என் தேடலின் முடிவு நீயா – 09

4.8
(28)

தேடல் 09

மகிமாவின் மறுப்பை ஒதுக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், அவளால் அசைய முடியாது இறுக்கமாக பிடித்துக் கொண்டவன்… ஏற்கனவே தயாராகி வைத்திருந்த நெயில் கட்டரை எடுத்தவன் அவள் கதறக் கதற நகங்களை வெட்டி விட்டு தான் மகிமைவை விடுவித்தான் அபின்ஞான்…

 மகிமா அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவள் கண்ணத்தில் தட்டியவன், “வரட்டா பேபி” என்று தன் கொடுப்புக்குள் புன்னகைத்த படி செல்ல…

குனிந்து தன் கை நகங்களை ஆராய்ந்தவள், “நான் கூட இப்படி வெட்ட மாட்டேன்.. ஆனா நீங்க ரொம்ப நீட்டா கட் பண்ணி இருக்கீங்க… இனி நானே என் கைய தரேன்… கஷ்டப்படாமலே என் நகத்த கட் பண்ணிடுங்க” என்று சத்தமாக கூற இப்போது முறைப்பது அவன் முறையாகிப் போனது.

“என் கிட்டயே கேம் ஆட்றயா…” என முனுமுனுத்தவள் அவனை பார்த்து கண் சிமிட்டிக் கொண்டாள்…

நாட்களும் இவ்வாறே நகர ரிசப்ஷன் நடக்கும் நாளும் வந்து சேர்ந்தது…

 பசுபதி மற்றும் அன்னபூரணி அம்மாள் தயாராகி மகன் மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

“பூரணி… ஏன் இன்னும் ரெண்டு பேரும் வரல்ல”என்று பசுபதி கேட்க

“மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து மகிமாக்கு மேக்கப் பண்ணிட்டு இருக்காங்க… அவ இன்னும் கொஞ்ச நேரத்ல வந்துடுவா… அபி என்ன பண்ணிட்டு இருக்கான்னு தான் தெரியல…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே…

கெஸ்ட் ரூமில் இருந்து அழுத்தமான காலடி ஓசையுடன் வந்து கொண்டிருந்தான் அபின்ஞான்…

சாம்பல் நிற குறுத்தி அணிந்திருந்தான்…

அவன் அடர்த்தியான முடியை அடக்க ஜெல் வைத்து முடியை சீர் செய்திருந்தான்…

கையில் ஆப்பிள் வாட்ச் அணிந்தபடி கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்…

அன்னபூரணி அம்மாளோ அவனருகே சென்று நெற்றி முறித்தவர், “என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா” என்று சிரித்தபடி கூறினார்…

அந்த நேரம் தன் அறைக் கதவை திறந்து உடலோடு ஒட்டிய மெல்லிய பிங்க் நிற ரெடிமேட் சாரியில் வந்து கொண்டிருந்தாள் மகிமா…

அவள் உடல் வனப்பை அப்பட்டமாக அப்புடவை எடுத்தக் காட்டிக் கொண்டிருந்தது…

 தோள்வரையுள்ள சுருள் சுருளான கார் கூந்தலை அவிழ்த்து… முகத்தில் ஓரிரு முடிகளை விட்டிருந்தாள்.

முகத்துக்கு அளவான மேக்கப் போட்டு பிங்க் நிற லிப்ஸ்டிக் பூசி இருந்தாள்…

கண்ணுக்கு மை தீட்டாமலே அவள் மான்விழிகள் அனைவரையும் மயக்கிக் கொண்டிருந்தன.

ஆடைக்கு பொருந்தக் கூடிய அதே நேரம் கண்ணை உருத்தாத வகையில் ஆபரணங்களும் அணிந்திருந்தாள்…

மொத்தத்தில் தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த தேவ மங்கை போலத்தான் இருந்தாள்…

ஹை ஹீல் அணிந்திருந்ததால் அபின்ஞானின் உயரத்தை நெருங்கியிருந்தாள்.

