அரிமா – 2.2

4.8
(11)

அன்று...

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில்,

” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மாருதட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள செய்தியை தட்டித்தடுமாறி வாசித்த அச்சிறுவன்.

தன் அருகில் அமர்ந்து பைபிள் வாசித்துக்கொண்டிருக்கும் மதர் மேரியிடம் ,

“மதர் இந்த ரவுடிகள் , தாதாக்கள்ன்னா யாரு ?? இவங்க ஏன் கொலை பண்ணிட்டு இருக்காங்க ?? ” – தன் வயதிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டான் அச்சிறுவன்.

” அவங்க பணத்துக்காக தப்பான காரியங்களை செய்யிறவங்க. பொது மக்களுக்கு கஷ்டம் கொடுக்குறவங்க , அவங்க ரொம்ப ஆபத்தானவங்க ” என்றார் மேரி.

” ஓ அப்போ அவங்களுக்கு யாரு பனிஷ்மென்ட் குடுப்பாங்க “

“போலீஸ் தான் பனிஷ்மென்ட் குடுப்பாங்க. போலீஸுடைய வேலையே  இந்த மாதிரி தப்பு பண்றவங்களை தண்டிக்கிறது தான்”

” ஓ அப்போ நான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகி தப்பு பண்றவங்க எல்லாருக்கும் பனிஷ்மென்ட் கொடுப்பேன். இந்த ரவுடிங்க ஏற்படுத்தின கலவரத்துல தான என் அம்மா அப்பா செத்து போனாங்க. நான் அதுக்கு போலீஸ் ஆகி அவங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுப்பேன் ” – என்று உறுதியுடன் கூறிய அச்சிறுவனை கண்ட மதர் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

இன்று மும்பையில்…

பங்களாவுக்கு முன்பு நின்றிருந்த மதன் அர்ஜுனிடம்,

“அர்ஜுன் இது யார் வீடு டா ?” – என்று கேட்டான்.

” வா உனக்கே தெரியும் ” – என்ற அர்ஜுன் காம்பெளண்ட் கேட்டின் மீது கையை வைத்து மெல்லத் தள்ளவும், அது சத்தம் இல்லாமல் உள்ளே திறந்து கொண்டது.

அர்ஜுன் வாசற்படிகளில் ஏறி அழைப்பு மணியின் பொத்தானில் கை வைத்து அழுத்திவிட, இருவரும் மெளனமாய் காத்திருந்தனர். அப்பொழுது கதவின் தாழ்ப்பாள் விலகவும், அங்கே ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆண் நின்றிருந்தார்.

அர்ஜுன் அவரை பார்த்து மெலிதாய் புன்னகைத்து,

 “ஹலோ பாஸ்கர் ஸார்” என்றான்.

பாஸ்கர் அர்ஜுனை கண்டதும்  சற்றே அதிர்ச்சி ஆகி,

 “அர்ஜுன் நீங்களா… வாட்… ஏ….. சர்ப்ரைஸ்… உள்ளே வாங்க…,” பதற்றத்தை மறைத்தபடி வரவேற்றார்.

பாஸ்கர், ஹோட்டல் பரடைஸின் உரிமையாளர் என்பதை அவரைப் பார்த்ததும் கண்டுகொண்ட மதனோ, ‘இந்த நேரத்தில இவர் வீட்டுக்கு ஏன் அழைச்சிட்டு வந்திருக்கான்’ என்று எண்ணியவன் ஒருவித குழப்பத்துடன் தன் நண்பனை பார்த்தான்.

அப்பொழுது, “ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!” என்ற அர்ஜுனிடம்,

“அதெல்லாம் இல்லை.. உள்ளே வாங்க” என்றார் பாஸ்கர்.

இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.பாஸ்கர் அர்ஜுனிடம்  “என்ன அர்ஜுன்..புதுசா திருமணமான கணவன் மனைவி தற்கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிஞ்சதா..?” என்று வினவினார்.

“ம்ம்ம். குற்றவாளிக்குப் பக்கத்திலேயே வந்துட்டோம் ஸார்.. பட் ஒரே ஒரு சந்தேகம்.”

பாஸ்கரின் முகம் இப்பொழுது சற்று வெளிறியது.

“வாட் டு யூ மீன்?” – குரல் நடுங்கியது.

“ரெண்டு பேர் மேல சந்தேகப்படறோம் ஸார். ஒருத்தர் நீங்க….! இன்னொருத்தர் யாருன்னு நீங்க தான் சொல்லணும். ஏன்னா இதை நீங்க மட்டும் தனியா செய்யுறீங்களா இல்லை உங்களுக்கும் ஒரு பாஸ் இருக்கானான்னு தெரிஞ்சிக்கணும். சின்னதாய் ஒரு குழப்பம். அதைத் தெளிவுப்படுத்திக்கத்தான்….” – என்பதோடு நிறுத்திக் கொண்ட   அர்ஜுனின் இதழ்கள் நகைத்தது.

அர்ஜுன் சொன்ன மறுகணம் பாஸ்கர் சட்டென்று பின்னால் நகர்ந்து மேஜையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எடுக்க முயல,

அதை கணப்பொழுதில் மோப்பம் பிடித்த மதன் சற்றும் யோசிக்காமல் தனது முதுகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டலால் பாஸ்கரின் வலக்கரத்தில் சுட,

வலியில் துடித்தபடி அவர் கீழே சரிந்தார்.

பின்பு அவருடைய அருகில் சென்ற அர்ஜுன் அவரது நெற்றிப் பொட்டில் தன் பிஸ்டலை வைத்து அழுத்தி,

” ஏதாவது வில்லத்தனம் பண்ண முயற்சி செஞ்சா. ரெண்டு பேரும் தயவு தாட்சண்யம் பார்க்காமே சுட்டு கொன்னுட்டு போயிட்டே இருப்போம் ” – கடுமையாக எச்சரித்தான் .

