விஷம் – 25
அவனையே வெறித்துப் பார்த்தவாறு, பேச்சு மூச்சின்றி விக்கித்துப் போய் நின்றவளின் தோள்களைப் பற்றி பலமாக உலுக்கினான் யாழவன்.
அவள் அப்படி கலங்கி நிற்பதை, அவனால் கண்கொண்டு காண முடியவில்லை.
சிறிது ஆடை விலகினாலே பதறிப் போய் தன் ஆடையைச் சரி செய்து கொள்ளும் பழக்கமுடையவள், தன்னை மறந்து துவாலையுடன் வெளியே வந்து சண்டை இடுவதிலிருந்தே, அவளுடைய மனம் எந்த அளவுக்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.
அவளுக்காக அவன் இதயம் உருகவும் செய்தது.
அவன் உலுக்கியதில் அதிர்ந்து விழித்தவளின் கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டவன், அவளுடைய கன்னத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டான்.
“பேபி, முதல்ல போய் ட்ரெஸ் பண்ணு. இப்படியே இருந்தா உனக்கு ஜுரம் வந்துரும். நாம இதைப் பத்தி அப்புறமா பேசிக்கலாம்…” என அவன் மென்மையாக வார்த்தைகளைச் சேகரித்துக் கூற, அவனுடைய கரங்களைத் தட்டிவிட்டாள் அவள்.
தன்னைக் குனிந்து பார்த்தவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.
இடம் பொருள் ஏவல் என அனைத்தையும் மறந்து இப்படியே வெளியே வந்து விட்டோமே என தன்னையே வேதனையுடன் நொந்து கொண்டவள் எதுவும் கூறாது மீண்டும் குளியலறைக்குள் நுழைய முயன்றாள்.
பின் அந்த பாத்ரூம் கண்ணாடி வாசகம் நினைவிற்கு வர அப்படியே நின்றாள்.
அவளால் மறுபடியும் அதைப் பார்க்க முடியாது.
மனம் வேதனையில் மருகியது.
தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து, மற்றைய அறைக்குள் நுழைந்தவள், அங்கே இருந்த பாத்ரூமிற்குள் குளித்து முடித்து ஆடைகளை மாற்றினாள்.
யாழவனோ பெருமூச்சோடு தன்னுடைய குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அந்தக் கண்ணாடியில் இருந்த வாசகத்தை ஒருமுறை அழுத்தமாக வெறித்துப் பார்த்தான் அவன்.
அந்த வார்த்தைகளில் அவனுக்குத் தோன்றியது காதல் அல்ல.. காமம் மட்டும்தான்…
ஆம். இதுவரை அர்ச்சனாவைத் தவிர வேறு எந்தப் பெண்களிடமும் அவன் காதலை உணரவே இல்லை. அவன் காதலித்தது, திருமணம் செய்ய விரும்பியது அனைத்தும் அர்ச்சனாவை மட்டும்தானே.
அவளைக் காயப்படுத்திய வார்த்தைகளை வேகமாக அந்தக் கண்ணாடியில் இருந்து அழித்தவன், சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தான்.
எவ்வளவு மகிழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நாள் இப்படி முடிந்துவிட்டதே என்ற வருத்தம் அவனுக்குள் அதிகரித்தது.
அர்ச்சனாவை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்ற கேள்வி எழ, வெளியே வந்து அவளுக்காக காத்திருக்கத் தொடங்கினான் அவன்.
அவளோ வேறு அறைக்குச் சென்று ஒரு மணி நேரம் கடந்தும் கூட அந்த அறைக்குள் நுழையாது விட, சற்றே பதற்றம் கூடியது அவனுக்கு.
வேகமாக எழுந்து சென்று, அவனுடைய அறைக்கு அருகே இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டவன் அர்ச்சனாவைத் தேடினான்.
அந்த அறையில் தன் ஆடையை மாற்றிவிட்டு, அங்கே இருந்த சோபாவில் படுத்திருந்த தன்னவளைக் கண்டதும், ஒரு கணம் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றான் அவன்.
அவள் தன்னைப் புறக்கணிக்கின்றாள் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவளுடைய விழிகள் மூடி இருந்தன.
