சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 37 ❤️❤️💞

4.9
(16)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 37

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

தனக்கும் சுந்தருக்கும் கல்யாணத்தை பேசி முடிக்கலாம் என்று தான் சுந்தரின் சித்தப்பாவும் சித்தியும் வந்திருந்தார்கள் என்று தன் தந்தை சொன்னதை கேட்ட ஷாலினிக்கு புரை ஏற அவள் குடித்துக் கொண்டிருந்த காப்பி வாயிலிருந்து அப்படியே முன்னிருந்த மேஜையில் சிதறியது..

இறுமிக் கொண்டிருந்த ஷாலினியின் தலையில் தட்டிய ரவிக்குமார் “என்னம்மா.. இன்னும் விஷயத்தை முழுசா கூட சொல்லல.. அதுக்குள்ள சந்தோஷத்துல உனக்கு பொறை ஏறிடுச்சா..?” என்று கேட்க அவளோ தேள் கொட்டிய திருடன் போல விழியை உருட்டினாள்..

“ஆமா அவங்க வந்து கல்யாணம் பேசினப்போ நீங்க என்ன பதில் சொன்னீங்க அவங்க கிட்ட..?” என்று ஷாலினி கேட்க “நான் என்னடா சொல்லுவேன்? இருக்கறதிலேயே பெஸ்ட் ஹ்யூமன் பீயிங்கை‌ மாப்பிள்ளையா சூஸ் பண்ணி இருக்கே.. சுந்தரை விட ஒரு நல்ல மாப்பிள்ளை  நானே பார்த்தாலும் உனக்கு கிடைக்க மாட்டார்.. அதனால உடனேவே உங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்… நீ ஒன்னும் கவலைப்படாத.. நீ விரும்பினபடியே சுந்தரையே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்..”

“அப்படின்னா நீங்க ஓகே சொல்லிட்டீங்களா?”

ஷாலினி அரண்டு போன முகத்துடன் மறுபடியும் கேட்க தான் என்ன சொல்லி இருப்போமோ என்ற பயத்தில் தான் அவள் முகம் அப்படி மாறி இருக்கிறது என்று எண்ணினார் ரவிக்குமார்..

“என்ன..? உனக்கு இன்னும் நம்ப முடியலையா..? நான் வேண்டாம்னு சொல்லுவேன்னு ஒருவேளை நினைச்சியோ நீ..? அய்யய்யோ இது தெரியாம போச்சே.. கொஞ்ச நேரம் உன்னை சஸ்பென்ஸ்ல விட்டு இருக்கலாமே.. இந்த படத்தில எல்லாம் காட்றாங்களே லவ்னாலே கோபப்படுற அப்பா.. அந்த மாதிரி என்னை நெனச்சுட்டியோ..? அப்படி எல்லாம் இல்லம்மா.. அது நீ எந்த மாதிரி ஆளை லவ் பண்றேங்கறதை பொறுத்து இருக்கு.. இதே நீ அந்த மாதேஷை லவ் பண்றேன்னு என்கிட்ட வந்து சொல்லி இருந்தேன்னு வச்சுக்கோ என் பதிலே வேற மாதிரி இருந்திருக்கும்.. நெஜமாவே அந்த படத்துல எல்லாம் வர மாதிரி ஒரு வில்லன் அப்பாவை தான் நீ பார்த்திருப்பே.. ஆனா நீ இப்போ லவ் பண்ற சுந்தர் ஒரு ஜெம்.. அவரு நிச்சயமா உன்னை சந்தோஷமா வச்சிருப்பாருங்கறதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல.. 100% உன் வாழ்க்கை முழுக்க நீ சந்தோஷமா இருப்ப..”

ஷாலினிக்கு உண்மையை தன் அப்பாவிடம் சொல்லவும் முடியாமல் இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கமாய் அவள் நிலை மாறி இருக்க திரு திருவென விழித்தவள் பிறகு எப்படியாவது சமாளித்து தான் ஆக வேண்டும் என்று எண்ணினாள்..

“ஆனா அப்பா.. எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? இன்னும் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருந்துட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேனே..”