“ரொம்ப ரொம்ப அழகா இருக்க மகி… இன்னக்கி எல்லார்ட கண்ணும் உன் மேல தான் இருக்க போகுது… வீட்டுக்கு வந்த உடனே உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும்” என்றவர் தாமதமாவதால் அவர்களை வேகமாக வரச் சொல்லிவிட்டு பசுபதியுடன் மண்டபத்திற்கு புறப்பட்டனர்…

அவனது இமைக்காத பார்வையில் சங்கடமாக இருக்க, அவனைப் பார்த்து, “அபி, நாம போகலாமா” என்று கேட்டாள்.

குரலை செருமிக் கொண்டவன், ஓரடி முன்னே வைத்து அவளை நெருங்கி நின்றவன், “யூ லுக் சோ ப்ரிட்டி” என்றான்…

அவளுக்கோ ஆச்சர்யமாக இருந்தது… அவன் வாயிலிருந்து இவ்வாறன ஒரு வார்த்தை இலகுவாக வந்து விடுவதில்லையே…

அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “நீங்களும் மேன்லியா தான் இருக்கீங்க…” என்றவாரு மெதுவாக அவனிடமிருந்து விலகியவள், “போகலாமா?” என்று கேட்டாள்…

இருவரும் புறப்படத்தயாராக… அவள் அணிந்திருந்த சேலை பார்க்க சிம்பளாக இருந்தாலும் அதில் நிறைய கற்கள் பதித்திருந்ததால் அதை உடுத்திக் கொண்டு நடப்பது சிரமமாகவே இருந்தது…

மகிமா கஷ்டப்பட்டு நடந்து வருவதை கண்டவன் அவளை நோக்கி கையை நீட்ட… அவனை விழி விரித்து பார்த்தவள், “அன்னக்கி உங்கள தொடக் கூடாதுன்னு சொன்னீங்க” என்று சிரிப்பை அடக்கிய படி கேட்க,

“உனக்கு ஹெல்ப் பண்ண வந்த என்ன சொல்லணும்” என்றபடி கையை எடுக்க பார்க்க சட்டென அவன் கையை பற்றியவள், “கைய புடிச்சாம இருந்து உங்கள அவமானப்படுத்த விரும்பல” என சிரித்தபடி முன்னோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினாள்…

இருவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள டிரைவரே காரை ஓட்டினார்…

மண்டபத்துக்கும் வந்துவிட்டனர்…

மகிமாவின் கண்களோ மகாதேவையே தேடிக் கொண்டிருந்தன…

“மகி யார தேடிட்டு இருக்க… இவங்க எல்லாரும் பிசினஸ்ல ரொம்ப முக்கியமானவங்க… உன்கிட்ட பேச வர்ரவங்களோட ஒழுங்கா பேசு… குழந்தை தனமா நடந்துக்காதே” என அவள் காதருகே குனிந்து கடினமான குரலில் கூற…

அவனைப் பார்த்து சரி என்று தலையசைத்தவள் இதழ்களிலோ புன்னகை தொலைந்து போனது…

இன்னும் மகாதேவ் வரவில்லை…

 தன் அருகே வைத்திருந்த க்ளச்சை காணவில்லை…

அதனுல்தான் அவள் போன் இருந்தது…

அதை தேடி கண்களை சுழல விட அதுவோ அபின்ஞான் அருகே இருந்தது…

“அபி… என் க்ளட்ச்ச கொஞ்சம் எடுத்தாங்க…” என்று கூற,

‘எதுக்கு” என்று அவன் பதில் கேள்வி கேட்டான்.

அவளுக்கு புரிந்து விட்டது, அவன் வேண்டும் என்றே தான் தராமல் இருக்கிறான் என்று…

“அண்ணாவுக்கு கோல் பண்ணனும்” என்றாள்.

“பிறகு பண்ணிக்கலாம்” என்றான் இலகுவாக…

அவளுக்கோ கண்கள் கலங்கி விட்டன…

“அபி அண்ணாவ ஒதுக்குறீங்களா? ப்ளீஸ் போன தாங்க” என்று மீண்டும் கெஞ்சுதலாக கேட்டாள்.

“போன தர முடியாதுடி… அவன் என் ஃபங்ஷனுக்கு வரக்கூடாது” என்றவன் அவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்…

அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவன், “இங்க வச்சு டிராமா பண்ணாதே மகி… எல்லாரும் நம்மள தான் பார்த்துட்டு இருக்காங்க” என்று நெற்றியை தேய்த்தபடி அழுத்தமாக கூறினான்.