 அவரோ வலியில் துடித்தபடி சரி என்பதாய் தலையசைக்க அர்ஜுன் நிதானமான குரலில் பேச்சைத் தொடர்ந்தான்.

 “ஸாரி… ஸார்… எனக்கு வேற வழியில்லை. சட்டத்துக்கு முன்னாடி எல்லாருமே சமம் தான். நீங்க ஒருத்தர மொபைல்ல பணம் கேட்டு மிரட்டுற ஆடியோ ஆதாரம், அப்புறம் உங்க ஹோட்டல் ரூம்ல இல்லீகளா யாருக்கும் தெரியாம பொருத்தப்பட்ட ஹிட்டன் கேமராஸ்ன்னு உங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு. அதனால என்கிட்ட பொய் சொல்ல முயற்சி பண்ணாம என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.”

” என் மேல எப்படி உங்களுக்கு சந்தேகம் வந்தது ” – என்று கேட்டார் பாஸ்க்கர்.

” இந்த கேஸ் ஆரம்பிச்சித்ததுல இருந்து உங்க மேல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துட்டே தான் இருந்துச்சு. இந்த கேஸ் ஆரம்பிச்ச நாளிலிருந்து நீங்க எனக்கு போன் பண்ணி இறந்து போனவங்க மேல கரிசனம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டீங்க. அது எல்லாமே எனக்கு கொஞ்சம் ஓவறாறா தெரிஞ்சுது. அப்பவே எனக்கு தெரிஞ்ச நம்பகமான போலீசை வச்சு. உங்களை மறைமுகமா கண்காணிக்கச் சொன்னேன். உங்க செல்போன் பேச்சுக்களை சைபர் க்ரைம் மூலமாய் மானிட்டரிங் பண்ணச் சொன்னேன்.”

பாஸ்கரின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது.

“உங்க செல்போனை மானிட்டர் பண்ணிப் பார்த்த போது உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிது. பல பெரிய ஆளுங்க கூட எல்லாம் புரியாத கோட் வார்ட் யூஸ் பண்ணி பேசிருக்கீங்க. ஸோ இது எதுவுமே நீங்க தனியா பண்ணல நிறைய பேர் சப்போர்ட் பண்றாங்கன்னு தெரியுது “

பாஸ்கர் இப்போது உச்சபட்ச வியர்வையில் இருந்தார். தலை கவிழ்ந்த படி அமர்ந்திருந்தவர். சில நொடிகள் கழித்து,

 “அர்ஜுன் நீங்க நினைக்கிற மாதிரி இந்த விவகாரத்துக்கு நான் முழுகாரணம் இல்லை. நான் ஒரு அம்பு மட்டுமே.”

“தெரியும் ஆனா இதை எய்தது யாரு ? உங்களை போல இப்படி எத்தனை அம்புகள் அப்பாவிகளை வதைக்க காத்துக்கிட்டு இருக்குன்னு? தெரிஞ்சிக்க தான் நான் இங்க வந்திருக்கேன் “

” எனக்குத் தெரியாது. எல்லாமே ஃபோன் காண்டாக்ட் தான்.. முகத்தை கூட பார்த்தது கிடையாது “

 “சரி… இதுல உங்க வேலை என்னனு சொல்ல முடியுமா….?”

நீண்ட மௌனத்திற்கு பிறகு ஆரம்பித்தார் பாஸ்கர்,

” ஹனிமூனுக்கு வர்ற கப்பிள்ஸ். காதல் ஜோடிகள் அப்புறம் வெளியூர்ல இருந்து எஜூகேஷனல் டூருக்கு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிற ரூம்ல.”

“சொல்லுங்க சார்??. செய்யிறதுக்கு அசிங்கமா இல்லை சொல்றதுக்கு மட்டும் அசிங்கமா இருக்கு  “

” அவங்களுக்கு தெரியாம கேமரா வச்சிருவோம். “

” என்ன மாதிரி கேமரா எங்க எல்லாம் வைப்பீங்க ??”

” பாத்ரூம்ல. பெடரூம்ல எல்லா இடத்துலயும் இருக்கும். வால் க்ளாக் , ஸ்விட்ச் போர்ட்ன்னு அவங்க கண்டே பிடிக்க முடியாத இடத்துல எல்லாம் வச்சிருப்போம் “

“அப்புறம் என்னன்னு நான் சொல்லட்டா. அந்த பொண்ணுங்களுடைய அந்தரங்கங்களை வீடியோ எடுத்து அவங்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட வேண்டியது. போலீசுக்கு போவேன்னு சொன்னா விடீயோவை நெட்ல போட்டுருவேன்னு பயமுறுத்த வேண்டியது. பணம் தர முடியாதவர்களை பெரிய பெரிய பணக்கார வெறி புடிச்ச நாய்ங்களுக்கு. ச்ச சொல்லவே அசிங்கமா இருக்கு. நீங்க பண்ற இந்த எச்ச வேலைக்கு  கூலியா பெரிய தொகை உங்க அக்கவுண்டுக்கு வந்து சேரும். இல்லையா பாஸ்கர் ஸார்?” – பற்களை கடித்தபடி கேட்டான்.

மதன் அவர்களை குறுக்கிட்டு,

“இதுல உங்களுக்கு பேமெண்ட் எப்படி பாஸ்கர் ?” என்று கேட்க,

“அது… அது… வந்து….”

“மொத்தமா நனைஞ்சுட்டீங்க பாஸ்கர் இனிமே எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க முயற்சி பண்ணாதீங்க. அப்புறம் நிறைய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் .” – எச்சரித்தான் அர்ஜுன்.

நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்த பாஸ்கர் “இனிமேல் பொய் பேசி எனக்கு பயனும் இல்லை நான் சொல்லிடுறேன் “

” ம்ம் ஆகட்டும் “

“ஒரு விடியோவுக்கு அஞ்சு லக்ஷத்துல இருந்து ஒரு கோடி ரூபாய் வர கிடைக்கும். பணக்கார வீட்டு பசங்கன்னா ஒரு கோடிக்கும் மேல கூட கிடைக்கும். எவ்வளவு வந்தாலும் எனக்கு அதுல ஐம்பது சதவீதம் ஷேர் உண்டு. !”

“சரி…. இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம் அந்த தம்பதிகள் வினீத் , மீனாவ ஏன் கொலை செஞ்சீங்க??. யாரு செஞ்சது ?”

” அவங்க போலீசுக்கு போவோம்ன்னு சொன்னாங்க. “

 “சரி….அப்புறம் ?”

 “நான் உடனே இந்தத் தகவலை எனக்கு மேல உள்ளவங்களுக்கு அனுப்பினேன். அவங்க எங்க   லோக்கல் காங்ஸ்டார் சூரஜ் வச்சு தீர்த்துக்கட்டிடாங்க. கொலைன்னு தெரிஞ்சா மாட்டிக்குவோம்ன்னு தற்கொலை மாதிரி செட் பண்ணி வச்சோம். உங்களால என்னை கண்டு புடிக்க முடியாதுன்னு நினைச்சேன் பட் என்னை நெருங்கிட்டீங்க.”

 “இதுவரைக்கும் எத்தனை பேர் வாழ்க்கையில விளையாடிருக்கீங்கன்னு சொல்ல முடியுமா?”

“அது வந்து “

“கணக்கு வச்சுக்க முடியாதளவுக்கு நாசம் பண்ணிருக்கீங்க ” பற்களை கடித்தபடி அர்ஜுன் கூறினான்.

 “அர்ஜுன் சார் இப்பவும் சொல்றேன் நான் வெறும் அம்பு தான். மும்பையில் ஒரு ஹோட்டல்ல நடக்குறதை மட்டும் தான் நீங்க கண்டுபுடிச்சிருக்கீங்க. இந்தியா முழுக்க இது நடக்குது. தோண்ட தோண்ட இது போய்கிட்டே இருக்கும் சார். உங்களால முடியாது. நீங்க முடிச்சிடீங்கன்னு நினைக்கிறீங்க அப்படி தானே… ஆனா இது தான் ஆரம்பம். இப்போ வேணும்ன்னா நிறுத்துவாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல வேற ஒரு ரூபத்துல இது நடக்க தான் போகுது.”

” நடக்காது நான் இருக்குற வரைக்கும் நடக்க விடமாட்டேன் “- உறுதியுடன் கூறிய அர்ஜுன். தன் அலைபேசியில் தொடர்பு கொண்டு,

கோவிந்தனுக்கு அழைப்பு விடுத்து ஹோட்டலுக்குள் ரைட் நடத்துமாறு உத்தரவு விடுக்க. அவனது வீரர்கள். கண்ணிமைக்கும் நொடியில் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கே இருந்த வீடியோ ஆதாரங்கள். மறைந்து வைத்திருந்த கேமராக்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து. பாஸ்கரின் லீலைகளில் தொடர்புடைய அவனது ஊழியர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

” உன்னையெல்லாம் இங்கையே போடணும் டா ” – மதனின்  கையில் இருந்த பிஸ்டல் பாஸ்கரின் நெற்றிப் பொட்டை பலமாய் அழுத்தியது. கோபத்தில் நின்றிருந்த மதனை தடுத்த அர்ஜுன்,

” நோ மதன் இவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுப்போம் “

” இல்லை அர்ஜுன். இவனை விட்டா கொஞ்ச நாள்ல வெளிய வந்து மறுபடியும் அதே தப்பை தான் பண்ணுவான் “

” குற்றங்களை தடுக்குறது. குற்றவாளிகளை பிடிக்கிறது மட்டும் தான் நம்ம கடமை. தண்டனை கொடுக்குறது சட்டத்தோட கடமை. நாம சட்டத்தை கையில எடுக்க கூடாது அது சரியா இருக்காது. இவனுக்கு உரிய தண்டனை இவனுக்கு கிடைக்கும் ” – என்றான் அர்ஜுன்.

அர்ஜுன் தனது பட்டப்படிப்பை முடித்த உடன்  UPSC தேர்வில் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறையும் தோல்வியை மற்றுமே சந்தித்தும்.  கொஞ்சமும் மனம் தளராமல் ! விடா முயற்சியுடன் படித்து நான்காவது முறை தேசியளவில் முதல் இடத்தில் தேர்ச்சி  பெற்று. வெற்றிகரமாக தன் IPS ட்ரெயினிங்கை முடித்து ACP (அசிஸ்ஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ) யாக பொறுப்பெடுத்து  உள்ளான்.

ராம்குமார் ப்ரீத்தா தம்பதியரின் செல்ல மகனான ACP அர்ஜுன், வேகம் விவேகம் என்று இரு அஸ்திரங்களைக் கொண்டவன். பொறுமையாகவும் அதே நேரம் விவேகத்துடன் வேகமாய் செயல்பட்டு தன் குறிக்கோளை வெல்வதில் சிறந்த வில்லாளி பார்த்தனுக்கு சற்றும் குறைந்தவன் இல்லை இவன்.

தேவைக்கேற்ற கோபம் அவனது முறுக்கு மீசைக்கு அழகு. அவனது கனிவான பேச்சு அவனின் ஆண்மைக்கு எடுத்துக்காட்டு.

