சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 31 ❤️❤️💞

4.9
(14)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 31

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

நடு இரவில் திடீரென யாரோ வேகமாக மூச்சு விடும் சத்தம் கேட்க எழுந்து தன் கைப்பேசியில் இருந்த  விளக்கை போட்டு பார்த்த சுந்தரி அப்படியே படபடத்து போனாள்.. பாட்டிக்கு மூச்சு திணறிக் கொண்டிருந்தது..

“ஐயோ பாட்டி.. என்ன ஆச்சு பாட்டி..? பாட்டி.. பாட்டி..”

பாட்டியின் அருகே சென்று இப்படி உடல்நிலை சரியில்லாமல் போனால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தாரோ அது அத்தனையும் செய்து பார்த்தாள் சுந்தரி.. ஆனால் எதற்கும் பாட்டியின் மூச்சு திணறல் நின்ற பாடாய் இல்லை..

பாட்டியின் கண்கள் லேசாக சொருகிக் போய் கொண்டே இருக்க சுந்தரிக்கு பயம் எடுத்தது.. பாட்டி நெஞ்சில் கை வைத்து அழுத்தி பிடித்திருந்தார்.. அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டதோ என சுந்தரிக்கு சந்தேகம் வந்தது..

அதற்குள் ரதி எழுந்து வந்து “என்ன ஆச்சு சுந்தரி பாட்டிக்கு..?” என்று கேட்க “ரதி.. நீ கொஞ்சம் பாட்டி பக்கத்துலயே இரு.. நான் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்றேன்..” பாட்டியை வழக்கமாக காண்பிக்கும் மருத்துவருக்கு அழைத்தாள்..

அவள் அழைப்பை ஏற்ற மருத்துவர் அவள் சொன்ன விஷயத்தை கேட்டு “நான் இப்ப உங்க வீட்டுக்கு வர முடியாதும்மா.. ஊரெல்லாம் தண்ணியா இருக்கு.. நீ எப்படியாவது பாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துருமா..” என்றார்..

“டாக்டர்.. இங்கேயும் வீட்டை சுத்தி தண்ணியா இருக்கு..” என்று சுந்தரி சொல்ல “சரிம்மா.. ஒரு நிமிஷம் இரு.. நான் ஏம்புலன்ஸ் அனுப்ப முடியுமான்னு பார்க்கிறேன்..”

இணைப்பை துண்டித்து விட்டு அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அவர் சுந்தரிக்கு அழைத்தார்..

“அம்மா.. நான் ஆம்புலன்ஸ் அனுப்பி வெச்சி இருக்கேன்.. ஆனா அவங்களால இந்த தண்ணியில உங்க வீட்டுக்கு எவ்வளவு நேரத்தில வந்து சேர முடியும்ன்னு தெரியல.. நான் உனக்கு அப்பப்ப அவங்க எங்க இருக்காங்கன்னு சொல்றேன்.. நீயும் ஏதாவது வண்டி கிடைக்குமா பாரு..” என்றார் மருத்துவர்..

அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவர் மறுபடியும் சுந்தரிக்கு அழைத்தார்.. “அம்மா ஆம்புலன்ஸ் தண்ணில மாட்டிருச்சும்மா.. அதுக்கு மேல நகர முடியாதுன்னு சொல்றாங்க.. நீ பாட்டியை ஏதாவது வண்டியில் கூட்டிட்டு வர முடியுமான்னு ட்ரை பண்ணு.. நான் அதுக்குள்ள அங்க பக்கத்துல எதாவது ஆம்புலன்ஸ் சர்வீஸ் இருக்கான்னு பார்க்கிறேன்..”

அந்த மருத்துவர் சொல்ல சுந்தரி வேறு வழியின்றி சுந்தரின் கைப்பேசிக்கு அழைக்க முயற்சி செய்தாள்..

ஆனால் சுந்தரின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.. அவன் தன் கைப்பேசியில் மிகச் சிறிய அளவே மின்சக்தி இருப்பதால் விரைவில் அது அணைந்து போய்விடும்.. ஏற்கனவே அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டிருப்பதால்…கைப்பேசிக்கு மின்னேற்றம் செய்ய முடியாது.. என்று சொன்னது ஞாபகம் வர ஷாலினிக்கு அழைக்கலாம் என்று ஷாலினியை கைபேசியில் அழைத்தாள்..

