சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 34
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
தன் சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்த சுந்தர், “ஓ..வாங்கம்மா.. வாங்கப்பா.. வர்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததா..? இன்னும் மழை விட்டப்பாடா இல்லையே”
அவர்கள் உள்ளே வந்து அமரவும் “சுந்தர்.. எங்க கஷ்டம் இருக்கட்டும் பா.. நாங்க ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ள இந்த வீட்டு நிலைமை இப்படி தலைகீழாய் மாறி இருக்கும்னு சத்தியமா நாங்க எதிர்பார்க்கவே இல்ல பா.. உனக்கும் சுந்தரிக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுன்னு கூட எங்களுக்கு தெரியல.. ரெண்டு பேரும் பாட்டி மேல உயிரையே வெச்சிருந்தீங்க.. அவங்க இப்படி திடீர்னு நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டாங்களேப்பா”
நடராஜன் வருத்தத்துடன் சொல்ல “என்ன செய்யறதுப்பா? இப்படி எல்லாம் நடக்கணும்னு விதி இருந்திருக்கு..”
பாட்டியின் நினைவில் அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கன்னங்களில் விழுந்தது.. அதை துடைத்துக் கொண்டவன் அவர்களிடமிருந்து அவர்களுடைய பைகளை வாங்கி உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்தான்..
அதற்குள் மேகலா “ஆமா.. சுந்தரி எங்கப்பா..? அவளுக்குதான் இன்னும் கஷ்டமா இருக்கும்.. பாவம்.. நாள் ஃபுல்லா பாட்டி கூடவே இருந்து அவங்களுக்கு எல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா.. திடீர்னு பாட்டி போயிட்டது அவளுக்கு எவ்ளோ வெறுமையா இருக்கும்.. நினைச்சு பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு பா.. அவ எங்க..?” உள்பக்கமாய் கண்களால் துழாவிக் கொண்டே கேட்டாள்..
“அதானே.. வந்ததுல இருந்து சுந்தரி கண்ணிலயே படலையே…. அவ்வளவு தூரம் ட்ரெயின்ல வந்தது ஒரே களைப்பா இருக்கு.. சுந்தரி..” என்று சமையலறை பக்கம் குரல் கொடுத்தவர் “ஒரு காபி போட்டு தர்றியாம்மா..?” என்று கேட்டார் நடராஜன்..
அவன் சொன்னதை நம்பமுடியாமல் அதிர்ச்சியுடன் சுந்தரை பார்த்தார்கள் நடராஜனும் மேகலாவும்..
“என்னப்பா சொல்ற சுந்தரி இங்கே இல்லையா? இனிமே இங்க வர மாட்டாளா? ஏன்..? என்ன ஆச்சு..? பாட்டி இல்லைன்ன உடனே இங்கிருந்து கிளம்பி போயிட்டாளா? அப்போ இனிமே இங்க சமைக்கறத்துக்கும் மத்த வேலைகளை பார்த்துக்கறத்துக்கும் கூட சுந்தரி வர மாட்டாளா? அந்தப் பொண்ணு இந்த வீட்டை நல்லா கவனிச்சு பார்த்துக்கிட்டாளேப்பா.. எங்களையும் நல்லபடியா கவனிச்சுக்கிட்டா.. இந்த வீட்ல ஒருத்தி மாதிரி தானப்பா எங்க எல்லாரோடயும் இருந்தா அவ.. எங்களை அத்தை மாமானு கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்ல பட்டாம்பூச்சி மாதிரி சுத்திக்கிட்டு இருந்தாளே.. இப்படி பாட்டி இல்லைன்ன உடனே அவ ஏன் கிளம்பி போனா..? அதான் நாங்க இருக்கோமே.. எங்களோட இருக்கலாமே..” மேகலா புலம்ப ஆரம்பித்தார்..
