விஷம் – 37
அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்று விட்டு யாழவனுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவளுடைய கரமோ மென்மையாக தன்னுடைய வயிற்றை வருடிக் கொண்டிருந்தது.
யாழவனோ நேற்றைய நாளின் பிறகு அவளிடம் கெஞ்சவோ அவளை வற்புறுத்தவோ இல்லை.
அவளைப் பரிசோதித்த வைத்தியர் தாராளமாக அவள் இந்தியா செல்லலாம் எனக் கூறி விட அவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
எப்படி பயணம் செய்ய வேண்டும் என அவளுக்கு சில அறிவுரைகளை வைத்தியர் கூறி முடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏறியவன் தங்களுடைய வீடு நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் இடையே மௌனம்தான் நிலவியது.
வீடு வந்ததும் அவள் தன்னுடைய அறைக்குச் சென்று விட ஆன்லைனில் அவளுக்கான டிக்கெட்டை புக் செய்தவன் அவளுடைய அறையின் முன்பு நின்று அவளுடைய அறைக் கதவைத் தட்டினான்.
மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தவள் என்ன என்பது போல அவனைப் பார்க்க “டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. நாளைக்கு காலைல பிளைட்.. ஆறு மணிக்கெல்லாம் ஏர்போர்ட் போகணும்.. ரெடியாயிரு..” என்றவன் அவளுடைய பாஸ்போர்ட் மற்றும் டாக்குமெண்ட்களை அவளிடம் கொடுத்துவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவளோ எதுவும் கூறாது கதவைப் பூட்டிவிட்டு படுக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு நெஞ்சமெல்லாம் படபடத்தது.
அன்னையை அழைத்து நடந்ததைக் கூறினால் சில வேலை அனுசரித்துப் போ என்று விடுவாரோ என்ற பயத்தில் அவள் அவரிடம் எதையுமே கூறவில்லை.
எதுவாக இருந்தாலும் இங்கிருந்து இந்தியா சென்றதற்குப் பின்னர் நேரிலேயே பேசிக்கொள்ளலாம் என்ற முடிவில் அமைதியாக இருந்தாள் அர்ச்சனா.
எவ்வளவோ தைரியமாக முடிவை எடுத்திருந்தாலும் அழுகை வரத்தான் செய்தது.
அவளும் காதலித்து விட்டாளே.
இந்தக் காதல் அமுதம் அல்ல துளி விஷம் என எண்ணிக் கொண்டாள் அவள்.
அவனைப் பிரிவது அவளுக்கும் வலிதான்.
ஆனால் அவனுடனேயே இருந்து இந்த வலியை தினம் தினம் அனுபவிப்பதை விட இங்கிருந்து சென்றால் சில நாட்களில் இந்த காயங்கள் ஆறிவிடும் என்ற நம்பிக்கை அவளுக்குள் இருந்தது.
இந்தியா செல்வதற்கு எதையுமே அவள் பேக் செய்ய வில்லை.
அவன் வாங்கிக் கொடுத்த ஆடை அணிகலன்களை கொண்டு செல்வதில் கூட அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.
அவளுடைய மடிக்கணினி சார்ஜர் சில தேவையான இதர பொருட்களை ஹேண்ட் லகேஜ் ஆக எடுத்து வைத்தவள் ஒரே ஒரு ஆடையை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
மீண்டும் அவளுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவன்தான் வந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்த விடயம் தானே.
இப்போது எதற்கு வந்திருக்கிறான் என எண்ணி சலிப்போடு கதவைத் திறந்தவளுக்கு அவனுடைய கலங்கிய விழிகள் காதலைக் கொட்டின.
“பேக் பண்றதுக்கு நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா அச்சு..?” எனக் கேட்டான் அவன்.
“நோ நீட்…” என சுருக்கமாக முடித்துக் கொண்டாள் அவள்.
அப்படியே அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
இந்தக் காதலை என்ன வகையில் சேர்த்துக் கொள்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை.
சிங்கம் போல சுற்றித்திரிந்தவன் இன்று நாய்க்குட்டி போல அல்லவா அவள் பின்பு சுற்றி அலைகின்றான்.
“நாளைக்கு சீக்கிரமா எந்திரிக்கணும்.. நான் தூங்க போறேன் யாழவன்.. பை..” என்றவள் நில்லாமல் மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றுவிட,
சில நொடிகள் அப்படியே அதே இடத்தில் அசையாமல் நின்றவனுக்கு வேதனை கூடிப்போனதுதான் மிச்சம்.
மறுநாள் காலை.
அர்ச்சனா வேகமாக விமான நுழைவாயிலை நோக்கி நடந்தாள்.
