கண்ணை மூடி படுத்துக் கொண்ட மகிமாவுக்கு தூக்கம் தான் வரவில்லை… மெதுவாக கண்களை திறந்து விடிவிளக்கின் ஒளியில் அபின்ஞானை பார்த்தாள்…
வளமை போலவே வெற்று மார்புடன் என்னைப்பார் என் அழகைப் பார் என்பது போல் படுத்திருந்தான்…
இப்போதெல்லாம் அவன் அழகை தன்னை மீறி ரகசியமாகவே ரசிக்க ஆரம்பித்து விட்டாள்…
அபின்ஞானுக்கு யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வு மல்லாக்க படுத்திருந்தவன் அவளை திரும்பிப் பார்த்து, “என்ன விஷயம்” என்று கேட்க… அவளோ அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், “ஏய் மகிமா” என்று மீண்டும் அழைத்தான்.
அவளிடமும் எந்த அசைவும் இல்லை தூக்கத்தில் அவள் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது…
கண்ண தொறந்துட்டே தூங்குறாளா? என்ன கொடுமைடா இது… பேய் மாதிரி கண்ண திறந்துட்டு தூங்குறத பாரு” என முனுமுனுத்துக் கொண்டே அவள் கண்களை மூடிவிட்டவன் தூங்க ஆரம்பிக்க, அவன் அருகே நெருங்கி வந்த மகிமா… அவன் மார்பில் கையை போட்ட படி தூங்க…
அதிர்ந்து கண்களை விரித்தவன் தலையை தூக்கிப் பார்த்தான்… அவள் கையோ, அவன் குத்தி இருந்த டைமண்ட் டேட்டுவில் தான் இருந்தது…
எச்சிலை கூட்டி விழுங்கியவன், சரியான இம்சை நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டா…” என்று முனுமுனுத்தபடி அவள் கையை தன் மார்பிலிருந்து தூக்கி அவள் மேலயே போட்டான்…
மீண்டும் அவன் தூங்க ஆரம்பிக்க முன்பே… அவள் கால் அவன் உயிர் நாடியிலே வேகமாக வந்து விழ…
“ஐயோ அம்மா” என்று கத்தியவனுக்கோ, வலியில் உயிர் போனது…
அவளை கட்டிலில் ஓரமாக தள்ளி விட்டவன், வலியில் முனங்கியபடி… “தூங்கிட்டு இருக்காளா முழிச்சிட்டு இருக்காளான்னு ஒண்ணுமே புரியல” என்றவாரு அவள் அருகே சென்றவன், “ராட்சஷி… ராட்சஷி” என்று அவள் தலையில் கொட்ட, சட்டென கண்களை திறந்தாள் மகிமா.
இரண்டாவது முறை கொட்ட போனவனது கை அந்தரத்திலே நின்றது…
தன் இரு கைகளாலும் அவன் கழுத்தை பிடித்தவள், “டேய் என்ன கொல்ல பாக்குறியா டா…” என்ற படி அவன் கழுத்தை தன் கூறிய நகங்களால் பிராண்டி வைக்க…. “ஏய் வலிக்குது ராட்சஷி” என்று மேலும் இரு முறை அவள் தலையில் கொட்டி, கட்டிலின் ஓரத்துக்கு அவளை தள்ளிவிட்டு இருவருக்கும் நடுவே தலையணைகளை அடுக்கிய அபின்ஞான், “இவளுக்கு என்னென்ன வியாதி இருக்குன்னே தெரியல… திணுசு திணுசா பண்ணிட்டு இருக்கா…” என்று எண்ணியவன்…” குப்புறப் படுத்தபடி தூங்க ஆரம்பித்தான்.
