அத்தியாயம் 3
எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்
அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..
“என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எதுக்கு இப்படி பண்ற? பாரு உன்ன பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க” என்றவள் தன் முன்னாள் நெற்றியில் இரண்டு கொம்புகளோடு முதுகில் அதன் திமிருக்கு அழகு சேர்க்கும் திம்மல்களை கொண்ட ஒரு கருப்பு நிற காளை நின்று இருக்க, இவ்வளவு நேரம் அந்த இடத்தை அமர்க்களம் படுத்திக் கொண்டே இருந்த அந்த காளையும் பெண்ணவளை பார்த்ததும் சிறு குழந்தையைப் போல் அவள் முன்னாள் அமைதியாக நிற்க,
“ என்னடா அமைதியா நிக்கிற எதுக்கு இப்ப இங்க வந்த?” என்றவள் மேலும் கோபமாக கேட்க அவளின் கோபத்தைக் கண்ட அந்த காளையோ தன் முன்னங்காலை மண்டியிட்டு அவள் முன்னாள் ஏதோ மன்னிப்பு கேட்பது போல் செய்கை செய்ய அதில் லேசாக புன்னகைத்தவள். மெல்ல குனிந்து அந்த காளையின் தலையை தடவியவள்.
“ஊர்ல திருவிழா ஏற்பட நடந்துகிட்டு இருக்கிறப்போ நீ இப்படி பண்ணுனா எப்படி சொல்லு பார்க்கலாம்… எல்லாரும் உன்ன பார்த்து பயப்படுறாங்க இல்ல இனி இன்னொரு தடவை இப்படி பண்ண கூடாது, புரியுதா?” என்றவள் அந்த காளையிடம் செல்லம் கொஞ்சு கொண்டிருக்க இதை பார்த்த அங்கிருந்த ஒருவன் தன் அருகில் பயத்தோடு நின்றிருந்தவனிடம்
“ என்ன அண்ணா இந்த புள்ள அந்த காளைகிட்ட செல்லம் கொஞ்சுக்கிட்டு இருக்கு, இங்குன அவன் அவன் டவுசர் அவுந்து போய் கிடக்கிறான். இந்த புள்ள அந்த காளையை கொஞ்சிக்கிட்டு இருக்கு” என்று கேட்க
“அது ஒன்னும் இல்ல மச்சான் இந்த ஊருக்கு நீ புதுசு இல்ல அதான் உனக்கு தெரியல, அதோ அங்க இருக்கே அந்த காளை மாடு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 70 ஜல்லிக்கட்டுல முதல் இடம் பிடித்த மாடு… அது போகாத ஜல்லிக்கட்டே கிடையாது. ஆனா, இதுவரைக்கும் ஒரு தடவை கூட இது புடிமாடு அப்படிங்கிற பேர் வாங்கினதே கிடையாது.” என்று அவன் கூற
“ என்ன மச்சான் சொல்றீங்க அப்படியா?… ஓ அதான் இப்படி எல்லாரையும் அது பந்தாடுதா?” என்று அந்த புதியவன் கேட்க
“ அது மட்டும் இல்ல மச்சான் இதோ நிக்குதே அந்த புள்ளைய தவிர அந்த மாட்ட வேற யாராலயும் அடக்க முடியாது. அந்த மாடு அந்த ஒத்த புள்ளையா தவிர வேற யார்கிட்டையும் அது அடங்கியும் போகாது, இந்தப் புள்ள தவிர அது பக்கத்துல யாரு போனாலும் குடல் சரிந்து கீழே தான் விழுகணும்… ஒரே குத்து தான் கொன்னுட்டு போயிடும், அப்படிப்பட்ட மாடு” என்றதும் சற்று பயந்தவன்.