அர்ஜுனுக்கு தான் பார்க்கும் உத்தியோகத்திற்குப் பிறகு மிகவும் பிடித்தது யார் என்றால். அது மதுமதி தான். மது மீது அவன் கொண்டுள்ள நேசம் கடலை விட பெரியது.

அர்ஜுனுக்கு மதுமதி மீது காதல்  இன்றோ நேற்றோ வந்ததல்ல . சிறு வயது முதலே அவள் மீது அவனுக்கு ஒரு பிரியம். தனது சிறு வயதிலே மதுமதி தன் பெற்றோரை இழந்துவிட, அர்ஜுனுக்கு அவள் மீது எப்பொழுதும் தனி அக்கறை உண்டு. ‘மதுவுக்குன்னு யாரும் இல்லை அர்ஜுன், நாம தான் அவளை பத்திரமா பார்த்துக்கணும் அவன் கிட்ட சண்டை போடாத, அவளை எப்பவும் அன்பா பார்த்துக்கோ’ என்று ப்ரீத்தா அவன் மனதில் இதை ஆழமாய் பதித்து விட, அதே பிரியம் நாளடைவில் அவன் மனதில் காதலாய் மலர்ந்து,

இன்று திருமணத்தில் வந்து நிற்கிறது. இன்னும் சில நாட்களில் மதுவை மணக்கப் போகிறோம் என்கின்ற சந்தோஷ கடலில் ஆணவன் சுகமாய் நீந்தி கொண்டிருக்கிறான் ஆனால் அவள்? அவளது மனதில் அர்ஜுனுக்கான இடம் எதுவோ?

தன் அன்பு அத்தையின் மகனாக அர்ஜுனை மதுவுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவன் மீது காதல் உண்டா என்றால்? காதலிக்க முயன்று கொண்டிருக்கிறாள், தன் அத்தைக்காவும் தன்னை உண்மையாக நேசிக்கும் அர்ஜுனுக்காவும். ப்ரீத்தாவுக்கா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த மதுவுக்கு இப்போது இந்த நொடி வரை அர்ஜுன் மீதும் காதல் இல்லை, திருமணத்தின் மீதும் ஆர்வம் இல்லை.

இதே நேரம்  ஜுவாலாவோ அர்ஜுனை தவிர வேறு எவனையும் தன்னவனாய் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்க, இதை அறிந்தால் அர்ஜுனின் மனநிலை என்னாகும். அதை விட மதுமதி அறிந்து கொண்டால்? அவள் முடிவு என்னவாக இருக்கும் இருவரில் யாருடைய காதல் கைகூடும்??

———————————————————————-

அதே நேரம் இங்கே குப்தாவும் , ஷர்மாவும் பயத்தில் உறைந்தபடி அசைவின்றி நிற்க,

“ஸ்கெட்சி போட்டா இப்படி போடணும் ” – என்ற ஆதி தன் கையால் இறந்து போன சூரஜின் உடலை அவனது தலை முடியை பிடித்து தர தரவென்று இழுத்து வந்து குப்தா மற்றும் ஷர்மாவின் காலடியில் வீசினான் .

இப்பொழுது குப்தாவின் கால்கள் தானாய் நடுங்கியது. சர்மா எது போனாலும் உயிராவது இருக்கட்டும் என்கின்ற நப்பாசையில் “எனக்கு ஒன்னும் தெரியாது எல்லாம் குப்தாவின் வேலை தான்.. நான் என்னைக்குமே உங்க விசுவாசி ” என்றபடி ஆதித்யாவின் காலடியில் வந்து விழுந்தான்.

தன் காலில் விழுந்த ஷர்மாவை ஏளனமாய் பார்த்த ஆதி, குப்தாவின் பயத்தை ரசித்தபடி அவனது எதிரில் வந்து நின்றான்.

” என்ன குப்தா ஜி ஸ்கெட்டிச்சு சரியா போட்ருக்கேனா ” – என்று வினவியவன் தன் பார்வையை அந்த இடத்தை சுற்றிலும் சுழல விட்டு, ” எல்லாம் அமோகமா நடக்குது போல. நான் கூடாதுன்னு சொல்லியும் பண்றீங்க ” – என்றான் .

” ஆதித்யா எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணலாம். நீ எங்க வழியில குறுக்க வரமா இருந்திருந்தா நான் உன்னை போடணும்ன்னு நினைச்சிருக்க கூட மாட்டேன். உன்னை கொலை பண்ற முடிவு என்னுடையது அல்ல. மீட்டிங்க்ல பேசி எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. செஞ்சது தான் நான்.செய்ய சொன்னது சிவகுரு. உன்னால எங்க பிஸ்னஸ் எவ்வளவு முடங்கி கிடக்குது தெரியுமா ??”

” எனக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே எல்லாத்தையும் நிப்பாட்டுங்க” – அடங்கி ஒலித்தது ஆதித்யாவின் எச்சரிக்கை குரல்.

குப்தா பதில் பேசுவதற்குள், ” முடியாது டா என்ன பண்ணுவ ” –  என்று ஆதித்யாவை முறைத்தபடி வந்தான் குப்தாவின் ஒரே வாரிசு ஓம்காரா குப்தா.

” ஓம் “- மகனை கண்டித்தார் குப்தா .

” விடுங்க டாட் நீங்க ஏன் இவனுக்கு பயப்படுறீங்க. இவன் யாரு நமக்கு தடை போடுறதுக்கு ” என்றவன்.

 தன்னை வெறித்து நோக்கி கொண்டிருந்த ஆதியிடம்,” கிளம்புடா இங்க இருந்து ” – விவரம் புரியாமல் மிரட்டினான்.

