சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 35
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“ஆமா சுந்தரி… சுந்தர் நீ அந்த வீட்டை விட்டு ஒரேயடியா வந்துட்டேன்னு சொன்னான்.. ஆனா நீ ஏன் அந்த வீட்டுக்கு சமையல் வேலைக்கு கூட வரமாட்டேன்னு சொல்லிட்டியாம்..? என்ன ஆச்சு சுந்தரி?” என்று கேட்ட மேகலாவை கலங்கிய கண்களுடன் பார்த்தாள் சுந்தரி..
“அத்தை நான் உங்ககிட்ட பொய் சொல்ல விரும்பல.. அந்த வீட்டில இருந்து நானா வரல.. எங்க அக்கா ரதிதான் என்னை கூட்டிட்டு வந்தா.. ஆனா இங்க வந்தப்பறம் அவ செஞ்சதுதான் சரின்னு எனக்கும் தோணுது அத்தை.. ”
அவள் சொன்னதை கேட்ட மேகலாவுக்கு சுருக்கென கோபம் வந்தது..
“அது என்ன சுந்தரி அப்படி சொல்லிட்ட? உனக்கு நாங்க எல்லாம் இல்லையா? அந்த வீட்ல பாட்டி போயிட்டா உனக்கு யாருமே இல்லைன்கிற மாதிரி நீ அங்க இருந்து கிளம்பி வந்தது சரின்னு சொல்ற.. அது எப்படி கரெக்டாகும்.. எங்கள பத்தி எல்லாம் நீ யோசிச்சு பாக்கல இல்ல..? நாங்க அந்த வீட்ல உன்னையும் ஒருத்தியா தான் பார்க்கிறோம்..” என்க..
“ஐயோ அத்தை.. உங்க அன்பை நான் குறை சொல்லல.. நீங்க என்னை உங்க பொண்ணு மாதிரி தான் பாத்துக்கிட்டீங்க.. அந்த வீட்ல நானும் சந்தோஷமா தான் இருந்தேன்.. சுந்தர் சாரும் என்னிக்குமே என்கிட்ட கண்ணியமா தான் நடந்துக்கிட்டாரு.. ஆனா ரதி இப்படி செஞ்சதுக்கு ஒரு காரணம் இருக்கு.. அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் இருந்த சூழ்நிலையில அவ அப்படி செஞ்சது தான் சரின்னு எனக்கு தோணுது..” என்றாள் சுந்தரி..
“ஏன்மா இப்படி பூடகமாவே பேசி என்னை குழப்புற..? அன்னிக்கு என்ன தான் நடந்துச்சு சொல்லு..” என்று கேட்டாள் மேகலா..
அன்று ரதி ராசாத்தியுடன் சுந்தரின் வீட்டுக்கு வந்தபோது நிகழ்ந்ததத்தனையும் மேகலாவிடம் சொன்னாள் சுந்தரி..
“அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் இந்த முடிவெடுத்து இங்கே கிளம்பி வந்தப்போ இந்த இடத்தில் இருக்கிற எல்லாரும் எங்களை ஒரு மாதிரி பார்த்தாங்க அத்தை.. அந்த பார்வை எங்களை அப்படியே உயிரோட கொன்னு போட்டுருச்சு… இப்படியாவது நாங்க வாழணுமான்னு எங்களுக்கு தோணுச்சு… ராசாத்தி அக்கா இங்க வந்து அவங்க பார்த்து தப்பா புரிஞ்சுகிட்டதை அத்தனை பேர் கிட்டயும் அவங்க எப்படி புரிஞ்சுகிட்டாங்களோ அப்படியே அச்சு பிசகாம சொல்லிட்டாங்க.. இப்பவே எங்க மானம் பாதி காத்துல போயிருச்சு.. இனிமேலும் அந்த வீட்டுக்கு வந்தா சுத்தி இருக்கிறவங்க பார்க்கிற பார்வையில அப்படியே எரிஞ்சு போயிடுவேன்.. அதனால நான் இனிமே அங்க வரல.. என்னை தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு எப்பல்லாம் என்னை பாக்கணும்னு தோணுதோ அப்பெல்லாம் நீங்க தாராளமா இங்க வரலாம்.. அந்த வீட்டு பக்கத்துல இருக்கிற அம்மன் கோயிலுக்கு நான் அப்பப்ப வந்து உங்களை பார்க்கிறேன்.. என் நிலைமை உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்..”