“நானும் கல்யாணத்துக்கு அவசரப்படலம்மா.. இன்னும் கொஞ்ச நாள் நீயும் சுந்தரும் ஜாலியா லவ் பண்ணுங்க.. ஒரு நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்.. அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு கூட கல்யாணம் வச்சுக்கலாம்.. ஒன்னும் அவசரம் இல்லை..”

“ஐயோ கடவுளே நான் அவங்க சம்பந்தம் பேச வந்ததையே ஜீரணிக்க முடியாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன்.. இதுல இவர் என்னடானா நிச்சயதார்த்தம் அது இதுன்னு ஏதேதோ பேசுறாரே..” என்று யோசித்தவள் “நிச்சயதார்த்தத்தை கூட எதுக்குப்பா அவசரமா பண்ணனும்?” என்று கேட்க

“எனக்கு சுந்தர் மேல நிறைய நம்பிக்கை இருக்குமா.. ஆனா உன்னை சுத்தி இருக்காங்க பாரு ஃப்ரெண்ட்ஸ்.. அவங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை.. அதுக்காக தான் இந்த நிச்சயதார்த்தம் பண்ணனும்னு நான் சொல்றேன் .. சுந்தரோட சித்தப்பா சித்தி கூட இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்னு சொன்னாங்க.. நானும் அதுக்கு ஓகே சொல்லிட்டேன் மா.. அதனால அதுக்கு என்ன எல்லாம் ஷாப்பிங் பண்ணனுமோ அதெல்லாம் பண்ணிட்டு நீ ரெடியா இரு..” என்றார் அவர் ஷாலினியின் நிலை புரியாமல்..

“அப்பா.. நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே.. என்னோட என்கேஜ்மென்ட்ல இருந்து எல்லாமே நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா நல்லா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிட்டு என்ஜாய் பண்ணி பண்ணனும்னு ஆசைப்படுறேன் பா.. எனக்கு அட்லீஸ்ட் ஒரு ஒன் மந்த் டைமாவது குடுங்கப்பா.. எங்க எங்கேஜ்மென்ட் பத்தி நானும் சுந்தரும் கொஞ்சமாவது ப்ளான் பண்ணனும் இல்லப்பா..? ப்ளீஸ் பா..”

“எனக்கு புரியுதுடா.. ஓகே.. நான் சுந்தரோட சித்தப்பா சித்தி கிட்ட பேசி எங்கேஜ்மென்ட்ட ஒன்னு ரெண்டு மாசத்துல பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. “

சிறிது நிம்மதியானாள் ஷாலினி..

“தேங்க்யூ பா..” என்று அவரை கட்டிக் கொண்டு முத்தம் கொடுக்க “இன்னும் குழந்தையாவே இருக்கம்மா..” என்று அவள் தலையை வருடியபடி சொன்னார் ரவிக்குமார்..

“எவ்வளவு வயசானாலும் நான் உங்களுக்கு குழந்தை தான்” என்றாள் ஷாலினி.. அவள் தந்தையின் அணைப்பில் இருந்து கொண்டே..

மாதேஷிடம் சென்று இது குறித்து இன்றே பேச வேண்டும் என்று எண்ணியவள் “சரிப்பா.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. நான் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்..” என்று சொல்லி வேகமாக அவள் அறைக்கு சென்று தன் கைபேசியை எடுத்து மாதேஷுக்கு அழைத்தாள்..

மாதேஷை அவள் பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி இருந்தது.. சுந்தரின் பாட்டி இறந்து போன போது கூட அந்த ரெண்டு நாட்கள் அங்கே இருக்க பிடிக்காமல் அவள் மாதேஷை தேடி போனாள்.. ஆனால் அவன் ஏதோ முக்கிய வேலையாக வெளியே சென்று இருப்பதாக பதில் மட்டுமே கிடைத்தது..

இன்று எப்படியும் கைபேசியில் அவனை அழைத்து பேசி அவனை பார்க்கச் சென்று விட வேண்டும் என்று எண்ணி அழைக்க அங்கு மணி அடித்துக் கொண்டே இருந்ததே தவிர அவன் கைபேசியை எடுத்த பாடாய் இல்லை..

