அவளை அறை நோக்கி அழைத்து வந்தவன், “இந்த ரூம்ல நீங்க ஸ்டே பண்ணிக்கலாம். அம்மாவுக்கு ஏதாவதுனா நீங்க டக்குனு பாத்துக்கலாம் அதான் அம்மாவுக்கு பக்கத்து ரூமை உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்கேன். என்னுடைய ரூம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கு. ஏதாவது தேவை என்றால் எந்த நேரம் வேணும்னாலும் நீங்க தயங்காம என்கிட்ட கேட்கலாம்”.
அவனுக்கு சம்மதமாக தலையசைத்தவள் அறைக்குள் நுழைந்ததும். முதலில் குழந்தைக்கு பசியாற்றினாள். கடந்த சில மாதங்களாக அவளுக்குள் தோன்றும் அதே எண்ணம் இப்பொழுதும் தோன்றியது.
நாம் எதற்காக இன்னும் இந்த உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..
இனி வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்?
எப்படி இதெல்லாம் நடந்தது என்று எண்ணிக்கொண்டே தன் மடியில் கிடக்கும் குழந்தையின் முகத்தை பார்த்தவளிற்கோ எந்த ஒரு உணர்வுமே தோன்றவில்லை.
முற்றிலுமாக உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சட்டென்று முத்துலட்சுமி கேட்ட கேள்வி இவளின் நினைவுக்கு வந்தது.
இனி இப்படிப்பட்ட கேள்விகளை வேறு எதிர் கொள்ள வேண்டுமே என்று எண்ணும் பொழுதே ஆத்திரமும் கோபமும் அந்த யார் என்றே தெரியாதவனின் மேல் கட்டுக்கடங்காமல் எழுந்தது.
யார் என்று தெரிந்தாலாவது அவனின் சட்டையை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
யார், என்ன என்றே தெரியாமல் யாரை சாடுவது என்று எண்ணியவளுக்கு எஞ்சி இருந்தது என்னவோ அழுகை மட்டும் தான்.
அன்றைய நாள் அப்படியே கழிய மறுநாள் ஆயத்தமாகி வெளியே வந்தவள்.
முத்துலட்சுமி ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டு அவசரமாக அவரை நோக்கி விரைந்து சென்று, “சாரி மேடம் லேட் ஆகிடுச்சா?”.
அவளை நோக்கி புன்னகைத்தவர், “என்னம்மா என்ன ஆச்சு?” என்றார் அமைதியாக.
“இல்ல மேடம் நான் இங்க வேலைக்கு வந்ததே உங்களை பாத்துக்குறதுக்காக தான். ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலருக்கு சாரி.. நாளையிலிருந்து நீங்க எப்போ எழுந்திரிப்பீங்கன்னு சொல்லுங்க நான் அதுக்கு முன்னாடி எழுந்திருச்சு உங்களுக்கு உதவி பண்றேன்”.
அவள் கூறியதை கேட்டு புன்னகைத்தவர், “இங்கு பாருமா நான் ஒன்னும் நடக்க முடியாமல் எல்லாம் இல்லை. சில நேரம் நடக்க முடியாம கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்போ மட்டும் நீ எனக்கு உதவி செஞ்சா போதும். அதுக்காக பேஷன்ட் மாதிரி என்னை பெட்லயே படுக்க போட்டு விடாதே”.
அவளின் கையை பற்றி தன் அருகில் அமர்த்தியவர், “இங்க பாருமா எனக்கு நடக்க முடியாதுன்றது உண்மை தான். ரொம்ப நேரம் நின்னாலோ நடந்தாலோ கால் வலி அதிகமாக இருக்கும்.
அதனால் சமைக்கிறதுக்கு வீட்டு வேலை பார்ப்பதற்கு எல்லாம் என் மகன் ஆள் வச்சிருக்கான் கடைசியா இப்போ என்னை பாத்துக்கவும் உன்னை வர வச்சிருக்கான்” என்று புன்னகைத்தவர்.
“வீட்டு வேலை பாக்குறவங்க காலையிலேயே வந்து எல்லா வேலையும் முடித்துவிடுவாங்க. சமைக்கிறவங்களும் அப்படி தான் காலையிலேயே வந்து காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து சமைச்சிடுவாங்க.
இடையில் டீ காபி வேணும்னா நான் தான் போடணும். இல்ல வேற ஏதாவது செய்யணும்னாலும் நான் தான் செய்யணும். ஆனா என்னால் அவ்வளவு நேரம் கூட நிக்க முடியாது. அதான் என் பையன் ஃபுல் டைமா உன்னை வேலைக்கு சேர்த்து இருக்கான்.
இதுவும் நல்லதுக்கு தான் எனக்கும் பேச்சு துணைக்கு கூட ஒருத்தர் இருந்த போல இருக்கும்ல தனியாவே இருந்து வாழ்க்கையே வெறுத்து போச்சு”.