சுந்தரி மேகலாவின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள்..
“மேகலா.. குழந்தையை ரொம்ப அழ விடாத.. அவதான் அவ்வளவு தூரம் சொல்றா இல்ல..? எனக்கு புரியுது மா.. இந்த உலகமே இப்படித்தான் மா.. தன் மேல ஆயிரம் அழுக்கை வச்சிக்கிட்டு அடுத்தவங்க மேல எப்ப அழுக்கு படுதுன்னு பாத்துகிட்டு இருப்பாங்க.. சரி.. அதை விடு.. ஆமா உங்க அக்கா எங்க? குழந்தையும் காணோம்..” என்று கேட்டார் நடராஜன்..
“ரதி கடைக்கு போய் இருக்கா மாமா.. இப்ப வந்துருவா.. வர்ற நேரம் தான்.. உங்களுக்கு நான் ஏதாவது செஞ்சு கொடுக்கிறேன்.. ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க..” என்று உள்ளே போக எழுந்தவளை அப்படியே பிடித்து அமர வைத்தாள் மேகலா..
“நாங்க இப்ப தான் அங்க சாப்பிட்டு வரோம்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ இப்படியே உட்காரு.. நான் இன்னொரு விஷயம் உன்கிட்ட பேசணும்னு வந்தேன்ம்மா.. ” என்று மேகலா சொல்ல “சொல்லுங்க அத்தை.. என்ன விஷயம்..?” என்று கேட்டாள் சுந்தரி..
“சுந்தர் அந்த ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்திருக்கான் போல இருக்கே..”
“ஆமா அத்தை.. அவர் சொன்னாரு… என்கிட்ட மட்டும் இல்ல.. பாட்டி கிட்டயும் சொன்னாரு.. அவர் நினைச்ச மாதிரியே ஷாலினி இருக்காங்க.. அவர் அவங்களை கல்யாணம் பண்ணிக்கறது தான் சரியா இருக்கும்.. அவருக்கு சரியான ஜோடி அந்த ஷாலினி தான்.. அவங்க நல்லா நாகரீகமா இருக்காங்க.. நல்லா ட்ரஸ் பண்றாங்க.. அவருக்கு ஏத்த மாதிரி படிச்சவங்களா இருக்காங்க.. சரளமா எல்லாரோடயும் இங்கிலீஷ்ல பேசுறாங்க.. இப்படி எல்லா விஷயத்திலயும் அவருக்கு ஏத்த மாதிரி இருக்காங்க அத்தை.. அதனாலதான் அவர் வந்து சொன்னப்போ எனக்கும் சந்தோஷமா இருந்தது..” என்றாள் சுந்தரி..
“நீ வெள்ள மனசுக்காரி சுந்தரி… உனக்கு எதுவுமே தப்பா தெரியாது.. ஆமா பாட்டி என்ன சொன்னாங்க இதை கேட்டுட்டு..” என்று கேட்டார் மேகலா..
“அது..” என்று சுந்தரி இழுக்க “என்ன சுந்தரி..? பாட்டி இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னாங்களா?” என்று மேகலா கேட்க “அது மட்டும் இல்ல.. அத்தை.. பாட்டி சுந்தர் சாரை என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க.. சுந்தர் சார் கிட்ட இது பத்தி பேசுறேன்னு சொன்னாங்க.. ஆனா அவர் எப்படி அத்தை என்னை கல்யாணம் பண்ணிக்க முடியும்..? எனக்கும் அவருக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது.. அவர் எங்க.. நான் எங்க.. அதான் பாட்டிகிட்ட சுந்தர் சார் கிட்ட இது பத்தி எதுவும் பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்” என்றாள் சுந்தரி..