“என்ன.. ஃபோனே எடுக்க மாட்டேங்குறான்.. நம்ம போனா இருப்பானான்னு தெரியலை… அவன் ஏதோ சீரியஸா பிசினஸ் வேலை பார்த்துட்டு இருக்கான் போல இருக்கு.. சரி.. மெசேஜ் பண்ணி விடுவோம்..” என்று எண்ணியவள் “ஹாய் மாதேஷ்.. நான் உன்னை அவசரமா பார்க்கணும்.. நீ எங்க இருக்கன்னு சொல்லு.. நான் அங்கேயே வந்து உன்னை மீட் பண்றேன்..” அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்..

அந்தக் குறுஞ்செய்தியின் பக்கத்தில் அவன் அதை பார்த்ததற்கான நீலக்குறி தெரிய “மெசேஜ் பார்த்தும் ஏன் ரிப்ளை பண்ண மாட்டேங்குறான்..” என்று எண்ணியவள்.. “நீ மெசேஜ் எல்லாம் பார்க்கிறேன்னு எனக்கு தெரியுது.. ஆனாலும் ஏன் ரிப்ளை பண்ண மாட்டேங்குறன்னு தெரியல.. இப்ப நீ ஒன்னு ரிப்ளை பண்ணு.. இல்லன்னா எனக்கு கால் பண்ணு.. இல்லன்னா நான் உடனே கிளம்பி நீ இருக்குற இடம் தேடி வருவேன்.. இன்னிக்கு உன்னை பாக்காம நான் எங்க வீட்டுக்கு வர மாட்டேன்.. ரெண்டு நாள் ஆனாலும் சரி.. உன்னை பார்த்துட்டு தான் நான் எங்க வீட்டுக்கு திரும்பி வருவேன்..” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்..

அடுத்த நிமிடம் மாதேஷிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.. “ஹலோ ஷாலு செல்லம்.. என்னடா மீட்டிங்ல இருந்தேன்.. அதனாலதான் உன்னோட மெசேஜ் ரிப்ளை பண்ண முடியல.. இப்பதான் ஒன் மினிட் முன்னாடி மீட்டிங் முடிஞ்சுது.. அதனாலதான் உடனே என் ஷாலு  டியர்க்கு கால் பண்ணிட்டேன்..” என்று அவன் சொல்ல “போன வாரம் வரைக்கும் உன் மடியில என்னை வச்சுக்கிட்டு கண்ணே மணியேன்னு கொஞ்சிக்கிட்டு இருந்தே.. ஒரு வாரமா உன்னை நான் பாக்கல.. எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு.. உனக்கு என் நினைப்பே வராதா டா..? அது எப்படிடா உன்னால இவ்வளவு நாள் எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணாம இருக்க முடியுது.. இப்படி நீ இருந்தா நான் என்னடா நினைக்கிறது..? உன்னை நம்பி என்னையே நான் கொடுத்து இருக்கேன்.. நீ என்னடான்னா என்னை கண்டுக்கவே மாட்டேங்குற..?”  புலம்பினாள் ஷாலினி..

“நீ என் மேல எவ்வளவு பாசமா இருக்கேன்னு எனக்கு தெரியாதா ஷாலுமா.. சரி இப்ப என்ன..? உன்னை மீட் பண்ணனும் அவ்வளவுதானே..? இப்பவே நான் கிளம்பி உங்க வீட்டுக்கு வரவா..?” என்று அவன் கேட்க “அய்யய்யோ நீ வராத.. அப்பா இருக்காரு வீட்டுல.. நானே வரேன்.. எங்க வரணும்னு மட்டும் சொல்லு..” என்று கேட்டாள் ஷாலினி..

“ஹோட்டல் *********க்கு வந்துடு.. இன்னைக்கு நைட்டு என்கூட ஜாலியா இருந்துட்டு நாளைக்கு காலைல தான் நீ போக முடியும்.. ஓகேவா..?”

