இதயமே இளகுமா அத்தியாயம் 3

5
(5)

விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம்.

அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது.

அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர்.

தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது.

நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக காட்சியளித்தான்.

அவன் மீது விரிக்கப்பட்டிருந்த வெள்ளை கம்பளத்துக்கு உள்ளே, மெலிதான கிரே கலர் டி-ஷர்ட், அவன் மார்பை மெதுவாக உயர்த்திக் கீழிறக்கியபடி, அவன் சுவாசத்தோடு ஒத்திசைந்து நடனமாடியது.

ஒரு கரம், தலையணைக்குக் கீழே மடக்கி வைக்கப்பட்டிருந்தது; மற்றது மெத்தை மேலே சாய்ந்திருந்தது.

அவன் படுத்திருந்த கட்டில் பெட், பஞ்சு நிறைந்த மெத்தை, அவனை அப்படியே உள்ளே சுருட்டி வாரிக் கொண்டிருந்தது.

வீட்டினுள் அப்படியொரு நிசப்தம். அவன் மூச்சுக்காற்றின் சத்தம் மட்டுமே அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

அந்த அமைதியை வெடிக்கச் செய்தது, அவன் படுக்கைக்கு அருகிலிருந்த டேபிள் மேலே வைக்கப்பட்டிருந்த போன் சத்தம்.

திரையில் ஒளியுடன் மின்னியது

“Bala Calling…”

தூக்கத்தின் ஆழத்தில் இருந்த சமரின் புருவங்கள் சற்று அசைந்தன. ஆனால் அவன் கண்கள் இன்னும் திறக்கவில்லை.

சத்தம் மறுபடியும் ஒலித்தது.

அவனது நீண்ட வலது கை, மெதுவாக மெத்தையின் மேல் போனை தேடிச் சென்றது.

கண்கள் திறக்காமலேயே, போனை தொட முயன்றான்.

அழைப்பு நின்று, மறுபடியும் ஒலித்தது…

தூக்கத்தில்கூட நண்பனின் தொந்தரவை புரிந்துகொண்டவன் போல, மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான்.

“மூணாவது மிஸ்டு கால். இதுக்கப்புறம் போனை எடுக்கலை, பாலா வீட்டுக்கு வந்துடுவான்…” என மனதில் நினைத்தவன் , கண்களை இறுக்கமாக மூடி, மீண்டும் மெதுவாக விழிகளைத் திறந்தான்.

மங்கலான சூரிய ஒளி, அவன் கண்களில் விழுந்தது.

அவன் முகத்தில் ஆழ்ந்த சோம்பல்… ஒரு மெதுவான புன்னகை.

அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து, குளியலறைக்கு சென்று, தயார் ஆகி வந்தான்.

மீண்டும் அழைப்பு, இப்போது போனிலிருந்து அல்ல… வீட்டின் ஹாலின் பெல்!

வந்திருப்பது யாரென தெரியும் என்பதால், மெதுவாகவே வந்து கதவைத் திறந்தான்.

தன்னை முறைத்தபடி நிற்கும் நண்பனை, புன்னகையுடனே எதிர்கொண்டான் சமர்.

பாலாவை, “உள்ளே வா,” என்று அழைத்த சமர், அங்கிருந்து சோபாவில் அமர்ந்தான்.

“என்னடா, நீ ஹாஸ்பிடல் வரலையா…?” என்ற பாலாவிடம்.

“டேய்..! உனக்கு மனசாட்சியே இல்லையாடா! ஒரு ஹார்ட் ஆப்ரேஷன் முடிந்து, மார்னிங் நான்கு மணிக்குதான் வீட்டிற்கு வந்தேன். நிம்மதியா தூங்க கூட விடமாட்றிங்க!”

“டேய், இன்னைக்கு என் ஊருக்கு போகனும் மறந்துட்டியா?”

“நியாபகம் இருக்கு, பாலா. ஆனால் என்னால் வர முடியாது.”

“ஏன்…?”

“இன்னைக்கு அம்மா, அப்பா கல்யாண நாள்.”

“ஓஹ்… ஆமால்ல, மறந்துட்டேன்டா!

அம்மா, அப்பா எங்கே…?”

“காலையிலே கோவிலுக்கு கிளம்பிட்டாங்க.”

“சரிடா. அப்போ, நீ எங்க ஊருக்கு வரலையா?” என்றவனின் முகம், சோகமானது.

