மீனாட்சியின் நினைவலைகளிலும் சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த காட்சியே ஓடிக்கொண்டிருந்தது.
ஆதித்யனும் அதையே நினைத்துக் கொண்டு இருந்தான்.
வெளிநாட்டிற்கு செல்லும் முன்னர் மீனாட்சியிடம் தனது காதலை கூறிவிட்டு சென்றுவிடலாம் என்றெண்ணி கள்ளிக்குடிக்கு சென்றிருந்த போது அங்கு அவன் கண்ட மீனாட்சி மற்றும் ஈஸ்வரனின் நெருக்கம் பல இரவுகள் அவனை தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.
உணர்வுகளை மறத்துப் போகச் செய்ய எத்தனையோ வழிகளை கையாண்டான். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவியது.
மீனாட்சி நங்கூரமாய் அவனது மனதில் இறங்கிவிட்டாள். ஆனால் அவள் மனம் ஈஸ்வரனிடம்… என்ற அறிந்த போது என்ன செய்வது எனத் தெரியாமல் படிக்கவும் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் வெளிநாட்டிற்கு வந்து விட்டான் . நாட்கள் வேகமாக நகர்ந்ததே ஒழிய அவளை மறக்கும் மார்க்கம் தான் தெரியவில்லை.
அவளை மறக்க மது,மாது, போதை வஸ்து என அனைத்தும் முயன்று பார்த்து விட்டான். எங்கெங்கு காணினும் அவளது முகமே. உடலும் மனமும் மீனாட்சியின் கயல் விழிகளிலேயே தொலைந்து போக விரும்பின.
அவளை ஈஸ்வரனுக்கு விட்டுத் தரும் எண்ணம் கடுகளவும் அவனுக்கு இல்லை என்பதே உண்மை.
“ இந்தியன் ஆர்கானிக் ஹவுஸ் “ என்ற தொடர் சங்கிலி நிறுவனத்தை நிறுவியிருந்தான். இந்திய கிராமங்களில் , முக்கியமாக தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் இயற்கை தானிய வகைகள், பழங்கள், பயிர்கள் , நாட்டு சர்க்கரை, செக்கு எண்ணெய் வகைகள், உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் என அனைத்து வகையான கலப்படமற்ற இயற்கை பொருட்களை இலண்டனுக்கு இறக்குமதி செய்து அங்கு மிகப் பெரிய கரிம உணவு பொருட்களின் நிறுவனங்களை (organic food products Industries) சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருந்தான். பெரும் வரவேற்பைப் பெற்றது அவனது நிறுவனம்.
தொடர் சங்கிலி நிறுவனங்களாக சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா போன்ற நாடுகளிலும் தனது நிறுவனத்தை நிறுவியிருந்தான்.
இன்னும் சில நாடுகளில் துவங்கவும் திட்டமிட்டிருந்தான். அதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தான்.
அவன் தனது சொந்த ஊரான தேனியை விட்டு வந்து பல வருடங்கள் ஆகின்றன. எனவே நேராக சென்று சில வேலைகளை செய்து மேற்பார்வை பார்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி மீனாட்சியின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிய விரும்பினான்.
சங்கர பாண்டியன் மற்றும் ஈஸ்வரனின் பகையைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அதனால் தான் அவன் தைரியமாக வெளிநாட்டிற்கு வந்தது. அவன் நினைத்தது போலவே மீனாட்சியின் திருமணப் பேச்சை சங்கர பாண்டியன் அவ்வளவு எளிதில் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதினாலும் தனது பயணத்தை சீக்கிரம் ஏற்பாடு செய்ய விரும்பினான்.
அதற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
அவனது நெருங்கிய கல்லூரித் தோழி நேஹாவும் அவனுடன் வருவதாக கூறியிருந்தாள்.
அன்று ஈஸ்வரனைத் தேடி அவனது சர்க்கரை ஆலைக்கு சென்றிருந்தாள் மீனாட்சி.
கணக்கு விவரங்களை அவனது ஆலையின் மேலாளர் சரி பார்த்து அவனிடம் கூறிக்கொண்டு இருந்தார்.
அவளைப் பார்த்தவர் , ” ஐயா…! மீனாட்சி வந்துருக்காங்க ..” என்றார் பவ்யமாக.
