அரிமா – 3

4.4
(15)

அன்று…

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில்,
வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார்.

இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய நல்ல உணவு கிடைக்கும்.

மற்ற நேரங்களில் பசியை போக்குவதற்கான சொற்ப உணவு தான் வழங்கப்படும். அதுவும் சில நேரங்களில் இரண்டு வேலை உணவு தான் கிடைக்கும் என்பதால். அவர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் இனிப்பில் ஈக்கள் ஒட்டுவது போல் அவரை மொய்த்தனர். ஒருவரை ஒருவர் முண்டியத்துக் கொண்டு அவர் தரும் உணவுப் பொட்டலங்களை மகிழ்ச்சியுடன் வாங்கியவர்கள்,உணவுப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு ஓடினர்.

அப்பொழுது அங்கு வந்த அச்சிறுவன் மட்டும் குழந்தைகளோடு முண்டியடிக்காமல் காத்திருந்து, எல்லோரும் சென்ற பின்னர் கடைசியாக இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துச் சென்றான். அவனின் பொறுமை அந்த தொழிலதிபருக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

உடனே தொழிலதிபர் அச்சிறுவனிடம் இன்னொரு உணவு பொட்டலத்தைக் கொடுக்க ,

” நான் ஏற்கனவே வாங்கிட்டேன் ” என்றான் தன் கையிலிருந்த உணவு பொட்டலத்தைக் காட்டியபடி.

” தெரியும் பா உனக்குப் பசியும் ஆசையும் இருந்தும் மத்த குழந்தைகளைப் போல அவசரப்படாம பொறுமையா வாங்கின. அதனால இந்த சாப்பாடு பார்சல் உன் பொறுமைக்கு நான் தர்ற பரிசு இதை நீயே வச்சிக்கோ ” என்றார் .

ஆனால் அச்சிறுவனோ அதை உறுதியாக மறுத்துவிட. அவனது அந்த செய்கை அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

அவரோ அவனிடம், “இது வேண்டாம்ன்னா சரி, வேற எதுவும் உனக்கு வேணுமா. உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என்ன வேணுமோ கேளுப்பா ” என்றார் உற்சாகமாக.

தொழிலதிபர் கூறியதைக் கேட்ட அந்த சிறுவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவன் எதுவும் கேட்காமல் தயங்கி நிற்பதைப் பார்த்த. வேதாச்சலம் ,” கேளு பா” என்றார்.

” சார் இன்னைக்கு நீங்கத் தந்த சாப்பாட்டை வாரம் வாரம் இங்க இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் தர முடியுமா. ” என்று தயக்கத்துடன் கேட்டான் .

அவன் தனக்காக மட்டும் கேட்காமல் மற்ற குழந்தைகளுக்காகவும் சேர்த்து கேட்டது, அவருக்கு மிகுந்த வியப்பை கொடுத்தது. அச்சிறுவயதில் அவனுக்குள் இருந்த தன்னலமற்ற குணம் அவரை வெகுவாக கவர்ந்தது.

அவன் கேட்டதை போலவே அங்குள்ள அணைத்து குழந்தைகளுக்கும் வாரம் ஒருமுறை அல்ல. தினமும் அதுவும் மூன்று வேளை உணவு கொடுப்பதாக வாக்களிக்க. இதை கேள்வியுற்ற மேரி அவனை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.

மும்பையில் இன்று…

காரின் கதவில் தலை சாய்த்தபடி நின்றிருந்த ஆதித்யாவின் முகமெங்கும் சிந்தனையின் ரேகைகள் படர்ந்திருந்தன. முகம் அக்னிக் குண்டமாய் மாறியிருந்தது.

இந்நேரம் வெடித்து சிதறிய விமானத்தோடு, தன் தேகம் சிதறச் செத்திருக்க வேண்டியவன். எப்படியோ சமாளித்து காயங்களுடன் பிழைத்துவிட்டான்.

‘ இப்படி ஒரு தாக்குதலை என் மீது நடந்திருக்கிறார்கள் என்றால் இதற்கு என்ன அர்த்தம் ??

என் மீது இருந்த பயம் போய்விட்டதா என்ன??

நான் தோற்று விட்டேனா??

