உறவு -06
கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது.
நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள்.
நிமிர்ந்து பார்த்தவனது முகத்தில் தீடிர் பரவசம் தொற்றிக்கொண்டது.
அத்தனை நேரம் தெரிந்த களைப்பு நொடியில் காணமல் போனது போல் ஒரு மாயை.
“ வா…மீனாட்சி…என்ன இம்புட்டு வெள்ளன வந்திருக்கவ…?” என கரும்புகளை இறுக்கமாக கட்டிக்கொண்டே கேட்டான்.
“ மாமா…அது வந்து…உன்னோட வேலை முடிசஞ்சிருச்சா…?” என்றாள்.
ஈஸ்வரனோ யோசனையுடன் , “ம்ம்…கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சு….மில்லுக்கு போகனும்…சரி என்ன விஷயமா இவ்வளவு வெள்ளனவே என்னய பாக்க வந்துருக்க…?” என சற்றே அழுத்தமாக கேட்டான்.
மீனாட்சியோ மனதினுள்,” அதை கொஞ்சம் நிதானாமாத்தான் கேட்டா என்னவாம்….? எப்ப பார்த்தாலும் சட்டையில் ஊத்துன கஞ்சி மாதிரி தான் வெரப்பா நிக்கனுமாக்கும்…” என சலிப்பாக இருந்தது ஆனாலும் வெளிக்காட்டாமல், “ நான் அங்கன நிக்கேன் மாமா…நீ கை கால் கழுவிட்டு வா …” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென நடந்து சற்று தொலைவிலிருந்த வேப்ப மர நிழலில் நின்றிருந்தாள்.
ஈஸ்வரனும் அவளை வெகு நேரம் காக்க வைக்காமல் பின்னோடு
வந்துவிட்டான்.
முகத்தை தனது மேல் துண்டினால் துடைத்தவாறே ,
“ சொல்லு மீனாட்சி…! அப்படி என்ன தலை போற விஷயம்…?”.
“மாமா….நா நேரா விஷயத்துக்கு வர்றேன்….நீ எப்ப வந்து எங்க அப்பா கிட்ட என்னை பொண்ணு கேக்க போற….? அப்பா வேற கல்யாண பேச்சை ஆரம்பிச்சுட்டாரு. இனி வெரசா எல்லா வேலையும் பண்ணிருவாக….. போதாக்குறைக்கு வடிவத்தை வேற வாராகளாம்…” என நிறுத்தினாள்.
அதைக் கேட்ட ஈஸ்வரனின் முகம் மாறியது இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஏன் அவுக வந்தா எனக்கென்ன?” என்றான் .
மீனாட்சியின் பொறுமை மெல்ல மெல்ல பறக்கத் தொடங்கியது.
“ சரி …மாமா…அதை விடு சீக்கிரம் வந்து எங்கப்பா கிட்ட பொண்ணக் கேளு….உனக்காக மட்டுந்தேன் இம்புட்டு வருஷமா காத்துட்டு இருக்கேன்…. இதுக்கு மேல என் மனசை உனக்கு எப்படி புரிய வைக்குறதுன்னே தெரியல…? ஒருவேளை எங்கப்பா சம்மதிக்க மாட்டாருன்னு நினைக்கியா….? அப்படி ரெம்ப பிரச்சினை வந்தா… அதுக்கும் ஒரு வழி இருக்கு…” என்று கூறி விட்டு அவனது முகத்தை தவிப்புடன் பார்த்தாள்.
“ என்ன டி…?” என பல்லைக் கடித்தவாறே கேட்டான்.
“ அது ….வந்து…ம்ம்..அது…!” என இழுத்தாள்.
“ மென்னு முழுங்காத….முழுசா சொல்லு புள்ள…” என கடுகடுத்தான்.
அவளோ மெல்லிய குரலில், “ என்னைய …என்னைய முழுசா எடுத்துக்கோ….மாமா…அப்ப…உன்னையத் தவிர வேற யாருக்கும் எங்கப்பா என்னை கட்டி வைக்க மாட்டா….” என முழுவதுமாக அவள் முடிக்கும் முன்பே அவளது பட்டு கன்னம் திகுதிகுவென எரிந்தது.
ஏர் பூட்டி உழுது உரமேறிய கரங்கள் பஞ்சினும் மெல்லிய அவளது கன்னத்தை அறைந்திருந்தது.
அவனது ஐந்து விரல்களும் அழுந்தப் பதிந்து சிவந்திருந்தது.
“ மாமா…!” என நாத் தழுதழுக்கக் கண்களில் நீர் வழிய அவனைப் பார்த்தாள்.