அழைப்பை ஏற்ற ஷாலினி “ஹலோ யாரு..?” என்று கேட்க “ஹலோ ஷாலினி மேடம்.. நான் சுந்தரி பேசுறேன்… பாட்டிக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கு ஷாலினி மேடம்.. அவங்களுக்கு நெஞ்சு வலி வேற இருக்கும் போல இருக்கு.. அப்பப்போ கைய நெஞ்சுல வச்சுக்கிட்டு இருக்காங்க.. நீங்க உடனே அன்னிக்கு அவங்களை பார்த்த டாக்டர்க்கு ஃபோன் பண்ண முடியுமா? ஏதாவது ஆம்புலன்ஸ் வந்து கூட்டிட்டு போற மாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா?”

ஷாலினி “இந்த கிழவி தானே சுந்தர் கிட்ட என்னை கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்லிச்சு.. நல்லா அவஸ்தை படட்டும்.. இதுக்கு எதுக்கு நான் ஹெல்ப் பண்ணணும்?” என்று யோசித்து “சரி சுந்தரி.. நான் ஃபோன் பண்ணிட்டு உனக்கு மறுபடியும் சொல்றேன்..” என்று சொன்னவள் அழைப்பை துண்டித்து அதன் பிறகு மருத்துவரை அழைக்காமல் அப்படியே இருந்து கொண்டாள்..

அடுத்த பத்து நிமிடங்களில் பாட்டிக்கு உடல் நிலை இன்னும் மோசமாகிவிடவே ஷாலினியும் மறுபடியும் அழைக்காமல் இருக்கவே சுந்தரிக்கு இருப்பு கொள்ளாமல் போனது.. மறுபடியும் ஷாலினிக்கு முயற்சி செய்தாள்.. ஆனால் ஷாலினி அழைப்பை ஏற்கவில்லை..

என்ன செய்வது.. என்று தெரியாமல் ஏதோ நினைவு வர ராசாத்தி அக்காவின் கணவரை கைபேசியில் அழைத்தாள்..

“ஹலோ அண்ணா.. பாட்டிக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கு அண்ணா.. சுந்தர் சார் வீட்ல தான் இருக்கோம்.. கொஞ்சம் நீங்க ஆட்டோ எடுத்துட்டு வந்து அவங்களை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போக முடியுமா? கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் வந்துருங்க அண்ணா.. பாட்டிக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு அண்ணா..” கெஞ்சினாள் அவரிடம்..

“ஐயோ சுந்தரி.. நான் இப்பவே வரேன் மா.. நான் எப்படியாவது வந்துடுறேன்..” என்று சொன்னவர் குறுக்கு சந்துகளில் தன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு தண்ணீர் இருந்த பகுதிகளில் ஆட்டோவில் இருந்து இறங்கி தள்ளிக் கொண்டு வந்து ஒரு வழியாக சுந்தர் வீட்டுக்கு அடுத்த அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்..

உள்ளே வந்தவர் பாட்டியையும் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் சுந்தரியின் மடியில் கிடத்தினார்.. பிறகு ஆட்டோவை எடுத்துக்கொண்டு அந்த மழை வெள்ளத்திற்கு இடையே எப்படியோ கஷ்டப்பட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டார்..

அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து செவிலியரும் மருத்துவரும் வேகமாக செயல்பட பாட்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்..

அடுத்த பத்து நிமிடங்களில் வெளியே வந்த மருத்துவர் தலையை தொங்க போட்டுக் கொண்டு வரவும் சுந்தரிக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.. “டாக்டர்  என்ன ஆச்சு…?  உங்க முகத்தை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு..!!” என்று சுந்தரி பதைபதைப்புடன் கேட்டாள்.. படபடப்பில் அவள் நெஞ்சம் துடிக்க மருத்துவரின் முகத்தையே கவலையோடு பார்த்து இருந்தாள்..

“ஐ அம் சாரிமா.. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம்.. ஆனா அவங்க கிட்ட இப்ப ரொம்ப டைம் இல்ல.. மேக்சிமம் ஒரு ஒரு மணி நேரம் இல்லன்னா ரெண்டு மணி நேரம்.. அதுக்கு மேல தாங்காது மா.. அவங்களுக்கு நெருங்கின சொந்தம் யாராவது இருந்தா அவங்களை எல்லாம் வர சொல்லிடுங்க..”  என்றார் மருத்துவர்..

சுந்தரிக்கு இடி விழுந்தாற் போல இருந்தது.. “டாக்டர் அப்படி சொல்லாதீங்க.. ஏதாவது பண்ணுங்க.. ஏதாவது செஞ்சு பாட்டியை எப்படியாவது காப்பாத்துங்க.. என்னால பாட்டி இல்லாம இருக்க முடியாது டாக்டர்.. ப்ளீஸ் டாக்டர்.. உங்களை கெஞ்சி கேக்கறேன்..”

