அனைவரையும் விட விக்ரமுக்குத் தான் கை, கால் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. ஆனால் சிங்காரம் அசையவில்லை அவனது கண்கள் ரௌத்திரத்துடன் பார்வையை வீசியது.
ஆம் அது வேறு யாரும் அல்ல. அவனது மொத்த அன்பும் கொட்டிக் கொட்டி வளர்த்த ஆசைப் புதல்வி மகிழ்மதியே தான்.
ஒரு நிமிடம் தனது மகளை உருத்து விழித்து விட்டு தோளில் இருக்கும் துண்டை, உதறி மீண்டும் தோளில் போட்டுவிட்டு வேகமாக தனது அரண்மனை போல் இருக்கும் வீட்டிற்குள் சினம் கொண்ட சிங்கமாக சென்றார்.
அங்கிருக்கும் சின்ன சிறுசுகள் முதல் முதுமை அடைந்து பெருசுகள் வரை அனைவருக்கும் சிங்காரத்தின் கோபத்திற்கான காரணம் நன்கு தெரியும்.
அதனால் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.
தந்தை கோபமாக செல்வதை பார்த்து சிறு புன்னகையுடன் மகிழ்மதி வீட்டில் புகுந்தாள். அவள் வருவதை பார்த்ததும் வாசல்பரம் இருந்த அவரது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
ஏனோ மகள்மதிக்கு தனது தந்தை நடந்து கொள்ளும் விதம் சிறு பிள்ளைத்தனமாகவே தெரிந்தது அது புண் சிரிப்புடன் அவர் அருகில் மண்டியிட்டு தரையில் இருந்தவள்.
அவரது காலை மெதுவாக பிடித்து மென்மையாக அமுக்க, சிங்காரமோ அவளது பிடியிலிருந்து காலை உருவிக் கொண்டார்.
அவர் அதனை செய்த விதத்தைப் பார்த்ததும் அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அழகாக வெண் பற்கள் தெரிய மழலையாக சிரித்தவளை பார்த்ததும் சிங்காரத்திற்கு கோபம் காற்றாய் பறந்து போனது.
அவள் சிரித்து முடித்து ஓரப்பார்வையால் சிங்காரத்தை பார்க்க சிங்காரம் கவலையுடன்,
“ஏன்மா இப்படி பண்ணின..? அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே..!” என்றிட,
அதே புன்னகை முகம் மாறாமல் அவரது காலை எடுத்து தனது காலின் மீது வைத்தவள், மென்மையாகக் காலை அமுக்கியபடி,
“அது எப்படிப்பா சொல்லிருந்தா நீங்க தான் விட்டு இருக்க மாட்டீங்களே..!” என்று குறும்பாகக் கேட்டாள்.
“என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சும் ஏன்மா இப்படி பண்ணின..? எனக்கு ரொம்ப கவலையா இருக்கு நீ இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை அப்பாவை இப்படி நம்பி மோசம் பண்ணிட்டியே..!” என்று கூறிய சிங்காரத்தின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“அப்பா என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த காக்கிச்சட்டியை பார்த்ததும் என்ன அறியாமல் அதுல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு
அதை போட்டு பார்க்கணும்னு எனக்கு ரொம்ப விருப்பம் அதுவே வளர்ந்து வரும்போது எனக்குள் ஒரு ஆசையை தூண்டி விட்டுச்சு அப்புறமா காலேஜ் படிக்கும் போது எனக்கு அந்த ஐடியாவே இல்ல
என்னோட ஃப்ரண்ட் படிக்கிறான்னு நான் சும்மாதான் எக்ஸாம் செய்து பார்த்தேன் உடனே செலக்ட் ஆயிட்டேன் என்னால நம்ப முடியல அப்பவே உங்கள பத்தி நினைச்சேன் உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு
ஆனா எனக்கு அந்த நேரம் என்ன செய்றதுன்னு தெரியாம போச்சு உயனே என்னோட லெக்சரரை கேட்டேன் அவர்,
“வேலைகள் இல்லாமல் எவ்ளோ பேர் எவ்வளவு கஷ்டப்படுறாங்க ஏதோ ஒரு காரணமா தான் இந்த வேலை உன்னைத் தேடி வந்திருக்கு
உனக்கு புடிச்ச வேலையை நீ செய் புடிக்காத வேலைல மனசு இல்லாம அரைகுறையா செய்ய வேணாம் உன்னோட மனசுக்கு எது சரி என்று படுதோ அதை செய்..” என்று கூற, என்னால் அதை கடந்து வர முடியல
ஆனா உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் எனக்கே இந்தக் காக்கிச் சட்டை போடும் வரைக்கும் உறக்கம் இல்லை நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த வேலைய எடுத்து இருக்கேன் ப்ளீஸ்பா எனக்காக..”
