அடியே என் பெங்களூர் தக்காளி…(4)

4.6
(16)

அத்தியாயம் 4

 

 

“காம்பவுண்ட் சுவர் வேற இவ்வளவு சின்னதா கட்டி வச்சுருக்காங்க வாடகை கம்மியா இருக்கேன்னு இதை யோசிக்காமல் விட்டுட்டியே பவி” என்று நொந்து கொண்டாள் பல்லவி.

 

சுத்தி நிறைய கால் தடம் சத்தம் கேட்குமே என்று பயத்தில் எச்சில் விழுங்கியவள் அதோ,‌ இதோ என்று ஒரு மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து எடுத்து விட்டாள். பல்லவிக்கு சிறு வயதில் இருந்தே இருட்டென்றால் பயம். அக்கம் பக்கம் இருந்து சின்ன சின்ன வெளிச்சம் வருவதால் பயப்படாமல் இருந்தாள் மெழுகுவர்த்தியை கண்டுபிடிக்கும் வரை.

 

“கடவுளே” என்று அதை பற்ற வைத்து விட்டு எதார்த்தமாக ஐன்னல் வழியாக பார்த்திட ஏதோ ஒரு உருவம் ஜன்னல் கதவினை பிராண்டிக் கொண்டு இருக்க அதைக் கண்டு பயந்தவள் “தப்பித்து ஓடி விட வேண்டும். உயிர் போனாலும் வீட்டில் போய் தான் போகனும்” என்று நினைத்து மெல்ல மெழுகுவர்த்தியை கையில் வைத்துக் கொண்டு தனது மொபைல், ஹேன்ட் பேக் இரண்டையும் எடுத்துக் கொண்டு அலுவலகத்தை மூடி விட்டு திரும்பிட அவள் முன்னே நான்கு தெருநாய்கள் நின்றிருக்க பல்லவிக்கு அல்லு விட்டது.

 

சிறு வயதில் இருந்தே அவளுக்கு நாய் என்றால் பயம் ஒரு நாய் என்றாலே பதறி விடுவாள். இதில் நான்கு நாய்கள் அவளுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது.

 

அதுவும் அந்த நான்கு நாய்களும் கோரைப் பற்கள் தெரிய அவளைப் பார்த்து குரைக்க அவளோ “ச்சூ, ச்சூ” என்று அவளுக்கே கேட்காத படி கூறிட நாய்களுக்கு உரைக்கவே இல்லை. குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் திடீரென அவள் மீது பாய வர கையில் இருந்த மெழுகுவர்த்தியை நாய்கள் மீது தூக்கி எறிந்து விட்டு கத்திக் கொண்டே அவள் ஓட ஆரம்பித்தாள்.

 

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து கால் டாக்சி பிடித்து வந்து கொண்டிருந்தான் திலீப் வர்மன். “ஆறு வருசம் ஆச்சு அண்ணா இந்த ஊரை விட்டு போயி இப்போ தான் சுதந்திரமா சுவாசிக்கிறது போல இருக்கு” என்று அவன் கூறிட, டிரைவரோ அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

 

அவருடன் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தான் திலீப். தூரத்தில் யாரோ ஓடி வருவது போல் இருக்கவும், “அண்ணா காரை ஸ்டாப் பண்ணுங்க யாரோ ஓடி வராங்க என்ன பிரச்சினைனு தெரியலை” என்ற திலீப் காரை நிறுத்த சொல்ல டிரைவரும் நிறுத்தினார்.

 

அவன் காரில் இருந்து இறங்கி வெளியே நிற்க வேகமாக ஓடி வந்தவள் அவன் மீது மோதிட இருவருமே பொத்தென்று விழுந்தனர்.

 

“ஸாரி, ஸாரிங்க நாய் , நாய் துரத்துது” என்று அவள் பதற்றத்துடன் கூறிக் கொண்டு இருக்க வட்ட நிலவான முகத்தில், பன் போன்ற அவளது அழகிய கன்னங்களில் பேசும் போது கூட விழும் கன்னக் குழிகளை ரசித்தான். குட்டியாக இருக்கும் அவளது ரோஸ் நிற உதடுகள் பயத்தில் துடிப்பதையும், மருண்ட அவளது மான் விழிகளை (அவனுக்கு பிடித்த முட்டை கண்களை) பயத்தில் நொடிக்கு ஒரு முறை பட படவென அவள் மூடித் திறக்கும் அழகையும் ரசித்தான் திலீப் வர்மன்.

 

“ஏம்மா இப்படியா மேல வந்து விழுவ” என்று டிரைவர் சத்தம் போடவும் தான் அவன் மீது தான் விழுந்து கிடப்பதை உணர்ந்து , “ஸாரி ,ஸாரி” என்று அவள் எழுந்து கொண்டாள்.

 

தன் மீது விழுந்த பஞ்சுப் பொதி தன்னை விட்டு பிரிந்து செல்வதை தாங்காமல் டிரைவரை மனதிற்குள் அர்ச்சித்தான் திலீப் வர்மன்.