தான் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் அரற்ற ஆரம்பித்தாள் சுந்தரி..

“இல்ல மேடம்..  எங்களால மேக்ஸிமம் முடிஞ்சது அத்தனையும் நாங்க பண்ணிட்டோம்மா.. இனிமே ரொம்ப லேட் பண்ணாம அவங்களை யாராவது பார்க்கணும்னா அவங்களை கூப்பிடுங்கம்மா.. எப்படியாவது வரவழைக்க ட்ரை பண்ணுங்க…” சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.. சுந்தரி உள்ளே ஓடி சென்று பாட்டியை பார்த்தாள்..

அங்கே பாட்டி யாருக்கோ காத்திருப்பது போல் மூச்சை இழுத்துக் கொண்டு உயிரை பிடித்து வைக்க போராடிக் கொண்டிருந்தது போல் இருந்தது.. சுந்தரி போய் பாட்டியின் கையை பிடிக்க பாட்டி சுந்தரி கையை இறுக பிடித்துக் கொண்டு அப்படியே பெருமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டிருக்க பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..

“பாட்டி.. ஐயோ பாட்டி.. நான் என்ன பண்ணுவேன்.. உங்களை எப்படி காப்பாத்தறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் பாட்டி..”

புலம்பியவள் பாட்டி மூச்சை இழுத்து விட்டு கொண்டு கஷ்டப்பட்டு ஏதோ சொல்ல வருவதை அறிந்தவள்.. பாட்டியின் முகத்தின் அருகே குனிந்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டாள்.

பாட்டி,” சு..ஹ.ஹ..சு…ஹ..ஹ.. சுந்த …ஹ..ஹ..ஹ.. சுந்தர்…ஹ்..ஹ..ஹ ..  பா…ஹ்ஹ்ஹ..  பார்க்க…” என்று கஷ்டப்பட்டு மூச்சை விட்டுக்கொண்டு சொல்ல அப்போது உள்ளே வந்த ராசாத்தி அக்காவின் கணவர் ” அம்மா சுந்தரி.. பாட்டி போறதுக்குள்ள சுந்தரை பாக்கணும்னு ஆசைப்படுறாங்கம்மா.. எப்படியாவது அவரை இங்க வர வைக்கணும்மா.. இனிமே அவங்களை காப்பாத்த முடியும்னு தோணல.. போற உசுரு நிம்மதியா அமைதியா போகணும்மா..” என்றார்..

“அண்ணா நீங்க கொஞ்சம் அவரை கூட்டிட்டு வர முடியுமா? அவரு கார்மெண்ட்ஸ்ல தான் இருக்காரு.. அவர் ஃபோன் ஆஃப் ஆயிருக்கு.. லேண்ட்லைனும் ஒர்க் பண்ணல..”

சுந்தரி சொல்ல “எனக்கு அந்த கம்பெனி இருக்கற இடம் தெரியும்மா.. நான் போய் கூட்டிட்டு வரேன்..” என்று சொல்லி விட்டு உடனே ஆட்டோவை எடுத்துக் கொண்டு அவர் சென்றார்..

சுந்தரியும் பாட்டியின் பக்கத்திலேயே உட்கார்ந்து பாட்டியின் கன்னத்தைப் பிடித்து நெஞ்சை தடவி கொடுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தாள்..

“பாட்டி நீங்க சுந்தர் சாரை பாக்கணும் இல்ல.. கொஞ்ச நேரத்துல அந்த அண்ணா கூட்டிட்டு வந்துருவாரு பாட்டி..  பாட்டி நான் என்ன பண்ணுவேன் பாட்டி நீங்க இல்லாம.. என்னை விட்டுட்டு போகாதீங்க பாட்டி..” அழுது கொண்டே இருந்தாள் சுந்தரி..

சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு சுந்தர் பதட்டத்துடன் உள்ளே வந்தான்.. பாட்டியின் நிலையை பார்த்து “சுந்தரி.. என்ன ஆச்சு..? ஐயோ பாட்டி என்ன பாட்டி இப்படி இருக்கீங்க..? என்ன ஆச்சு பாட்டி..?”

பாட்டியின் ஒரு பக்கம் உட்கார்ந்து பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டான்..

“பாட்டி நான் வந்துட்டேன் பாட்டி.. உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்..” என்று சொன்னவன் அங்கிருந்து எழுந்து மருத்துவரை அழைக்க போக பாட்டியோ அவன் கையை இறுக்க பிடித்து இழுத்து இருந்தாள்..

அப்படியே அந்த கதிரையில் அமர்ந்தவன் “இல்ல பாட்டி.. டாக்டரை கூப்பிட்டு உங்களை எப்படியாவது காப்பாத்த சொல்றேன் பாட்டி.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. எனக்கு என்கூட நீங்க இருந்தா போதும் பாட்டி..” என்றான் அவன்..