“உனக்கு தெரியும் இல்லம்மா இந்த ஊருக்குள்ள இதுவரைக்கும் போலீஸை உள்ள வர விட்டதே இல்லை இந்த மக்களை என்னோட சொந்தங்கள் மாதிரி தான் நான் பார்த்து பாதுகாத்து வரேன் அப்படிப்பட்ட என்னுடைய வீட்டிலே ஒரு போலீஸ் உருவாகியிருக்குன்னா அத இந்த ஊர் சனங்கள் எப்படி பேசும்..”
“சனங்கள் பேசுறத விடுங்கப்பா நீங்க சொல்லுங்க உங்க மகளுக்கு இந்த வேலை ரொம்ப புடிச்சிருக்கு நீங்க என்ன சொல்றீங்க…?”
“ஆனா இது ரொம்ப ஆபத்தான வேலை ஆச்சே இதுல உனக்கு எதும் ஆயிடுச்சின்னா என்னால அத தாங்கவே முடியாதுமா..”
“அப்பா ஆபத்து இருக்குற இடத்துல தான் ஒரு த்ரில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் அதோட குற்றத்தை தண்டிக்கிறது எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி உங்களுக்கு தெரியும் தானே இதுவரைக்கும் உங்க அனுமதி இல்லாம உங்க இஷ்டம் இல்லாம நான் ஏதாவது செஞ்சுருக்கேனாபா இந்த ஒரு விஷயத்தை மட்டும் எனக்காக விட்டுத் தாங்களேன் என்னோட நீண்ட நாள் ஆசை ப்ளீஸ் பா ப்ளீஸ் பா..” என்று மகிழ்மதி குழந்தை போல ஒற்றை கண் மூடி சினுங்கியபடி கெஞ்ச பாசமிகுந்த நெஞ்சம் அந்த கெஞ்சலில் கரைந்து பாகாகக் கனிந்தது.
“சரி ஆனா இந்த வீட்டுக்குள்ளயோ என் கண் முன்னாடியோ நீ இந்த காக்கிச் சட்டையை போட்டுகிட்டு நிற்கக்கூடாது..”
“அதுவே தங்கள் உத்தரவு அதுவே மகிழ்மதியின் சாசனம்..” என்று கூறி கிழுக்கிச் சிரித்தாள் மகிழ்மதி.
அதனை இரண்டு கண்கள் வெறியுடன் பார்த்து கருவிக் கொண்டது.
அந்தக் கண்களுக்கு சொந்தக்காரன் விக்ரம் தான்.
சிறுவயது முதல் சிங்காரம் விக்ரமை விட மகிழ்மதியின் மீதே அதிக அன்பு வைத்திருந்தான்.
அதனால் என்னவோ விக்ரமுக்கு மகிழ்மதியின் மீது அன்பென்றதே இல்லாமல் போய்விட்டது.
தங்கை வந்த பின்பு தனது இடம் பறிபோகிவிட்டது என்று அவன் சிறு வயது முதல் ஏங்கித் தவித்தது இன்று தீயாய் மூண்டு மனதிற்குள் வன்மமாய் மாறிவிட்டது.
