நெஞ்சம் – 4
அவள் முகத்தை பார்க்கவே கூடாது என்று ஏதோ ஒரு எரிச்சலில் வேகமாக அறைக்குள் வந்து விட்டானே தவிர அவனுக்குள் ஏதோ நமைச்சல். அவன் எவ்வளவு தவிர்த்தும் அவனின் ஒரப் பார்வை அவளை பார்த்தது. அவனை நோக்கி நிற்கும் அவளின் உடல் மொழி அவள் அவனுடன் பேச விரும்புகிறாள் என்பதை அவனுக்கு தெளிவாக உணர்த்தியது. அவளை புறக்கணித்துவிட்டு இப்படி சங்கடப்படுவதற்கு பதிலாக அவள் முகத்தை பார்த்து தலையை மட்டுமாவது அசைத்து இருக்கலாம்! எதற்கு எனக்கு இந்த வீண் வேலை? அந்த பெண் என்னை என்ன செய்தாள்? எனக்கு ஏன் அவள் மேல் தேவை இல்லாத கோபம்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது போல் யாரையும் அவன் பொருட்படுத்தியதே இல்லை! அவள் என்ன நினைப்பாள்? தான் என்ன நினைக்கிறோம்? இப்படி யோசனை வருவது எல்லாம் அவனுக்கு மிகவும் புதிது!
அவன் நிவேதவிற்கு கூட கல்யாணம் என்று பேசும் முன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இருவரும் ஒரே டீமில் சில காலம் வேலை செய்தனர். பேசி பழக நன்றாக இருந்தது! நாம கல்யணம் செஞ்சுகிட்டா லைப் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் என்று இவன் கூறினான், அவளும் எந்த பாசாங்கும் இல்லாமல், நானும் இதை யோசிச்சு இருக்கேன் என்று சொல்லி இவனின் ப்ரோபோசலை ஒத்துகொண்டாள்.
விருப்பிற்கும், வெறுப்பிற்கும் நூலிழை தான் வித்தியாசம் என்று சும்மாவா சொன்னார்கள். அரவிந்தின் மனம் இப்போது எங்குமில்லாமல் அல்லாடி கொண்டு இருக்கிறது! எந்த பக்கம் சாயும்? விருப்பா? வெறுப்பா? பார்ப்போம்!
இங்கு இவன் இப்படி அல்லாட, மலர் எந்த குழப்பமும் இன்றி, அருமையாக உறங்கி கொண்டு இருந்தாள். அவனின் செயலில் ஒரு நிமிடம் வருந்தினாலும், யோசித்து பார்த்ததில், அவளின் நல்ல உள்ளம், நாம வேலை செய்ய தானே வந்தோம்! அவங்க எனக்கு என்ன உறவா, நான் வருத்தபட? இனிமே இந்த மாதிரி யோசனை எல்லாம் விட்டுட்டு வந்த வேலையை மட்டும் பார்த்தா போதும் என்று ஒரு தெளிவுக்கு வந்ததால் அருமையாக உறங்கினாள்.
முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்து வேலை பார்க்கும் அவளுக்கு நேரும் சஞ்சலம், வருத்தம், குழப்பம் என அனைத்து உணர்வுகளையும் சந்தித்து, யோசித்து தன்னை சரி செய்துக் கொள்ளும் பெண்ணை தெளிய வைத்து தெளிய வைத்து குழப்ப ஒருவன் இருக்கிறான் என்று தெரியவில்லை மலருக்கு. இதில் விசேஷம் என்ன வென்றால் அவனுமே தெளிவாக இல்லை, குழம்பி தான் இருக்கிறான்.
செத்து செத்து விளையாடுவோமா?
நிம்மதியாக உறங்கியவள், அதிகாலையிலேயே எழுந்து குளித்து வேலைகளை ஆரம்பித்தாள். பாட்டி எழுந்து கொள்ள, பாட்டிக்கு வேண்டிய உதவிகளை செய்தவள், பாட்டியிடம், இன்று அருணாவிற்கு சர்ஜரி என்பதால் வீட்டில் நெய் விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்ய சொன்னாள். பாட்டிக்கு சற்று நேரம் கூட நிற்க முடியாததால், ஜனனியை ஏற்ற சொல்லுமா, என்னால முடியலை மா என்று சொல்லிவிட்டார். அவர் பாத்ரூம் செல்ல மட்டும் தான் கட்டிலை விட்டு அசைவார். இவள் ஜனனி வருவதற்காக காத்திருக்க, அவள் தயாராகி வந்தாள். வந்தவளிடம் மலர் விஷயத்தை சொல்ல, தன்னால் பூஜை அறைக்கு செல்ல முடியாது என்று வருத்தமாக கூறினாள் ஜனனி. உடனே மறுபடி சென்று பாட்டியை அழைக்க, அப்போது தான் படுத்த பாட்டி,
“நல்லது செய்ய தவிக்கிற, நீயே விளக்கை ஏத்து! ஒன்னும் தப்பில்லை” சாதாரணமாக சொல்லி விட்டார். எண்பது அகவையை தாண்டிய அவர் எந்த சம்பிரதாயம் பார்க்கும் மனநிலையிலும் இல்லை!