இல்லை நெவர் நான் நினைக்காம மரணம் கூட என்னை நெருங்க முடியாதபோது தோல்வி மட்டும் எப்படி ??’ ஏற்க மறுத்தான் ஆதித்யா.

‘ அந்த சிவகுருக்கு தான் யாரென்று காட்டவேண்டும்.

இங்கே தயவு தாட்சணியத்துக்கு இடமே கிடையாது.

பெற்றதை விட பலமடங்கு அதிகமாய் கொடுக்க வேண்டும். அவர்கள் எழ எழ அடிக்க வேண்டும் ‘

‘ விடக் கூடாது. அடுத்த அடி என்னுடையதாக தான் இருக்க வேண்டும். ஷிவா ரெடியா இரு ‘ காரின் கண்ணாடியில் கையை ஓங்கி அறைந்தான் ஆதித்யா.

அவன் உடல் விறைத்து இறுகியது. காயப்பட்ட சிங்கத்தின் மூச்சு அதன் கர்ஜனையை விடப் பயங்கரமா இருக்கும் என்பதைப் போல் தான் அடிபட்ட சிங்கமாய் கர்ஜிக்கும் ஆதித்யாவின் மூச்சுக் காற்றில் கூட அனல் தெறித்தது.

அப்போழுது ஆதித்யாவின் அருகே வந்த நாகா,

” ஆதித்யா நாம உடனே ஏதாவது செய்யணும். இல்லைன்னா அந்த ஷிவா முந்திக்குவான்” – என்றான்.

” சொல்றேன் ” – நாகாவின் முகத்தை வெறித்துப் பார்த்தபடி கூறினான் ஆதித்யா.

” ஆதி இப்படி வெளிய நிற்கிறது சேஃப் இல்லை. வீட்டுக்குப் போகலாம். ” – நாகா கூறினான் .

” ம்ம்ம் போகலாம். அந்த பொண்ணு கண்ணு முழிச்சிட்டாளா ??” என்ற ஆதித்யாவிடம்,

” இன்னும் இல்லை ஆதி ” – என்று நாகா கூறிய மறுநிமிடம் ஆதித்யா காரின் பின் சீட்டின் கதவைத் திறந்தான்.

சீட்டில் உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள் மதுமதி. குளிரால் உடலில் சிறு சிறு அதிர்வு ஏற்பட்டபோதும் தெளியாமல் அவள் படுத்திருக்க,.காரில் இருந்த தனது கருப்பு நிற கோட்டை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டான் ஆதித்யா.

உடலைத் துளைக்கும் குளிர் காற்று! காற்றோடு இணைந்து பட்டும் படாமல் வரும் மழைச் சாரல், இவை அனைத்தையும் தாண்டி அவனை ஈர்த்தது, நிலவொளியில் எந்த வித ஒப்பனையும் இன்றி அழகாய் மின்னும் அவளது முகம். ஆம் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு மின்னல் ஒளியில் அவன் கண்ட அதே முகம் தான் ! இப்பொழுது நிலாவொளியிலும் அவன் பார்வையை தன் பக்கம் இழுத்தது !

பக்கவாட்டில் கிடந்த விரித்துவிடப்பட்ட அடர்ந்த கருங்கூந்தல்!
மஞ்சள் நிறத்தில் பளபளக்கும் வட்ட முகம் !
வளர்பிறையை வெட்டி ஒட்டியது போன்ற முன் நுதல் !
அடர்த்தியாகத் தொடங்கி கூர்மையுடன் முடியும் வாள் போன்ற புருவங்கள் !
மூடியிருந்த கருவண்டு விழிகள்! அதில் இருந்த அடர்ந்த இமைகள் !
இலேசாய் உப்பிய வளவளப்பான வெட்டிவைத்த ஆப்பிள் கன்னங்கள் ! கட்டைவிரல் நீளமுள்ள கூர்மையான நாசி !
விரிந்த கூந்தல் காற்றில் அசைந்து வந்து உரிமையுடன் உறவாடும் செவிகள் !
ஆரஞ்சு சுளைகளை அளவாய் இடைவெளிவிட்டு அடுக்கியது போன்ற செக்க சிவந்த அதரங்கள் ! அழகி ! என்று அவன் உள்ளம் அடித்து சொல்ல, அவன் பார்வை அவள் முகத்திலிருந்து அகலவில்லை.

