பாண்டிச்சேரியே கோலாகலமாக மறுநாள் வரும் புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக இளைஞர் பட்டாளங்கள் மனம் நிறைந்து சந்தோஷத்துடன் கூட்டம் கூட்டமாக தயாராகிக் கொண்டிருக்க…
அந்த மத்தியில் வாழும் ஒரு மங்கையின் மனம் மட்டும் வருத்தத்துடன் உருகிக் கொண்டு இருந்தது… அவள் வேறு யாரும் அல்ல நம் கதையின் நாயகி ‘யாழினி’.
அனைவரும் மனம் நிறைய சந்தோஷத்தில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க யாழினி அவள் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஊர் முழுக்க சந்தோஷமாக இருக்க வீட்டில் இருக்கும் ஆட்கள் உட்பட சந்தோஷத்தில் நிறைந்து இருக்க பாவம் மங்கையின் மனதில் மட்டும் கவலைகளே நிறைந்திருந்தது.
யாழினி யின் அம்மா குமுதம், “இன்னும் என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க மூளையில் முடங்கிக் கிட்டு… முதல்ல பட்டு புடவை கட்டி தலை நிறைய பூ வச்சு அழகா தயாராகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதுக்கு நேரம் ஆகிடுச்சு” என்றார்.
அந்த சமயம் வீட்டின் உள்ளே நுழைந்த சங்கர், “அடியேய் குமுதா இந்தா இதுல பஜ்ஜி வடை எல்லாம் இருக்கு எடுத்து பாத்திரத்தில் வை…”
“இது கூட சூடா டீ மட்டும் போட்டுக்கலாம் பிஸ்கெட் வாங்கிட்டு வந்து இருக்கேன் அதையும் வச்சிடு. சும்மா விழுந்து விழுந்து வேலை பார்க்காத… அப்புறம் கை வலிக்கிது கால் வலிக்கிதுன்னு என் உயிரை வாங்குவ”. என்றார்.
குமுதம் அவரைப் பார்த்து முறைக்க…
சங்கர், “சரி சரி எல்லாரும் வர நேரத்தில் சண்டை வேண்டாம்… முதல்ல நம்ப பொண்ணு எங்க ரெடியாகிட்டாளா?” என்றார்.
குமுதம், “இப்போதான் அவகிட்ட புடவை கட்ட சொல்லிட்டு வந்தேன்…. ரெடி ஆகிக்கிட்டே இருக்கா” என்றார்.
சங்கர், “நேத்து தான் சின்ன பிள்ளையா என் கையை பிடிச்சிட்டு பள்ளிக்கூடம் வந்த மாதிரி இருக்கு…. ஆனா, அதுக்குள்ள 20வது வருடம் ஆகிடுச்சு இப்போ புருஷன் கையை பிடிச்சிட்டு மாமியார் வீட்டுக்கு போக தயார் ஆகிட்டா…. ஹ்ம்ம்ம” என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.
அந்த சமயம் வீட்டின் உள்ளே நுழைந்த மயில், “சின்ன வயசுல அவளுக்கு விருப்பமே இல்லாமல் ஸ்கூல்ல சேர்த்து விட்டிங்க… அதேபோல், இப்போ அவளுக்கு விருப்பமே இல்லாமல் மாமியார் வீட்டுக்கு அனுப்ப பாக்குறிங்க…”
“இது என்ன நியாயம் அப்பா…. இதில் அவளாகவே எல்லாம் கேட்டு பண்ணிக்கிற மாதிரி பெருமூச்சு வேறு” என்றாள் கிண்டலாக கூறுவது போல் அவளுக்கு இக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்தாள்.