“அச்சோ பாட்டி, ப்ளீஸ் பாட்டி….” என்றழைக்க, அவரால் எழவே முடியவில்லை. “நான் எழுந்து வரும் போது ஏத்துறேன், சாயங்காலம் கூட ஏத்தலாம் மா….” என்று பாட்டி சொல்லும் போதே தெரிந்து விட்டது மலருக்கு, இப்போதைக்கு பாட்டி எழுந்து வர மாட்டார் என்று.
“அகல் விளக்கு இருக்கா?” என்று ஜனனியிடம் கேட்டாள் மலர்.
ஜனனி பூஜை அறையில் இருக்கும் என்று இடத்தை சொல்ல, உள்ளே சென்று அதை எடுத்த மலர்,
அருணா வைத்திருக்கும் இரண்டு வெள்ளி குத்துவிளக்கின் அருகிலும் ஒவ்வொரு அகல் விளக்கு வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றினாள். அவர்கள் வீட்டு விளக்கை தான் நான் ஏற்றக் கூடாது, ஆனால் அவர்களுக்காக ஏற்றலாம், தப்பில்லை என்று நினைத்துக் கொண்டு செய்தாள் மலர்.
இரவெல்லாம் சரியாக தூங்காமல், ஹாஸ்பிடல் செல்ல தயாராகி காலை உணவு உண்ண வந்தான் அரவிந்த். டைனிங் ரூமின் அருகே தான் பூஜை அறை அவர்கள் வீட்டில். வந்தவன் கண்ணில், பூஜையறையில் விளக்கேற்றி கொண்டு இருந்த மலர் பட, ஒரு நிமிடத்தில் அவன் மனதில் ஏதேதோ காட்சிகள் ஓட, திகைத்து விட்டான் அர்விந்த். கருமம், எனக்கு எதுக்கு இந்த கற்பனை எல்லாம்? இவளுக்கு எவ்ளோ திமிர் இருக்கணும்! அவனிற்கு வந்த கற்பனைக்கு எல்லாம் அவளை திட்டினான் அர்விந்த். அதே கோபத்தை கொஞ்சமும் குறைக்காமல், அவளிடம் காட்டினான்.
“ஹேய்! நீ பூஜை அறையில என்ன பண்ற? எங்க அம்மா வீட்டில இல்லைனா, நீ என்ன வேணா செய்வியா? இது உன் வீடு இல்லை, உன் லிமிட் என்னனு தெரிஞ்சுக்க பர்ஸ்ட்…. இப்படி உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய கூடாது! புரியுதா?” அவளை பேசவே விடாமல் வேக வேகமாக ஆத்திரத்துடன் வார்த்தைகளை கொட்டினான் அரவிந்த்.
நான் தப்பு செய்தால் அழுவேன் என்றவளுக்கு, இப்போது அழுகை வந்து விட்டது. தயக்கத்துடன் தான் அவர்கள் வீட்டு பூஜை அறைக்குள் சென்றிருந்தாள் மலர். அர்விந்த் திட்டவும், அவள் செய்தது தவறு என்று புரிந்தது. தான் கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக உரிமையுடன் நடந்து கொண்டோம் என்று புரிய, வேறு எவ்வித விளக்கமும் கொடுக்காமல்,
“ஸாரி சார்!” என்று மட்டும் சொன்னாள்.
பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்தால் எப்படி சத்தம் இல்லாமல் அடங்குமோ, அது போல் அவளின் அந்த ஒற்றை ஸாரியில், பொங்கி கொண்டு இருந்த அவனின் கோபம் சட்டென்று அடங்கி போனது. அங்கு எதுவுமே நடக்காதது போல்,
“டிபன் என்ன? எடுத்திட்டு வா, கிளம்பணும்” என்றான். அவன் உண்டு முடித்து கை கழுவிக் கொண்டு வர,
“ஜனனி மேடம்னால பூஜை அறை உள்ள போக முடியாது, நீங்க அந்த ரெண்டு அகல் விளக்கை மட்டும் இந்த தட்டில் எடுத்து தர்றீங்களா?” என்று கேட்டபடி தட்டை நீட்டினாள் மலர்.