நாக்கை மடித்து வாய் மீது விரல் வைத்து ,“ஒரு வார்த்தை பேசாத……..” என்பது போல சைகை செய்தான் .
கண்ணீர் அவளது கன்னம் தாண்டி வழிந்தது.
அவளுக்கிருந்த பதட்டத்தில் வார்த்தகளை யோசியாமல் சிதற விட்டாள். ஆனால் அது எந்த அளவிற்கு ஈஸ்வரனின் மனதை வேதனை படுத்தியிருக்கும் என்பதை பேசிய பின்பு உணர்ந்தாள்.
வார்த்தைகள் தொண்டையை அடைத்தது ஈஸ்வரனுக்கு இருப்பினும் சற்று கடுமையாகவே , “ பைத்தியமாகிட்டியா நீயு….நீ சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா…? பச்சையாக சொன்னா உன் கூட என்னை படுக்க சொல்ற….. அப்படித்தானே…?” என்றான்.
சுரீரென்றது அவளுக்கு ,” மாமா…. அப்படி பேசாத வலிக்குது….” என்றாள்.
அவனக்கு இன்னும் மனம் ஆறவேயில்லை…. அவளதுஅழுகை அவனை மிகவும் பாதித்தது.
மெல்ல அவளருகே வந்து அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டான்.
“ மன்னிச்சிடு மாமா….ஏதோ விசனம் பட்டு வார்த்தையை விட்டுபுட்டேன்…” என்றாள்.
“ இங்க பாரு மீனாட்சி…என்னிக்காச்சும் என் பார்வை ஒங்கண்ணை தாண்டி போயிருக்கா…?” என்றான்.
“இல்லை” என தலையாட்டினாள்.
“ ம்ம்….அநாவசியமா என் விரல் நகம் கூட உம்மேல பட்டுருக்கா..? இல்ல …என்னிக்காவது உன்னை அத்துமீறி தான் பாத்துருக்கேனா…? நானும் சராசரி ஆசை உள்ள மனுஷந்தேன்…எனக்குள்ளாறையே எல்லா ஆசையையும் உள்ளாற போட்டு புதைச்சிகிட்டு தான் இருக்கேன். இன்னும் கொஞ்சம் என்னோட தகுதியை உசத்திகிடனும் மீனாட்சி…. அப்பதேன் உங்க அப்பாகிட்ட என்னால பேச முடியும். கவலைப்படாத…சீக்கிரம் இப்ப கட்டிடு இருக்குற எங்களோட புது வீட்டை கட்டி முடிச்சிட்டு , புகழனிக்கு ஆஸ்பத்திரி கட்டுற வேலையை ஆரம்பிச்சவுடனே உங்க அப்பா கிட்ட நான் வந்து பேசிடுறேன். மிஞ்சி போனா இன்னும் ஒரு ஆறு மாசம். அடுத்த வருஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்துக்கு நீயும் நானும் புருசன் பொஞ்சாதியாதான் போறோம்….சரியா..?” என அழுந்த அவளது கன்னத்தை துடைத்து விட்டான்.
“ ஸ்.ஸ்….” என வலியில் முகத்தை சுழித்தாள்.
அவனுக்கே பாவமாக போய்விட்டது.
தனது கரங்களின் அழுத்தத்தை அவளது பட்டுக் கன்னம் தாங்கியதே பெரிய விஷயமாயிற்றே.
சதா உழைத்து உரமேறிய கரங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகமிருக்கும்.
இன்னுமே அவளது இடது கன்னம் சிவந்திருந்தது.
“ மன்னிச்சிக்கோ மீனாட்சி….. ரொம்ப வேகமா அடிச்சுபுட்டேன்….
ரொம்ப சிவந்து போச்சு…..இங்கன இருந்து பாத்தாவே ஐஞ்சி விரலோட தடம் நல்லாத் தெரியுது… உங்க அப்பா பார்த்தா என்னத்துக்கு அகும்….கூறுகெட்டத்தனமா நடந்துக்கிட்டேன்…ம்ம்ச்…” எனத் தனது நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.
அவளோ அவனருகே வந்து அவன் விழியோடு தனது விழிகளை கலக்க விட்டவள் , “இங்க பாரு மாமா எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு…இதை பத்தி நீ விசனப்படாத…நான் பாத்துக்குறேன்…நீ சீக்கிரம் வீட்டை கட்டி முடி….கேக்குறேன்னு கோவிச்சுக்காத…எதுனாலும் பணம் தேவைப்பட்டிச்சுன்னா சொல்லு என்னோட சேமிப்புல இருந்து எடுத்தாறேன்….என் கிட்ட கவுரதை பாக்காத….” என்றாள்.