“உன் கூட இருக்கிறதை விட எனக்கு வேற என்னடா முக்கியமான வேலை இருக்கு..? நான் என்ன இன்னைக்கு தான் உன்னோட புதுசா இருக்க போறேனா..?  நம்ம ப்ரொபோஸ் பண்ணிக்கிட்ட நாளிலிருந்து என்னோட எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன்.. இப்ப நீ கேட்டு நான் முடியாதுன்னா சொல்ல போறேன்.. நீ எனக்கு இன்னும் தாலி தான் கட்டலையே தவிர நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா தானடா வாழ்ந்துகிட்டு இருக்கோம்..?” என்றவள் “சரி.. நான்  கிளம்பி வரேன்..” என்றாள்..

“ஓகே டா செல்லம்..” என்று கைபேசியிலேயே அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு இணைப்பை துண்டித்தான் மாதேஷ்..

###############

மாலையில் வீட்டுக்கு வந்த சுந்தரிடம் நடராஜனும் மேகலாவும் “அப்பா சுந்தர்.. நாங்க போய் ஷாலினி அப்பாகிட்ட விஷயத்தை எல்லாம் சொன்னோம்ப்பா.. அவர் உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு.. ரொம்ப சந்தோஷப்பட்டார் பா.. உன்னை மாதிரி மாப்பிள்ளை கிடைக்கிறதே அபூர்வம்னு சொன்னாரு…. ஒரு வாரத்துல நிச்சயம் வச்சுக்கலாம்ன்னு சொன்னோம்.. அதுக்கும் சரின்னு சொல்லி இருக்காருப்பா..”

“அப்பா நிச்சயத்தை ஏம்பா அவ்வளவு சீக்கிரம் வெச்சீங்க..? முதல்ல ஷாலினிக்கு இந்த விஷயத்தை பத்தி சொல்லவே இல்ல.. இதை கேட்டு அவ ஒத்துக்கிட்டு அதுக்கப்புறம் கொஞ்சம் டைம் கொடுத்து நிச்சயம் வெச்சிருக்கலாம்ன்னு எனக்கு தோணுது பா..”

“அதனால என்ன பா..? இப்ப என்ன தேதியா குறிச்சிட்டோம்? ஒரு வாரத்தில வச்சுக்கலாம்னு தான் சொல்லி இருக்கோம்..  நான் ஷாலினியோட அப்பாக்கு ஃபோன் பண்ணி கொஞ்ச நாள் கழிச்சு நிச்சயம் வச்சுக்கலாம்னு சொல்றேன்ப்பா..”

“ஓகே பா.. கொஞ்சம் டயர்டா இருக்கு.. நான் ரூமுக்கு போறேன் பா..” என்று சொன்னவன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.. அவன் மனம் ஏனோ இந்த நல்ல செய்தியை கேட்டு சந்தோஷப்படுவதற்கு பதிலாக அமைதியில்லாமல் ஆனது.. அவனுக்கு அதற்கு காரணம் தான் புரியவில்லை..

#################

தன் தந்தைக்கு தெரியாமல் பூனை போல வீட்டு வாயில் கதவை திறந்து கொண்டு மாதேஷை தேடி போனாள் ஷாலினி..

அவள் செல்வதை பார்த்த அன்னம்மாவோ மனதிற்குள் அவளை நினைத்து மிகவும் கவலை கொண்டாள்..

“இந்த பொண்ணோட அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி எல்லாம் நடுராத்திரிக்கு வெளிய போக விட்டிருப்பாங்களா?”  உள்ளுக்குள்ளேயே புலம்பி கொண்டாள் அவள்..

மாதேஷ் வர சொன்ன அறைக்கு சென்று கதவை தட்டியவள் அவன் வந்து கதவை திறந்தது தான் தாமதம்.. ஓடி சென்று அவனை இறுக்கத் தழுவிக் கொண்டாள்..

“ஒரு வாரமா உன்னை பாக்காம கண்ணு பூத்து போச்சுடா.. அப்படி என்னடா வேலை பார்த்துட்டு இருந்த..? ஒரு அரை மணி நேரம் என்னை பார்க்க உன்னால ஒதுக்க முடியலையா ?” என்று கேட்டவளின் கண்கள் கலங்கியிருந்தன..