உறங்குகிறாளோ எனத் தயங்கி நின்றவனுக்கு, மூடிய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரால், அவள் இன்னும் உறங்கவில்லை என்பது தெளிவாயிற்று.
அவன் மீண்டும் பெருமூச்சு விட்டான்.
“அச்சு…” என அழைத்தவாறு அவள் அருகே சென்று அந்த சோபாவில் அமர்ந்தவன்,
“நம்ம ரூமுக்கு போகலாம் வா…” என அழைத்தான்.
“நான் இந்தியா போறேன் யாழவன்..” என்றாள் அவள்.
நான்கே வார்த்தைகள்தான். ஆனால் அவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
“என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா..?” எனக் கேட்டான் அவன்.
“இவ்வளவு நாளும் புரியாமத்தான் இருந்தேன். இப்போதான் உங்களப் பத்தி எல்லாமே புரிஞ்சுக்கிட்டேன்..” எனப் பதில் கொடுத்தாள் அவள்.
“ப்ளீஸ் அச்சு…”
“என்ன ப்ளீஸ்…?” வெடித்தாள் அவள்.
“நீ என்ன இன்னும் புரிஞ்சிக்கவே இல்லடி. நடந்து முடிஞ்சதுக்காக இப்போ என்னை அவாய்ட் பண்ணப் போறியா..? லிசின் பேபி… நீ இல்லாத நேரத்துல நீ என்னோட வாழ்க்கையில வர்றதுக்கு முதல் நடந்ததுதான் அது. எப்ப நீ என்னோட வாழ்க்கைல வந்தியோ நான் உனக்குதான் உண்மையா இருக்கேன்.. நான் உன்னை சீட் பண்ணல பேபி, நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்..”
“சாரிங்க, எனக்கு இன்னொரு பொண்ணு கூட படுக்கைய பகிர்ந்து கிட்டவங்க கிட்ட வாழப் பிடிக்கல. இன்னொருத்தி தொட்ட கையாலதான் நீங்க என்ன தொட்டீங்கன்னு நினைச்சாலே அருவருப்பா இருக்கு!” என்றாள் அவள்.
இறுகிப் போனான் அவன்.
அவளுடைய அருவருப்பு என்ற வார்த்தை அவனைக் கூராயுதம் போலத் தாக்கியது.
“இது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா? அந்த பொண்ணு கூட இவ்வளவு க்ளோசா வாழ்ந்துட்டு, அவளை வேணாம்னு சொல்லிட்டு என்ன கல்யாணம் பண்ணிருக்கீங்க. இப்போ என் கூடவும் வாழ்ந்துட்டு என்ன பிடிக்கலைன்னு இன்னொருத்திய கல்யாணம் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்..?
அந்தப் பொண்ணோட வாழ்க்கைல மட்டும்தான் விளையாடுனீங்களா? இல்லன்னா இன்னும் நிறைய பேர் இருக்காங்களா?” என அவள் கோபத்துடன் கேட்க,
“கிளாராக்கு முன்னாடி ரெண்டு பொண்ணுங்க கூட லிவிங் ல இருந்தேன்,” என உண்மையை பட்டென உடைத்தான் அவன்.
விதிர்விதிர்த்துப் போனாள் அர்ச்சனா.
அவள் உடலோ நடுங்க ஆரம்பித்துவிட்டது.
காதுகளில் நேரடியாக அமிலம் பாய்ந்தது போன்ற வலியைத் தாங்க முடியாமல் அவனை விட்டு விலகி நடக்க முயன்றாள் அவள்.
நடப்பதே அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தலை சுற்றிக் கொண்டு வந்தது.
அவளுடைய நடையில் தெரிந்த தள்ளாட்டத்தைக் கண்டு பதறியவன், அவளை நெருங்க, முதலே அப்படியே தரையில் மயங்கிச் சரிந்தாள் அர்ச்சனா.
அவளும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்குவாள்?
தன்னை மட்டுமே காதலித்து திருமணம் முடித்த ஸ்ரீராமன் போன்றவன் என் கணவன் என எண்ணியிருந்த அவளுடைய பெருமிதம் யாவும் காற்றில் கரைந்து காணாமலேயே போனது.
இவன் கடைந்தெடுத்த கயவனாக அல்லவா இருந்திருக்கிறான்.