 

“என்னாச்சுமா ஏன் இப்படி ஓடி வந்த” என்ற டிரைவரிடம் , “நாய் துரத்துச்சு” என்று அவள் மூச்சிரைக்க கூறிட, அவள் முன் தண்ணீரை நீட்டினான் திலீப் வர்மன்.

 

அவளை விரட்டி வந்த நாய்கள் எங்கேயோ நின்று விட அவள் தான் இன்னும் பயத்திலேயே வெகு தூரம் ஓடி வந்திருந்தாள்.

 

“நாயை காணோம்” என்று அவன் கூறிட அப்போது தான் திரும்பி பார்த்தாள் பல்லவி‌ . “அட ஆமாம் நாயை காணோம் ச்சே எம்புட்டு தூரம் ஓடி வந்த பவி” என்று நொந்து கொண்டவள், “ஸாரிங்க பயத்தில் தான் உங்க மேல மோதி” என்று அவள் முடிப்பதற்குள் “என் எலும்பை உடைச்சுட்டீங்க” என்றான் திலீப் வர்மன்.

 

அவனை முறைத்தவள் எழுந்து செல்ல, “ஏய் தக்காளி இதை விட்டுட்டு போற” என்றான். “என்ன தக்காளியா” என்றவள் திரும்பி அவனை நன்றாக பார்த்தாள்.

 

அடையாளம் தெரியவில்லை. அவள் யோசனையாக தன்னை பார்ப்பதைக் கண்டு, “என்னடீ அடையாளம் தெரியவில்லையா” என்றவன், “எப்படித் தெரியும் அப்போ லீனா இருந்தேன் இப்போ சிக்ஸ் பேக் எல்லாம் வச்சு உன் மாமன் மாஸா வந்து இறங்கிருக்கேன் அதனால் குழம்பி நிற்கிறியாடீ என் பெங்களூர் தக்காளி” என்றான் புன்னகையுடன்.

 

அவனது கண்ணுக்கு கீழே கன்னத்தில் இருந்த மச்சத்தைக் கண்டு அடையாளம் கண்டு பிடித்தவள், “திலீப்” என்றிட “நியாபகம் வந்திருச்சா அப்போ சரி” என்றான்.

 

“வீட்டிற்கு தானே போகனும் வா நானே டிராப் பண்றேன்” என்று அவன் கூறிட, “நோ தேங்க்ஸ் நான் ஆட்டோ பிடித்து போய்க்கிறேன்” என்றாள் பல்லவி.

 

“பவி லேட் நைட் ஆகிருச்சுடி ஒழுங்கா என் கூட வா இந்த ஏரியாவில் கூட நிறைய தெரு நாய்கள் சுத்தும்” என்று அவன் கூறிட பயந்து அவனுடன் காரில் அமர்ந்தாள்.

 

“ஏன் டீ உனக்கு வயசு எத்தனை டீ” என்ற திலீப் வர்மனை முறைத்தாள் பல்லவி. “என்ன வயசைக் கேட்டால் முறைக்கிற” என்றான் திலீப் வர்மன்.

 

“இருபத்தி ஆறு” என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு. “ஹூம் இருபத்தி ஆறு வயசாகிருச்சு இன்னும் வெட்கமே இல்லாமல் நாய்க்கு பயந்துட்டு என் மேல வந்து விழுந்து என் இடுப்பை உடைச்சு விட்டுட்ட” என்றான் திலீப் வர்மன்.

 

“நான் ஓடி வரேன்னு தெரியுதுல உன்னை யாருடா ஊடால வந்து நிற்க சொன்னது நல்ல எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கியே அறிவு இல்லை” என்றாள் பதிலுக்கு.

 

அவனோ சிரித்து விட்டு, “வாய் மட்டும் இன்னும் குறையவே இல்லை” என்றவன், “இல்லை இல்லை வாயும் இன்னும் குறையவில்லை” என்று கூறிட கடுப்பானவள் ஏதோ சொல்ல வாயெடுக்க, “உன் வீடு வந்திருச்சு பவி” என்றவன், டிரைவரிடம் “அண்ணா இங்கே தான் நிப்பாட்டுங்க” என்றான் திலீப்.

 

“என்ன பவி உன் வீடு எனக்கு மறந்திருக்கும்னு நினைச்சியா” என்றவனை எதுவும் சொல்லாமல் பார்த்தவள் இறங்கி விட்டு, “தேங்க்ஸ்” என்றாள்.

 

“வெறும் தேங்க்ஸ் தானா வீட்டுக்கு கூப்பிட்டு காஃபி எல்லாம் கொடுக்க மாட்டியா?” என்றான் திலீப் வர்மன். “நீ என்னை பொண்ணு பார்க்க வந்திருக்கிற மாப்பிள்ளை பாரு உனக்கு காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிக்க” என்றவள் கிளம்ப எத்தனிக்க, “ஓய் தக்காளி உனக்கு இந்த ஆசை வேற இருக்கா” என்றான் சிரித்தபடியே.

 

அவன் கேட்ட அர்த்தம் வேறு. அவள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு.