திரும்பியவன் ஒரு நிமிடம் அசந்தே போனான்.வெண்பட்டு புடவையில் அரக்கு மற்றும் பச்சை நிற பார்டர் இருபுறமும் பட்டுநூலில் வேய்ந்திருந்தது. அதை மிகவும் நேர்த்தியாக உடுத்தியிருந்தாள்.
அது மதுரையில் அவன் வாங்கித் தந்த புடவை தான் என்று எண்ணும் போதே ஆணவனுக்கு கர்வம் வந்தது. மீசையை முறுக்கிக் கொண்டான்.
நீண்ட கூந்தலை தளரப் பின்னி நெருக்கமாக கட்டிய மல்லிகை சரத்தை இரு தோளில் வழிய விட்டிருந்தாள். சிறிய குடை ஜிமிக்கி, ஒற்றைக்கல் மூக்குத்தி, அரக்கு நிற பொட்டு ,மிதமான ஒப்பனையில் தேவதையென மிளர்ந்தாள்.
ஈஸ்வரனின் பார்வை அவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை.
“இக்கணமே அவளது சங்கு கழுத்தில் தாலி கட்டி சரிபாதியாக ஏற்றுக்கொண்டு விடு” என்று ஆழ் மனம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.
ஆணவனின் உணர்வுகளை பெண்ணரசி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள். ” மாமா…!என்ன அப்படி பாக்குறீக…?இப்பவே தாலி கட்டிறீகளா…? “ என அவனது தோளினைப் பிடித்து உலுக்கினாள்.
தான் மனதினுள் நினைத்ததை பட்டென்று கூறிய மீனாட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனின் மனம் அவளது காலடியில் சரணடைந்தது.
சட்டென நிதானத்திறகு வந்தவன் ,” என்ன இந்த வெயில்ல பட்டு புடவையை கட்டிட்டு இம்புட்டு தூரம் வந்துருக்கவ…? என்றான்.
” ஹான்…எங்க வீட்டு ஆட்டுக்குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாளு …அதேன்.. கோவிலுக்கு போய் ஆட்டுக்குட்டி பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வர்றேன்…” என்றாள்.
ஆம்…! அன்று ஈஸ்வரனுடைய பிறந்தநாள். அவள் எப்போதும் போல் கோவிலுக்கு சென்று அவனுடைய பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்திருந்தாள்.
தான் கையோடு கொண்டு வந்திருந்த கவரை அவனிடம் கொடுத்தாள். ” என்ன புள்ள இது…? என சற்று கடுமையுடன் கேட்டான்.
” ஏன் …? நீ கூட தான் என்னோட எல்லா பிறந்தநாளுக்கும் எனக்கு வாங்கித் தர …நா மறுக்குறேனா..? இல்லையில்லை…அப்பறம் நான் வாங்கி கொடுத்தா மட்டும் நீ ஏன் வாங்க மாட்டேங்குற…? இந்த தடவையாவது வாங்கேன் மாமா…ரொம்ப தான் பண்ணுற…எங்க அப்பா சொன்ன சொல்லை புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்க….கல்யாணத்துக்கும் சரின்னு சொல்ல மாட்டேன்ங்குற…எவ்வளவு வருஷம் வேணாலும் நான் காத்திருக்கேன்…ஆனா…வீட்டுல காத்திருக்க மாட்டேன்றாங்க மாமா…எங்க அப்பா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாரு…எனக்கு என்னவோ பயமா இருக்கு…நீ வெரசா வந்து பொண்ணு கேளு மாமா…இப்ப கண்டிப்பா அப்பா ஒத்துப் பாரு மாமா..” என கலக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்து சொக்கன் ,” அப்ப உங்க அப்பா பாக்குற பையன கட்டிக்கிட வேண்டியதுதானே…ஆரு எனக்காக காத்திருக்கச் சொன்னது….ஏன் இப்ப நான் சொத்து.. சுகம் ன்னு கொஞ்சம் வசதியா இருக்கேன்னுட்டு உங்க அப்பாரு சரின்னுடுவாறோ…? எல்லா பொம்பிளைகளும் ஒரே மாதிரி தானே இருப்பீக….ஆருக்கு வேணும் பணமும் பகட்டும்…மனுசன் செத்தா ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்லையாக்கும்….இதை உங்கப்பன்னுக்கு ஆரு நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுவாவ…?எனக்கு என்னவோ இதெல்லாம் சரி வர்ற மாதிரி தெரியலை…மீனாட்சி…பேசாம விலகிடலாம்….” என முகம் சுணங்க கூறியதைக் கேட்ட மீனாட்சி அவனை கையமர்த்தி,” மேல்…எதுவும் பேசி என்னை உடைச்சிபுடாத…மாமா…” என கலங்கிய கண்களுடன் அவனுக்காக வாங்கி சட்டையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள்.