குமுதம், “ஆமாண்டி, அப்பவும் அவ அண்ணன் தான் முடிவெடுத்தான் இந்த வயசுல ஸ்கூல் சேர்த்தா நல்லா இருக்கும்னு சொன்னான்… அவன் சொன்ன மிதிரியே இவளும் நல்லா படிச்சா…”
“அதேபோல் இப்பவும் இந்த வயசுல தான் கல்யாணம் பண்ணனும் சொல்லி மாப்பிள்ளை பாத்துட்டு வந்துட்டான். அவன் என்ன பண்ணாலும் அது யாழினி நல்லதுக்கு தான்…”
“நீ ஆச்சு இதெல்லாம் சொல்லி புரியவை உன் பிரெண்ட் கிட்ட” என்றார்.
மயிலு, ‘ஆத்தி இவங்க இங்க தான் இருக்காங்களா… நான் இவங்களை பார்க்கவே இல்லையே…. இவங்க இங்கதான் இருக்காங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வாயவே திறந்திருக்க மாட்டேனே….’ என்று எண்ணிக் கொண்டே நின்றிருக்க…
குமுதம், “என்ன டி அப்படியே நிக்கிற போய்ட்டு அவளுக்கு புடவை கட்ட உதவி பண்ணு… சீக்கிரமா அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வா” என்றவர் திரும்பி கணவரை பார்த்து, “என்ன அப்படியே என் வாயை பாத்துட்டே இருக்கீங்க” என்றார் முகத்தை உற்றென்று வைத்துக் கொண்டு.
உடனடியாக இருவரும் இரு திசையில் பரந்து விட்டார்கள்.
சங்கர், ‘இவ கிட்ட வாயை கொடுத்தா ரொம்ப கஷ்டம்’ என்று முனுமுனுத்துக் கொண்டே மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வருகிறார்களா என்று பார்க்க வாசலை நோக்கி சென்று விட்டார்.
யாழினியின் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற மயில் அதிர்ச்சியாக, “என்னடி நீ இப்படி உட்கார்ந்துட்டு இருக்க…”
“அங்க உங்க அம்மா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வறாங்கன்னு சொல்லி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு இருக்காங்க… நீ என்னடான்னா இப்படி மூலையில் கண்ணை கசக்கிக் கிட்டு உட்கார்ந்திருக்க” என்றாள்.
ஆனால், அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கும் நிலையில் யாழினி இல்லையே….
அவள் கழுத்தில் தொங்கும் மெல்லிய சங்கிலியில் இருக்கும் கை வடிவ டாலரை வருடி பார்த்தவள், “என்னால முடியலடி நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்”
“ஆனா, என்னால எதையுமே மறக்க முடியல டி…. அவன் எனக்காக பண்ண ஒவ்வொரு விஷயமும் என் கண் முன்னாடி வந்துகிட்டே இருக்கு” என்றாள் கண்ணீருடன்.
மயில் அவள் அருகில் சென்று அமர்ந்தவள், “எனக்கு புரியுது டி உன்னோட வருத்தம். ஆனா, இப்போ நம்மளால் என்ன பண்ண முடியும்?…”
“இதுக்கு அப்புறம் குடும்பத்தை மீரி நம்மளால் தான் எதுவுமே பண்ண முடியாதே டி…. இப்போ உனக்கு காலேஜ் வேறு முடிஞ்சிடுச்சு”
“உனக்கு எப்போ காலேஜ் முடியும்னு இதுக்காகவே உங்க வீட்ல காத்துகிட்டு இருந்த மாதிரி உன் அண்ணன்க்கு தெரிஞ்சவங்க யாரோ போன் பண்ணி உன்ன பொண்ணு கேட்டு வரதா சொல்லி இருக்காங்க…”
“உனக்கு கல்யாணம் ஆனா எல்லாம் தானா சரியாகிடும் சொல்றாங்க டி… நல்ல பையன் நல்ல குடும்பம் சொல்றாங்க டி…” என்றாள்.
யாழினி கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அவளைப் பார்த்தவள், “அது எப்படி டி மறந்து போகும்? சாதாரணமா காதலிச்சவங்க மனச மாத்திக்கிட்டு இன்னொருத்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிறது இப்போ சகஜமா இருக்கலாம்….”