அவனது பாறை மனதில் புதிதாய் ஏதேதோ எண்ணங்கள் துளிர் விடச் சற்றென்று தன்னிலைக்கு மீண்டவன். திசைமாறிய தன் மனதைக் கட்டுக்குள் கொண்டுவந்தான் .

பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான். ஆனால் ஆதித்யாவுக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் இது சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒன்று என்றது அவன் மனம்.

” இதெல்லாம் வேண்டாம். உன் பாதையை யாருக்காகவும் மாத்திக்காத ஆதி ” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும். அவன் விழிகள் அவனுக்குத் துரோகம் தான் செய்தது. அவனையும் மீறி அவன் விழிகள் பார்வையாலே அவளது முகத்தை வருட. அவனுக்கே அவன் புரியாத புதிரானான் !

பலவித எண்ணங்கள் அவன் மனதை வாட்டப் புதிதாய் முளைத்த உணர்வுகளால் லேசாய் திணறியவன் ,

” ஊ ஃப் ” நீண்ட பெருமூச்சை விட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க
” ரிங் ..ரிங்.ரிங் ” கார் சீட்டுக்குக் கீழே, கிடந்த மதுமதியின் அலைபேசியின் ஒலி அவன் சிந்தனையைச் சிதறடிக்க. சிறு தயக்கத்துடன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் .

நேர்த்தியாக வெட்டிவிடப்பட்ட கேசம் ! அளவான மீசையை ! ரோமங்கள் இல்லாமல் பளபளக்கும் முகம் ! முகம் முழுவதும் கன்னக்குழி சிந்தும் புன்னகையுடன் ஆண் அழகனாய் கம்பீர தோற்றம் அளிக்கும் வாலிபனின் முகம் ‘ அர்ஜுன் அத்தான் ‘ என்ற பெயருடன் அலைபேசியின் திரையில் மிளிர, அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் முகமோ நீரற்ற பூவை போலச் சுருங்கியது.

‘அத்தான்’ எத்தனை உரிமையான வார்த்தை எங்கோ ஒரு மூலையில் அடிபட்ட அவன் மனம் எதற்கோ ஏங்கியது !

அர்ஜுனின் தோற்றம் ஆதித்யாவின் மனதில் தேவையற்ற எண்ணங்களை விதைத்தூவிட, இப்போதிருக்கும் தன் தோற்றத்தை அவனுடன் ஒப்பிட்டுப் பார்த்தான் ஆதித்யா.

தன் தோற்றம் எதுவும் தெளிவாய் தெரியா அளவிற்கு முகம் முழுவதும் ரோமங்கள்!
நெற்றியை மறைத்த முன்புற கேசத்தை காணும் பொழுது அவனுக்கே கடுப்பாக இருக்க,
தன் அதரத்தை மறைத்த தனது முறுக்கு மீசையைக் கண்டவனுக்கு ஆத்திரமாய் வந்தது.!

இறுதியில் தாடியை தடவிய ஆதித்யாவுக்கு, ‘ ஐயோ ‘ என்றானது. கடைசியாக எப்பொழுது சிரித்தோம் என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவனுக்கு. அக்கேள்வி பெரிய சவாலாக தான் இருந்தது.

சட்டென்று பழைய ஆதித்யா அவன் கண்முன் தோன்றி மறைந்தான்.

பழைய நினைவுகள் அவன் உள்ளத்தில் ஒட்டிக்கொள்ள, தனது சிறு வயதில் இருந்து ஓடியவன் இன்று வரை நிற்காமல் ஓடுகிறான். தான் நினைத்த அனைத்தையும் அடைந்த பின்பும் அவன் மனதில் நிம்மதியில்லை.

மனமுழுவதும் கோபம் மட்டுமே நிறைந்திருக்க, காரணம் தேடியவனுக்கு தீராதா தேடல்கள் நீண்டுகொண்டே போனது. ஆனால் காரணம் மட்டும் கிடைக்க வில்லை.