“அது அவங்க அக்கா ரதி வந்து இனிமே இங்க இருந்தா அவ்வளவு நல்லா இருக்காதுன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்கம்மா.. அவங்க சொல்றதும் சரிதானே..? பாட்டி இங்க இருந்த வரைக்கும் பாட்டியை பாத்துக்குறதுக்காக அவங்க இங்க இருந்தாங்க.. இப்போ பாட்டி போனதுக்கப்புறம் அவங்க இங்க இருக்கிறதுக்கு என்ன காரணம் வெளியில சொல்ல முடியும் சொல்லுங்க.. அதான் அவங்க போயிட்டாங்க” என்றான் சுந்தர்..
“ஆனா காலையிலயும் சாயங்காலமும் சமையல் செய்ய வந்தான்னா எங்களுக்கும் அவளை தினமும் பார்த்த மாதிரி இருக்கும்.. நீ சொல்ற மாதிரி இனிமே நைட்ல அவளால இங்க தாங்க முடியாது.. ஏன்னா பாட்டியும் இல்லாம அவ அப்படி தங்குனா ஏதாவது கேள்வி வரும்.. ஆனா பகல்ல அவ வந்து சமையல் வேலை செய்யறதுனால ஒரு பிரச்சனையும் வரப்போறதில்லையே.. எப்படி இருந்தாலும் உன் கார்மெண்ட்ஸ்ல வந்து துணி தெச்சு கொடுக்க தானே போறா..? காலைல வந்து இங்க சமைச்சு கொடுத்துட்டு கார்மெண்ட்ஸ் வந்து வேலை செஞ்சிட்டு மறுபடியும் சாயங்காலம் திரும்பி வந்து இங்க சமையல் பண்ணிட்டு அவ வீட்டுக்கு போயிடலாமே.. எங்களுக்கும் சுந்தரியோட இருந்த மாதிரி இருக்கும்..”
மேகலா சொல்ல அதற்கு என்ன பதில் சொல்வதென்றே சுந்தருக்கு புரியவில்லை..
“அம்மா அவங்க அக்கா ரதி அது அவ்ளோ நல்லா இருக்காதுன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்கம்மா.. சரி விடுங்க.. எனக்கு கார்மெண்ட்ஸ் போக டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன் மா.. அப்புறம் இன்னைக்கு எதுவும் சமையல் பண்ணல.. உங்களுக்கும் அப்பாவுக்கும் நான் வெளியில் இருந்து ஆர்டர் பண்ணிடறேன்.. உங்களுக்கு டயர்டா இருக்கும்.. ” என்று அவன் சொல்ல “இரு சுந்தர்.. நீ எப்படியும் வெளியில ஹோட்டல்ல சாப்பிட்டு தானே போகணும்.. இதோ இன்னும் அரை மணி நேரத்துல ஏதாவது டிஃபன் பண்ணிடுறேன்.. சாப்பிட்டுட்டு போ..” என்று சொன்னவர் நேரே உள்ளே சென்று சமையல் செய்யும் வேலையில் இறங்கினார்..
அப்போது வரவேற்பறையில் சுந்தரும் நடராஜனும் அமர்ந்திருக்க அழைப்பு மணி சத்தம் கேட்கவும் சுந்தர் எழுந்து போய் கதவைத் திறந்தான்.. அங்கே ஷாலினி நின்று கொண்டிருந்தாள்..
“ஷாலினி நீயா..? என்ன திடீர்னு இந்த பக்கம்?” என்று சுந்தர் கேட்க “ஆமா ரெண்டு நாளா நீங்க ஆஃபீஸ்க்கு வரலன்னு சொன்னாங்க.. உங்க ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்லயே இருந்தது.. சரி.. பாட்டி போனதனால நீங்க கொஞ்சம் வருத்தமா இருப்பீங்கன்னு நெனைச்சேன்.. இன்னைக்கு எப்படியாவது உங்களை கர்மென்ட்ஸ்க்கு கூட்டிட்டு போலாம்னு இங்க வந்தேன்.. நாம ரெண்டு பேரும் ஒன்னாவே இங்கருந்து கார்மெண்ட்ஸ் போலாம்” என்று சொன்னாள் ஷாலினி..