” நிறுத்திருங்க. இல்லைனா என் அடி ரொம்ப பலமா இருக்கும். அப்புறம் எழும்பவே முடியாது. ” – பறக்கவிருந்த பொறுமையை இழுத்துவைத்தபடி ஓம்காராவிற்கு எச்சரிக்கை விடுத்த ஆதியின் முகம் அக்னி குண்டம் போல கொதித்துக்கொண்டிருந்தது.

” முடியாது டா. உன்னை பத்தி எல்லாம் தெரியும்.” – திமிறினான் ஓம்காரா.

” என்னை பத்தி உனக்கு எதுவுமே தெரியாது ” -ஆதித்யா கபடமாய் சிரித்தான்.சிதையில் சிதைக்க போகும் அந்த சிரிப்பின் அர்த்தத்தை உணர்ந்த குப்தாவின் உடல் நடுங்கியது.

” நீயும் திருடன் தான.. என்னமோ போலீஸ் மாதிரி நல்லவன் வேஷம் போடுற ” – பற்களை கடித்தபடி ஆதித்யாவை எதிர்த்து நின்றான் ஓம்.

” ஓம் ” – மகனை பலமாய் கண்டித்த குப்தா ஆதித்யாவின் காலில் விழுந்து மகனுக்காக மன்னிப்பு வேண்டினார்.

” அப்பா என்ன பண்றீங்க முதல்ல எழுந்து  நில்லுங்க ” – என்ற ஓம். ஆதித்யாவின் புறம் திரும்பி,

” உன்னை பார்த்தா எனக்கு பயமா இல்லை உன்னால என்ன முடியுமோ அதை பண்ணிக்கோ. இப்போ இங்க இருந்து கிளம்பு ” அவனின் மார்பில் கைவைத்து அவனை வெளியே தள்ளிக்கொண்டே போக,

இழுத்து பிடித்து வைத்த ஆதியின் பொறுமையெல்லாம் காற்றில் திசை மறந்து பறந்து சென்றது.

அவனுக்குள் அடக்கிவைக்கப்பட்ட அரக்கன் சீறியெழுந்தான். உடனே தன் எதிரில் இருந்த ஓமை பார்த்து தன் நெஞ்சை நிமிர்த்தி கொடூரமாக முறைத்தான். புருவத்துடன் விழிகளும் விரிந்திருந்தது. இத்தனை நேரம் இங்கிருந்த ஆதித்யா இப்பொழுது இல்லை.இவன் ஆதித்யா இல்லை. வந்து விட்டான் ஆம் கொடிய அசுரன் வந்துவிட்டான்.

” ஹவ் டேர் யு ” – வெறித்தனமாய் சீரிய ஆதி, நொடி பொழுதில் தன் நெற்றி கொண்டு ஓம்காராவின் நெற்றியில் வேகமாய் மோதினான். அவ்வளவு தான் தரையில் சரிந்து விழுந்தான் ஓம். கோபம் தீராத ஆதி ஓமின் மார்பில் ஓங்கி மிதிக்க தன் கால்களை உயர்த்த.உடனே குப்தா அவனது காலடியில் விழுந்து தன்னையும் தன் மகனையும் மன்னிக்கும்படி கெஞ்சினான்.

” எனக்கு தெரிஞ்சே பண்ற தப்பை மன்னிச்சு பழக்கம் இல்லை.  ” – உறுமினான் ஆதி. மறுநொடி ஆதித்யாவின் துப்பாக்கியும் உறுமியது. ஷர்மா மற்றும் குப்தாவின் உயிர் ஆதித்யாவின் துப்பாக்கிக்கு விருந்தாகியது.

” உங்களையெல்லாம் விட்டா மறுபடியும் அதே தப்ப தான் பண்ணுவீங்க ” – முகத்தில் ரத்தக்கறையுடன் கோரமாக காட்சியளித்தான் ஆதித்யா.

பின்பு, “எரிச்சிடு ஒன்னு மிஞ்ச கூடாது” – தன் அருகில் இருக்கும் நாகாவிற்கு ஆணையிட்டான்.

அதன் பிறகு கேட்கவா வேண்டும் அவன் கண் முன்னே அணைத்து போதைபொருட்டுக்களும் நெருப்புக்கு இறையாகியது. வானை தொடும் அளவிற்கு உயரமாய் எரிந்து கொண்டிருந்த வேள்வித்தீயில். அதர்மத்தை சிதையில் சிதைக்கும் அரக்கனாய் காட்சியளித்தான் ஆதித்யா.

அந்த வெளிநாட்டவனும் ஓமும் ஆதித்யாவை மிரட்சியுடன் பார்க்க அவர்களை இறுக்கமாய் முறைத்தவன், “ஒடுங்க !! ரன் !! ஒரே ஒரு வாய்ப்பு தரேன். என் பார்வை படாத தூரத்துக்கு போய்டுங்க. உயிராவது மிஞ்சும். அடுத்ததடவ பொருளோடு சேர்த்து நீங்களும்  சாம்பலாகிவிடுவீங்க. ம்ம் அப்புறம். நான் நினைக்காம என்னை யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு உங்க குரு(சிவகுரு) பாய்ட்ட சொல்லுங்க. ” – என்று ஆதித்யா கடுமையாய் எச்சரித்தான்.

அதற்கு மேல் அவர்கள் அங்கே நிற்பார்களா என்ன? இருவரும் தங்களின் உயிரை கையில் பிடித்தபடி ஓடினர்.

சூரஜ் , குப்தா , ஷர்மா , சிவகுரு , ஆதித்யா யார் இவர்கள் இவர்களுக்குள் என்ன தொடர்பு?