சில நிமிடங்கள் தன் பழைய சிந்தனையில் மூழ்கியவன். கண்களை இறுக்க மூடி திறந்தபடி தன் நிலைக்கு வந்தான். அப்பொழுது கண்களில் அவளது அலைப்பேசியின் வால்பேப்பரில் குழந்தைகளுக்கு நடுவே குழந்தையாக இருக்கும் அவளைக் கண்டதும் நீண்ட காலம் புன்னகைக்க மறந்தவன் இப்போது லேசாய் புன்னகைத்தான். ஆனால் அது அவனுக்கு பயந்து அவனது அடர்ந்த மீசைக்குள் ஒளிந்து கொண்டது .

அப்பொழுது திடீரென்று மதுமதியிடம் இருந்து அசைவு வர, சுதாரித்துக்கொண்டவன் அவளது அலைபேசியை அவள் அருகிலே வைத்துவிட, கெட்ட கனவிலிருந்து மீண்டவள் போல மயக்கம் தெளிந்து பதற்றத்துடன் விழித்தாள்.

அப்பொழுது தன் எதிரே ஆதித்யாவைக் கண்டதும் அவனை கலக்கத்துடன் பார்த்தவள், சிறிதும் யோசிக்காமல் ஆதித்யாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பிக்க, அவனும் அவளை விலக்க வில்லை.

” சார் என்னை காப்பாத்துங்க, எனக்கு பயமா இருக்கு. என்னை விட்டு போய்டாதீங்க ப்ளீஸ் ” பயத்தில் வாய் குழறத் திணறலுடன் கூறினாள் .

தன் புஜங்களை இறுக்க பற்றிக்கொண்டு உடல் நடுங்க நெஞ்சில் சாய்ந்து அழுதவளைக் கண்டதும் அணைத்துக் கொள்ள உயர்ந்த தன் கரங்களை மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தியவன் பட்டும் படாமல் அவளது தேசத்தை வருடினான்.

மதுமதி பார்க்கும் பொழுது ஆதித்யா முகத்தை மூடி இருந்ததால் அவள் அவள் அவனது கண்களை மட்டுமே பார்த்திருக்க, ஆக இப்பொழுது யாரால் தனக்கு ஆபத்து? மற்றும் யாரிடமிருந்து தப்பிக்க வேண்டும் நினைக்கிறாளோ அவனது மார்புக்கூட்டுக்குள்ளே சின்னஞ்சிறு பறவை போல முட்டி மோதியபடி, உதவி கேட்டுக் கொண்டிருக்க, மதுவை பார்த்து ஆதித்யாவுக்கு லேசாக சிரிப்பு வந்தாலும். அவளது பயம் ஏனோ அவனை உறுத்தியது .

” ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நீங்க என்கிட்ட பத்திரமா தான் இருக்கீங்க. நான் இருக்கேன் ” – பொறுமையுடன் கூறி ஆதரவாக அவள் பின்னந்தலையைத் தடவிக் கொடுத்தான்.

அப்பொழுது அங்கு வந்த தன் பாதுகாவலர்களை தன் கண்களாலே அங்கிருந்து போகுமாறு ஆதித்யா கட்டளையிட, நாகாவை தவிர அனைவரும் கார்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகிச் சென்று, தூரத்திலிருந்து அவர்களை கண்காணித்தனர்.

ஏற்கனவே பயத்தில் இருக்கும் இவள், ஆயுதம் ஏந்திய தன் ஆட்களை கண்டதும் மேலும் பதற்றமடையக் கூடாது என்பதற்காக அவர்களை விலகச் சொன்னான் ஆதித்யா.
ஆனால் நாகாவின் பார்வையில் இருந்தே அவனுக்கு ஆதித்யா அப்படி செய்ததில் விருப்பமில்லை என்பது தெளிவாய் தெரிய, அதை புரிந்து கொண்ட ஆதித்யாவோ நாகாவை ஒரு கணம் பார்த்துவிட்டு மதுமதி மீது தன் கவனத்தை செலுத்தினான்.

நொடிகள் கடந்த பிறகே தான் பயத்தில் ஒரு அந்நிய ஆடவனை அணைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த மதுமதி, உடனே அவனிடம் இருந்து விலகியவள், தயக்கத்துடன் ஆதித்யாவை பார்த்து,

” சாரி பயத்துல நான் உங்கள தெரியாம ஹக் பண்ணிட்டேன்” கருவிழிகள் உருள கூறினாள்.