அவன் தள்ளிவிட்டது போல் இருந்து தூங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்த மகிமாவுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை…
இவ்ளோ நாளும் என்ன வெச்சு செஞ்ச தானே… இனி இந்த இம்சய ராவு முழுக்க அனுபவி” என சந்தோஷமாக நினைத்துக் கொண்டவளுக்கு இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை…
அவள் சிரிப்பில் உடல் குலுங்கியதை அவன் வலியில் அறிந்து கொள்ளவில்லை, “ஐயோ… கண்ட்ரோல் மகி… அவனுக்கு விளங்கினா உன் உயிர் போயிடும்… ஆனா எப்படியோ இன்னைக்கு உன் டேட்டுவ தொட்டுட்டேன்டா” என நினைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள் மகிமா…
அடுத்த நாள் காலையிலிருந்து அபின்ஞான் மகிமாவை முறைத்துக் கொண்டே சுற்றித்திரிந்தான்… “ஐயோ மகி… எதுவும் தெரியாதது போலவே நடிச்சிடு” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள், அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டே தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்…
அன்னபூரணி அம்மாளும் பசுபதியும் ஏதோ வேண்டுதல் இருப்பதாக கூறி காலையிலே கோயிலுக்கு சென்றிருந்தனர்…
மகிமாவும் தன் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று சத்தமில்லாமல் அவனிடமிருந்து நழுவிச் சென்றாள்.
அன்றோ அவளைப் பார்க்க மகாதேவ் வந்திருக்க வீட்டில் யாரும் இருக்கவில்லை அபின்ஞான் தவிர…
அபின்ஞானை கண்ட மகாதேவ், “மகி இல்லயா?” என்று கேட்க,
“அவ பிரண்ட பார்க்க போயிருக்கா” என்றான் அபின்ஞான் அலட்சியமாக…
அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு மகாதேவ் கிளம்பப் பார்க்க… “டேய் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றான் அபின்ஞான்.
“சொல்லு அபி…” என்று அவனை புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தபடி மகாதேவ் கேட்க, அங்கிருந்த சோபாவை காட்டி… அமருமாறு சைகை செய்த அபின்ஞான், தேவுக்கு எதிர்ப்புறமிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அபின்ஞானுக்கு நகை விஷயம் நெருடலாகவே இருந்தது.. அதனால் இப்பொழுதே மகாதேவுடன் பேசிவிட நினைத்தான். “நீ எதுக்கு மகிமாவுக்கு கவரிங் நக வாங்கி கொடுத்திருக்க” என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.
அவனை அதிர்ச்சியாக பார்த்த மகாதேவ், “யார் சொன்னா?” என்று கேட்டான்.
“யாரு சொன்னா என்ன? நான் சொல்றது உண்மதானே” என்று அவனை தன் கோப விழிகளால் அனல் தெறிக்கப் பார்த்தபடி கேட்க,
“நான் இதுவர மகிக்கு ஒரு செட் கவரிங் நக வாங்கி கொடுக்கல… ஒரிஜினல் தான் கொடுத்திருக்கேன்… மகி தான் அத போட மாட்டா… அதுக்கு பதிலா அவளே கவரிங் ஜூவலர்ஸ் என் கிட்ட செய்ய சொல்லி எடுத்துக்குவா… அதுமட்டுமில்லாம ஜுவல்ஸ் போட்டாலே உடைச்சிட்டு தான் வருவா…” என்று மகாதேவ் கூற,
அவனை அதிர்ச்சியாக பார்த்தான் அபின்ஞான்… அவனால் இவனது பேச்சை இப்போதும் நம்ப முடியவில்லை…
“ஒரு நிமிஷம் நில்லு” என்ற அபின்ஞான் நேற்று இரவு அவள் ஒரிஜினல் ஜுவல்ஸ் என்று சொல்லி வைத்த பெட்டிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு வந்தவன், “என் பொண்டாட்டிக்கு நானே நகை வாங்கி குடுப்பேன்…” என்று அப்பையை அவன் முன்னால் வைத்தான்…
“ஓஹோ” என்ற மகாதேவ் அப்பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்து வைத்தவன், “இதெல்லாம் நான் மகிக்கு வாங்கின ஜுவல்ஸ் தான்… இந்த ஜுவல்ஸ்ஸ கொஞ்சம் பார்த்துட்டு நீ என்னோட பேசு” என்றான்.
பெட்டிகளில் இருந்த நகைகள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப தன் தாடியை நீவியபடி உற்று பார்த்தான் அபின்ஞான்.