குப்தா , ஷர்மா , இருவரும் கட்டப்பஞ்சாயத்து , அடி தடி , பெண் கடத்தல் , போதை மருந்து கடத்தல் , போன்ற சட்ட விரோதமான செயல்களை சிறிய அளவில் செய்து வரும் லோக்கல் கங்ஸ்டர்கள்.இவர்களை போன்ற லோக்கல் கங்ஸ்டர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தனி தனி குழுக்களாக இயங்குவர்.

சூரஜ் பணத்திற்காக கொலைகளை செய்யும் காண்ட்ராக்ட் கில்லர். சூரஜின் தலைமையில் நிறைய இளைஞர்கள் வேலைப்பார்க்கின்றனர். இவர்களை கூலிப்படை என்பார்கள். கூலிப்படை என்றால் பணத்துக்காக கொலைகளை ஒரு படை ஆகும். பொதுவாக கூலிப்படைக்கும் அவர்கள் கொலை செய்யும் எதிரிக்கும் நடுவே எந்த தனிப்பட்ட பகையும் இருக்காது. இவர்கள் பொதுவாக சட்டத்திற்குப் புறம்பான வன்முறைச் செயல்களைச் கூட்டாக  செய்பவர்கள். செய்யும் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து கூலியாகப் பணத்தை பெறுவர். இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருப்பர் .

ரெட் கம்பெனி என்பது சிவகுரு என்ற நிழல் உலக தாதாவின் நிறுவனம். சிவகுரு தான் குப்தா சர்மா போன்ற சில லோக்கல் கங்ஸ்டர்ஸ் அனைவருக்கும் தலைவன். நிழல் உலகின் டான். இவனது நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே அக்மார்க் உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பிசினஸ்கள். ஆட்கள் கடத்துவது, ஆயுதம் விற்பது, கடத்துவது, பெண்களை கடத்துவது ,போதைப்பொருள்கள் கடத்தி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது என பெரிய சாம்ராஜ்யம் தான் RED கம்பெனி. இதற்கு பல்வேறு துறை அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். கண்காணிப்பில் இருக்க வேண்டிய அதிகாரிகள் சொகுசு ஹோட்டல்களில், மது ,மாதுடன் தங்களின் வாழ்வை கழிக்கின்றனர்.

யாராலும் செய்ய முடியாது என்று ஒதுக்கப்பட்ட ‘விஷயத்தை’ கொஞ்சம் கூட உயிர் பயமின்றி சவாலாக செய்து முடிப்பது ஆதித்யாவுக்கு மிகவும் பிடிக்கும். எல்லா சம்பவங்களிலும் அடாவடித்தனம் கை கொடுக்காது என்பது அவனது கொள்கை.

 புத்தியுடன் கூடிய ஆடாவடித்தனமே  ஆதித்யாவின்  அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. பல சமயங்களில் அவனது நடவடிக்கைகள் எல்லாம் கை தேர்ந்த அரசியல்வாதிபோல இருக்கும்.

ஆதித்யா தங்கம் , வைரம் , அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தில் உள்ள பெரும் புள்ளிகளின் கருப்பு பணம் எனப்படும் ஹவாலா பணங்களை கடல் மூலம் பல்வேறு இடங்களுக்கு அரசாங்கத்திடம் சிக்காமல் கடத்துவதில் கில்லாடி.

 நாணயத்தில் இருக்கும் பூ மற்றும் தலை போல. இவர்களை போன்ற தாதாக்களுக்கு  இரட்டை முகங்கள் இருக்கும். ஒரு முகம் நிழல் உலகத்திற்கு, பொது உலகிற்கு வேறு முகம்.

ஆதித்யாவின் இருண்ட உலகத்தை பற்றி ஒரு சிலரை தவிர வேறு எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியுலகிற்கு தெரியும் அளவிற்கு இவனது இல்லீகல் வேலைகள் எதுவும் நடப்பதுமில்லை .

ஆதித்யா தான் மாஃபியாவின்  நிழலுக தாதாக்களையே அலற விடும் தாதாவாயிற்றே.இவனை போன்றவர்கள் பொது உலகில் பெரிதும் மதிக்கப்பட்டு வரும் பெரும் தொழிலதிபராக இருப்பார்கள்.

கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி , பார் கஸினோ, அம்யூஸ்மென்ட் பார்க் , ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் , ஜுவல்லரி ஷாப் , கார் தயாரிப்பு நிறுவனம், நிதி நிறுவனம் என்று பல லீகல் தொழில்களில் கொடிகட்டி பறக்கும் ஆதித்யா வெளியுலகிற்கு செல்வாக்குகள் உள்ள செல்வந்தனாயிருந்தாலும் ஒரு சில உயர் அதிகாரிகளுக்கும் , அரசியல் புள்ளிகளுக்கும் அவனது மறுப்பக்கம் நன்றாய் தெரிந்தாலும். இதுவரை அவர்களால் அவனுக்கு எதிராக ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆதித்யாவுக்கு, மும்பை தாராவியில் குடியிருக்கிற மக்கள் மற்றும் மும்பையில் வசிக்கும் குறைந்த வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் இடையே நல்ல பெயர் இருந்து வந்தது. கடத்தல் தொழிலில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை தேவைப்பட்டால் முழுவதையும் கூட மக்களுக்காக பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தான், வருகிறான். அதனால் மக்கள் ஆதித்யாவை கடவுளை போல பார்த்தனர். உதவி என்று வரும் அப்பாவிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் அவன்.

மக்களின் செல்வாக்கு ஆதித்யாவுக்கு அதிகமாக இருந்ததால் மும்பையில் உள்ள அணைத்து துறைமுகமும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு என்ன நடந்தாலும் நடக்கவிருந்தாலும் இவன் கண்ணை தப்பி நிகழ முடியாது. மக்களை பாதிக்கும் தொழில்களை  வன்மையாக எதிர்க்கும் ஆதித்யா. போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளம் வாலிபர்களது தாய்மார்களின் கண்ணீருக்காக போதை மருந்துக்கு எதிராக தீவிரமாய் கொடிபிடிக்கிறான்.