“பரவாயில்லை” என்ற ஆதித்யாவிடம்,
நாகாவை சுற்றிக்காட்டி,
” இவங்க யாரு ” – என்று வினவினாள் மதுமதி.

” பயப்பட வேண்டாம் என் ஃப்ரண்ட் தான் ” சற்று முன் அத்தனை பேரையும் துடிக்க துடிக்க வேட்டையாடிய ஆதித்யாவா இது, என்று நாகாவே வியக்கும் அளவிற்கு மிகவும் தன்மையாக கூறினான்.

” சரி இப்ப ஏன் இவ்வளவு பயப்படுறீங்க? காப்பாத்த சொல்லி கேட்டீங்க என்ன ஆச்சு? யார்கிட்ட இருந்து உங்கள காப்பாத்தணும்” எதுவுமே தெரியாதது போல ஆதித்யா கேட்டான்.

ஆதித்யா அவ்வாறு கேட்டதும், அருகில் இருக்கும் நாகாவை கண்காட்டிவிட்டு, ஆதித்யாவை நோக்கி மெல்ல குனிந்தவள், ” நான் ஒன்னு சொல்லுவேன் அதை பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாதீங்க” என்று மருண்ட பார்வையுடன் கேட்டாள்.

பெண்ணவளின் அருகாமையிலும், விழி அழகிலும் தன்னை மறந்த ஆதித்யாவோ சரி என்பதாய் தலையசைத்த மறுகணம், சட்டென்று எம்பி அவன் காதில், தனது துடிக்கும் ஈர இதழ்கள் உரசுவதை கூட உணராது,

“நான் ஒரு கொலைய பார்த்தேன்” என்று படபடப்புடன் கூறிவிட்டு, தன்னிடம் இருக்கும் அதே பதற்றத்தை எதிர்பார்த்து அவன் முகம் பார்த்தாள்.

பட்டும் படாமலும் அவனது செவியை தீண்டிய பெண்ணவளின் இதழது ஈரத்தின் குளுமை ஆணவனுக்குள் வேகமாக பரவி அவனை தடுமாறச் செய்ய, அவனோ கால்கள் வேரூன்ற சிலையென நின்றுவிட்டான்.

அவனது தவிப்பை பயம் என்று கருதிக்கொண்ட பெண்ணவளோ, “பாருங்க பயத்துல உங்க முகம் கூட ஒரு மாதிரி ஆயிடுச்சு, ரொம்ப பயமா இருக்குல?” விழிகள் சுருக்கி அவள் கேட்ட அழகில் இங்கே ஆறடி ஆண் மகனின் இரும்பு இதயம் மெல்ல மெல்ல உருக துவங்க, இமைக்க மறந்து பெண்ணவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவோ மதுமதி ,

“சார் உங்கள தான் ” என்று இரண்டு முறை கூறிய பின் சுயம் பெற்றவன்,

” என்ன கேட்ட? ” என்றான்.

அவளோ, ” கொலைன்னு சொன்னதும் உங்களுக்கும் பயமா இருக்குலன்னு கேட்டேன் ” என்க, வேகமாக துடித்துக் கொண்டிருந்த தன் இதயத்தை தன் வல கரத்தால் அழுத்தி பிடித்துக் கொண்டவன் அவள் விழிகளை அழுத்தமாக பார்த்தபடி,

” ஆமா பயமா தான் இருக்கு” மறைமுகமாக அவளது அருகாமையில் தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூகம்பத்தை பற்றி கூறினான். ஆனால் அது தெரியாத பெண்ணவளோ,

” பயப்படாதீங்க அதான் உங்க கூட நான் இருக்கேனே அப்புறம் உங்க ஃப்ரண்டும் இருக்கிறார்ல, உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டோம்” என்க, அவள் சொன்ன தோரணையில் வந்த சிரிப்பை தன் கீழ் அதரத்தை மடித்து தனது பற்களால் அழுத்தி சிரிப்பை அடக்கிக்கொண்டான் ஆதித்யா.

