அத்தியாயம் 1
“நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருந்து என் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க எங்கேயாவது கடலில் குதிச்சோ, இல்லை எதாச்சும் ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரியில் விழுந்தாவது செத்து தொலையேன் டீ” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் திட்டித் தீர்த்தாள் சாம்பவி.
“சாம்பவி என்ன பேசிட்டு இருக்க அவள் உன்னோட அக்கா” என்ற வைதேகியிடம், “நல்ல அக்கா இவள் என்ன என் கூடப் பிறந்தவளா அம்மா இல்லாத அனாதை தானே. இந்த பீடையோட மூஞ்சிக்கு ஒருத்தனும் கிடைக்க மாட்டான். இவளுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது. அப்பறம் எப்படி எனக்கு கல்யாணம் நடக்கும்” என்று பற்களைக் கடித்தாள் சாம்பவி.
“என்ன பேசுற சாம்பவி அவளுக்கு அம்மா தான் இல்லை அப்பா நான் உயிரோடு தானே இருக்கேன் அவளைப் பார்த்து அனாதைன்னு சொல்லுற” என்ற வாசுதேவனிடம் , “உங்க மூத்த பெண்ணுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கவே நடக்காதுப்பா அவளால் என்னோட எதிர்காலம் தான் கேள்விக்குறியா இருக்கு.
ஒன்று என்னோட கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க இல்லை உங்க மூத்த பெண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு தான் என் கல்யாணம் என்று நீங்க சொன்னீங்கனா நான் என்னோட வாழ்க்கையை பார்த்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறேன்” என்றாள் சாம்பவி.
“என்ன பேசுற சாம்பவி அவர் உன் அப்பா அவர்கிட்ட இப்படித் தான் மரியாதை இல்லாமல் பேசுவீயா?” என்று மகளை அடிக்க வந்த வைதேகியிடம், “அவர் மூத்த பெண்ணுக்கு மட்டும் தான் அப்பாவா நடந்துக்கிறாரு. உங்க கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அம்மா ராகவ் வீட்டில் கல்யாணத்திற்கு ப்ரசர் கொடுக்கிறாங்கன்னு உங்களுக்கு ஏன் அது புரியவே மாட்டேங்குது” என்ற சாம்பவி , “அப்பா நாளைக்கு ராகவ் வீட்டில் இருந்து என்னை பெண் பார்க்க வருவாங்க நீங்க என்னோட அப்பாவா இந்த கல்யாண ஏற்பாட்டை பாருங்க இல்லையா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் அவ்வளவு தான்” என்றாள் சாம்பவி உறுதியாக.
“என்ன பேசிட்டு போகிறாள் பாரு” என்ற வாசுதேவனிடம், “அவளுக்கும் வயசு இருபத்தி நான்கு ஆச்சு அது உங்க கண்ணுக்கு தெரியலையா. எனக்கும் மூத்தவள் கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போன பிறகு சின்னவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை தான். ஆனால் இவளுக்கு தான் கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே. அவள் வாயால் சொல்லி விட்டாள். நான் சொன்னால் சித்தி கொடுமைன்னு சொல்லுவீங்க” என்ற வைதேகி , “இதோ பாருங்க மூத்தவளுக்கு வரன் பார்த்துட்டே இருப்போம். சின்னவளுக்கு கல்யாணத்தை பேசி முடிப்போம்” என்று கணவனை தாஜா செய்தார் வைதேகி.
“சித்தி சொல்லுவதும் சரி தானே அப்பா எனக்கு கல்யாணம் நடக்கும் போது நடக்கட்டும் இப்போதைக்கு சாம்பவியோட கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றாள் பல்லவி.
“இல்லைம்மா அது” என்று தயங்கிய வாசுதேவனிடம், “அவளோட முடிவை அவள் இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகும் நீங்க தாமதிக்கிறது தப்புப்பா” என்று பல்லவி கூறிட வாசுதேவனும் யோசிக்க ஆரம்பித்தார்.
“சரி டீ நேரமாச்சு நீ வேலைக்கு கிளம்பு” என்று வைதேகி கூறிட, “சரிங்க சித்தி” என்ற பல்லவி வேலைக்கு கிளம்பினாள்.
“என்ன சாம்பவி நீ ஏன் உன் அக்காவை இப்படி எல்லாம் பேசிருக்க அவள் பாவம் இல்லையா” என்றான் ராகவ். அவனை முறைத்தவள் , “என்ன அந்த குண்டச்சி மேல உனக்கு அக்கரை” என்றவளைப் பார்த்து, “ஏய் அக்கரை எல்லாம் ஒன்றும் இல்லை அவள் பாவம் தானே” என்றான் ராகவ்.
“பாவமா அப்போ ஏன் அவளை பொண்ணு பார்க்க வந்துட்டு என்னை பிடிச்சுருக்குன்னு சொன்ன அவளையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே” என்றாள் சாம்பவி நக்கலாக.