ஆதித்யா அள்ளி வீசும் பணத்திற்காக அவனுக்கு உளவு சொல்ல போலீஸ் வட்டாரங்களில் ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய அரசியல் புள்ளிகளின் அந்தரங்க ரகசியங்கள் அவனிடம் சிக்கி இருப்பதால் வேறு வழியின்றி அவர்களும் ஆதித்யாவுக்கு ஸலாம் வைக்கின்றனர்.

ஒருமுறை அவன் எச்சரிக்கும் பொழுதே திருந்திவிட்டால் உயிராவது கிடைக்கும் இல்லையேல் கொடூரமான மரணம் தான்.  எங்கே தங்களின்  அந்தரங்க அசிங்கத்தை மேடை ஏற்றிவிடுவானோ என்று பயந்து  பாதி அதிகாரிகள் மற்றும் அரசியில் பிரமுகர்கள் ஆதித்யாவின் கண் பார்வைக்கு தலையசைத்தபடி  நெருக்கமாக வலம் வர. மீதம் உள்ளவர்கள் உயிருக்கு பயந்தே அவன் முன்பு அடிபணிந்தனர்.

அதனால் போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வரும் குப்தா, சிவ குரு மற்றும் ஷர்மா போன்றவர்களுக்கு ஆதித்யா பெரும் தலைவலியாய் ஆனான் . இதன் காரணமாக ஆதித்யாவை தீர்த்துக்கட்ட நினைத்த குப்தா , சிவகுருவிடம் சென்று தஞ்சம் அடைய. காண்ட்ராக்ட் கிள்ளர் சூரஜ் மூலமாக ஆதித்யாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்த நேரத்தில் சிவ குருவின் குரூப்பில் இருந்து வெளியான பிரகாஷ் தாகூர் ஆதித்யாவுடன் இணைத்து அவனுக்கு எதிராக அவனை வீழ்த்த தீட்டப்பட்ட திட்டத்தை பற்றி கூற. நூலிழையில் ஆங்காங்கே ஏற்பட்ட காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறான் ஆதித்யா.

சாதாரண அடியாளாக இருந்த ஆதித்யா நிழல் உலகின் தாதாவாக உருவானது எப்படி ??? சிவகுரு ஆதித்யா மீது கொண்டு பழி உணர்ச்சிக்கு காரணம் என்ன ? ?

2012  மும்பை – துபாய்

மும்பையை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி என்று அழைக்கப்படும் ராணாகுரு என்கின்ற மும்பை நிழல் உலகின் தாதா  துபாய்க்கு சுற்றுலா செல்வதாக சொல்லிவிட்டு அங்கே வைத்து தனது இல்லீகல் பிசினஸ்களை செய்து வந்தார்.

 கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை வரி கட்டாமல் இந்தியாவுக்கு வாங்கியும் வந்தார். விற்றும் வந்தார். அடிக்கடி இவர் வந்து போவது  இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளின் பார்வைக்கு உறுத்த சில நேர்மையான அதிகாரிகள் ராணாவை  திட்டமிட்டு மடக்க காத்திருந்தனர்.

மிக விலையுயர்ந்த தங்கக்கட்டிகள் அடங்கிய பெட்டியை துபாயில் இருந்து இந்தியா கொண்டுவர வேண்டும். அதன் மதிப்பு அப்போதே பல கோடிகள்  கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை மடக்கப்போவதாக வந்த செய்தியை கேட்டு பதறிய ராணா துபாயில் சிக்கினால் உயிர் தப்பிப்பது கஷ்டம் என்பதை அறிந்து  அதை அங்குள்ள தனது  நண்பன் தங்கியிருந்த இடத்தில் அவனுக்கே தெரியாமல் மறைத்து வைத்து உடனடியாக தாயகம் திரும்பினார்.

இந்தியாவில் ராணாவுக்கு எதிராக கடுமையாக சோதனைகள் செய்தார்கள். நடந்த எல்லா சோதனைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. ராணாவை மடக்க நினைத்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். காலம் கடக்க கடக்க. பண நெருக்கடியால் மிகவும்  ராணா வருத்தப்பட, வேறு வழியில்லாமல் பல்வேறு நபர்களின் உதவிகளை நாடினார்.

ஆனால்  அவர்கள் சிரமம் எடுத்தும்,தங்கக்கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. அப்பொழுது தான் தொழிலில் வளர்ந்து வந்த ஆதித்யா, ராணாவை அணுகி தங்கக்கட்டிகளை தான் எடுத்துவருவதாக கூறினான்.

 அவனது தோற்றத்தையும்  அவன் கூறிய வார்த்தைகளையும் கேட்ட ராணாவுக்கு சிரிப்பு தான் வந்தது.

” பெரிய பெரிய ஜாம்பவன்களால் முடியாததை நீ முடிச்சிடுவியா ??” ஏளனமாய் எல்லி நகையாடினார்.

எழுந்த கோபத்தை தன் நெஞ்சில் தக்கவைத்துக்கொண்ட ஆதித்யா சமயம் வரும்பொழுது நஞ்சாய் அவனுக்கே திருப்பி தர காத்திருந்தான்.

“ஒரு வாய்ப்பு குடுங்க இதுல உங்களுக்கு எந்த நட்டமும் ஏற்ப்பட போவதில்லையே ” – அமைதியுடன் கேட்டான். நம்பிக்கையே இல்லாமல் ஒப்புக்கொண்டார்.