“ ஆனா எப்படி இந்த புள்ள கிட்ட மட்டும் அடங்கி போகுது?” என்று அவன் குழப்பத்தோடு கேட்க
“பின்ன அடங்கி போகாம அந்த காளைக்கு அவ தான அம்மா, அது பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் கூட இருந்து பார்த்துக்கிறது அவ ஒருத்தி தானே” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே தன் கதிரிடம் பேச்சு வார்த்தையை முடித்த ஆதிலட்சுமி கதிரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றவள். அதனிடத்தில் அதை கட்டிவிட்டு வீட்டிற்கு நுழைய…
“ உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? ஒரு தடவை சொன்ன நீ கேட்க மாட்டியா?” என்று அந்த கிழவி கோபத்தோடு வெத்தலையை இடித்த படியே கேட்க
“இங்குன பாரு கிழவி என்னோட கதிர பத்தி ஏதாவது பேசுனா அப்படியே வெத்தலையை இடிக்கிற மாதிரி உன்னை அதுல போட்டு இடிச்சுடுவேன்.. ஒழுங்கா உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு..” என்றவள் கோபமாக கூற
“அடேய்… பாத்தியா டா உன் மக என்னையா எம்புட்டு பேச்சு பேசுறான்னு, பொட்ட பிள்ளை மாதிரியே இருக்கா? போகும் போது ஏதோ அடக்கம் ஒடுக்கமா மகாலட்சுமி மாதிரி வீட்டை விட்டு போயிட்டு திரும்பி வரும் போது ஏதோ பத்து பேர் கூட சண்டை போட்டு வந்த மாதிரி நிற்கிற, பாவம் இவள கட்டிக்க போற அந்த பையன் ஆனா, இவள பத்தி தெரிஞ்சும் கட்டுனா இவளை தான் கட்டுவேன் ஒத்த கால்ல நினைக்கிறான்.. அதுக்கு மேல அவனுடைய அப்பங்காரன் என் வீட்டுக்கு மருமகளா வந்தா என் தங்கச்சி மகத்தான் வரணும்னு குவியாட்டம் போடுறான்… என்னை கேட்ட இந்த ஊரிலேயே எவனாவது வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து இவளுக்கு கட்டி வைங்க… சென்னைக்கு எல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று கூறிய ஆதியின் பாட்டி வெற்றிலையோடு சேர்த்து ஆதியையும் இடிக்க ஆதியோ கோபத்தில் ஏதோ பேச வர…
“ இந்த பாரும்மா… என்ற மவளை ஏதாவது சொல்ற வேலை வச்சுக்காத உன்கிட்ட இத பத்தி நான் ஏற்கனவே பேசிட்டேன். இது இன்னிக்கு நேத்து எடுத்த முடிவு கிடையாது எப்ப லட்சுமி பொறந்தாலோ அப்பாவே அவனுக்கு தான் லட்சுமி அப்படின்னு பேசி முடிச்சாச்சு சும்மா சும்மா இதையே பேசாத, இவ என் வீட்டு மகாலட்சுமி.. இந்த வீடு இவ்வளவு செல்வ செழிப்போடு இருக்க என்னோட லட்சுமி தான் காரணம், இதுவரைக்கும் அவ ஆசைக்கு நான் குறுக்க நிக்கல, இதுக்கு மேலையும் நான் அவ விருப்பத்துக்கு எதிரா நான் நிக்க மாட்டேன். அப்றம் இது தான் உனக்கு கடைசி கல்யாண தேதி நெருங்கி வருது திருவிழா முடிஞ்சதும் கல்யாணம், வீட்டுக்கு சொந்த பந்தெல்லாம் வர ஆரம்பிச்சுடுவாங்க இதே மாதிரி தேவையில்லாம பேசிட்டு இருக்காத.. நீ இப்படி பேசிட்டு இருக்கிறது அந்த சக்திவேல் காதுல விழுந்தது நான் இல்ல அவனே உன்னை வெத்தலையாட்டம் இடிச்சுப்புடுவான் பாத்துக்கோ” என்று கூறி தன் துண்டை உதறி தோலில் போட்டபடி தன் அறைக்கு சென்று விட்டார் முத்துசாமி… அவர் சென்றதுமே அவரின் பின்னால் மிகவும் அடக்க ஒடுக்கமாக கையில் சொம்பொடு சென்றார் அவரை மனைவி அம்பிகா.
அவர் அந்த அறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் அறைக்குள் நுழைந்த ஆதிலட்சுமி..
“ அப்பா நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று கூற
“சொல்லுடா கண்ணு என்ன விஷயம்?” என்று கேட்டவர் புன்னகை முகத்தோடு தன் மகளை அழைத்து தன் அருகே அமர்ந்து கொள்ள, அவளும் ஓடிச் சென்று தன் தந்தையின் அருகே சிரித்த முகத்தோடு அமர்ந்தவள்.