ஒன்றா? இரண்டா? மூன்று பெண்கள்..!
அந்த வரிசையில் நான்காவதாக அவள்..
இந்த எண்ணமே அவளை பெரிதும் உடைத்துவிட்டது.
அவள் தரையில் மயங்கிவிட, வேகமாக ஓடிச் சென்று, அவளை குழந்தை போலத் தன் கைகளில் தூக்கிக் கொண்டவனுக்கு, இதயத்தில் ஒரு விதமான நடுக்கம்.
இத்தனை நாட்களாக இல்லாத அச்சம் அக்கணம் அவனுடைய மனதில் குடி ஏறியது.
அர்ச்சனாவை இழப்பதற்கு அவன் ஒருபோதும் தயாராக இல்லை.
அவளுக்கு வேறு பெண்களை அணைப்பதும், பழகுவதும் பிடிக்காது என்பதை தெரிந்து வைத்திருந்தவன் எதிர்காலத்தில் அவளுக்கு பிடிக்காததை ஒருபோதும் செய்யக்கூடாது என்ற முடிவில் இருந்தான்.
ஆனால் தன்னுடைய கடந்த காலமே மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதை அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
தன் வாழ்க்கையில் எப்போதும் நடந்து முடிந்தவற்றைப் பற்றி சிந்தித்து அதில் நேரத்தை வீணாக்குவது அவனுக்குப் பிடிக்காத ஒன்று.
ஆகையால்தான் அவளிடம் தன் கடந்த காலத்தைப் பற்றி அவன் எதுவுமே பேசவில்லை.
அவளிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது.
அவள் அவனைப் பற்றிக் கேட்டிருந்தால் நிச்சயமாக அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறித்தான் இருந்திருப்பான்.
யாரிடமும் பொய் சொல்லி நடிக்க வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு எப்போதும் இருந்தது கிடையாது.
அதனால்தான் கிளாரா மட்டும்தானா என அவள் கேட்டதற்கு, மற்ற இரு பெண்களின் தொடர்பை பற்றியும் மறையாமல் கூறினான்.
ஆனால் அவள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விடுவாள் என அவன் எண்ணவே இல்லை.
உள்ளம் பிசைந்தது.
அவள் கூறுவது போல இது அவ்வளவு பெரிய தவறா என்ன..?
அவன் வளர்ந்தது முதல் இப்போது வரை இந்தக் கலாச்சாரத்தை மட்டும் தானே பார்க்கின்றான்.
இதுதானே இங்கே இயல்பு.
மயங்கியவளை தூக்கி வந்து தன்னுடைய படுக்கையில் படுக்க வைத்தவன் நீரை எடுத்து அவளுடைய முகத்தில் தெளிக்க, சற்று சிரமப்பட்டு இமைகளை திறந்து அவனைப் பார்த்தாள் அர்ச்சனா.
“பேபி, ஆர் யூ ஓகே..?” என அவன் பதற்றமான குரலில் கேட்க, அடுத்த கணம் அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அவள்.
அதிர்ந்து போய் அவளைப் பார்த்தவனை வெறித்துப் பார்த்தவள்,
“ஹவ் டேர் யூ, யாழவன்..? எதுக்கு என்னை ஏமாத்தினீங்க..? எதுக்கு என்னோட வாழ்க்கைல வந்தீங்க..? நீங்க இப்படித்தான்னு தெரிஞ்சிருந்தா உங்க பக்கம் தலை வெச்சுக்கூட படுத்திருக்க மாட்டேன். என்னோட கேரக்டர் தெரிஞ்சும், உங்கள பத்தி ஏன் சொல்லாம விட்டீங்க? இப்படி திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டீங்களே..” அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள் அவள்.
ஒரு கணம் விழிகளை இறுக்கமாக மூடித் திறந்தவன்,
“திட்டம் போட்டு ஏமாத்தணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. என்னோட கேரக்டர் பிடிச்சுத்தானே நீயும் பழகின. அதே மாதிரி, உன்னோட கேரக்டர் பிடிச்சுதான் நானும் பழகினேன்… உனக்கும் லவ் வந்துச்சு, எனக்கும் லவ் வந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என்னோட பாஸ்ட் லைஃப் பத்தி நீ ஏன்டி கேட்கல..? நான் எப்பவாவது உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேனா..?