சுந்தரியை கூர்ந்து பார்த்த மேகலா “பாட்டி சொல்றதெல்லாம் இருக்கட்டும்.. சுந்தரி.. நீ சொல்லு.. உன் மனசுல சுந்தர் இல்லையா..?” மேகலா அவள் மனதை அறிய முனைந்தாள்..
தலையை குனிந்து கொண்ட சுந்தரி சட்டென “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை..” என்றாள் பதட்டமாக..
“இங்க பாரு.. என் முகத்தை பார்த்து என் கண்ணை பாத்து சொல்லு.. நீ சுந்தரை விரும்பலைன்னு.. அப்ப நான் நம்புறேன்..” என்ற மேகலா ஒரு விரலை சுந்தரியின் முகவாயில் வைத்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் கண்கள் கலங்கி இருந்தன..
அவள் கன்னத்தில் கையை வைத்த மேகலா “எனக்கு தெரியும் சுந்தரி.. நீ சுந்தரை மனசார விரும்புற.. ஆனா அவன் விருப்பம் தான் முக்கியம்னு அவன் சொன்ன உடனே அதை ஏத்துக்கிட்டு அப்படியே உன் ஆசையை மனசுல போட்டு புதைச்சுக்கிட்ட இல்ல..? பாட்டி உனக்காக பேசுறேன்னு சொன்னப்ப கூட ஒத்துக்காம எல்லாத்தையும் விட்டுட்டு இங்க கிளம்பி வந்து உக்காந்து இருக்க பாரு.. உன் மனசு யாருக்குமே வராது சுந்தரி..” என்று சொல்ல சரியாக அதைக் கேட்டு அப்படியே வீட்டு வாயிலில் அதிர்ந்து நின்றாள் அப்போது தான் கடையிலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த ரதி..
ரதியை பார்த்த சுந்தரி சட்டென்று பேச்சை மாற்றும் விதமாக “சரி.. இதெல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம்.. அப்படி எல்லாம் நீங்க எதுவும் சாப்பிடாம வீட்டுக்கு போக கூடாது அத்தை.. நான் உங்களுக்கு ஏதாவது செஞ்சு கொண்டு வரேன்..” என்று சமையலறை பக்கம் ஓடினாள்..
சமையல் அறைக்குச் சென்றவள் அங்கிருந்த சமையல் மேடை அருகே நின்று கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள்.. ஆனால் அதுவோ அடங்காமல் வழிந்து கொண்டே இருந்தது..
உள்ளே வந்த ரதி “வாங்க.. எப்ப வந்தீங்க ஊர்ல இருந்து..?” என்று கேட்டாள் மேகலாவையும் நடராஜனையும்..
“நாங்க இன்னைக்கு காலைல தான் வந்தோம்.. வந்தவுடனே சுந்தரி இங்க வந்துட்டான்னு தெரிஞ்சது.. அதான் அவளை பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. நீ எப்படிம்மா இருக்க..? குழந்தை எப்படி இருக்கா? இங்க குடு அவளை..”
குழந்தையை கைநீட்டி வாங்கிக் கொண்டார் மேகலா..
“நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம் அத்தை.. நீங்களும் அடிக்கடி இங்க வந்து சுந்தரியை பார்த்துட்டு போங்க அத்தை.. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. அவ மனசுல நினைச்சா மாதிரி ஒரு வாழ்க்கையை அவளுக்கு என்னால ஏற்படுத்தி கொடுக்க முடியுமான்னு தெரியல.. ஆனா அவளுக்கு மானத்தோட வாழற வாழ்க்கையை கடைசி வரைக்கும் நல்லபடியா குடுக்கணும்னு நான் நினைக்கிறேன்.. “
ரதி சொல்ல அவர்களுக்கும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது..