“ அப்பா பாப்பா ஏன் இன்னும் ஊரிலிருந்து வரல?” என்று கேட்க இவ்வளவு நேரம் புன்னகையோடு இருந்தவரின் முகம் அப்படியே வாடி போக, மெல்ல நிமிர்ந்து தன் மனைவியை கோபத்தோடு பார்த்தார். இவ்வளவு நேரம் ஒன்றும் தெரியாதவர் போல இருந்த
அம்பிகாவின் முகம் சட்டென்று கோபமாக மாற,
“ இத பத்தி எதா இருந்தாலும் நீ உன் அம்மாகிட்ட பேசிக்கோ டா” என்று அவர் கூறியதுமே ஆதிக்கு புரிந்து விட்டது என்ன நடந்திருக்கும் என்று அதனால் கோபத்தோடு நிமிர்ந்து தன் அன்னையைப் பார்த்தவள்.
“ அம்மா அப்போ நீங்க தான் பாப்பாவ ஊருக்கு வர வேண்டான்னு சொன்னீங்களா?” என்றவள் கேட்க அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தார்.
“அம்மா உங்க கிட்ட தான் கேட்கிறேன். நீங்க தான் பாப்பாவ ஊர்ல இருந்து வர வேண்டாம்னு சொன்னீங்களா?” என்று இம்முறை மிகுந்த கோபத்தோடு அவள் கேட்க
“அவ கல்யாணத்துக்கு வந்து என்ன பண்ண போற? கல்யாணம் உனக்கு தானே, அதோட அவ ஊருக்கு வந்தா இந்த ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் அவ யாரு என்னன்னு நான் பதில் சொல்லணும் அதுக்கு அவ அங்கேயே இருந்துட்டு போகட்டும்.. அதுவும் இல்லாம அவளை பார்க்கவே எனக்கு பிடிக்கல” என்று அம்பிகா தன் முகத்தை திரும்பியவாறு கூற
“அம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க? அவளும் உங்க பொண்ணு தான்” என்று ஆதி கோபத்தோடு கூற
“அது எனக்கு தெரியும் அதனால் தான் அவளை இங்க வர வேண்டாம்னு சொன்னேன்” என்றவர் கோபமாக கூற
“ சரி நீங்க உங்க பொண்ணை தானே இந்த கல்யாணத்துக்கு வர வேண்டாம்ன்னு சொன்னிங்க.. ஆனால், நான் என் தங்கச்சி வர வேண்டாம்னு சொல்லல, எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும் நீங்க உடனடியா அவளை கிளம்பி வர சொல்லுங்க” என்று ஆதி கோபமாக கூற
“இல்ல இனி யார் என்ன சொன்னாலும் அவ இந்த கல்யாணத்துக்கு வரமாட்டா, அவளுக்கு எதோ முக்கியமான வேலை இருக்குதாம்” என்று விடாப்பிடியாக அம்பிகா கூற
“அப்படியா? அப்போ சரி, என் தங்கச்சியை எப்படி இங்க வர வைக்கணும் எனக்கு தெரியும்” என்றவள் உடனடியாக தன் போனில் இருந்து தன் தங்கைக்கு அழைக்க மறுக்கவோ அழைப்பு எடுக்கப்படவில்லை.. அதில் கடுப்பானவள் ஆதிலட்சுமி.
“நீங்கள் அவகிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா, அவ மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதோ சொல்லி இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது.. எனக்கு இது சுத்தமா பிடிக்கல ம்மா… அவ இல்லாத ஒரு விசேஷம் இந்த வீட்ல நடக்காது இப்ப சொல்ற கேட்டுக்கோங்க என் தங்கச்சி இருந்தா தான் இந்த கல்யாணம் நடக்கும் அதோட அவளை நீங்க யாரும் கூட்டிட்டு வர வேணாம் நானே போய் கூட்டிட்டு வரேன்” என்றவள் அந்த அறையில் இருந்து வெளியேற போக
“லட்சுமி என்ன பண்ற? நீ கல்யாணம் பொண்ணு, ஊரை தாண்டி எல்லாம் போக கூடாது” என்று அம்பிகா கூற
“அப்படியா? ஆனா கல்யாண புடவை எடுக்க நான் ஊர் எல்லையை தாண்டி தானே போகணும்?” என்று அவள் கேட்க
“ஆனா…” என்று அம்பிகா எதோ கூற வர
“இங்க பாருங்க ம்மா… இனி நீங்க யார் என்ன
சொன்னாலும் நான் கேட்கிற மாதிரி இல்லை, நான் இப்பவே கிளம்புறேன் அவ இல்லாம இங்க வர மாட்டேன். இப்ப சொன்னது தான் அவ இல்லாம இந்த கல்யாணம் நடக்காது” என்று கூறியவள் தன் தங்கையை அழைத்து வருவதற்காக கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.