நீ கேட்டா எல்லாத்தையும் சொல்லி இருப்பேனே… ஏமாத்திட்டேன் ஏமாத்திட்டேன்னா என்னடி அர்த்தம்..?
உன்ன ஏமாத்தி எனக்கு என்ன கிடைக்கப் போகுது அச்சு..? நான் உன்ன லவ் பண்னேன். அதனால உன்ன கல்யாணம் பண்ணினேன்… உன்ன ஏமாத்தணும்னு நான் நினைச்சுக் கூடப் பாக்கல.. இதுக்கு மேல எப்படி புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியல அர்ச்சனா…”
“போதும், நடிக்காதீங்க.. ராமன் மாதிரி ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்க கிட்ட சொன்னேன்ல.. அப்பவாவது நீங்க உங்களைப் பத்தி சொல்லி இருக்கலாமே..”
“ஏய் இடியட்.. யாருடி அந்த ராமன்..? ராமன் ராமன் ராமன்னா… எனக்கு அவனைத் தெரிஞ்சிருக்கணுமே..?” எனக் கர்ஜித்தான் அவன்.
பேச்சற்று அவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“என்னை யார் கூடவும் கம்பேர் பண்ணாத அர்ச்சனா… என்னோட இயல்ப நான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன்… நான் இப்படித்தான்னு உனக்கே நல்லா தெரியும்..”
“சரிங்க, உங்க வாழ்க்கை உங்க இஷ்டம். நீங்க எப்படி வேணாலும் இருந்துக்கோங்க. பட், என்ன விட்ருங்க. நான் இந்தியா போகணும்… என்ன இந்தியாக்கே அனுப்பி வெச்சிருங்க. நான் எங்க அம்மா கிட்டயே போயிடுறேன்.” என்றாள் அவள்.
அந்த வார்த்தைகளில் அவனுக்கோ உள்ளம் பிளந்ததுபோல் வலித்தது.
“என்னை விட்டுட்டுப் போயிருவியா பேபி? நான் இல்லாம உன்னால வாழ முடியுமா?” என அவன் ஆழ்ந்த குரலில் கேட்க, அவளோ இன்னும் உடைந்து போனாள்.
ஏமாற்றங்களால் அவளுடைய உடலும் உள்ளமும் துவண்டு போயிருந்தது.
“நான் இந்தியா போகணும்..” என அழுதவாறு அவள் மீண்டும் கூற, அவனுக்கு தலை வெடித்து விடும் போல இருந்தது.
எந்தப் பெண்களிடமும் அவன் இதுவரை இப்படிக் கெஞ்சியதே இல்லை.
அர்ச்சனாவிடமும் ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் கெஞ்ச முடியவில்லை.
இறுகிப் போய் அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன்,
“ஃபைன்.. அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா வராது அச்சு. ஜஸ்ட் ஒன் மன்த் இங்க இரு. நல்லா யோசி… டைம் எடுத்துக்கோ. அதுக்கப்புறம் உனக்கு இந்தியா போகணும்னு தோணுச்சுன்னா, நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்…” என நிதானமாக வார்த்தைகளைக் கோர்த்துக் கூறினான் அவன்.
“முடியாதுங்க… எப்படி யோசிச்சாலும் பல பொண்ணுங்க கூட வாழ்ந்தவரோட என்னால வாழ முடியாது… என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல. நான் இந்தியா போகணும்…” என அவள் மீண்டும் உறுதியாகக் கூற, அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சாரி டு சே திஸ்… உனக்கு ஆப்ஷன் நான் கொடுக்கவே இல்லை. நான் நினைச்சா மட்டும்தான் இங்கே இருந்து உன்னால இந்தியா போக முடியும். ஒரு மாசம் என் கூடவே இரு. அதுக்கப்புறமும் உன்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லன்னா நீ தாராளமா இந்தியா போகலாம்..” என அழுத்தமான குரலில் அவன் கூற, இடிந்து போய்விட்டாள் அவள்
🌻🌻
இன்னைக்கு எபி மழை தர்றேன் டியர்ஸ் 😁