“சரி.. பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு போலாம்.. உள்ள வா.. ஆமா.. நீ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டியா?”
“இல்ல.. சுந்தர்.. இன்னும் பிரேக்ஃபாஸ்ட் முடிக்கல.. வழியில பார்த்துக்கலாம்னு நினைச்சேன்..”
சுந்தர் சொல்லவும் “என்ன.. உங்க சித்தி பண்ணிட்டு இருக்காங்களா? ஏன் சுந்தரிக்கு என்ன ஆச்சு..? அவளு…” என்று தொடங்கியவள் பிறகு தொண்டையை கனைத்து “அவங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் ஷாலினி..
சுந்தரியை மரியாதை இல்லாமல் பேசினால் அவனுக்கு கோபம் வரும் என்று அவள் அறிவாளே..
“அப்பாடா இந்த சுந்தரி தொல்லை ஒழிஞ்சுது.. இதே மாதிரி சுந்தரோட சித்தப்பா சித்தியையும் சுந்தர் கிட்ட இருந்து தள்ளி வச்சிட்டா.. நம்ம வந்த வேலையை எப்படியாவது முடிச்சிடலாம்..” என்று யோசித்தவள் “அப்படியா பாவம்.. உங்க சித்தி வந்த உடனே சமைச்சுக்கிட்டு இருக்காங்களா?” என்று கேட்டுவிட்டு வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் தானும் வந்து அமர்ந்து கொண்டாள்..
சுந்தரோ வயதான சித்தி சமைக்கிறார்கள் என்று சொன்னவுடன் தான் போய் அவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று ஷாலினி உள்ளே செல்வாள் என்று எதிர்பார்த்தான்.. ஆனால் அவளோ சோஃபாவில் வந்தமர அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது..
சுந்தர் அவளிடம் “ஆமா நீ ஏதாவது குக் பண்ணுவியா ஷாலினி..?” என்று கேட்க “குக்கிங்கா..?! ஐயோ நான் இதுவரைக்கும் அந்த பக்கம் போனதே இல்லை.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து எங்க வீட்ல யாராவது ஒரு குக் இருந்துட்டு தான் இருப்பாங்க.. அப்படியே யாரும் இல்லைனாலும் நான் வெளியில ஹோட்டல்ல சாப்ட்டுடுவேன்.. எனக்கும் குக்கிங்கும் ரொம்ப தூரம்.. யார் அந்த அடுப்புகிட்ட நின்னுகிட்டு வியர்க்க விறுவிறுக்க சமைச்சுக்கிட்டு.. இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ.. என்னால முடியவே முடியாது.. அந்த பக்கம் எல்லாம் எட்டி கூட பார்க்க மாட்டேன்.. எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.. ஏன்னா இப்ப எங்க அப்பா வீட்ல குக் இருக்காங்க சமைக்கிறதுக்கு.. நான் உங்களை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்தப்புறம் இங்கேயும் நீங்க யாராவது குக் வச்சிருப்பீங்க.. அப்படியே இங்கே என்னிக்காவது குக் இல்லன்னா நம்ம வெளியில போய் சாப்பிட்டுக்கலாம்.. அதனால என்ன பிராப்ளம் வரப்போகுது..?” அவள் சாதாரணமாய் சொன்னாள்..
அங்கு அமர்ந்திருந்த நடராஜன் அவள் சொன்னது முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தவர் அவள் “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு இங்கு வந்த பிறகு” என்று சொன்னதை கேட்டு குழப்பமடைந்தார்..