சரியாக அந்நேரம் சாப்பிட வந்த ஜனனி, “ஏன் அதை அங்கே இருந்து எடுக்கிற மலர்? அம்மாக்காக தானே ஏத்தினே?”
“இல்லை மேடம், நெய் விட்டுட்டே இருக்கணும்! நீங்க கிளம்பிட்டா, நான் எப்படி உள்ள போய் நெய் விட முடியும்? அதான்….” இழுத்தாள் மலர். அவள் அதை சொல்லும் போது அரவிந்தை பார்க்க,
“நான் தானே உன்னை உள்ள போய் ஏத்த சொன்னேன், அப்புறம் என்ன? முதல்ல எப்படி போனியோ அதே மாதிரி தான் திரும்பவும் போகணும்!” தம்பி தான் ஏதோ சொல்லி இருப்பான் என்று அவளின் பார்வையை வைத்து புரிந்து கொண்டாள் ஜனனி. அதனால் எதையும் கேட்டு கொள்ளாமல் பதில் மட்டும் சொன்னாள்.
“இல்லை மேடம்…. அது….”
“நீயே தான் சொன்னே, இன்னைக்கு ஆப்ரேஷன் நல்ல படியா முடியுற வரை விளக்கேத்தி வைக்கிறேனு…. இப்போ என்ன குழப்பம்?”
ஐயோ, விஷயம் இதுவா? இது தெரியாம பேசிட்டேனே! சே! தன்னை நொந்து கொண்டவன்,
“அதான் ஜனனி சொல்றாளே, நீயே போய் நெய் விடு! விளக்கு அங்கேயே இருக்கட்டும்! எடுக்க வேண்டாம்” என்று எங்கோ பார்த்து சொல்லி விட்டு,
“நான் வெளியில வெயிட் பண்றேன், சீக்கிரம் வா ஜனனி” என்று அங்கிருந்து போனால் போதும் என்று வாசலை நோக்கி விரைந்தான்.
மருத்துவமனையில், மிகுந்த அமைதியாக இருந்தார் தியாகு! அருணாவே தைரியமாக இருந்தார். பிள்ளைகள் இருவரும் அம்மாவிடம் சாதாரணமாக பேசி கொண்டு இருந்தனர்.
கணவரின் அமைதி கண்டு,
“டாக்டர்ஸ் அப்படி தான் பயமுறுத்துற மாதிரி சொல்வாங்க, ஆனா இது ஒன்னும் புதுசு இல்லை அவங்களுக்கு, நீங்க பயந்துக்காதீங்க!” அருணா கணவரை தேற்றினார். சற்று நேரத்தில் ஆட்கள் வந்து அவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.
அவரை அழைத்து சென்றதும், “அம்மா தான் எனக்கு எல்லாம்!” என்று பிள்ளைகளிடம் சொன்ன தியாகு குலுங்கி குலுங்கி அழுதார்.
“அப்பா, அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது, இது சிம்பிள் சர்ஜரி இல்லை, கொஞ்சம் டைம் கூட ஆகும் அவ்ளோதான் சொன்னாங்க! நீங்க இவ்ளோ பயப்படுற அளவு ஒண்ணுமில்லைபா….” அர்விந்த் சொல்ல,
ஜனனியும், “ஆமா பா, இன்னும் சில மணி நேரம் தான், அம்மா நம்ம கிட்ட நல்லபடியா வந்துருவாங்க”
ஜனனி சொன்ன அந்த சிலமணி நேரம், மிகுந்த தவிப்புடன் நகர்ந்தது. மூவரின் பொறுமையை சோதித்து, அதற்கு பின் தான் நல்ல செய்தி அவர்களுக்கு கிடைத்தது. நல்லபடியாக பக்கத்து உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி அனைத்தையும் அகற்றி ஆகி விட்டது, அருணா நலமாக இருக்கிறார் என்றனர். மூவரும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். இடையில் இரு முறை பாட்டி அழைத்திருந்தார். அதனால் தியாகு உடனே பாட்டிக்கு அழைத்து கூறினார். பின், அருணாவின் தம்பி வெளிநாட்டில் இருந்தார், அவருக்கும் செய்தி அனுப்பினர். அவரும் பேசி இருந்தார். ஜனனி ஆரவ்விற்கும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
“அப்பா, விழிக்கும் சொல்லிடுங்க, காலையில அம்மாக்காக ஏதோ விளக்கு எல்லாம் ஏத்திட்டு இருந்தா” என்றான் விட்டேத்தியாக சொல்வது போல்.