“ஆனா, என்னோட காதல் அப்படி கிடையாது… நான் காதலிச்சவனை பார்க்காமலேயே பல நாளாக அவனை காதலிச்சுக்கிட்டு இருந்தேன். அவன் எப்படி இருப்பான் கருப்பா சிவப்பா எதுவுமே தெரியாமல் நான் அவனை காதலிச்சுருக்கேன் டி”
“அப்படிப்பட்டவனை என் மனசுல இருந்து தூக்கி போட்டுட்டு… எப்படி என்னால வேறு ஒருத்தவனை கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்றாள் கண்ணீர் மல்க.
மயிலுக்கு என்ன சொல்லி இவளை சமாதானம் செய்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் அவள் அறைக்குள் நுழைந்த அவளின் அண்ணன் பார்த்திபன், “இன்னும் ஒப்பாரி வச்சிக்கிட்டு தான் இருக்கியா? நம்ம குடும்பத்துக்கு எது சரிப்பட்டு வரும்னு எங்களுக்கு நல்லா தெரியும்..”
“நாங்க சொல்றதை கேட்டு நடந்துக்கிறது தான் உனக்கு நல்லது புரியுதா….. ஒழுங்கா அம்மா சொன்ன மாதிரி இந்த துணி எல்லாம் மாத்திக்கிட்டு சீக்கிரமா தயாராகு…”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டு இருக்கிறது கண்ணை கசக்கிட்டு இருக்கிறது இப்படி எல்லாம் ஏதாச்சும் பண்ண வெட்டி போட்டுருவேன் பாத்துக்கோ” என்று மிரட்டும் தோணியில் கூறிவிட்டு சென்றான்.
யாழினி பயத்துடன், “நான் அப்படி என்ன பெருசா ஆசைப்பட்டேன் ஒரு பையனை காதலிச்சது அவ்ளோ பெரிய தவறா என்ன…”
“சின்ன வயசுல இருந்து எல்லாமே இவங்க சொல்றதை தானே நான் பண்ணேன்… என் வாழ்க்கையின் இக்கட்டான சிச்சுவேஷன்ல முடிவெடுக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா?” என்று மயிலிடம் புலம்பினாள்.
மயில், “நீ எதுக்கும் கவலைப் படாதே டி…. சும்மா பொண்ணு பார்க்க தானே வர்றாங்க… அவங்க வந்துட்டு போகட்டும் நம்ப உன் அண்ணன் கிட்ட பேசிப் பார்க்கலாம்… ஏதாச்சும் பிளான் பண்ணலாம்” என்று ஆறுதல் கூறினாள்.
பிறகு, பார்த்திபன் சொல்லி சென்றது போலவே துணிகளை எல்லாம் மாற்றிக்கொண்டு மிதமான ஒப்பனைகளில் தயாராகி அழகு ஓவியமாக காட்சியளித்தாள் யாழினி.
மயில் அவள் கையில் அழுத்தத்தை கொடுத்து, “நீ எதுக்கும் கவலைப்படாத டி கடவுள் கண்டிப்பா நம்ம பக்கம் தான் இருப்பாரு… வர மாப்பிள்ளைக்கு உன்ன பிடிக்கலைன்னா இந்த கல்யாணம் எப்படி நடக்கும்?”
“பேசாமல் இப்படி பண்ணலாம்… இன்னைக்கு பொண்ணு மாப்பிள்ளை தனியா பேச சொல்லி அனுப்பி வைப்பாங்க அப்போ நீ அவர்கிட்ட உன்னோட காதல் விஷயம் எல்லாத்தையும் சொல்லி இந்த கல்யாணத்த அவரையே நிறுத்த சொல்லி கேட்டு பாரேன்” என்று சடுதியில் தோன்றிய ஐடியாவை அவளுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
கவலையில் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் ஒரு நிலையில் இல்லாத மனதிற்கு அவள் சொல்லுவதும் சரிதான் என்பது போல் தோன்றியது.