“வறேன் பாலா! நான் வராமல் எப்படி…? ஆனால் இன்னைக்கு வரமுடியாது. நீங்க போங்க. நாளைக்கு ஈவ்னிங் அங்கே இருப்பேன்.”

“கடைசி நேரத்துல இப்படி சொன்னால் எப்படி? நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வாறாங்க. உன்னை மட்டும் எப்படி விட்டு போறது?”

“டேய், நான் வரமாட்டேன்னு சொல்லல… நாளைக்கு மார்னிங் அங்கே இருப்பேன்.

உங்க ஊர் திருவிழா முடிந்து, நம்ம மெடிக்கல் கேம்ப் பத்து நாள் இருக்கு. அதுக்காகவாவது கண்டிப்பா வருவேன்.”

“சரி. இப்போ ஹாஸ்பிடல் வர்றியா இல்லையா?”

“இல்லை‌… இன்னைக்கு நான் லீவ். ரொம்ப டயர்டா இருக்குடா.

எப்படியும் நீ என்னை தேடி வருவன்னு எனக்கு தெரியும். அதான் எழுந்து வந்தேன்.”

“சரிடா. ரெஸ்ட் எடு.

நான் கிளம்பும்போது போன் பண்றேன், சமர்.”

“ம்ம்ம்… ஓகே டா.”

பாலா அங்கிருந்து கிளம்பினான்.

கோகிலா, சாலையை பார்ப்பதும், செம்பருத்தி முகத்தை பார்ப்பதுமாய் நடந்து கொண்டிருக்க…

“என் முகத்தில் என்ன தேனா வடியுது?” என்றவளை, மீண்டும் குறுகுறுவென பார்த்தாள் கோகி.

“எதுக்காக இப்போ இப்படி என்னையே பாத்துட்டு வர? ஒழுங்கா இப்ப சொல்லல, கல்லை தூக்கி மண்டையை உடைத்து விடுவேன்!” என்றதும்,

“இல்லை… நீ பெரிய வீட்டை சுத்தம் பண்ண வரமாட்டேன்னு நினைத்தேன். ஆனால், காலையிலேயே நீயே வந்து கிளீன் பண்ணிட்டு வரலாம்னு சொன்னியா, அதான் ஆச்சரியமா இருந்தது. உன் முகத்தை பார்த்துட்டே வரேன்…” என்ற கோகியிடம்,

“நீதானே சொன்ன, சுத்தம் பண்ணா பணம் தருவாங்கன்னு. அதான் நம்ம செலவுக்கு ஆகும். இரண்டு நாளில் வேலையில் ஜாயின் பண்ணனும். பணம் கிடைத்தால் நமக்கு துணி எடுத்துட்டு வந்துடலாம்,” என்றதும்,

“ஆமா,” என்றாள் கோகி.

பேசியபடியே இருவரும் அந்த வீட்டிற்கு வந்தனர்.

அங்கே யாரும் இருப்பது போல தெரியவில்லை. வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாவி வேண்டுமே…

“என்ன கோகி…? யாரையுமே காணோம். வீட்டை கிளீன் பண்ணனும் சொன்னாங்கன்னு சொன்ன…”

“ஆமா செம்பா. நானும் அதான் பாக்குறேன். அம்மா சொல்லிட்டேன்னு சொன்னாங்களே, அந்த காவலுக்கு இருக்கிற தாத்தா கொண்டு வந்து சாவி தருவாறுன்னு சொன்னாங்க. ஆனால், யாரையும் காணோம்…” என இருவரும் சுற்றி முற்றி, யாராவது இருக்கிறார்களா என தேடி பார்க்க, யாரும் இருப்பது போல தெரியவில்லை.

“யாரை தேடுறீங்க?” என்ற சத்தம் கேட்க, கோகியும் செம்பாவும் திரும்பினார்.

ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும், செம்பா கோகியை முறைக்க,

“எனக்கு தெரியாதுடி இவங்க வருவாங்கன்னு…” என்றவளின் முகத்தில் பயம்.

“ஆத்தா, நீங்க வந்து இருக்கீங்க? தோட்டக்கார தாத்தா எங்க…?” என கோகி அவரிடம் கேட்க…

செம்பருத்தியை பார்த்தபடியே,

“எனக்கு இங்க வரணும்னு ஆசையா இருந்துச்சு. அதான் வந்தேன்,” என்றவர், கையில் இருந்த சாவியை கொடுத்தார்.

“வீட்டைக் சுத்தம் பண்ணுங்க. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்,” என்று வீட்டின் முன்புறம் இருந்த திண்ணையில் வெத்தலையை இடித்தபடி அமர்ந்து கொண்டார்.