அவனோ , “என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா…? “ என்பதைப் போல அவளை முறைத்தான்.
அவளோ சலித்துக் கொண்டு , “ சரி…சரி…ரொம்பத்தேன் முறைக்காத…கண்ணு ரெண்டும் வெளிய வந்துறப் போவுது…நான் கிளம்புறேன். நேரமாச்சு..அப்புறம் எங்க அண்ணே நாளைக்கு ஊருக்கு கிளம்புது…அது திரும்ப வர மூணு மாசமாகுமாம்….” என்றாள்.
ஈஸ்வரனோ , “ம்ம்….கேள்விப்பட்டேன்… நானும் இன்னும் பதினஞ்சு நாள்ல வெளியூர் போற வேலையிருக்கு…போனா கொஞ்ச நாளாகும் மீனாட்சி…புகழினிக்கு ஆஸ்பத்திரி கட்டுற விஷயமா போக வேண்டியிருக்கு. சீக்கிரம் அந்த வேலையை ஆரம்பிச்சடனும். “ என்றான்.
அவளோ ,” அப்ப கொஞ்ச நாள் உன்னைய பாக்கவே முடியாதா…? இவ்வளவு வருஷத்துல உன்னையே ரொம்ப நாள் பாக்காம இருந்ததில்லையே மாமா…?” என கவலைப்பட்டாள்.
“ இங்க பாரு அதுக்கு இன்னும் நாள் இருக்கு தானே…அதுக்கேன் இப்பயிருந்தே கவலைப்படுற…? இதை நான் இப்ப சொன்னேன்னா…. நானும் இல்லை உங்கண்ணனும் இல்லை … நீ கொஞ்சம் கவனமா இருக்கனும்னு தான். ஆனா நீ என்னடான்னா இப்பயிருந்தே கவலப்படுத…சரி..சரி…மூஞ்சத் தூக்காம சீக்கிரம் வீடு போயி சேரு….உங்க அப்பா எந்நேரமும் ஒரே மாதிரி இருக்கமாட்டாரு மீனாட்சி…. சத்தம் போடப்போறாரு…போ…போ…” என தன் மாமனை சரியாக கணித்தான்.
அவளும் ,” சரி மாமா….வர்றேன்…சீக்கிரம் வீட்ல பேசிடு மாமா …” என்று வைத்து விட்டு திரும்பி திரும்பி அவனை பார்த்தபடி சென்றாள்.
ஆம்…! சங்கரபாண்டியன் அப்படிப்பட்டவர் தான். நன்றாக பேசிக்கொண்டே இருக்கிறார் என நினைத்து பேசினால் திடீரென எடுத்தெரிந்து பேசி விடுவார். அவர் குணம் திடீர் திடீரென மாறிக்கொண்டே இருக்கும்..
மீனாட்சியுமே அதை அறிந்தவள் தான். ஆனால் இதுவரை அவளிடம் சங்கரபாண்டியன் அவ்வாறு பேசியதில்லை. இருப்பினும் அவளுக்கு மனதினுள் எப்போதுமே ஒருவித நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆயிரம் ஆசைகள் இருவருக்குள்ளும் இருந்தாலும். இருவரும் மற்றவர் மனதை சலனப்படுத்தக்கூடிய சொற்களைக் கூட பகிர்ந்து கொண்டதில்லை.
அதிகப்பட்சமாக எப்போதேனும் ஆளில்லாத இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் கைக்கோர்த்து நடப்பதைத் தவிர அநாவசியமாக ஈஸ்வரனின் விரல் நுனிக் கூட அவள் மீது பட்டதில்லை.
அந்தளவிற்கு கண்ணியத்தை காத்து வந்தான் ஈஸ்வரன் மீனாட்சியிடம்.
அவளும் அப்படியே. இருவருக்குள்ளும் நேச விதை துளிர்த்த நாட்களில் இருந்து இன்றுவரை மிகுந்த கண்ணியத்தை மீறிய தொடுதல் இருந்ததில்லை.
ஈஸ்வரனுக்கு மனதினுள் ஏனோ சில தயக்கங்கள் இருந்தன.
நாளை என்ன நிச்சயம் எனத் தெரியாத நிலையில் இருவரது நெருக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை.
மீனாட்சியின் மனதில் அளவுக்கதிகமான சலனத்தை ஏற்படுத்த முற்படவில்லை அவன்.