சுந்தரை பார்த்து “ஏம்பா சுந்தர்.. ஷாலினி என்ன சொல்றா..? கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வர போறேன்னு ஏதோ..” என்று அவர் இழுக்க “ஆமாப்பா நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. நான் இந்த முடிவு எடுத்தப்போ நீங்க வீட்ல இல்ல.. அதான் உங்ககிட்ட சொல்ல முடியல.. நான் எப்படிப்பட்ட ஒரு பொண்ணு என் மனைவியா வரணும்னு நினைச்சிருந்தேனோ.. என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் எப்படிப்பட்ட பொண்ணு எனக்கு மனைவியா வருவான்னு சவால் விட்டிருந்தேனோ.. அப்படிப்பட்ட ஒரு பொண்ணா ஷாலினி எல்லா விதத்திலும் இருக்கா.. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு பா.. அவ என் வாழ்க்கையில வந்தான்னா என் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.. அதனாலதான் இந்த முடிவு”
சுந்தர் சொல்ல உள்ளிருந்து அங்கே வந்து அவர்களை உண்ண அழைக்க வந்த மேகலா அதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானார்..
“என்ன..? ஷாலினியை கல்யாணம் பண்ணிக்க போறியா?”
மேகலா குரலில் திகைப்பு வெளிபட “ஆமாம்மா.. நீங்க இங்க இல்லாததுனால உங்களுக்கு சொல்ல முடியல.. சாரி மா.. நீங்க ரெண்டு பேரும் தான் எங்க கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி வைக்கணும்..” என்றான் சுந்தர்..
நிலைமையை சமாளிக்க எண்ணிய நடராஜன் “அதனால என்னப்பா.. நீ ஆசைப்படுறபடியே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா போச்சு.. சரி வா.. போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்.. வாம்மா ஷாலினி.. நீயும் வந்து சாப்பிடு..” என்று அழைத்தார்..
ஆனால் மேகலாவால் சுந்தர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. சுந்தரின் வாழ்க்கை சுந்தரியோடு இணைந்தால் தான் நன்றாக அமையும் என்று அவள் ஏற்கனவே கனவு கண்டு கொண்டிருந்தாள்..
ஆனால் இந்த ஷாலினிக்கோ பெரியவர்களிடம் மரியாதையாய் நடந்து கொள்ளவும் தெரியவில்லை.. சுந்தரி அளவுக்கு பொறுமையும் குணமும் இந்த பெண்ணில் இல்லை என்று மேகலாவுக்கு நன்றாக தெரியும்.. அதனால் அவள் சுந்தருக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாய் இருப்பாள் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லாமல் இருந்தது..
இறுக்கமான முகத்துடனே உள்ளே சென்று எல்லோருக்கும் சிற்றுண்டி பரிமாறினாள் மேகலா.. சிற்றுண்டி பரிமாறுவதற்கு கூட ஷாலினி மேகலாவுக்கு உதவியாக இல்லாமல் சட்டமாய் அந்த சாப்பாட்டு மேஜையின் முன் சாப்பிட அமர்ந்தது சுந்தருக்கு சிறிது உறுத்தலாகவே இருந்தது..
சுந்தர் மேகலாவின் கையில் இருந்து உணவு பாத்திரத்தை வாங்கியவன் “அம்மா நீங்களும் சாப்பிட உட்காருங்க.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.. நீங்க எல்லாருக்கும் தோசை வைங்க.. நான் சட்னி.. சாம்பார்ல்லாம் பரிமாறுறேன் ” என்று சொல்லி தானும் மேகலாவுடன் சேர்ந்து எல்லோருக்கும் உணவு பரிமாறினான்..
வயதானவர் பரிமாறிக் கொண்டிருக்க நன்றாக அமர்ந்து சிற்றுண்டி உண்டு விட்டு “ஓகே சுந்தர்.. சாப்டாச்சு போகலாமா?” என்று கேட்டவள் சிறிதும் மற்றவர்கள் சரியாக சாப்பிட்டார்களா இல்லையா என்று கவலை கூட கொள்ளாமல் கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பினாள்..
பெரிய தொழிலதிபரின் வீட்டில் வளர்ந்த பெண் அப்படித்தான் இருப்பாள் என மனதை தேற்றிக்கொண்டு சுந்தர் தானும் கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பி ஷாலினியுடன் சென்றுவிட்டான்..