“சார் வாங்க நாம இங்க இருக்கிறது நல்லது இல்லை. அவங்க எல்லாம் ரொம்ப பயங்கரமானவங்க நாம இங்க இருந்து உடனே போகணும். அவங்களால உங்களுக்கும் ஏதாவது ஆபத்து வரலாம் ” பயத்தில் தன் விழிகளை அகல விரித்து பேச ஆதித்யாவால் தன் பார்வையை அவளை விட்டு விலக்கவே முடியவில்லை.

“ஆஹாங் அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா ” அவளைப் பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே பொய்யான வியப்புடன் கேட்ட ஆதித்யாவின் பார்வை மதுமதியின் வதனத்தின் மீது கூர்மையாக படிந்திருந்தது!

” உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன் அவங்க மோசமானவங்க. இப்போ கூட என் கையெல்லாம் நடுங்குது. ப்ளீஸ் இங்க இருந்து போகலாம் ” உண்மையான பயத்துடன் கூறினாள்.

“என்னை காப்பாத்துவேன்னு சொன்னீங்க இப்ப இப்படி பயப்படுறீங்க ” என்று ஆதித்யா கேலியாக கேட்கவும்,

” அதெல்லாம் ஒரு ஃப்லோல சொல்றது தான் பாஸ் வண்டியெடுங்க, துப்பாக்கி எல்லாம் வேற வச்சிருந்தான். நான் வேற அவன் கொலை பண்றதை பாத்துட்டேன் என்னை தேடி வந்துருவானோன்னு ரொம்ப பயமா இருக்கு, நான் சொல்ற இடத்துல என்ன பத்திரமா விட்டா போதும் சார்”

“இங்க பாருங்க பயப்பட வேண்டாம், அவன் உங்களை எதுவும் பண்ண மாட்டான், உங்களை ஏதும் பண்ணனும் நினைச்சிருந்தா இப்ப நீங்க உயிரோடவே இருந்துக்க மாட்டீங்க, நீங்க கொலைய பார்த்த அந்த நிமிஷமே உங்கள கொன்னு போட்டுட்டு போயிருப்பான் . எல்லாத்துக்கும் மேல நீங்க தான் அவன் முகத்தை பாக்கலல சோ கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. ” – அவளின் பயத்தை போக்குவதற்காக அவளது மிரண்ட விழிகளை பார்த்தபடி பொறுமையாக கூறினான் ஆதித்யா.

” ஆமா நான் அவன் முகத்தை பார்க்கலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று மதுமதி கேட்கவும்,

‘பரவால்ல அறிவு வேலை செய்து ‘ என்று தனக்குள் எண்ணிக் கொண்ட ஆதியோ,

” எப்படி தெரியும்னா நீங்க தான் சொன்னீங்க, பயத்தோடு சொன்னீங்கல அதான் பதற்றத்ல மறந்திருப்பீங்க ” என்றவன் நாகாவுக்கு கண்ணை காட்டிவிட்டு காரில் வந்து ஏறிக்கொண்டான்.

ஆதித்யாவின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக்கொண்டிருந்த நாகாவோ ஆதித்யாவை ஆச்சரியமாய் பார்க்க, ஆதித்யாவின் இந்த பொறுமை நாகாவிற்கு வித்தியாசமாய் இருக்க, ஆதித்யாவும் தனக்குள் நடக்கும் மாற்றங்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

கார் ஆதித்யாவின் கைகளில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, ஆதித்யா சொன்ன பிறகு ஓரளவு தன் பயத்தை விடுத்து ஆசுவாசமடைந்திருந்த மதுமதி, ஆதித்யாவை பற்றி ஆதித்யாவிடமே கூறுகிறோம் என்பதை அறியாமல் நடந்த அனைத்தையும்
சொல்லிக்கொண்டே வர, அவனும் வந்த புன்னகையை அடர்ந்த தன் மீசைக்குள் அடக்கியபடி அவளையும் அவளது பேச்சையும் ரசித்துக் கொண்டே வந்தவன் , ” வந்தாச்சு ” பெண்ணவளின் விழிகளை பார்த்து கூறினான்.

” யாரு அவங்களா ” – மதுமதி அதிர்ச்சியுடன் கேட்டாள் .