அவளுடன் கூடவே வந்து கொண்டிருந்தான் யாழன்.
அவளது முகத்தில் சற்றே நிம்மதி இருந்தாலும் உள்ளே அதிர்ச்சி, பயம், குழப்பம் என எத்தனையோ மன உணர்ச்சிகள் கலந்துருகின.
மிகப்பெரிய முடிவை முதன் முறையாக தன் வாழ்க்கையில் தனியாக எடுக்கின்றாள் அவள்.
இனி அவளுடைய வாழ்க்கையில் யாழவன் என்ற அத்தியாயம் இல்லவே இல்லை.
நடந்த அனைத்தையும் மறக்க வேண்டும்..
புதிய அத்தியாயத்தை தன்னுடைய வாழ்க்கையில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்தவாறு நடந்து கொண்டிருந்தவளை சட்டென கைப்பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான் யாழவன்.
அங்கே இரு ஆண்கள் வேண்டும் என்றே அவளுடன் மோதுவது போல வந்துவிட அவளைப் பாதுகாப்பாக தன்னுடைய கைவளைவுக்குள் இழுத்துக் கொண்டவனின் பார்வையோ அவர்களை கொன்று விடுவேன் என்பது போல மிரட்ட,
எதுவுமே தெரியாதது போல அவர்களை கடந்து அந்த இருவரும் சென்று விட்டிருந்தனர்.
நொடியில் படபடத்துப் போனவள் “தேங்க்ஸ்..” என்ற ஒற்றை வார்த்தையோடு அவனிடம் இருந்து விலகி நடக்கத் தொடங்கினாள்.
விமானத்தின் சத்தமும், பயணிகளின் அறிமுகமற்ற முகங்களும்… அந்த இடம் முழுவதும் அவளுக்கு ஆறுதல் அளிக்காத சூழ்நிலை போலத்தான் இருந்தது.
அண்மையில் நடந்த ஏர் இந்தியா பிளேன் கிராஷ் சட்டென அவளுடைய யோசனைக்குள் புகுந்தது.
அச்சத்தில் அவளது மூச்சு சற்று விரைந்தது.
தன் அம்மாவிடம் சொல்லாமலே வந்திருந்ததற்கான குற்ற உணர்வும், யாழவனிடமிருந்து பிரியும் வேதனையும், இப்போது விமானப் பயணம் குறித்த பயமும் ஒன்றாய் சேர்ந்து அவளை நடுங்க வைக்க அவளுடைய கையிலிருந்த பாஸ்போர்டும் டிக்கெட்டும் அவளுடைய கைநழுவி தரையில் விழுந்தன.
“ஹேய் என்னம்மா..? ஏன் டென்ஷனா இருக்க..? ரிலாக்ஸ்.. தண்ணீர் குடிக்கிறியா..?” எனக்கு கேட்டவாறு அவன் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் போத்தலை திறந்து அவளுக்குக் கொடுக்க அதனை மறுக்காமல் வாங்கிப் பருகியவள் அவனுடைய கரத்தில் இருந்த டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் வாங்கி தன்னுடைய கைகளில் வைத்துக் கொண்டாள்.
‘கடவுளே எந்தப் பிரச்சனையும் இல்லாம இந்தியா போய் சேர்ந்திடணும்..” என அவளுடைய மனம் வேக வேகமாக பிரார்த்தனையை மேற் கொண்டது.
அவளுடைய கால்களோ இதற்கு மேல் தனியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை அறிந்து தயங்கி நிற்க, அவளுடைய விமானத்திற்கான அறிவிப்பு அவளுடைய செவிகளில் விழுந்தது.
அவளுடைய முகம் கலவரத்தை தத்தெடுத்துக் கொள்ள யாழவனோ “என் கூட வா..” என அவளை அழைத்தான்.
“இதுக்கு மேல உங்களால உள்ள வர முடியாதே… அலோவ் பண்ணுவாங்களா..?” என அவள் கேட்க,
பாக்கெட்டில் இருந்த தன்னுடைய டிக்கெட்டை எடுத்து அவளிடம் காட்டினான் அவன்.
அவளுக்கோ விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“உன்னை எப்பிடி என்னால தனியா அனுப்ப முடியும்..? உன்ன ஊர்ல விட்டுட்டு அதுக்கு அப்புறமா நான் ரிட்டன் வந்துக்கிறேன்..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல இவளுக்கோ அந்த நொடி மனதிற்குள் எழுந்த நிம்மதியை முகத்தில் மறைக்கத் தெரியவில்லை.
அவன் அருகே இருக்கிறான் என்றதும் அவளுடைய பயம் வெகுவாக குறைந்து போனது.