“அப்படி இல்லை சாம்பவி அவளை எனக்கு பிடிக்கவில்லை உன்னை பிடிச்சுருந்துச்சு” என்ற ராகவ், “பழைய கதையை விடு நாளைக்கு என் அப்பா, அம்மாவை அழைச்சிட்டு உங்க வீட்டுக்கு வரேன்” என்றவன் , “சரி நேரமாச்சு கிளம்பலாமா” என்றிட, “கிளம்பலாம்” என்று சாம்பவியும் கிளம்பினாள்.
“என்ன பல்லவி மணி ஆறாச்சு இன்னும் கிளம்பாமல் இருக்க” என்ற தோழி அபிநயா விடம் , “ஒன்றும் இல்லை அபி வீட்டுக்கு போகவே எரிச்சலா இருக்கு” என்றாள் பல்லவி.
“என்ன பிரச்சினை” என்ற அபியிடம், “நேற்று பார்த்துவிட்டு போன மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கவில்லையாம் ஃபோன் பண்ணி சொன்னாங்க , காலையில் சாம்பவி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள்” என்று நடந்த நிகழ்வுகளை கூறினாள் பல்லவி.
“என்ன பல்லவி இது அவள் இவ்வளவு பேசிருக்காளா என்ன பொண்ணு அவள்” என்ற அபிநயா, “ஆமாம் அவள் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியப்படனும் உன்னை நிச்சயம் பண்ண வந்த மாப்பிள்ளையை தானே அவள் காதலிக்கிறாள்” என்றாள் அபிநயா.
“விடு அபி” என்ற பல்லவி , “அப்பாவுக்காக தான் அந்த வீட்டில் இருக்கிறேன்” என்றாள். “புரியுது” என்ற அபி , “சரி பல்லவி கவலைப் படாதே சீக்கிரமே உனக்கு கல்யாணம் நடக்கும்” என்றாள்.
“கனவுல தான் நடக்கும் நிஜத்தில் சுத்தம்” என்ற பல்லவி, “நாளைக்காவது ஜிம்முக்கு போகனும் ரேவதி அக்கா திட்டுறாங்க பீஸ் கட்டிட்டு வராமல் இருக்கியேடீன்னு” என்ற பல்லவி எழுந்து வீட்டிற்கு கிளம்பினாள்.
பல்லவி வாசுதேவன், ருக்மணி இருவரின் ஒரே மகள். பல்லவி பிறந்த ஆறு மாதத்தில் மஞ்சள் காமாலை வந்து ருக்மணி இறந்து போனதால் பெண் குழந்தையை வளர்க்க தாய் வேண்டும் என்று வைதேகியை மணமுடித்து வந்தார் வாசுதேவன்.
வைதேகியும் பல்லவியை நன்றாக தான் வளர்த்தார். மற்ற மாற்றாந்தாய் போல கொடுமை எல்லாம் கிடையாது. பல்லவிக்கு இரண்டரை வயது இளையவள் சாம்பவி. இருவரையும் நல்லபடியாக தான் வைதேகி வளர்த்தார். குறை சொல்ல எதுவும் இல்லை. ஆனால் பல்லவி இயற்கையாகவே பூசிய உடல் அமைப்பு கொண்டவள். அவளது அன்னை ருக்மணியும் அழகாக பூசிய உடல் அமைப்பு கொண்டவர். அவரைப் போல தான் பல்லவியும். சாம்பவி வைதேகியை போல அதாவது வைதேகி இளமை காலத்தில் இருந்த போல ஒல்லியான தேகம்.
என்ன தான் பல்லவி சாம்பவியை விட அழகான முகத்தோற்றமும், வெளுத்த நிறமும் கொண்டிருந்தாலும் அவளது பூசிய உடல் அவளுக்கு மிகப் பெரிய மைனஸ். சாம்பவி யின் ஒல்லி பெல்லி தேகம் அவளை அடித்து விட்டு சென்றது.
பல்லவியை பார்க்க வரும் மாப்பிள்ளைகள் முக்கால் வாசிப்பேர் சாம்பவியை பிடித்திருக்கிறது என்று தான் கூறி விட்டு செல்கிறார்கள்.
அதில் ஒருவன் தான் ராகவ். அவனும், பல்லவியும் கல்லூரி நண்பர்கள். இருவரும் நட்பாக பழகுவதைக் கண்டு இருவரின் பெற்றோரும் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்க அந்த நேரம் ராகவ் எனக்கு சாம்பவியை தான் பிடித்திருக்கிறது என்று குண்டை தூக்கிப் போட்டான்.