“அப்படி இல்ல ஷாலு டியர்.. இப்பதான் என் கம்பெனியை டெவலப் பண்றதுக்கு ஒரு நல்ல ஆப்பர்ச்யூனிட்டி கிடைச்சிருக்கு.. இதை மிஸ் பண்ண கூடாதுன்னு தான் நான் அதுல முழுமூச்சா இறங்கி இருக்கேன்.. அதான் இப்ப வந்துட்டேன் இல்ல..? ஆமா ஃபோன்ல பேசும் போது நீ ஒரே பதட்டமா பேசுன.. என்னை அவசரமா பார்க்கணும்னு வேற சொன்ன.. என்ன விஷயம்..?”

“ஆமாம் மாதேஷ்.. அதை சொல்ல மறந்துட்டேனே.. எனக்கும் சுந்தருக்கும் கல்யாணம் பண்ணி வெக்க சம்பந்தம் பேச இன்னைக்கு சுந்தரோட சித்தப்பா சித்தி எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.. அப்பாவும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு.. அவங்க எல்லாருமே நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு நினைச்சு இந்த மாதிரி பண்ணி இருக்காங்க.. என் நிலைமை ரொம்ப திண்டாட்டமா போச்சு மாதேஷ்..” பதட்டமாய் புலம்பினாள் ஷாலினி..

“ஹேய்.. இதுக்கு எதுக்கு டென்ஷனாகற? இப்ப என்ன கல்யாணம் பண்ணனும்னு பேசி இருக்காங்க அவ்வளவு தானே..? ஏற்கனவே அந்த சதீஷ் வந்து நம்ம ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு சுந்தர் கிட்ட சொன்னான்னு நீ சொன்னப்போ அவன் வாயை பணம் கொடுத்து அடைக்கலயா? அதே மாதிரி இதையும் சமாளிச்சுக்கலாம் விடு.. இன்னும் எங்கேஜ்மென்ட் இருக்கு.. மேரேஜ் இருக்கு.. கல்யாண மேடைல போய் நின்ன கல்யாணம் எல்லாம் இருக்கு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அதுக்குள்ள நீ எதுக்கு சுந்தரை தேடி போனியோ அந்த வேலையை முடிச்சிட்டு வந்துரு.. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்..” என்றான் கூலாக மாதேஷ்..

“எனக்கு தெரியும்.. நீ என்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு.. நான் தான் உன் உயிர் ஆச்சே..” என்று சொன்னவளின் இதழை தன் இதழால் மூடி இருந்தான் அவன்..

அன்று இரவு முழுவதும் அவனுடன் உல்லாசமாக கழித்து விட்டு காலையில் அந்த விடுதி அறையிலேயே நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் ஷாலினி..

வெகு நேரத்திற்கு பின் உறக்கம் கலைந்தவள் பக்கத்தில் மாதேஷ் இல்லாததை கண்டு அவனைத் தேடியவள் பால்கனியில் நின்று கொண்டு அவன் யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தாள்..

“பரவால்ல.. நம்ம ஆளு ரொம்ப சீரியஸா தான் பிசினஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டான் போல இருக்கு.. காலங்காத்தால எழுந்து யாரோடையோ ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்கான்.. அவன் சொன்னது நிஜம்தான் போல இருக்கு.. ஒரு வாரமா பிஸியா இருந்திருக்கிறான்.. நாமதான் அவன் சொன்னதை நம்பாம தப்பா நினைச்சுட்டோம்.. ” என்று எண்ணியவள் அவன் அருகே செல்ல அவன் பேசியதை கேட்டவளுக்கு தன் தலையில் யாரோ இடியை இறக்கியது போல் உணர்ந்தாள்..

உயிரை உரித்து வெளியே போட்டன அவன் வார்த்தைகள்.. “இல்ல டார்லிங்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா.. என் லைஃப்ல உன்னை தவிர எந்த பொண்ணும் கிடையாது..” என்று அவன் பேசிக் கொண்டிருக்க அவன் பேசியதை கேட்ட ஷாலினியோ அப்படியே உறைந்து போய் நின்றாள்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!