” நோ நீங்க சொன்ன இடம் வந்தாச்சு” – புன்னகையுடன் கூறினான் .

” ஓ ” – நிம்மதி அடைந்த மது,

” ரொம்ப தேங்க்ஸ் சார் ” என்றவள் சீட் பெல்டை நீக்க முயற்சி செய்து கொண்டிருக்க, அப்பொழுது தனக்கு மிக அருகே,

” யு ஆர் வெல்கம்.” என்று கேட்ட ஆதித்யாவின் குரலில் நிமிர்ந்த மதுமதி, தனக்கு மிக அருகே சீட் பெல்டை நீக்க உதவி செய்து கொண்டிருந்த ஆதித்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ பெண்ணவளின் விழிகளை ஆழமாக ஊடுருவி,

” நீங்க இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க. இந்த மாதிரி ராத்திரி நேரத்துல முன்ன பின்னத் தெரியாத ஆள நம்பி கார்ல வர்றது ரொம்ப ஆபத்தானது. எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க ” – என்றான்.

” உங்களைப் பார்த்தா எனக்கு தப்பானவர் மாதிரி தோணலை. நீங்க என்னை ஹெல்ப் பண்ணிருக்கீங்க. எப்படி எனக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா ஆகுவீங்க. இதுவரை எப்படியோ இனிமே நீங்க எனக்கு யாரோ கிடையாது ” – என்று சினேகமாக புன்னகைத்தாள்.

அதைக் கேட்ட ஆதித்யாவோ, “ஆஹான் அப்போ நான் உனக்கு யார் மதுமதி ” மதுமதி என்ற இறுதி வார்த்தையில் மதி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து வினவினான்.

ஆதித்யாவின் இந்த நெருக்கமும், தனது வதனத்தை தீண்டிய அவனது சூடான மூச்சு காற்றும் மதுமதியை பதறச் செய்திருக்க, அது போதாது என்று அப்பொழுது பார்த்து அவள் புத்தியில் ஒரு விடயம் உரைக்கவும்,

” என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் நான் தான் சொல்லவே இல்லையே” பதற்றத்துடன் வினவினாள்.

உடனே இன்னும் அவளை நெருங்கி வந்த ஆதித்யாவோ, ” இல்லையே சொன்னிங்களே மதுமதின்னு” இப்பொழுதும் அந்த மதி என்கிற வார்த்தையை மட்டும் அழுத்தி அவளது காதில் சொல்லிவிட்டு நிமிர்ந்து அவளது விழிகளை பார்க்க, மதி என்று அவன் அழுத்தி சொன்ன விதத்திலே பெண்ணவளுக்குள் புதுவித நடுக்கம் பிறக்க, அவளும் அவனது விழிகளை தான் பார்த்தாள்.

இருவரது விழிகளும் கலந்தது!

அரை நொடிப் பொழுது என்றாலும் வேங்கையவனின் கனல் விழிகள் அவளை அள்ளி தனக்குள் சுருட்டியிருக்க, மதுமதியும் பதற்றத்தை உள்வாங்கியவனோ மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாது, கண்களால் சீட் பெல்ட் நீக்கப்பட்டதை காட்டியவன் கதவையும் திறந்து விட, ஒருவித பதற்றத்துடனே இறங்கியவளோ பின்பு, பதற்றத்தை விடுத்து நிதானமாக ஆதித்யாவை பார்த்து,

” இவ்வளவு நேரம் பேசிட்டே இருந்திருக்கேன் ஆனா உங்க பேர கூட கேட்கல பாருங்க, உங்க பெயர் என்ன ??” புன்னகையுடன் வினவினாள்.

” மிஸ் மதி நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு முன்ன பின்ன தெரியாதவர்களுக்கு என் பேரை சொல்ற பழக்கம் கிடையாது ” – என்றவன், அடுத்த கணம் புயலென அங்கிருந்து சென்றுவிட,

“இவ்வளவு நேரம் என்கிட்ட நல்லா பேசிட்டு பெயரை சொல்கிறதுக்கென்ன. மாட்டேன்னு சொல்லிட்டு போறான் ” என்ற மதிக்கோ ஆதித்யா புரியாத புதிராய் ஆனான்.

அரிமா வருவான்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “அரிமா – 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!