 

அவன் அவ்வாறு சொன்னதும் கலங்கிய கண்களுடன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள் பல்லவி. அவளை வீட்டில் விட்ட பிறகு அவனும் தன் வீட்டிற்கு சென்றான்.

 

“எவன் கூட டீ காரில் வந்து இறங்குன” என்று வைதேகி கேட்டிட ,”சித்தி அது கால் டாக்சி” என்றாள் பல்லவி. “டாக்ஸி பிடித்து வரும் அளவுக்கு செல்வ செழிப்போ” என்று வைதேகி கேட்டிட, “சித்தி டைம் பாருங்க லேட் நைட் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை” என்றாள் பல்லவி.

 

“நீ விடுற கதையை நம்ப நான் ஒன்றும் உன் அப்பா கிடையாது” என்ற வைதேகி ஏதோ சொல்ல வர, “ராகவ் கிட்ட என்னடீ சொன்ன” என்றாள் சாம்பவி.

 

“ராகவ் கிட்ட நான் எதுவும் சொல்லவில்லையே” என்றாள் பல்லவி.

 

“நீ எதுவும் சொல்லாமல் தான் அவர் என் கிட்ட வந்து கேட்டாரோ” என்ற சாம்பவி, “உன் மனசுல என்னடீ நினைச்சுக்கிட்டு இருக்க என் வாழ்க்கையை அழிக்க எதுவும் திட்டம் போடுறீயா” என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு.

 

“சாம்பவி புரியாமல் பேசாதே நான் ஏன் உன் வாழ்க்கையை அழிக்கப் போறேன், நீ என்னோட தங்கச்சி உன் வாழ்க்கையை அழிக்கிறதால் எனக்கு என்ன கிடைக்கப் போகுது” என்றாள் பல்லவி.

 

“தங்கச்சியா நானா அதுவும் உனக்கா தயவுசெய்து வெளியே சொல்லிக் கொண்டு இருக்காதே எல்லோரும் என்னை கேலி பண்ணுவாங்க அந்த குண்டச்சி உன் அக்காவான்னு” என்றாள் சாம்பவி.

 

அவளை அடி பட்ட பார்வை பார்த்தாள் பல்லவி‌. “இவள் முகரைக் கட்டைக்கு நான் இவளோட தங்கச்சியாமே” என்று எள்ளலாக அவள் மேலும் மேலும் பேசிட பல்லவிக்கு தான் மனம் வலித்தது.

 

மகளை பேச விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் வைதேகி.

 

“என் அப்பாவுக்கு பிறந்ததால் மட்டும் நீ எனக்கு அக்கா ஆகிட முடியாது. என் அம்மா வயிற்றில் பிறந்திருக்கனும் அப்போ கூட உன்னை மாதிரி சின்டெக்ஸை எல்லாம் என் அக்காவா ஏத்துட்டு இருக்க மாட்டேன்” என்று சாம்பவி பேசிக் கொண்டே போக, “போதும் நிறுத்து சாம்பவி இப்போ என்ன நான் உனக்கு அக்கா இல்லை. நீயும் எனக்கு தங்கச்சி இல்லை அதானே சரி இனிமேல் நீ என்னை அக்காவா பார்க்க வேண்டாம். நானும் உன்னை தங்கச்சியா பார்க்க வில்லை போதுமா” என்றாள் பல்லவி.

 

“என்னடீ பிரச்சினையை வேற பக்கம் திருப்பி விடுற” என்ற சாம்பவியை முறைத்தவள், “என்ன நடந்துச்சுன்னு ராகவ் தெளிவாக தானே சொல்லியிருப்பான் அப்புறமும் என்னை ஏன் கேள்வி கேட்கிற என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு” என்றாள் பல்லவி.

 

“ஏய் என்ன டீ கேள்வி இது அவளுக்கு என்ன உரிமை இருக்கா அவள் உன் தங்கச்சி” என்றார் வைதேகி.

 

“என்ன சித்தி அதுக்குள்ள மறந்துட்டீங்களா? இப்போ உங்க பொண்ணு தான் சொன்னாள் நான் அவளுக்கு அக்கா இல்லை, அவளும் எனக்கு தங்கச்சி இல்லைனு உரிமை இல்லாத என் கிட்ட இவள் ஏன் கேள்வி கேட்கிறாள்” என்றாள் பல்லவி.

 

“என்ன பல்லவி வாய் நீளுது உன் அப்பா இருக்கும் போது பொட்டிப் பாம்பா அடங்கி இருந்துட்டு அவர் ஊருக்கு போனதும் வாய் நீளுது என்ன மறந்துட்டியா என்னோட தண்டனையை” என்ற வைதேகி அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறையின் முன் நின்றார்.

 

“சித்தி வேண்டாம் விட்டுருங்க” என்று அவள் கெஞ்சிட வைதேகி அவளை அந்த அறைக்குள் தள்ளி விட்டு கதவை அடைத்தார்.

 

“சித்தி தயவு செய்து கதவை திறங்க பயமா இருக்கு, பயமா இருக்கு” என்று கத்திக் கொண்டே இருந்தாள் பல்லவி.

 

 

(…. அடியே..)

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!