மனதை அந்த அளவிற்கு கட்டுப்பாடாக வைத்திருந்தான்.
இன்றைய இன்பம் நாளைய துன்பத்திற்கு வழி வகுத்துவிட்டால் மீள்வது கடினம் என்பதாலையே தனது அகத்தையும், புறத்தையும் கடுமையாகவே வைத்திருந்தான்.
தனது மனத்தையும் எல்லாவற்றிற்கும் தயாராகவே வைத்திருந்தான்.
ஆனால் தற்போது மீனாட்சி பேசிய பின்பு அவளை கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் நங்கூரமாய் இறங்கியது.
அவளின் மான் விழிகளை எண்ணும் போதே உள்ளத்தில் இதமான மழைச்சாரல் அடித்தது.
முகத்தை நன்றாக குளிர்ந்தநீரில் அடித்து கழுவிவிட்டு நிமிர்கையில் இனம் புரியாத உற்சாகம் தொற்றிக் கொண்டது அவனுள்.
அன்று முழுவதும் சிரித்தபடி வலம் வந்த தன் அண்ணனை வித்தியாசமாய் பார்த்தாள் புகழினி .
ருசி கண்ட பூனை போல் ஆனான் பாண்டியன்.
முதல் முத்தம் இதயம் முழுவதும் புது வித உணர்வை தந்திருக்க தவித்துப் போயிருந்தான் பாண்டியன் .
உடனே புகழினிக்கு அலைப்பேசியில் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்றவள் , *என்னவே… நேத்து தானே பாத்தோம்
அதுக்குள்ளாற திரும்பவும் கூப்பிடுதீக…. இப்படியெல்லாம் திரும்ப கூப்பிடமாட்டீகளே ….என்ன விசயம்..?” என நக்கலடிததாள்.
“ ஏன் சொல்ல மாட்ட…. நாளைக்கு ஊருக்கு கிளம்புதேன்…உன்னை பாக்கனும்னு தோணிட்டே இருக்கு…போனா நான் திரும்ப வர நாளாகும் டி….பால் பூத் பின்னாடி நிக்கேன். சீக்கிரம் வா…” என அவசரமாக அழைத்தான்.
“ ஹலோ…! சார்….மணி எட்டாகிட்டு. இப்ப எப்படி அங்கன வர்றது. ஒரே இருட்டாக இருக்கும். என்னால் முடியாது. அண்ணன் இருக்கு. பாத்துட்டா வம்பு. எங்கம்மா என்னைய கொன்னே போட்டுருமாக்கும்…” எனக் கூறினாள்.
“ ஏய்…புகழினி நீ ரொம்ப பயந்தவ தான் நான் நம்பிட்டேன். பாதி ராத்திரி பேய் கூட கடலை போடுதவ….நீ…எட்டு மணிக்கு என்னைய பாக்க வாரதுக்கு உனக்கு பயமா…? யாருக்கிட்ட காது குத்துற…? சரி போ..வரலன்னா இன்னும் மூணு மாசத்துக்கு என்னைய பாக்கவே முடியாதாக்கும்…” என வைத்து விட்டான்.
“ இம்சை…” என முணங்கியவள். மீண்டும் அவனுக்கு அழைத்து வருவதாக கூறினாள்.
அவளுக்குமே தவிப்பாக இருந்தது. முழுதாக மூன்று மாதங்கள் அவனைப் பார்க்காமல் இருப்பது மலையை பிளக்கும் வேலைப் போன்றதல்லவா..? . எனவே ஏதேதோ சாக்கு போக்கு கூறி விட்டு தனது தாயிடமும் தமையனிடமும் தப்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.
ஓட்டமும் நடையுமாக பால் பூதத்தை அடைந்தவள். அவனது அலைப்பேசிக்கே அழைக்க தனது ஃபோனை எடுப்பதற்குள் வலிய கரம் ஒன்று அவளது கைப்பற்றி இழுத்தது.
“ ஆஆ…” என கத்துவதற்குள்ள அவளது வாயைப் பொத்தி இருந்தான் பாண்டியன்.
அவளோ கோபமாக, “என்ன பண்ணுறீங்க பயந்துட்டேன் தெரியுமா…?” என்றாள்.
அவனோ அவளை தன்னுடன் நன்றாக இழுத்து அணைத்துக் கொண்டான்.
“ ஷ்ஷ்….கொஞ்ச நேரம் பேசாத அமைதியா இரு…” என்று கூறி அவளது முகத்தை தனது நெஞ்சினில் அழுந்த வைத்துக் கொண்டான்.