நடராஜனிடம் மேகலா “ஏங்க.. என்னங்க இது..? நம்ப சுந்தர் அந்த ஷாலினியை போய் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு இருக்கான்.. நம்ம எப்படியாவது சுந்தரியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு பேசிக்கிட்டு இருந்தோமே.. அது மட்டும் இல்லாம இப்ப சுந்தரியும் இந்த வீட்டில் இல்லைன்கிறது எனக்கு இன்னும் அதிர்ச்சியா இருக்குங்க.. எனக்கு என்னவோ இங்க வேற ஏதோ நடந்திருக்குன்னு தோணுதுங்க.. சுந்தரி அப்படி எல்லாம் திடீர்னு வீட்டை விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க.. அது மட்டும் இல்லாம பாட்டி போயிட்டாங்க இல்ல..?அவ ரொம்ப உடைஞ்சு போயிருப்பா.. சுந்தரியை பார்த்து பேசணும்னு தோணுதுங்க.. அவ வீட்டுக்கு போய் நம்ம கொஞ்சம் அவளை பார்த்து பேசிட்டு வரலாங்க..” என்று சொல்ல “நானும் அதைத்தான் நினைச்சேன் மேகலா.. சரி நீ வேகமா மதியத்துக்கு சாப்பாடு செஞ்சுடு.. சாப்பிட்டு மதியமா கிளம்பி போயி சுந்தரியை பாத்துட்டு வரலாம்..” என்றார் நடராஜன்..
##############
சுந்தரி செய்தித்தாளில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. அப்போது ஒரு துணிக்கடையில் விற்பனை செய்யும் பெண் வேண்டுமென ஒரு விளம்பரம் இருக்க அந்த விளம்பரத்தை குறித்துக் கொண்டவள் “இந்த கடைல நாளைக்கு ஆள் எடுக்கிறோம்ன்னு சொல்லி வர சொல்லி இருக்காங்க.. நாளைக்கு இந்த கடைக்கு போயி வேலை கேட்கலாம்..” என்று நினைத்தவள் வேறு எங்காவது வேலைக்கு எடுக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்க அப்போது வாயில் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து சென்று கதவை திறந்தாள்..
அங்கே மேகலாவும் நடராஜனும் நின்று கொண்டிருக்க ஓடி சென்று மேகலாவை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்..
“அ.. அத்தை.. அத்தை..”
குழந்தை போல அவள் அழ அவள் முதுகை தடவி கொடுத்து “என்ன பண்றது சுந்தரி..? அவங்க விதி முடிஞ்சு போச்சு.. நம்ம கைல என்ன இருக்கு சொல்லு..” அவளுக்கு ஆறுதல் சொன்னாள் மேகலா..
சட்டென அவளிடம் இருந்து விலகிய சுந்தரி கண்ணீரை துடைத்து கொண்டே “நீங்க இன்னைக்கு தான் வந்தீங்களா அத்தை..?” என்று கேட்க “ஆமாம்மா.. இன்னைக்கு தான் வந்தோம்..” எனவும் “சரி.. உள்ள வாங்க அத்தை ரெண்டு பேரும்.. உள்ள போய் உட்கார்ந்து பேசலாம்..”
அவர்களை உள்ளே அழைத்தவள் அவர்களை அமர வைத்துவிட்டு உள்ளே சென்று அவர்களுக்கு தேநீர் கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்..
அதைப் பார்த்த மேகலாவுக்கு அவளுக்கும் ஷாலினிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று மனதிற்குள் தோன்றியது..
“ஆமா சுந்தரி… சுந்தர் நீ அந்த வீட்டை விட்டு ஒரேயடியா வந்துட்டேன்னு சொன்னான்.. ஆனா நீ ஏன் அந்த வீட்டுக்கு சமையல் வேலைக்கு கூட வரமாட்டேன்னு சொல்லிட்டியாம்..? என்ன ஆச்சு சுந்தரி?”
மேகலா கேட்க கலங்கிய கண்களுடன் அவளை பார்த்தாள் சுந்தரி..