதை ஊசி அடிச்சு.. மனநோயாளி மாதிரி ஆக்கிப் போட்டாங்கள்.. அதை உன்னட்டை சொன்னால் உன்னைய கொன்னுருவம் எண்டு வேறை பயங் காட்ட எங்களால வாயே திறக்க முடியாமப் போச்சு.. நானும் உன்ரை அப்பாச்சியும் கடைசிவரை பைத்தியக்காரியள் போல கிடந்து தான் செத்திருப்பம்.. ஆனா கடவுளா பாத்து தேவதை மாதிரி இந்தப் பிள்ளையை எங்களிட்டை அனுப்பி.. எங்களை இந்தளவு தூரத்துக்கு சுகப்பட வைச்சிட்டு..”
என கோதையை கைகாட்டிய எலிசபெத் வாய் விட்டு அழவே தொடங்கி விட்டார்.

மருமகள் அழுவதைப் பார்த்ததும் செபமாலைக்கும் கண்கள் கலங்கியது.

“சொந்தக்காரன்கள் எண்டு சோறு போட்டு கூடவே வைச்சிருந்ததுகள் எல்லாம்.. சொத்துக்கு ஆசைப்பட்டு செஞ்ச வேலையைப் பாருடா கண்ணா.. இதுக்கு பேசாமல் அவங்கள் எங்களை கொலையே செய்திருக்கலாம்..”
என்ற செபமாலையின் வாயை வேகமாக வந்து பொத்தினான் ஜேம்ஸ்.

“உங்களுக்கு நடந்த கொடுமைக்கு நான் பதிலடி குடுக்காமல் விட மாட்டன் கிரான்ட்மா.. இதெல்லாம் தெரியாமல் முட்டாளா இருந்திருக்கிறனே.. ஆனா பேபி இதையெல்லாம் நோட் செஞ்சிருக்கா..”
என்றவன் தன் அப்பம்மாவைக் கை வளைவில் வைத்துக் கொண்டு ஃபோனில் யாருடனோ பேசினான்.

அவன் பேசி முடிக்கவும் அல்போன்ஸும் ஜோசப்பும் மாலினியும் மேரியும் உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த ஜேம்ஸின் பக்கம் ஓடினார்கள்.

“ஜேம்ஸு.. அங்க சுத்தி இங்க சுத்தி அந்த லாரன்ஸு உன்னோட அம்மாவையும் அப்பம்மாவையும் தூக்கியிட்டானே.. அவன் தூக்கீட்டு எங்களை மிரட்டி நாங்கள் தான் தூக்கினாங்கள் எண்டு உன்னட்டை சொல்லச் சொன்னான்..”
என அல்போன்ஸ் கூசாமல் பொய் சொல்ல, சற்றே தள்ளி நின்றிருந்த கோதை, வேகமாக தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே தனக்கு முன்னால் கிடந்த மேசையைத் தூக்கி அடித்த ஜேம்ஸ், அடுத்த கட்டமாக அல்போன்ஸின் கழுத்தை இறுகப் பிடிக்க, வியாகேசும் வஞ்சியும் ஓடி வந்து ஜேம்ஸை பிடித்துக் கொண்டார்கள்.

“இந்தா பாருங்கோ நாலு பேரும் செய்த துரோகம் எல்லாம் பீட்டருக்கு தெரிஞ்சு போட்டுது.. சும்மா இஞ்சை நிண்டு கொண்டு நாடகம் போடாமல் வெளியால போங்கோ.. வாசல்ல ஒரு வாகனம் வரும் அதுல போய் ஏறிக் கொள்ளுங்கோ.. சொந்தக்காரரா போனதால அங்கால மட்டக்களப்புல ஒரு வீடும் ஒரு தோட்டமும் உங்கடை பேருல போட்டிருக்கு.. அதுல போய் தோட்டம் செய்து மீதி வாழ்க்கையை வாழுங்கோ.. அது கூட நீங்கள் திருந்த ஒரு வாய்ப்பு தான்.. இல்லை நாங்கள் இப்புடி தான் கேவலமான வேலை செய்வம் எண்டால் இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க பொலிஸ் ஜீப் வரும் எப்புடி வசதி..”
என வியாகேசு சொல்லி முடிக்கவும், அல்போன்ஸ், ஜோசப், மாலினி, மேரி நால்வரும் வெளியே போய் வந்த வாகனத்தில் ஏறிப் போய் விட்டார்கள்.

அந்த நால்வரின் அத்தியாயமும் அதோடு முடிந்து போக, தில்லையம்பலம் தன் மகளை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

அவர் வருவதற்கு முன்னமே அவரின் தில்லுமுல்லு தெரிந்து போய் விட, கொதிநிலையில் நின்றிருந்தான் ஜேம்ஸ்.