“கோகி பயந்ததுபோல், செம்பா அவரை கண்டுகொள்ளவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு,” என வந்த வேலையை பார்த்தாள் செம்பருத்தி.

வீட்டிற்குள் நுழைந்ததும் இதயம் படபடவென அடிக்க செம்பாவின் உடல் புல்லரித்தது. பழைய நியாபகங்கள் பெண்ணவள் மனதை இதமாக வருடின. அந்த வீட்டின் இரண்டாவது அறையின் முது அவளின் பார்வை பட்டது., மறக்கும் நினைவுகளா அது. அதனாலே இந்த வீட்டிற்கு வரவேண்டாம் என நினைத்தாள். இந்த வீட்டிற்குள் வந்து பல வருடங்கள ஆகிறது. கண்கள் குளம் கட்டின. அழுதால் கோகி என்னவென கேட்பாள் என பல்லைகடித்தபடி மனதை அலை பாயவிடாமல் தன்னைத்தானே கட்டுபடுத்திகொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இரண்டு மணி நேரத்திற்கு பின், இருவரும் வேலையை முடித்துவிட்டு வெளியே வர, திண்ணையில் அமர்ந்திருந்தவரை காணவில்லை.

“ஆத்தா… ஆத்தா!” என சத்தமிட்டாள் கோகி.

“நான் இங்கே இருக்கிறேன்?” என்ற சத்தம் வந்த திசையைப் பார்த்தனர்.

மல்லி, முல்லை என பூஞ்செடிகள் போட்டி போட்டு வளர்ந்திருந்த இடத்தில், நின்று கொண்டிருந்தார்.

அங்கே சென்றாள் கோகி.

“ஏன் ஆத்தா, இந்த செடிகுள்ள வந்து நிக்கிற…? ஏதாவது பூச்சி இருந்தா கடிச்சிட்டு போகுது!”

“இதுல ஒரு செடியை நட்டு வச்சிட்டு போனேன். அதான் தேடிட்டு இருக்கேன்.”

“என்ன செடி ஆத்தா…? சொல்லு, நான் கண்டுபிடித்து தரேன்,” என கோகியும் அவரோடு சேர்ந்து தேட…

“செம்பருத்தி,” என்றதும்,

செம்பாவை பாவமாக பார்த்தாள் கோகி.

செம்பா பார்வை அவர்களிடம் இல்லை. ஆனால், அவர்கள் பேசுவது அவள் காதிலும் உள்ளத்திலும் விழத்தான் செய்தது.

“ஏன் ஆத்தா…? செம்பருத்தி மரம் மாதிரி வளரும். அதை போய் இந்த செடிகுள்ள நட்டு வைத்திருக்கிற…! எப்படி வளரும்?”

“செம்பருத்தி செடி, இந்த இடத்துல எங்கேயாவது இருந்துச்சுன்னா என் மருமக வந்து புடுங்கி போட்டுடுவாள். அவளுக்கு தான் செம்பருத்தி நாளே புடிக்காதே…” என்றதும், செம்பாவின் முகம் இறுகியது.

“சரி… நீ இப்படி தெரியாத மாதிரி நட்டு வைத்தால் மட்டும், இந்த செடி வளர்வது தெரியாதா…? இது பெரிய மரம் மாதிரி வளர தானே செய்யும்…” என, தன் முக்கியமான சந்தேகத்தை கேட்டாள் கோகி.

“ஆமா கண்ணு. செம்பருத்தி என் இடத்துலே வளந்து, பூத்து குலுங்கனும்னுதான் நட்டு வைக்கிறேன். விதி நம்ம தலையில் என்ன எழுதிருக்கோ…” என்றவர், ஏக்கப் பார்வையுடன் கூறினார்.

பெண்ணவளை தீண்டியது அந்த பார்வை. அந்தப் பக்கம் பார்க்கவில்லை என்றாலும், அவரின் பார்வை தன் பக்கம்தான் இருக்கும் என்பதை பொண்ணவள் நன்கு அறிவாள்.

அந்தப் பக்கம் திரும்பாமலேயே,

“கோகி, தேவையில்லாத பேச்சு வேண்டாம்.கிளம்பனும், பணத்தை வாங்குறியா? நேரம் ஆகிடுச்சி…”

“சரி,” என அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு கிளம்பினர் இருவரும்.

தன்னை பார்க்காமலேயே போகும், தன் மகளின் மகளைப் பார்த்தபடி அமர்ந்தார் சோலையம்மாள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!