இதற்கு மேல் தன்னால் எதுவும் பண்ண முடியாது வரும் பையனிடம் ஆச்சு தனக்கு உதவி பண்ண முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
பாவம் அவளுக்கு தெரியாதே வரும் பையனால் தான் தனக்கு பிரெச்சனையே ஆரம்பம் ஆக போகிறது என்று.
மாப்பிள்ளை வீட்டில்:
“டேய் சீக்கிரம் தயாராகுங்க டா… பொண்ணு வீட்டுக்கு நாலு மணிக்கு எல்லாம் வரோம் என்று சொல்லி இருக்கேன். ஆனா, நீங்க இங்கேயே மூணு மணி ஆக்கிட்டீங்க சீக்கிரமா ரெடி ஆகுங்க எல்லாரும்” என்று பம்பரமாக சுற்றி கொண்டிருந்தார் நம் நாயகனின் அம்மா சாந்தி.
சக்தி, “அம்மா நீங்க எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம வர்றோம் என்று சொல்லிட்டோம்ல வெளியே பாருங்க அடிக்கிற மழைக்கு நம்ம எப்படி போறதுன்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன்”
“ஆனா, நீங்க என்னடான்னா சீக்கிரம் போகணும்னு இப்படி குதிச்சுக்கிட்டு இருக்கீங்க” என்றான்.
சாந்தி, “போடா கூறு கெட்டவனே என் பையன் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தான்… ஆனா, என்ன நடந்துச்சுன்னே தெரியல திடீர்னு ஒரு பொண்ணு போட்டோவ காமிச்சி எனக்கு இவதான் பொண்டாட்டியா வேணும்னு சொல்றான்”
“அவன் மனசு மாறுறதுக்குள்ள அந்த பொண்ணு வீட்ல போயிட்டு பொண்ணு கேட்டு சீக்கிரமா அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரணும். என் பயம் எனக்கு தான்டா தெரியும் உனக்கு என்ன தெரியும்” என்றார் கோபமாக.
சக்தி, “அது சரி… உங்க பையன் கேட்டா என்கிட்ட இருக்கிற பொருளை அப்படியே வாங்கி அவன் கிட்ட குடுப்பீங்க… அந்த மாதிரி ஒன்னும் இந்த பொண்ணு கிடையாது. இந்த பொண்ணுக்கு பிடிச்சா தான் இந்த கல்யாணமே நடக்கும்” என்றான்.
சாந்தி, “ஏண்டா என் பையனுக்கு என்ன கொறச்சல்? அழகில்லையா அறிவில்லையா வசதியிலும் கொஞ்சம் கூட குறைச்சல் கிடையாது. அந்த பொண்ணு வீடு தான் நம்மள விட கொஞ்சம் வசதில கம்மி”
“ஆனா, எனக்கு அதைப் பத்தி எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என் பையனுக்கு பிடிச்சா போதும் அந்த பொண்ண கூட்டிட்டு வந்து ராணி மாதிரி நான் பார்த்துப்பேன்…”
“இன்னும் சொல்ல போனால் அந்த பொண்ணு போட்டோவ பார்த்ததும் எனக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு” என்றார் சந்தோஷமாக.
இவர்கள் இருவரும் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க ஓர் அறையில் இருந்து வெளியே வந்த நம் நாயகனின் தந்தை மகேஷ், “என்ன தான் வளவளன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க..”
“எனக்கு மீட்டிங் இருக்கு ஆல்ரெடி டைம் ஆகிடுச்சு சீக்கிரம் உன் பையன் ரெடியாயிட்டானா போய் பாரு.. நான் பொண்ணு வீட்டுக்கு வந்துட்டு அப்படியே மீட்டிங்கு கிளம்பிடுவேன்” என்றார் சிடுசிடுப்பாக.
சக்தி, ‘ஐயையோ அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான்.