என்ன தான் பாரிவேந்தன் தன் தாயை நல்ல படியாக பார்த்துக் கொண்டாலும் கூட அவர் அதிகமான நேரங்கள் தனிமையில் தான் கழிக்கிறார் அதன் வெளிப்பாடு தான் இந்த வெறுப்பு.
“பாரி காலேஜ் படிக்கும் போது அவங்க அப்பா எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டாரு.. அவர் போன பிறகு நானும் பாரியும் தனியாகிட்டோம். சொந்தக்காரங்க எல்லாம் வந்தாங்க எல்லாம் இந்த சொத்துக்காகவும் பணத்துக்காகவும் தான்.
சொந்தத்திலேயே அவங்க பொண்ணுங்களையும் பாரிக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க சொன்னாங்க அப்போ தான் சொத்து குடும்பத்தை விட்டு வெளியில் போகாதாம்” என்றவரின் இதழில் விரக்தியான புன்னகை தவழ்ந்தது.
“பாரியோட அப்பாவுக்கு கஷ்டப்படுறவங்களுக்கு நிறைய உதவி பண்ணனும்னு ஆசை. அதனால் தான் என் பேர்ல டிரஸ்ட் ஒன்னு ஆரம்பிச்சாரு.. எங்க ஹாஸ்பிடல்லையும் பண வசதி இல்லாதவங்களுக்கு இலவசமா டிரீட்மென்ட் கொடுக்க முடிவு செஞ்சாரு.
அதையெல்லாம் இவங்க யாருமே புரிஞ்சுக்கல.. எதுக்காக பணத்தை இப்படி வீணா செலவு பண்றீங்க நிறைய இருந்தா அதோட மதிப்பு தெரியாது அப்படி இப்படின்னு என்னெல்லாமோ பேசுனாங்க.
அப்புறம் அவர் இல்லாமல் போனதும் எப்படியாவது இந்த சொத்தை எல்லாம் வெளியில் போகவிடாம பார்த்துக்கனும்னு ரொம்ப முயற்சி செஞ்சாங்க. ஆனா என் மகன் எதுக்குமே பிடி கொடுக்கல.
என் அப்பா என்ன ஆசைப்பட்டாரோ அது தான் என்னுடைய ஆசையும் அவர் ஆசைப்படி தான் எல்லாமே நடக்கும்னு சொல்லிட்டான். அதுல சொந்தக்காரங்க எல்லாம் கோவிச்சுக்கிட்டு இனி இங்க வரவே மாட்டோம்னு போயிட்டாங்க.
அப்புறம் ராஜசேகர் அண்ணாவும் ராதா அண்ணியும் தான் எங்களுக்கு உறுதுணையா இருந்தாங்க. ராஜசேகர் அண்ணாவும் இவங்க அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என் வீட்டுக்காரர் ஹாஸ்பிடல் கட்டினதிலிருந்து அவருக்கு சப்போட்டா இருந்தவர் ராஜசேகர் அண்ணா தான்.
நிறைய உதவி பண்ணி இருக்காரு.. அவங்க அப்பா இல்லாத நேரம் இந்த டிரஸ்டையும் ஹாஸ்பிடலையும் எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் நான் தவிச்சு போயிட்டேன். பாரியும் படிக்கிற பையன் அப்புறம் அவர் தான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார்.
ஒவ்வொரு இடத்திலையும் எனக்கு துணையாய் இருந்து என்ன பண்ணனும்னு எல்லாமே அவர் தான் பாத்துகிட்டார். ரொம்ப நல்ல மனுஷன்” என்று சற்றும் ஒளிவு மறைவு இன்றி அனைத்து விஷயத்தையும் அவளிடம் வெளிப்படையாக பேசினார்.
அறை வாயிலில் நின்றிருந்த பாரி வேந்தனுக்கும் தன் தாய் அவளிடம் பேசிக் கொண்டிருப்பது நன்கு கேட்டது. இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் முழு உரிமை அவளுக்கு தானே இருக்கிறது என்று எண்ணியவனும் அவரை தடுக்கவில்லை.
ஓரளவிற்கு இவர்களின் குடும்ப சூழல் இனியாளுக்கு பிடிபட்டுவிட்டது. அவர்களின் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் இப்பொழுது பல மடங்காக அதிகரித்தது. எத்தனை நல்ல மனிதர்கள்..
அதை தொடர்ந்து பாரிவேந்தனும் அவ்விடம் வந்து சேர. அவர்கள் இருவருக்கும் இனியாள் காலை உணவை பரிமாறினாள்.
முத்துலட்சுமி அவளின் கையை பற்றி தன் அருகில் அமர செய்தவர், “இங்க பாருமா இப்போ தான் உனக்கு குழந்தை பிறந்து இருக்கு. வேலை செய்யுறேன்னு உடம்பை போட்டு அலட்டிக்காத கொஞ்சம் ரெஸ்ட் எடு வேலையெல்லாம் மத்தவங்க பாத்துப்பாங்க”.