“சரிமா.. நீ சொல்றதும் சரிதான்ம்மா.. சுந்தரி வேலை தேடிக்கிட்டு இருக்காளா?” என்று கேட்க “ஆமா அத்தை.. ஏதாவது ஒரு இடத்துல வேலை பார்த்துக்கிறேன்னு சொன்னா.. தேடிக்கிட்டு தான் இருக்கா.. அவ வேலையை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே.. எங்க போனாலும் நல்ல பேர் வாங்கிடுவா..” என்று பெருமையாக சொன்னாள் ரதி..
“ஆமாம்மா.. அவ ரொம்ப நல்ல உழைப்பாளி.. முழு சிரத்தையோட செய்யற வேலையை ஒழுங்கா நேர்த்தியா செய்வா.. அவ இல்லாம எங்களுக்கு தான் இனிமே கஷ்டமா இருக்கப்போகுது அந்த வீட்டில..” என்று அங்கலாய்த்தாள் மேகலா..
அதற்குள் சுந்தரி இரண்டு தட்டு நிறைய பஜ்ஜி செய்து எடுத்து வந்து அவர்களிடம் கொடுக்க “சொன்னா கேக்க மாட்ட.. நாங்க இப்பதான் சாப்பிட்டு வந்தோம்.. இவ்வளவு எப்படி சாப்பிடறது..? வயத்தில இடமே கிடையாது..” என்று சொன்னாள் மேகலா..
“பரவாயில்லை சாப்பிடுங்க அத்தை..”
“இந்தா நீயும் ரெண்டு எடுத்துக்கோ..” என்று சொல்லி ஒரு பஜ்ஜியை எடுத்து அவளுக்கு ஊட்டினாள்..
ரதியையும் அழைத்து அருகில் உட்கார வைத்து அவளுக்கும் ஒரு பஜ்ஜியை எடுத்து ஊட்ட.. இரண்டு பேரும் தங்கள் அன்னையின் அன்பை மேகலாவுக்குள் கண்டு கண் கலங்கினார்கள்..
மடியில் இருந்த குழந்தைக்கும் சிறு சிறு துண்டுகளாக பிய்த்துக் கொடுக்க “பாட்டி கிட்ட சாப்பிட பிடிச்சு இருக்கா குட்டி பாப்பாக்கு..? சாப்பிடு…” என்று அவளுக்கும் ஊட்டினாள்.. சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினர் மேகலாவும் நடராஜனும்..
அவர்கள் சென்ற பிறகு சுந்தரியை பார்த்த ரதி “மனசுல இவ்வளவு பெரிய விஷயத்தை வச்சுட்டு இருக்கே.. இந்த அக்கா கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லல்ல..?” என்று கேட்க அப்படியே உடைந்து போய் அவள் மடியில் முகத்தை புதைத்து அழுதாள் சுந்தரி..
அவள் தலையை தடவிக் கொடுத்த ரதி “எல்லாம் நம்ம தலையெழுத்துடி.. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணியும் என் கல்யாணம் உருப்படல.. நீ காதலிச்சாலும் கல்யாணமே பண்ணிக்க முடியல.. என்ன வரம் வாங்கிட்டு வந்தோமோ ரெண்டு பேரும்..?” என்று சொன்னவள் சுந்தரியின் தலைமேல் தன் தலையை வைத்து கண்ணீர் விட்டு கரைந்து கொண்டு இருந்தாள்..
மாலை வீடு வந்த சுந்தர் எதையோ இழந்தது போலவே சுற்றிக் கொண்டிருந்தான்.. ஒழுங்காக சாப்பிடாமல் கண்ணின் கீழே கருவளையம் படிந்திருந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தான்..