விமானம் பறக்க ஆரம்பித்ததும் அவளுடைய கரங்களை மெல்ல அழுத்தமாகப் பற்றிக் கொண்டான் அவன்.
மெல்ல விழிகளை மூடிக் கொண்டாள் அர்ச்சனா.
அவன் அருகே இருப்பதால் இந்த பயணம் சற்றே எளிதாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
“அச்சு…?” மெல்ல அழைத்தான் அவன்.
அவனுடைய பிடியிலிருந்து தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவள் தூங்குவது போல விழிகளை மூடிக் கொண்டாள்.
விழித்திருந்தால் அவன் ஏதாவது பேசி விடுவானோ என்ற அச்சம் அவளுக்கு.
எங்கே போகாதே என அழுது அவன் கண்ணீர் விட்டால் நிச்சயமாக அவளால் நிம்மதியாக இங்கிருந்து செல்ல முடியாது.
ஆதலால் தூங்குவது போல விழிகளை மூடி அவள் நடிக்கத் தொடங்கி விட உன்னை நான் அறிவேன் என்பது போல அவளையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் அவன்.
அவனுடைய பார்வை தட்டையாக இருந்த அவளுடைய வயிற்றின் மீதும் நிலைத்தது.
இன்னும் சில மாதங்களில் இந்த வயறு பெரிதாகிவிடும் என்றெல்லாம் கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு விழிகள் மின்னின.
“லவ் யூ அச்சும்மா…” மெல்ல முணுமுணுத்தான் அவன்.
****
பதினொரு மணி நேரங்களுக்குப் பின்..!!
அது இந்தியா – சென்னை விமான நிலையம்.
நாடு திரும்பியதும் அர்ச்சனாவின் முகத்திலோ பதற்றமே விஞ்சியது.
“உன்ன ரிசீவ் பண்ண யாராவது வருவாங்களா..? வீட்ல சொல்லிட்ட தானே..?” எனக் கேட்டான் அவன்.
இல்லை என மறுப்பாக தலையசைத்தாள் அவள்.
“இங்கே இருந்து ஆட்டோ பிடிச்ச வீட்டுக்கு போயிருவேன்… அதுக்கப்புறம்தான் இந்த பிரச்சனை பத்தி வீட்ல பேசணும்…”
“ஓஹ்…?”
“ம்ம்…”
“கடைசியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டி.. ஒரு மணி நேரம் டைம் தர முடியுமா..?” எனக் கேட்டான் அவன்.
பெருமூச்சோடு “சரி..” என்றாள் அர்ச்சனா.
அவளுக்காக கிட்டத்தட்ட 11 மணி நேரங்களை செலவழித்து நாடு விட்டு நாடு வந்திருக்கின்றான்.. அவனுக்காக ஒரு மணி நேரம் செலவழிக்கவில்லை என்றால் அது நன்றாக இருக்காது என்ற எண்ணத்தில் அவனுடன் பேசுவதற்கு சம்மதம் கூறியிருந்தாள் அவள்.
“தேங்க்ஸ் மா…”
டாக்ஸி ஒன்றை அழைத்தவன் அவளை அந்த டாக்ஸியில் ஏறச் சொல்லிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
ஹோட்டல் ஒன்றுக்கு அவளை அழைத்துச் சென்றவன் அங்கிருந்த லக்சரி அறை ஒன்றை புக் செய்து விட்டு அங்கே அவளை அழைத்துச் செல்ல,
எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனுடன் சென்றவளுக்கு இதயம் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.
கதவை உள் பக்கமாக பூட்டினான் யாழன்.
“என்ன பேசணும்..?” எனக் கேட்டாள் அவள்.
“என்ன முடிவெடுத்துருக்க..?” எனக் கேட்டான் அவன்.
“ஆல்ரெடி உங்ககிட்ட சொன்னேனே… டிவோர்ஸ் பண்ணிக்கலாம்..” என்றாள் அவள்.
“ஏன் வேற கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?” என நிதானமாகக் கேட்டான் அவன்.
“என்ன பாத்தா உங்கள மாதிரி தெரியுதா..?” பதில் கொடுத்தாள் அவள்.
“அப்போ எதுக்கு டிவோர்ஸ்..?”
“இந்த கல்யாண வாழ்க்கைல இருந்து நான் வெளிய வரணும்..”
“என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.. உன் முன்னாடி வந்து நின்னு உன்ன எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கு தோணுச்சுன்னா அப்போ டிவோர்ஸ் தர்றேன்.. அதுவரைக்கும் இப்படியே என் பொண்டாட்டியாவே இரு…” என்றான் அவன்.