அவளுமே முதலில் சீறியவள் பின்னர் அவனது அணைப்பில் அமைதியானாள்.
“ சீக்கிரம் வந்திருங்க பாண்டியன்” என்றாள் முகத்தை நிமிரத்தாமலேயே…
“ ம்ம்…கண்டிப்பா …வந்து முத வேலையா உன்ன கல்யாணம் காட்டனும். இதுக்கு மேல என்னால முடியாது டி புகழினி. சும்மா இருந்தவனை உசுப்பேத்தி வச்சிடவே…. இப்ப எனக்குதேன் கஷ்டமா இருக்கு டி…” என்றவன் அவள் ஏதோ கூற வருமுன் அவளது இதழ்களை அழுத்தமாக சிறைப்பிடித்தான்.
தேன் மிட்டாயை ரசித்து உண்பதை போன்று அவளது மெல்லிய உதடுகளை சுவைத்தான்.
இரு கரங்கள் அவளது இடையை இறுகப் பற்றியிருந்து.
மறைவாக இருந்த அந்த இடம் அவர்களுக்கு வசதியாக போயிற்று.
அவளை முத்தமிட்டுக்கொண்டே அங்கிருந்த சிறு திண்டில் அமர்ந்தவன்.
புகழினியை தன் தொடையில் அமரவைத்தபடி முத்தத்தை தொடர்ந்தான்.
அவளது இடையில் இருந்த அவனது கரங்கள் மெல்ல மெல்ல எல்லை மீறியது. அதை உணரும் நிலையில் அவளுமில்லை. கரங்கள் ஒருபுறம்,அவனது இதழ்கள் ஒருபுறம் என மாயவித்தையை நிகழ்த்திக் கொண்டிருக்க, மூச்சு முட்டியது அவளுக்கு.
அவனை விலக்கியவள். அவன் கரங்கள் இருந்த இடத்தை கண்டு அதிர்ந்தாள்.
“ யோவ்…. கையை எடுய்யா…” என்பதற்குள் அவளது குரல் இறங்கியது.
“ ப்ளீஸ்…டி என்னால முடியல” என்றான்.
“ ஐய்யோ…இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா….அம்புட்டு தான்…புடவையில் இருந்து கையை எடுங்க…கூச்சமா இருக்கு…” என நெளிந்தாள்.
“ என்னிக்கா இருந்தாலும் எனக்கு தான் சொந்தம். தொட்டா தப்பில்லை டி…” என்றான்.
அவளோ சட்டென நிதானத்திறகு வந்தவள் அவனை விலக்கிவிட்டு தனது புடவையை சரி செய்தவள் அவனது முகத்தை கைலேந்தி அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,” அது சொந்தமாகும் போது….எடுத்துக்கோங்க….மொத்தமா…இப்ப அதுக்கான நேரமில்லை…” என அவனது இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டாள்.
அவனிடத்தில் அவள் கூச்சம் கொள்வதில்லை.
தன்னிடம் முழு உரிமை உள்ளவன் அவன் மட்டுமே என்ற எண்ணம் வேரூன்றி விருட்சமாக வளர்ந்து நின்றது அவளுள். எனவே எதனைப்பற்றியும் பயமில்லை அவளுக்கு . எல்லை மீறும் உணர்வுகளையும் அவனிடத்தில் கொட்டவும் முடியும். அதனை சட்டென கட்டுக்குள் கொண்டு வரும் மன உறுதியும் உள்ளது அவளிடம்.
நான் இப்படித்தான் ….எனக்கானவன் இவன் ….எந்த நிலையிலும் யார் முன்னிலையிலும் தைரியமாக கூற தயாராகத்தான் இருந்தாள்.
தனது அண்ணனுக்காகவும் மீனாட்சிக்காகவும் தான் சற்று அமைதியாக இருக்கிறாள்.
அவளது நேசத்தின் அளவை நினைத்து சிலிர்த்துப் போனவன் மீண்டும் அவளது இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான் .
அவளை விட்டுச் செல்லவே மனமில்லை.
உள்ளமும் உடலும் அவளுக்காக ஏங்கித் தவித்தது.
இருப்பினும் மேலும் அங்கிருப்பது பாதுகாப்பில்லை என்பதினால், “ புகழினி..என்னோட பிசினசை அடுத்து லெவல்க்கு எடுத்துட்டு போறேன். நல்லபடியா முடிஞ்சிரும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. வந்ததும் மீனாட்சி கல்யாணம்….அதுக்கடுத்து நம்மளது தான். “ என்றான்.