மேகலா நடராஜனிடம் “ஏங்க இந்த புள்ள பாட்டியோட நினைப்பிலேயே ரொம்ப இடிஞ்சு போயிருக்கான் போல இருக்குங்க.. அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும்.. இவன் இப்படியே இருந்தான்னா ரொம்ப உடைஞ்சு போயிடுவாங்க.. அவன் எப்படி இருந்தாலும் அந்த ஷாலினியை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டான்.. பேசாம அவங்க வீட்ல போயி சம்பந்தம் பேசி இவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாங்க.. ஒரு கெட்டது நடந்த வீட்ல நல்லது நடந்தா சந்தோஷம் வரும்னு சொல்லுவாங்க.. நம்ப இந்த கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் நடத்தி வைக்கலாம்.. அதனால அவன் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா நல்லது தானேங்க..” என்று மேகலா சொல்ல நடராஜனும் “ஆமாம் மேகலா.. நீ சொல்றதும் கரெக்ட்தான்.. சரி.. ஒன்னு பண்ணுவோம்… சுந்தர் கிட்ட ஷாலினி வீட்டு அட்ரஸ் வாங்கி அவங்க வீட்டுல போய் இவங்க ரெண்டு பேர் கல்யாணத்தை பத்தி பேசுவோம்..” என்றார்..
“சரிங்க நான் சுந்தர் கிட்ட போய் அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு வரேன்..” என்று சொன்ன மேகலா சுந்தரின் அறைக்கு சென்றாள்.. வாசலில் கதவை தட்டிக் கொண்டு நிற்க “வாங்கம்மா.. உள்ள வாங்க..” என்றான் சுந்தர் தன் கட்டிலில் அமர்ந்தபடி…
அவன் தலையை ஆதரவாக கோதிய மேகலா “நீ ஏன் இப்படி இருக்க..? எங்கேயாவது வயசு புள்ளையா இருக்கியா..? பாட்டி போயிட்டாங்க தான்.. இல்லனு சொல்லல.. போனவங்க திரும்பி வர மாட்டாங்க..ப்பா.. அவங்களும் நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு தான் எங்க இருந்தாலும் நினைப்பாங்க.. சரி.. அதை விடு.. நீ அந்த ஷாலினியை விரும்புறேன்னு சொன்ன இல்ல..? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. அவங்க வீட்டு அட்ரஸ் கொடுத்தேன்னா நாங்க போய் கல்யாணம் பேசி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு ஒரு மருமகளை கொண்டு வந்துட்டோம்னா எங்க கடமை முடிஞ்சிரும் பா.. நீங்க பேரன் பேத்தியை பெத்து கொடுத்தீங்கன்னா அதோட விளையாடிக்கிட்டே எங்க பொழுது கழிஞ்சுடும்.. இப்படியே உன் கவலை படுற முகத்தை பார்த்துட்டு எங்களால இருக்க முடியலப்பா..” என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன் மேகலா..
“எனக்கு புரியுதும்மா.. ஷாலினி அவங்க அப்பா கிட்ட நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பற விஷயத்தை சொல்லிட்டாளான்னு தெரியல.. நான் அவ கிட்ட இந்த விஷயமா பேசிடறேன்.. அப்புறம் நீங்க போய் பேசினா சரியா இருக்கும்னு எனக்கு தோணுது மா..” என்றான் சுந்தர் தன் கைப்பேசியை எடுத்தபடி..
“இருப்பா.. இவ்வளவு நல்ல புள்ள நீ.. உன்னை யாருப்பா வேண்டான்னு சொல்ல போறாங்க.. நிச்சயமா ஷாலினியோட அப்பா மனப்பூர்வமா சம்மதம் தான் சொல்லுவார்.. அதனால நீ கவலைப்படாத.. ஷாலினிக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் தானே..?”
மேகலா கேட்க “ஆமாம்மா.. எவ்வளவு சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்கணும்னு தான் அவளும் நினைப்பா..” என்று சொன்னான் சுந்தர்..
“அப்புறம் என்னப்பா..? நாங்க போய் அவங்க அப்பா கிட்ட பேசறோம்.. சர்ப்ரைஸா நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு பண்ணிட்டு அவகிட்ட அவங்க அப்பா சொன்னா.. அவளுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்… அதனால நீ இப்ப எதுவும் அவகிட்ட சொல்லாத..” என்றாள் மேகலா..
“அதுவும் சரிதான்மா.. நீங்க போயி அவங்க அப்பாவோட இந்த கல்யாணத்தை பத்தி பேசிட்டு வாங்க..” என்றான் சுந்தர்..