பாட்டி ஒரு பெரிய மூச்சை மிகவும் சிரமப்பட்டு இழுத்தவள் “நா..நான்.. இ…ஹி..ஹ…ஹ.. இனிமே..ஹே..ஹ…ஹ.. பொழை..ஹை..ஹ பொழைக்க..ஹ..ஹ..ஹ.. மா..ஹா.ஹ.. மாட்டேன்…ஹ.ஹ..ஹ… சு..ஹூ.ஹ..ஹ..சு..ஹ..ஹ..ஹ.. சுந்தர்…ஹ..ஹ..ஹ.. சு…சு.. சுந்தரியை.. ஹை‌‌..ஹ..ஹ..‌ ப.. ஹ…ஹ..ஹ .. பத்தி..ஹி..ஹ..பத்திரமா… பா… ஹா.ஹ..ஹ.. பார்த்துக்க..” என்று சொன்னவளின்  கை அவன் கைப்பிடியில் இருந்து அப்படியே விலகி பக்கவாட்டில் விழுந்தது..

கண்கள் அப்படியே உறைந்து நிற்கவும் சுந்தரி “ஐயோ.. பாட்டி..” என்று கத்தியவள் பாட்டியை பார்த்தபடி அப்படியே சிலையாகி விட்டாள்..

சுந்தராலும் எதுவும் பேச முடியாமல் அப்படியே உறைந்து நின்றான்.. அதற்குள் அங்கே வந்த மருத்துவர் பாட்டியின் அருகே வந்தவர் அவர் கண்களை மூடிவிட்டு “சாரி சுந்தர்.. ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்..

ராசாத்தி அக்காவின் கணவர் சுந்தர் தோளில் கை வைத்து “பாட்டி நீங்க வர்றதுக்காக தான் காத்துட்டு இருந்தாங்க போல இருக்கு.. உங்க கிட்ட ஏதோ சொல்லணும்னு தான் உயிரை கைல புடிச்சுகிட்டு இத்தனை நேரம் கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்காங்க.. உங்க கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

பாட்டி சொன்னது மறுபடி மறுபடி சுந்தரின் செவிகளில் கேட்டுக் கொண்டிருந்தது..

அப்படியே சிலையாய் நின்று கொண்டிருந்தவன் மெதுவாய் எந்திரம் போல அந்த அறையில் இருந்து வெளியே வந்து அங்கு இருந்த கதிரையில் அப்படியே படார் என உட்கார்ந்தான்..

“சுந்தரி நீங்களும் வெளியில இருங்க.. நாங்க கொஞ்சம் ஃபார்மார்ட்டிஸ் முடிக்கணும்..” என்றார் மருத்துவர் சுந்தரியிடம்..

அவள் அப்படியே அசையாமல் பாட்டியையே பார்த்துக்கொண்டு இருக்க செவிலியிடம் அவளை வெளியே அழைத்து செல்லுமாறு கண்ணை காட்டினார் மருத்துவர்..

செவிலி அவள் தோள்களை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே அழைத்து வந்து அங்கிருந்த கதிரையில் சுந்தர் பக்கத்தில் அவளை அமர வைத்தார்..

“சார்.. அவங்களுக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு போல இருக்கு.. கொஞ்சம் பாத்துக்கோங்க சார்..” என்று சுந்தரிடம் சொல்லிவிட்டு அந்த செவிலி உள்ளே சென்றுவிட்டார்…

சுந்தர் தன் தலையை தன் இருகைகளிலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீர் இடை விடாமல் வழிந்து கொண்டு இருக்க அழுது கொண்டிருந்தவன் செவிலி சொன்னதை கேட்டு சுந்தரி பக்கம் திரும்பி பார்த்தான்..

அவளோ கல்லான சிலை போல அப்படியே அமர்ந்திருந்தாள்..  விழிகள் அகல விரித்து நிலை குத்தி இருக்க எங்கேயோ வெறித்து பார்த்தபடி அசைவற்று அமர்ந்திருந்தாள்..

“சுந்தரி.. சுந்தரி..” என்று அவள் கன்னத்தை தட்டி அழைத்தவன் அவள் அப்போதும் அசையாமல் அப்படியே கல் போல இருக்கவே உள்ளுக்குள் அவளுக்கு பாட்டி இறந்த அதிர்ச்சியில் ஏதோ ஆகிவிட்டதோ என்று பயந்தான்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்

க..!!

நன்றி ஃப்ரெண்ட்ஸ்..

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!