அவனுக்கு அனைத்து பொருளுமே மிக மிக நேர்த்தியாக இருக்க வேண்டும். ஆனால் மகிமாவின் ஒவ்வொரு நகையிலுமே ஏதாவது ஒரு டேமேஜ் இருந்தது…
“அடிப்பாவி… என்னமா உருட்டி இருக்கா… அவள பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருந்தும் நான் தான் கவனமா இருந்திருக்கணும்” என்று மனதினுள் நினைத்தவனது முகம் போன போக்கை பார்த்து சிரித்த மகாதேவ், “உனக்கு இன்னும் மகிய பத்தி சரியா தெரியல அபி… அவ வாய தொறந்தா பேசுறதே பொய்தான்… அதுல உண்மைய தேடி கண்டுபிடிக்கணும்… அதனால நீயே யோசிச்சு சொல்லு… இந்த ஜுவல்ஸ்ஸ நான் என்ன செய்ய? என்று கேட்டபடியே மகாதேவ் எழுந்து கொள்ள,
“வெச்சிட்டே போ…” என்றான் அபின்ஞான்.
“நீ எனக்கு எதிரி தான்… ஆனா நீ இப்ப எங்க வீட்டு மாப்பிள்ளை ஆய்ட்ட அதனால உன்கிட்ட ஒன்னு சொல்ல நெனக்கிறேன், பார்த்து கவனமா இருந்துக்கோ” என்று இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் தோளில் தட்டி விட்டு சென்றான்…
ஆழ்ந்த மூச்சை விட்டவன், “வீட்டுக்குத் தானே வரணும் அப்போ இருக்குடி உனக்கு” என்று சொல்லிக் கொண்டவன், தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்…
பெரியவர்களும் இன்னும் வந்து சேரவில்லை… மதியமும் தாண்டி விட மகிமாவும் இன்னும் வரவில்லை… “எங்க போனா… ஏன் வீட்டுக்கு வரல” என்று எண்ணியப்படியே தனியாக சாப்பிட்டு விட்டு தன் அறைக்குள் சென்றவன், அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்க்க தொடங்கினான்…
அபின்ஞானியின் கண்களோ அவனையும் மீறி நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டன…
மாலை மூன்று மூன்று மணி தாண்டி வீட்டுக்கு வந்தாள் மகிமா… வீட்டில் யாரும் இருக்கவில்லை…
“ஓஹ்… அபி ஆபிஸ் போயிட்டான் போல தப்பினேன்” என்றபடி தன் அறை கதவை திறக்க, அங்கே அவள் யார் இருக்க கூடாது என்று எண்ணினாளோ அவனே சாஷ்டமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்…
“ஐயோ இவன் ரூம்லயா இருக்கான்” என்று வந்த வேகத்திலே வெளியே செல்ல பார்க்க… அவளை கண்ட அபின்ஞான் சட்டென சோபாவில் இருந்து பாய்ந்தெழுந்தவன், அவள் கதவை திறக்க முடியாது அவளுக்கு பின்னால் வந்து நின்று அவள் மேலே சாய்ந்து கதவை இரு கைகளாலும் அழுத்தமாக பற்றிக் கொண்டான்…
அவள் கதவை திறக்க கூடாது என்ற வேகத்தில் அவன் இருவரது நெருக்கத்தையும் பற்றி யோசிக்கவில்லை….
மகிமா கதவின் புறமாக திரும்பி நின்றிருக்க… அவன் உருண்டு திரண்ட வெற்றி மார்பில் அவள் முதுகுப்புறம் கோழிக்குஞ்சு போல் அடங்கியிருந்தது…
அவன் தேகத்தின் உஷ்ணத்தை அவள் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு அவனது நெருக்கம் இருந்தது…
அவளுக்கு அவன் நெருக்கம் இன்ப அவஸ்தையாகிப் போனது…
ஷேர்ட் போடாம இருந்து என்ன டெம்ப்ட் பண்றதே இவன் வேலையா போச்சு… பொண்ணு நானே அடக்க ஒழுக்கமா இருக்கேன். இவன் என்ன எப்ப பார்த்தாலும் தொறந்து போட்டுட்டே சுத்துறான்” என மனதினுள் அவனுக்கு டோஸ் விட்டுக் கொண்டே மெதுவாக அவனை நோக்கித் திரும்பினாள் மகிமா.