“பொண்டாட்டிங்கிற உரிமையை எடுத்துக்கிட்டு நீங்க என்ன தொல்லை பண்ண மாட்டீங்கன்னா எனக்கு ஓகேதான்.. குழந்தையை வயித்துல சுமந்துகிட்டு கோட் கேஸ்னு என்னால அலைய முடியாது யாழவன்..”
“ம்ம்… என்னால எந்த தொல்லையும் உனக்கு வராது.. பட் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு அர்ச்சனா…”
“சொல்லுங்க..?”
“என்னோட பேபிய பார்க்க நீ என்ன அலோவ் பண்ணனும்.. உங்களுக்கான செலவு நான்தான் பண்ணுவேன்.. வருஷத்துல ரெண்டு முறை நான் உன்ன பாக்குறதுக்காக இந்தியா வருவேன்.. நீ என்ன ஸ்டாப் பண்ணக் கூடாது…”
“இது எல்லாத்துக்கும் நான் சம்மதிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க..?”
“நீ சம்மதிக்கலைன்னா இது எல்லாத்தையும் நானே அதிரடியா பண்ணுவேன்.. குழந்தையோட உரிமைய நானே எடுத்துப்பேன்… எனக்கு தோணுற டைம்ல உன்னை பார்க்க வருவேன்.. என்ன யாராலையும் கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு உனக்கே தெரியும்… உன்மேல வச்சிருக்க காதலுக்காக மட்டும்தான் உன்கிட்ட இப்படி கெஞ்சி நிக்கிறேன் அர்ச்சனா.. இதுக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை என்னாலயே சொதப்பிருச்சு..
முடிஞ்சு போனத இனி என்னால சரி செய்ய முடியாது… நீயும் உன் வயித்துல வளர்ற என் குழந்தையும் என்னோட பொறுப்பு.. உன்னோட மன நிம்மதிக்காக மட்டும்தான் உன்னை விட்டு விலகி இருக்கேன்.. என்னோட கடமைய என்ன செய்ய விடு.. ஏதோ ஒரு மூலைல இருந்து உங்கள நினைச்சுக்கிட்டே வாழ்ந்து முடிச்சிருவேன்..” என்றான் அவன் கரகரப்பான குரலில்.
அவளுக்கோ உள்ளம் அதிர்ந்தது.
விழிகள் கலங்கி விட்டன.
அவன் முன்பு அழுது விடக்கூடாது என மிகச் சிரமப்பட்டு இமைகளை சிமிட்டி தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள் அவள்.
“ம்ம்..” மெல்லிய முனகல் சத்தம் அவளுடைய சம்மதத்தை அவனுக்குத் தெரிவிக்கப் போதுமானதாக இருந்தது.
“ஐ லவ் யூ பேபி…” என்றான் அவன்.
அவளுக்கோ கரங்கள் நடுங்க ஆரம்பித்தன.
அவனுடைய காதல் அவளை பலவீனமாக்கியது.
“போயிருங்க யாழன்..” என்றவளுக்கு உதடுகள் அழுகையில் துடித்தன.
“ஒரே ஒரு தடவ என் குழந்தைகிட்ட பேசிக்கவாடி..?” தழுதழுத்த குரலில் கேட்டான் அவன்.
“ம்ம்..”
அந்த முனகலையே சம்மதமாக எடுத்துக்கொண்டு அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன் அவளுடைய வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவன் எதையோ குழந்தையிடம் பேசப் போகின்றான் என்ற ஆவலில் தன்னுடைய செவிகளைத் தீட்டி வைத்திருந்தவளுக்கு அவன் வார்த்தைகளால் எதுவுமே கூறாது மௌனமாக வயிற்றில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்தவும் அவளுக்கோ கால்கள் பலம் இழக்கத் தொடங்கின.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கும் மேலாக மண்டியிட்டு அவளுடைய வயிற்றில் முகத்தைப் புதைத்து இருந்தவன் சற்று நேரத்தில் எழுந்து அவளுடைய விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
“உனக்காக கீழ டாக்ஸி வெயிட் பண்ணுது.. அவங்க உன்ன உன்னோட வீட்ல ட்ராப் பண்ணுவாங்க.. பத்திரமா போய்ட்டு வாடி..” என்றவன் அவளை அணைக்க துடித்த கரங்களை இறுகப் பொத்தியவாறு அசையாமல் நிற்க,
“குட் பை..” என்றவாறு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் அர்ச்சனா.
அறையை விட்டு மட்டுமல்ல அவனுடைய வாழ்க்கையை விட்டும் சென்றிருந்தாள் அந்தக் காரிகை.
தன் வினை தன்னைச் சுடும்.