ஆனால் அதனை எப்போதும் விக்ரம் மகிழ்மதியிடம் வெளிப்படுத்தியதே இல்லை.
அவனைப் பொறுத்தவரை அந்த வீட்டில் அவன் ஒரு அமைதியான மகன், தங்கையை மீது மிகவும் அக்கறையான அண்ணன் அவ்வளவுதான்.
நிவேதா தனது காரை மிக வேகமாக ஓட்டி கொண்டு வந்து வீட்டின் முன்னே நிறுத்தினாள்.
அவளது இச்செயலே காயத்ரிக்கு அவள் மிகவும் கோபமாக இருக்கிறாள் என்று நன்கு புரிந்தது.
ஆனால் காயத்ரி அதை ஒன்றையும் கணக்கில் கொள்ளாது முக்கியமான விடயம் தொடர்பாக அவர்களது குடும்ப வக்கீலிடம் பேசிக் கொண்டிருந்தார்.
உள்ளே மின்னலென தனது தாயுடன் வாதம் செய்ய வந்தவள், வக்கீல் ராஜேந்திரனை பார்த்ததும் எதுவும் பேசாமல் அவ்விடத்திலேயே நின்றாள்.
அவளது கோபம் அந்நேரம் மறைந்து அவர் எதற்காக இந்நேரம் இங்கு வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
எப்பொழுதும் ஏதும் முக்கியமான விஷயம் என்றால் தான் அவர் வீட்டுப் பக்கமே வருவார் மற்றபடி அவரைக் காண்பதே அரிது.
அப்படி இருக்கையில் இன்று அவர் வீட்டிற்கு வந்தது ஏதோ ஒரு சிக்கலை உண்டாக்குவதற்கு என்ற எண்ணம் அவளுள் துளிர் விட்டது.
நிவேதா வேகமாக வந்ததும் ராஜேந்திரனை கண்டதும் அதே இடத்தில் அதிர்ச்சி அடைந்து சிந்தித்து கொண்டு நிற்பதையும் கவனித்தும் கவனிக்காதது போல காயத்ரி வக்கீலுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“என்ன ராஜேந்திரன் நான் சொன்ன படி எழுதிட்டீங்களா..?
இந்த உயில் நான் மனப்பூர்வமாக எழுதுவதாக நீங்க முக்கியமாக அதில் குறிப்பிட்டு இருக்கனும் சரிதானே..!”
“யெஸ் மேடம் அதெல்லாம் சரியாத்தான் இருக்கு..”
“சரி எதுக்கும் நீங்க ஒருக்கா அதை வாசித்துக் காட்டினீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்
அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டேன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவர் வந்துருவாரு அவர் வந்ததும் அவர் இந்த பத்திரத்தை பார்த்ததுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா சைன் பண்றோம்..”
“ஓகே மேடம் வாசிக்கவா..”
“ம்…வாசிங்க..” என்று காயத்ரி கூறிவிட்டு விசமப் புன்னகையுடன் நிவேதாவை எதிர் நோக்கினாள்.
அவரது பார்வையும் அவர் உதிர்த்த புன்னகையுமே ஏதோ ஏடாகூடமாக நடக்கப் போகின்றது என்று அவளுக்கு முன்னறித்தது.
வக்கீல் ராஜேந்திரன் ஆறுதலாக அந்த உயிலில் எழுதியுள்ள ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக வாசித்து காட்டினார்.
அவர் வாசித்த ஒவ்வொரு விடயங்களும் கேட்கக் கேட்க நிவேதாவின் தலையில் யாரோ ஒரு லாரி மண்ணை அள்ளிக் கொட்டுவது போல இருந்தது.
அப்படி அந்த உயிலில் எழுதியுள்ள விடயம் நிவேதா அதிர்ச்சி அடையும் வண்ணம் என்னவாக இருக்கும்..?
வாசகப் பெருமக்களே போன முறை கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
இந்தக் கேள்விக்கு பார்ப்போம் எப்படி பதில் அளிக்கின்றீர்கள் என்று…..