அபின்ஞானோ அவர்கள் இடையே இருந்து நெருக்கத்தை கண்டும் காணாதது போலவே இருந்தான்…
“அபி கொஞ்சம் தள்ளுங்க…” என்றபடி அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவன் கைச்சிறையில் இருந்து அவளால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை…
அவள் விலகப் பார்ப்பதை கண்டவன் நக்கலான புன்னகையுடன் இன்னும் நெருங்கி நின்று கொண்டான்…
“ஐயோ இவனோட முடியல பெருமாளே… என்ன சோதிக்கிறதே முழு நேர வேலை வச்சிருக்கான் போல” என மனதினுள் அவனுக்கு கவுண்டர் கொடுத்தபடி இருந்தாள்…
அவளை உற்றுப் பார்த்தவன், “காலையிலிருந்து எதுக்கு என்கிட்ட இருந்து ஓடிட்டே இருக்க… ஏதாவது தப்பு பண்ணயா?” என்று கேட்க,
“ஐயோ வசமா சிக்கிட்டேனே… சிங்கத்தை சொறிஞ்சு விட்டுடிருக்கேனே எப்படியாவது தப்பிடு” என்று அவள் மனம் கூப்பாடு போட…
அபின்ஞானோ அவள் பதிலை எதிர்பார்த்து அசையாமல் நின்று இருந்தான்…
“அபி… நான் என் பிரண்ட்ஸ பார்க்க போயிருந்தேன்… உங்க கிட்ட இருந்து நான் எதுக்கு ஓடணும்… இப்ப கூட பாருங்க உங்க கைக்குள்ள தானே இருக்கேன்” என திரு திருவென முழித்தபடி கூற,
“ஓஹோ, ஆனா உன் பார்வையே சரியில்லையே” என்று தன் தாடியை வருடிய படி அபின்ஞான் கேட்க,
“என் பார்வையே அப்படித்தான் அபி” என்று உதடு சுழித்து அப்பாவியாக கூறினாள்.
அவளுக்கு எந்த பதிலும் சொல்லாது, குனிந்து அவள் இரு கைகளையும் பற்றிக் கொள்ளவும், “டேய் ஏன்டா கைய பிடிக்கிற” என்று அவள் எகிரிக் குதிக்க,
அவன் அழுத்தமான பார்வையில் மரியாதையை வரவழைத்துக் கொண்டவள், சமாளிப்பாக சிரித்து, “அபி கைய விடுங்களேன்…” என்று மென்மையாக கூற,
“சகிக்கல…” என்று அவள் பேசிய விதத்தில் அவன் முகத்தை சுளிக்க…
அவளுக்கோ சுர்ரென்று கோபம் தான் வந்தது…
அவன் தலையைக் கொண்டு போய் சுவரில் முட்டத்தான் நினைத்தது…
அபின்ஞான் அவள் கைகளை விடாது அவள் கைவிரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்…
மகிமா அவனை புருவம் சுருக்கி பார்க்க, “எதுக்குடி இவ்ளோ நகம் வளர்க்குற? முதல்ல போய் நகத்தை வெட்டு” என்று அவள் நீண்டிருந்த நகங்களை பார்த்தபடி சொன்னான் அபின்ஞான்.
“நகமெல்லாம் வெட்ட முடியாது…” என்று அவள் பிடிவாதமாக கூற,
“நான் உன்கிட்ட ஐடியா கேட்கல… போய் நகத்த வெட்ட சொன்னேன்” என்றான் அதிகாரமாக…
“திமிரு புடிச்சவன்… ராட்சஷன்… பேசுறத பாரேன்” என நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்கு போன் வருது அபி” என்று கை நீட்டி அவன் போனை காட்ட,
அவனும் எங்கே என்று திரும்பிய சமயம்
“நகத்த வெட்ட முடியாது… போடா டேய்” என்று கூறிக்கொண்டு அவள் அங்கிருந்து ஓட…
எட்டி அவள் தலை முடியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் அபின்ஞான்…
“என்னயே ஏமாத்த பாக்குறியா? முதல்ல என் கழுத்த பாருடி… நைட் என் கழுத்த குரங்கு மாதிரி பிராண்டி வச்சிருக்க” என்று அவளை முறைத்தபடி கூற…