அவரின் வார்த்தையில் பதறியவள், “ஐயோ மேடம்! நான் இங்க வந்ததே வேலை பார்க்க தான் ரெஸ்ட் எடுக்குறதுக்காக இல்ல. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள் அவசர குரலில்.
எங்கே இவர் கூறுவதை கேட்டு பாரிவேந்தன் வேலையை விட்டு தன்னை நிறுத்தி விடுவானோ என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.
“அம்மா சொல்றதும் சரி தான் இனியாள். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க நீங்க இங்க தெரிஞ்சவங்க யாரும் இல்லைனு சொன்னதால் தான் நான் உடனே உங்களை இங்க கூப்பிட்டு வந்தேன். அதுக்காக உடனே நீங்க வேலை பார்க்க ஆரம்பிக்கணும்னு அவசியம் இல்ல. கொஞ்சம் டேஸ் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் நீங்க வேலையை பாருங்க” என்று பாரி வேந்தன் பரிவாக கூறவும்.
“இல்ல.. பரவாயில்ல சார் ஐ அம் ஓகே”.
“உன்னை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே மா என்ன படிச்சிருக்க?” என்ற தன் தாயின் கேள்வி தன் காதில் விழுந்தாலும் விழாதது போல் உணவில் கவனத்தை செலுத்துவது போல் பாவனை செய்து கொண்டு அமர்ந்திருந்தான் பாரிவேந்தன்.
தன்னை பற்றிய கேள்விகளை எழுப்பும் பொழுது தான் இனியாளுக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அனைத்திற்கும் சரியான விடை இவளிடம் இல்லையே..
ஏற்கனவே பல அவமானங்களை சந்தித்தவளுக்கு இவர்களும் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. அப்படி நினைத்து விட்டால் இருக்க இடமும் இல்லாமல் போய்விடுமே..
அதற்காக பொய்யுரைக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. இத்தனை நல்லவர்களிடம் எப்படி மனம் வந்து பொய் உரைக்க முடியும்.
“நான் படிப்பை முடிக்கல மேடம் டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன்” என்றவளின் பதிலில் அவர் பதில் கேள்வி எழுப்புவதற்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே வேகமாக அறை நோக்கி சென்று விட்டாள்.
அவனின் தாயும் பெரிதாக கண்டுகொள்ளாமல் உணவில் கவனத்தை செலுத்த. அவனுக்கு தான் மனம் அரித்து கொண்டே இருந்தது. அவளைப் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மருத்துவமனை நோக்கி புறப்பட்டான்.
தன் அறைக்குள் நுழைந்தவனிடம், “டாக்டர் உங்க கிட்ட இந்த ரிப்போர்ட்டை கொடுக்க சொல்லி டாக்டர் லீலாவதி கொடுத்தாங்க”.
அதற்குள் என்ன இருக்கிறது என்பது அவனுக்கு தெரியும். அவன் தானே லீலாவதியிடம் அன்று இந்த ரிப்போர்ட் வேண்டும் என்று கூறினான்.
ரம்யா நீட்டிய ரிப்போர்ட்டை வாங்கியவனின் கையில் மெல்லிய நடுக்கம் இதயம் வேகமாக படபடவென அடித்துக் கொண்டது.
தன் நடங்கும் விரல்களால் அந்த காகிதத்தை பிரித்து பார்த்தவனின் கண்களும் மெல்லிதாக கலங்கிவிட்டது.
ஆம், இவன் தான் லீலாவதியிடம் டிஎன்ஏ ரிப்போர்ட் எடுக்க வேண்டி மாதிரிகளை கொடுத்திருந்தான். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் கூறியிருந்ததால் அவரும் யாரிடமும் கூறவில்லை.
இப்பொழுது அவனின் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது.
அவன் எதிர்பார்த்தது போலவே இனியாளின் குழந்தைக்கு தந்தை இவன் தான்!
அக்குழந்தை இவனின் உதிரத்தால் உருவான குழந்தை தான் என்பதற்கான சான்று தான் இந்த காகிதம்.
அவனுக்குள் இப்பொழுது தான் நிம்மதி பரவியது.
இதழில் திருப்தியான புன்னகை.. ஆனால் அதில் ஒரு வலியும் நிறைந்திருந்தது.
அந்த காகிதத்தை தன் பாக்கெட்டினுள் பத்திரப்படுத்தி வைத்தவன் அதற்கு மேல் அங்கே அமர முடியாமல் உடனே ரம்யாவை அழைத்தான்.
“இன்னைக்கு இருக்க அப்பாயிண்மெண்ட் எல்லாத்தையும் வேற டாக்டருக்கு மாத்திடுங்க. எனி எமர்ஜென்சினா மட்டும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க” என்றவன் நொடியும் தாமதிக்காது வீடு நோக்கி புறப்பட்டான்.
இப்பொழுதே அவளை பார்த்தாக வேண்டும் என்ற ஊந்துதல் அவனுக்குள்.
பார்த்து என்ன பேசப்போகிறோம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவளை பார்க்க வேண்டும்.
Super eppo unmai Theriyum
Inum konjam ponathum therinjidum