ஜீவோதயத்திற்குள் வந்த தில்லையம்பலத்துக்கும் உள்ளே வந்த பத்தாவது நிமிடத்திலேயே தன் பருப்பு அங்கே வேகாது என்பது புரிந்து போய் விட, சற்றே தள்ளி நின்ற கோதையை இழுத்து அவளின் கழுத்தில் கத்தியை வைத்தார்.

அவ்வளவு தான் மின்னல் வேகத்தில் கோதை வியாகேசின் பக்கம் நகர, தில்லையம்பலத்தின் கழுத்தை பிடித்திருந்தான் ஜேம்ஸ்.

தில்லையம்பலத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த ஜேம்ஸுக்கு யாருடைய கத்தலும் காதில் ஏறவேயில்லை. கத்திக் கத்திக் களைத்துப் போய், அவனது சட்டையைப் பிடித்து இழுத்துப் பார்த்தும் களைத்துப் போன கோதைக்கு அடுத்து என்ன செய்வது என்பதே தெரியாமல் போகத் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

குனிந்தபடி இருந்தவளது கண்ணுக்கு கீழே கிடந்த பழம் வெட்டும் கத்தி தென்படவே, சட்டென்று அதனைக் கையிலெடுத்துக் கொண்டவள், அதை இடக் கையால் இறுகப் பற்றிக் கொண்டு
“என்னங்கோ..”
எனக் கத்தினாள்.

வெறி கொண்ட வேங்கையென தில்லையம்பலத்தை அன்றே அப்போதே கைலாயம் அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக இருந்த ஜேம்ஸுக்கு அவளின் ‘என்னங்கோ’ என்ற அழைப்பு மட்டும் தனித்துக் கேட்டது. அம்பலத்தின் கழுத்தில் இருந்து கையை எடுக்காமலேயே வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கண்டு கொண்ட கோதை, இடது கையில் இருந்த கத்தியை வலது கையின் மணிக்கட்டில் வைத்து அழுத்தியபடி
“இப்ப அவரை விடப் போறியளோ இல்லையோ.. இப்ப விடாட்டிக்கு கையை அறுத்துக் கொண்டு செத்துப் போடுவன் சொல்லீட்டன்..”
என அழுதபடி சொல்ல, அம்பலத்தின் கழுத்தை நெரிக்கும் போது கூட நிதானம் தப்பாமல் இருந்தவனது நீலவிழிகள் அவளது செய்கையில் நிதானத்தை தொலைத்துப் பழுப்பு நிறமாக மாறவே, அம்பலத்தை அந்தரத்தில் விட்டு அவளிடம் பாய்ந்தான்.

கோதையின் அருகே பாய்ந்து வந்தவன், அவள் கையில் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி எறிந்து விட்டு, அவளது கழுத்தைப் பிடித்துச் சுவரோடு அழுத்த, கோதையோ அசையாமல் அவனது விழிகளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றே தள்ளி நின்ற வியாகேசு தான் ஓடி வந்து
“கையை எடு பீட்டரு.. இப்ப நீ என்ன செய்றாய்.. சாகப் போனவளைப் பிடிச்சு நீ சாகடிக்கிறியோ.. பாவம் அது வளத்தவனை எப்புடி விட்டுக் குடுக்கும்.. கையை எடு பீட்டரு..”
என்று கொண்டு ஜேம்ஸின் கையைப் பிடித்து அவனிடம் இருந்து கோதையை இழுத்து அப்பால் விட்டார்.

அப்போது தான் சுற்றுப்புறத்தை உணர்ந்த ஜேம்ஸ் அவளின் கழுத்தில் இருந்த கையை வேகமாக எடுத்து விட்டு, பழுப்பு விழிகளால் கோதையையே பார்த்தபடி, அவளது கழுத்தை நெரித்த தன் வலது கையை மடித்து சுவற்றில் வேகமாகக் குத்தத் தொடங்கினான்.

அவனது வெண்ணிறக் கை மோதிய வேகத்தில் கன்றிச் சிவக்கவே, அதைப் பார்த்துப் பதறிப் போன கோதை, வேகமாகப் போய் சுவருக்கும் அவனது கையுக்கும் நடுவே நின்று கொள்ள, கண்களை மூடிக் கொண்டு சுவற்றில் குத்த வந்தவனது கை அவளது வயிற்றில் மோதப் போகவும், வியாகேசு கத்தியே விட்டார்.

அதற்குள் ஜேம்ஸும் கண்களைத் திறந்து பார்த்து விட்டான். தன் முன்னால் நின்றவளைப் பார்த்தவன் அங்கிருந்து வேகமாகத் திரும்பிக் கொள்ளவும், அவனது கோபத்தை எப்படி மட்டுப் படுத்துவது எனத் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த கோதை. வேகமாக அவனைப் பின் பக்கமாக அணைத்துக் கொண்டு, அவனது முதுகில் முகத்தை வைத்து அழுத்திக் கொள்ளவே, அதுவரை இறுகிப் போயிருந்தவன் லேசாகத் தளர்ந்து போனாலும் அப்படியே தான் அசையாமல் நின்றிருந்தான்.