அவரும் அவளை தனியே அழைத்து கூறினார்.
பார்ரா, இந்த பட்டாசை, எனக்கு கூட தோணலை அவளுக்கு சொல்லணும்னு…. காலையில படபடவென வெடிச்சு அந்த பிள்ளைகிட்ட வம்பு பண்ணிட்டு, இப்போ யோசிச்சு நல்லவனா இப்படி பேசுறான்! எப்போ தான் இப்படி யோசிக்காம பேசுறதை விட போறானோ தெரியலை! மனசுக்குள் சொல்லிக்கொண்டாள் ஜனனி.
அன்று இரவு தான் அறைக்கு அனுப்புவோம் அருணாவை என்று மருத்துவர் சொல்லிவிட, இவர்கள் மூவரும் வெளியே சென்றனர். அருணா நன்றாக இருக்கும் திருப்தியில் தியாகுவை சாப்பிட அழைத்து சென்றனர். அவர்கள் சாப்பிடும் போது, திடீரென்று மலரின் நியாபகம் வர, அவள் எதாவது வாங்கி தர வேண்டும் என்று தோன்ற, வீட்டுக்கு பீட்ஸா ஆர்டர் செய்தான் அர்விந்த். அதை அவளிடம் சொல்லவும் இல்லை. யாரிடமும் சொல்லவில்லை.
வீட்டிற்கு பீட்ஸா வர, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சாப்பாடு என்று மட்டும் புரிந்தது. சூடாக இருந்ததே. வாங்கி வைத்து கொண்டவள், வீட்டில் இருந்த ஆர்வ்வை அழைத்தாள். இங்கிலீஷ்ல் என்ன பேசுவது, அதனால் அமைதியாக அவனிடம் கொடுத்து விட்டு, இவள் வேலையை பார்க்க போனாள். வீட்டில் போர் அடித்து கொண்டு இருந்த ஆரவ், தனக்காக போட்டு இருப்பார்கள் போல் என்று நன்றாக சாப்பிட்டான். சாப்பிட்டவன், மகிழ்ச்சியாக பொண்டாட்டிக்கு செய்தி அனுப்பினான். தேங்க்ஸ் மை லவ்! போர் அடிச்சிட்டு இருந்தேன்! எனக்கே எதாவது சாப்பிடணும் போல் இருந்தது, பீட்சா சூப்பர்! என்று.
“தேங்க்ஸ் டா அர்வி! அக்கா புருஷனை நியாபகம் வைச்சு பீட்சா ஆர்டர் போட்டு இருக்க! சூப்பர் டா! தெய்வ மச்சான்டா நீ!” தம்பிக்கு கிண்டலாக நன்றி சொன்னாள் ஜனனி.
சே! போன் பண்ணி சொல்லி இருக்கணும்! மண்டை மேல் இருக்க கொண்டையை மறந்துட்டேன்னே! ஜனனியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், “விடு விடு” என்று சிரித்து வைத்தான் அரவிந்த்.
“ஆனாலும் நீ இப்படி எல்லாம் செய்றது எனக்கு கொஞ்சம் ஷாக் தாண்டா! ஓவரா பெர்பாமன்ஸ் பண்ற மாதிரி இருந்தா கொஞ்சம் சொல்லிட்டு செய்டா!” அவளால் நம்பவே முடியவில்லை அவனின் இந்த செயல். அவனாலேயே நம்ப முடியவில்லை, அவள் சொல்வது என்ன!
“அப்பா, உங்க போனை கொடுங்க ஒரு நிமிஷம்” என்றவன், போனை வாங்கி மலரின் நம்பரை எடுத்துக்கொண்டு தனியே சென்றான். அவளை அழைக்க, புது நம்பர் என்றவுடன் அவள் எடுக்கவில்லை! அவ்வளவு தான்! மறுபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது! அவளிடம் பேச நினைப்பதை உடனே பேசியே ஆக வேண்டும் என்று தோன்ற, அப்பாவிடமும் அக்காவிடமும் வந்தவன்,
“எனக்கு ஒரு அர்ஜென்ட் வேலை, நான் வீட்டுக்கு போய்ட்டு முடிச்சிட்டு வரேன்” என்று அவர்களின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் கிளம்பி விட்டான். அவர்களுக்கு அவனின் வேலையில் இது போல் அடிக்கடி நேரும் என்பதால் இன்று எந்த சந்தேகமும் வரவில்லை.
சும்மாவே ஆடும் பேய்க்கு காலில் சலங்கை கட்டி விட்டால்?