இரண்டு குடும்பங்களுக்கும் பல வருட பழக்கம் என்பதால் பல்லவி திருமணம் முடிந்த பிறகு ராகவ், சாம்பவி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
என்ன சோதனையோ பல்லவிக்கு ஒரு வரனும் அமைந்த பாடில்லை. முன்பெல்லாம் பல்லவியை பெண் பார்க்க வரும் சமயங்களில் சாம்பவியும் தன்னை அலங்காரம் செய்து கொண்டு சபையில் அமர்ந்து கொள்வாள். சாம்பவிக்கும், ராகவ் விற்கும் கல்யாணம் பேசி முடித்த பின் வைதேகி அவளை சபையில் அமர விடுவதில்லை. பல்லவிக்கு சலிப்பு தட்டியது எத்தனை முறை இந்த புடவை ராசி இல்லை, அந்த நகை ராசி இல்லை அது தான் மாப்பிள்ளைக்கு பிடிக்க வில்லை என்று தன்னைத் தானே அவளும் சமாதானம் செய்து கொள்வாள்.
அவள் குண்டாக இருப்பது தான் இங்கே பிரச்சினை என்று புரிந்தாலும் அவளும் எத்தனையோ உடற்பயிற்சிகள் செய்த பொழுதிலும், டயட் என்று உடலை வருத்தி சாப்பிடாமல் இருந்தும் பயனில்லை. சிலரது உடல்வாகு அப்படித்தான் அவளும் முயற்சியை விடுவதில்லை. மாதம் ஒரு கிலோ தான் குறைகிறதே தவிர அதிகம் குறைவதில்லை.
“என்னம்மா சாப்பிடாமல் போற” என்ற வைதேகியிடம், “பசி இல்லை சித்தி” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் பல்லவி.
“என்ன ராகவ் யோசனையா இருக்க” என்ற ரஞ்சித்திடம், சாம்பவி பல்லவியிடம் பேசியதைப் பற்றி கூறினான் ராகவ்.
“என்னடா இவள் சொந்த அக்காவை இப்படி பேசி இருக்கிறாள். இவள் எப்படி நல்ல பொண்ணுன்னு கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணி இருக்க. பாவம் டா பல்லவி நல்ல பொண்ணு” என்றான் ரஞ்சித். “நல்ல பொண்ணு தானே நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்ற ராகவ்வை முறைத்தான் ரஞ்சித்.
“டேய்” என்ற ரஞ்சித்திடம் , “பார்த்தியா ஓடுற அப்படித் தான் எனக்கும். பல்லவி இப்போதும் என்னோட ஃப்ரெண்ட் அவ்வளவு தான் அதை தான்டி எல்லாம் யோசிக்க முடியாது ஆனால் சாம்பவி அவளை காயப் படுத்தும் போது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு நான் மட்டும் அன்னைக்கு சாம்பவியை பிடிச்சிருக்குன்னு சொல்லாமல் இருந்திருக்கலாமோன்னு” என்றான் ராகவ்.
“அன்னையிலிருந்து பல்லவி என் கிட்ட பேசுறது கூட இல்லை ஏன் நான் இருக்கிற திசை பக்கம் கூட திரும்புறதே இல்லை. அவங்க வீட்டுக்கு போனால் கூட அவள் அறையை விட்டு வெளியே வருவதே கிடையாது” என்றான் ராகவ்.
“அது எனக்கு உறுத்தலாவே இருக்கு” என்ற ராகவ்விடம் , “ஏன்டா ஒரு உண்மையை சொல்லு உனக்கு நிச்சயம் பண்ண இருந்த பொண்ணு உன்னை பிடிக்கவில்லை உன் அண்ணனையோ, தம்பியையோ பிடிச்சிருக்குன்னு சொன்னால் நீ என்ன பண்ணுவ எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்துப் பாடுவியா. மூச்சு முட்ட குடிப்ப, அந்த பொண்ணு வீட்ல போயி சண்டை போடுவ ,ஏன் வெறி அதிகமாகி அவள் முகத்தில் ஆசிட் கூட வீசுவ ஆனால் பல்லவி ஒரு பொண்ணு அவளால் என்ன பண்ண முடியும் குறைந்த பட்சம் உன் கண்ணுல படாமல் தான் இருக்க முடியும் அதை புரிஞ்சுக்கோ.
எனக்கு என்னவோ நீ பல்லவியை தான் லவ் பண்ணுறியோன்னு தோனுது” என்ற ரஞ்சித்திடம் , “லூசு மாதிரி பேசாதே டா” என்ற ராகவ் தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
“என்ன பல்லவி ஏன் சாப்பிடாமல் இருக்க” என்ற வாசுதேவனிடம், “பசி இல்லை அப்பா” என்றாள் பல்லவி. “அது எப்படி பசிக்காமல் இருக்கும் சாப்பிடு” என்று மகளுக்கு உணவினை ஊட்டி விட்டார் வாசுதேவன்.
“உன் மனசுல உள்ள வலியை புரிஞ்சுக்க முடியாத அளவிற்கு உன் அப்பா முட்டாள் இல்லை பல்லவி” என்று வாசுதேவன் ஏதோ சொல்ல, “ சபாஷ் டாடி” என்று கையை தட்டிக் கொண்டு வந்தாள் சாம்பவி…
அப்படி என்ன சொல்லி இருப்பாரு வாசுதேவன். அடுத்த பதிவில் பார்ப்போம்….
(தக்காளி வருவாள்)