கோதை ஜேம்ஸை பின்னால் நின்று அணைத்திருப்பதை, முகத்தை கைகளால் மூடி விரல் இடுக்குகளில் பார்த்தபடி வஞ்சி நிற்க, அவன் முதுகில் இரண்டு போட்டு
“நடவடா வெளியால இங்கிதம் கெட்டவனே..”
என்று அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தபடி
“என்ன அம்பலத்தாரே.. அங்கினை என்ன லுக்கு சின்னஞ் சிறுசுகள் அப்புடித் தான் இருக்குங்கள்.. உம்மடை கொள்ளிக் கண்ணைப் போட்டு பிள்ளையளை அவிய வைக்காமல் இப்புடி வாரும்..”
என்றும் சொல்லிப் போக, கால்களைத் தரையில் உதைத்தபடி தில்லையம்பலமும் வெளியே வந்து விட்டார்.

வெளியே வந்தவரிடம்
“இந்தா பாரும்.. பேசாமல் ஓடிப் போயிரும்.. நீர் உம்மடை மனுஷிக்கு மேல கார் ஏத்திக் கொல்லப் பாத்ததில இருந்து விதம் விதமாக மற்றவர்களின் குடியைக் கெடுத்தது வரை வீடியோ எல்லாம் கை வசம் கிடக்கு.. இப்புடியே கிளம்புறீரா இல்லாட்டிக்கு பொலிஸ் ஜீப் மரியாதை ஏதும் வேணுமோ..”
என வியாகேசு கேட்க, இப்போதைக்கு தப்பித்தால் போதும் என மகளை இழுத்துக் கொண்டு ஓடியே போய் விட்டார் தில்லையம்பலம்.

மனைவியின் அணைப்பில் நின்றவனுக்கு, அவள் தன் கையை அறுத்துக் கொள்ளப் போனதே மீண்டும் மீண்டும் வரவே, அவளை விலக்கி விட்டு உள்ளே போய் விட்டான். அந்தளவுக்கு மனைவி மீது கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் வந்தது.

…………..

எல்லோரும் நின்றிருந்த தோரணையைப் பார்த்து என்னவென்பது போல வந்த கோதையின் கைகளைப் பிடித்துக் கொண்ட வஞ்சி
“வாம்மா தாயே உனக்காகத் தான் தவமாத் தவமிருக்கிறம்..”
என்றபடி அவளிடம் சொல்ல, அவளோ சுற்றி நின்றிருந்த வியாகேசையும் மற்றவர்களையும் தலையைச் சொறிந்தபடி பார்த்தாள்.

“என்ன தங்கச்சி அங்கினை இங்கினை பாக்கிறாய்.. இங்க பாரன் நான் ஒரு கதை சொல்லுறன்..”

“ஆரு நீ கதை சொல்லப் போறாய்.. சரி சொல்லு கேப்பம்..”

“இப்ப பாஸு கோபமா இருக்காரு..”

“இல்லை தெரியாமல் தான் கேக்கிறன் அண்ணாச்சி.. உன்ரை பாஸு எப்ப தான் கோபம் இல்லாமல் இருந்தவர்.. சரி அதை விடு நான் இப்ப என்ன செய்யோணும்..”

“ஆ சரியா பாயிண்டை புடிச்சிட்டாய்.. நீ இப்ப நாங்கள் சொல்லுறதை போய் பாஸிட்டை சொல்லோணும்.. ஏனெண்டால் நீ சொல்லுறதை மட்டும் தான் பாஸு கோப்பார்..”

“டேய் ஆ ஊவெண்டால் இது ஒண்டை சொல்லீடுங்கோடா.. அந்த மனுசனுக்கு பக்கத்தில போனாலே எனக்கு பத்து நாளைக்கு குலப்பன் காச்சல் அடிக்குது..”

“தங்கச்சி பிளீஸ் அண்ணனுக்காக இதைக் கூட செய்ய மாட்டியோ..”

“சொல்லித் தொலை..”

“நாளையிண்டைக்கு எனக்கு சம்மந்தக்கலப்பு..”

“வாவ் வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..”

“இரு இரு அவசரப் படாதே.. அதுக்கு பாஸையும் வரச் சொல்லோணும்.. வரச் சொல்லுறியோ..

“டேய் உன்ரை சம்மந்தக்கலப்புக்கு நீ தானே அவரை கூப்பிடோணும்.. அது தானே முறை..”

“அவரைப் பாக்கவே வயிறு கலங்குது எனக்கு..”

“கொஞ்சம் பொறு துரை மலையேறி இறங்கினாப் பிறகு போய்க் கதைப்பம்..”
என்று சொன்ன கோதை, அப்படியே அங்கே கிடந்த சோஃபாவில் விழுந்து படுத்து விட்டாள். அவளுக்கு அன்று ஜேம்ஸின் விசுவரூபம் கண்டு உள்ளே பீதியாகி விட்டிருந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!