அவனுக்குமே வலித்தது தான்…
என்ன செய்வது சங்கரபாண்டியன் நிலத்தகறாரில் ,” ஓசி சட்டையை போட்டவன் தானே நீயு…பேசாத முத்துக்காளை..” என்று வார்த்தையை தனது தந்தையை நோக்கி விட்டுவிட்டார்.
அது ஈஸ்வரனது மனதில் ஆழப் பதிந்து போனது. இன்றுவரை ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவள் சட்டை வாங்கி வருவாள், அவன் மறுத்து விடுவான்.. ஆனால் என்றுமே அவள் மனம் நோகும்படி அவன் பேசியதேயில்லை.
இன்று ஏனோ அவள் தனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற பயத்தினில் வார்த்தைகளால் குத்தி கீறிவிட்டான்.
அவளால் தாங்கவே முடியவில்லை.. அவர்களுக்கிடையே விழுந்த முதல் விரிசல்.
கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் மீனாட்சி.
அவன் வாங்கித் தந்த புடவையை அவனுக்காகவே பார்த்து பார்த்துக் கட்டிக்கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு , கோவில் அவனுக்காகவே சிறப்பு வழிபாடுகளும் செய்து விட்டு அவனைப் சென்று பார்த்தால்… அவன் இவ்வாறு முகத்திலடித்தாற் போல் பேசியது அவளது மனதினை குத்திக் கிழித்தது.
பெண்ணவள் எத்தனை ஆசை ஆசையாக அவனைக் காண வந்தாள்.
பேதையின் நெஞ்சம் அவனிடம் இருந்து எதிர்ப்பார்த்து ஒன்றே ஒன்று தான் ,” அழகா இருக்க டி…தங்கம்” என்ற அழகிய வார்த்தைகளுக்கு தான்.. ஆனால் அவனோ வேறு ஏதேதோ பேசி அவளது மெல்லிய மனத்தை காயப்படுத்தி விட்டானே…! என்ற ஆதங்கம். கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.
திடீரென , “ஹேய்…மீனுக்குட்டி….என்ன இந்த அடிக்குற வெயில்ல பளபளான்னு பட்டு புடவையை கட்டிட்டு எங்க வாக்கிங் போயிட்டு வர்ற…?” என்று தனது இரு சக்கர வாகனத்தை மீனாட்சியின் முன்பு நிறுத்தினான் ஈஸ்வரனின் தங்கை புகழனி.
“கோவிலுக்கு போயிட்டு உங்க அண்ணனை பாத்துட்டு வர்றேன்…” என்றாள் சோர்ந்த முகத்தோடு.
” என்னாச்சு மீனு டார்லிங்..ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு…? அண்ணன் ஏதாவது திட்டுனுச்சா…? அதெல்லாம் கவலைப்படாதே…மா. அது ஒரு லூசு…அப்பப்ப மண்டையில் இருக்குற நட்டு கழண்டுக்கும்…அதெல்லாம் பெருசா எடுத்துக்காத.. ஆமா…இன்னிக்கு அதோட பிறந்தநாளாச்சே ஏதாவது கிஃப்ட் குடுத்தியா..?” என ஒரு மார்க்கமாக வினவினாள் புகழினி.
“ஆமா..எப்பவும் போல தான் சட்டைய கொண்டு போய் கொடுத்தேன்…வேணாம்ன்னு சொன்னது மட்டுமில்லாம…எங்க வீட்ல பாக்குற மாப்பிள்ளைய கட்டிக்கனுமாம் உங்க அண்ணனுக்கு…ரொம்ப தான் பண்றாப்ல . ஒரு நாள் இல்லை ஒரு நாள் பாரு நான் நெசமாவே வேற ஒருத்தருக்கு கழுத்த நீட்டப் போறேன்…உங்க அண்ணன் எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடப் போறாராக்கும்..” எனக் கோபத்தில் வார்த்தைகளை விட்டாள்.
சில சமயங்களில் நம்மையறியாமல் நாம் விடும் வார்த்தைகளுக்கு நாமே எஜமானாகிப் போகிறோம் என்பதை அறியவில்லை பெண்ணவள்.