அப்பொழுது ஆதித்யா இருபத்தைந்து வயது வாலிபன். தங்கத்தை வெற்றிகரமாக கொண்டு வந்தால் அதற்கு கைமாறாக கொண்டுவரும் தங்கத்தில்  பாதி பங்கு தனக்கு வேண்டுமென்று கேட்டான்.

இவன் எங்கே கொண்டு வர போகிறான் என்கின்ற அலட்சியத்தில் ராணாவும் ஒப்புக்கொண்டு ஆதித்யாவின் டீலுக்குத் தலையாட்டினான்ர்.

தங்கத்தை தரம் மாறாமல் எடை குறையாமல் சொன்னபடி சொன்ன தேதியில் ராணாவிடம் கொண்டுவந்து சேர்த்தான் ஆதித்யா. மிரண்டு போனான் ராணா. என்ன செய்வது என்று புரியாமல் ஆதித்யாவுக்கு சலாம் அடித்து நன்றி கூறினார் ராணா.

 “எப்படி உன்னால முடிஞ்சிது ??”என்று ராணா எத்தனையோ முறை கேட்டும், ஆதித்யா அதனைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்த ரகசியம் ஆதித்யாவுக்கும் , அவனது வலது கை நாகேந்திர ப்ரதாப் என்கின்ற (நாகா)க்கும் மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளிகளும் மட்டுமே தெரிந்திருந்தது. அந்த ரகசியம் இப்பொழுது வரை ரகசியமாகவே உள்ளது.

ஆதித்யாவின் இந்த செயல்  மும்பை நிழல் உலகின் தாதாக்களின் மத்தியில் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் ஆதித்யாவின் பெயர் பெரிதாக வெளிவரவில்லை. அப்படி இருக்க தங்கம் கையில் கிடைத்ததும் ராணா தன் செல்வாக்கை வைத்து மொத்த தங்கத்தையும் தானே எடுத்துக்கொண்டு ஆதித்யாவுக்கு தண்ணி காட்ட திட்டமிட்டதோடு நிறுத்தி விடாமல். அவனையும் அவனது ஆட்களையும் கொலை செய்ய ஆட்களை அனுப்ப, அதில் ஆதித்யாவின் கூட்டாளி மாலிக் மஸ்தானின் உயிர் பறிபோனது.

 வாழ்க்கையில் சந்தித்த பலவித ஏமாற்றங்களில் ஏற்கனவே நிலைகுலைந்து இருந்த ஆதித்யாவுக்கு, ராணா செய்த துரோகம்  ஆத்திரத்தை கிளப்பியது. மஸ்தானின் உயிர் பறிபோனதில் தீராத வெறி கொண்ட ஆதித்யா  கொடிய மிருகமாக உருவெடுத்தான். அதுவரை அவனை ஒரு துரும்பாக நினைத்திருந்த ராணா அது துரும்பல்ல.உயிரை பறிக்கும் கூர்வாள் என்பதை அறிந்தார்.முதன்முதலாக ஆதித்யாவின் இன்னொரு முகத்தை ராணா உட்பட மும்பையின் நிழல் உலக தாதாக்கள் அனைவரும் கண்டு மிரண்டனர்.

ராணாவை வலுக்கட்டாயமாக அவன் வீட்டில் இருந்து தரதரவென்று மற்ற தாதாக்கள் கூடியிருக்கும் சபைக்கு இழுத்து சென்று அவர்கள் முன்பு வீசிய ஆதித்யா மற்றும் அவனது ஆட்கள். அங்கிருந்து தப்பி ஓட நினைத்த ராணாவை பிடித்து ஓங்கி எட்டி உதைத்து கீழே தள்ளினான். அதை சற்றும் எதிர்பாராத ராணா கீழே விழவும்,

” துரோகி நம்புனவங்களுக்கு துரோகம் பண்ற உன்னை மாதிரி ஆளுங்க இந்த உலகத்துல வாழவே கூடாது. உன் சாவு எல்லாருக்கும் ஒரு பாடம். ” – கர்ஜித்தான். வழிகளில் தீப்பொறிகள் தெறிக்க, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்  பொழுதே  மாறி மாறி கொடுமையான ஆயுதங்களால் ராணாவை தாக்கினான். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்தார் ராணா.

ராணாவை மிருகம் வேட்டையாடுவது போல வேட்டையாடினார்கள் ஆதித்யாவின் ஆட்க்கள். தட்டிக்கேட்கவும், தடுக்கவும் அங்கிருந்த யாரும் தயாராய் இல்லை. உடம்பெல்லாம் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தததும் மயங்கி சரிந்தார் ராணா .

” என்னை ஏமாத்தணும்னு நினைச்சா முடிவு இப்படி தான் இருக்கும்.இங்க இருக்கிற எவனை பார்த்தும் எனக்கு பயம் இல்லை. முடிஞ்சா என்னை கொல்லுங்க டா “-என்று தன் பார்வையாலே எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

ஆதித்யாவை பார்த்து நிழல் உலகமே அதிர்ந்தாலும். ராணா குருவின் மகன் சிவகுரு மற்றும் தன் தந்தையின் சாவுக்கு காரணமாயிருக்கும் ஆதித்யாவை பழிதீர்க்க வெறிகொண்டு காத்திருக்கிறான் .

தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தை கைது செய்து கர்வத்துடன் வரும் அர்ஜுனின் பாதையும். அதர்மத்தை துடிக்க துடிக்க தன் கையால் வேட்டையாடி இன்னும் போதாது என்கின்ற வெறியுடன் எதிர்திசையில் வரும் ஆதித்யாவின் பாதையும் இணையுமா ?? இணைந்தால் என்னாகும் ??

– அரிமா வருவான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அரிமா – 2.2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!