 அவளோ தன் அழுகையை கட்டுப்படுத்திய படி தலைகுனிந்து நின்றாள்…

மகிமாவோ நிதானமாக யோசித்து இருந்தால் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்திருக்க மாட்டாள்… அவனை எதிர்க்கவென்றே ஏதாவது செய்திருப்பாள். அபின்ஞான் தன் அண்ணனை முழுமையாக ஒதுக்குவதை கண்டதும் என்ன செய்வது என்று இந்த இடத்தில் அவளால் யோசிக்க முடியவில்லை…

 அவளுக்கு இருந்த சந்தோஷ மனநிலையே வடிந்துவிட்டது…

ரிசப்ஷனுக்கு வந்தவர்களும் மகாதேவை எதிர்த்து திருமணம் செய்ததால் அவன் இங்கு வரவில்லை என்று ஜாடை மாடையாக பேசிக் கொண்டிருந்தனர்…

அவளுக்கோ அபின்ஞான் மேல் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது…

 தன் அண்ணனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மறைமுகமாக நின்று மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறானே…

அவளிடமே சிலர், “உனக்கு அப்பா அம்மாவா இருந்து உன்ன பார்த்த அண்ணாவ நீ ஒதுக்கலாமா?” என்று அவள் பக்கம் பிழையை போட்டும்…

 இன்னும் சிலர், “உன் அண்ணா சரியான திமிரு புடிச்சவன்… அவனுக்கு சொந்தம்ன்னு சொல்றதுக்கு இருக்கிறதே நீ மட்டும் தான்… ஈகோ பார்த்து சொந்த தங்கச்சி உன்னையே ஒதுக்கிட்டானே… பாவம் நீ” என்று எரியும் நெருப்பில் நன்றாக எண்ணெய் ஊற்றி விட்டு சென்றனர்…

கையை இறுக்கமாக பொத்திக் கொண்டவள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

 அபின்ஞானுக்கு அவர்கள் கதைப்பது கேட்டாலும் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை…

“கூல் மகி… எதுக்கு கோபப்படுற? உன் அண்ணன பத்தி இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியட்டுமே…” என்று அவன் நக்கலாக கூற,

“ஓஹ்… அப்ப என்ன பத்தியும் தான் தெரியணும்… ஏன்னா நான் தானே

 உங்க ப்ரொஜெக்ட திருடினேன்” என்றவளுக்கு இங்கு இருப்பதில் எந்த ஒரு மகிழ்ச்சியுமே இல்லை பொம்மையாக நின்று இருந்தாள்…

அவன் எங்கே அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்…

அபின்ஞான் அவளையும் அவள் அண்ணனையும் பிரித்து வேறொரு வகையில் பலி வாங்கிக் கொண்டிருந்தான்…

இப்போது தான் அது அவளுக்கு புரிந்தது…

 ரிசப்ஷன் முடியும் நேரமாவது மகாதேவ் வருவான் என்று மகிமாவுக்கு சிறு நம்பிக்கை இருந்தது…

அவன் கடைசி வரையும் வரவேயில்லை…

 அதன் பிறகு இருவரும் போட்டோ ஷூட்டிற்காக கிளம்பி சென்றனர்… அபின்ஞானோ மகிழ்ச்சியாக விசில் அடித்தபடி புகைப்படங்களுக்கு அவளையும் வளைத்து போஸ் கொடுக்க வைத்துக் கொண்டிருந்தான்…

 அவனும் விதவிதமாக நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 மகிமா முகத்திலோ புன்னகை என்பது பேருக்காவது இருக்கவில்லை… அவளை முறைத்துப் பார்த்தவன், “மகி ஒழுங்கா சிரி பார்க்க… உன்னால நம்ம போட்டோ வேஸ்ட் ஆகுது” என்றான்.

 அவளுக்கு இங்கே தன் கோபத்தை காட்டவும் முடியவில்லை. கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டாள்.

இருவரும் வீட்டுக்கு செல்ல அன்னபூரணி அம்மாள் முன்னமே வந்து அவர்கள் இருவருக்கும் சுற்றுப்போட்டு தான் வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.

அவளுக்கோ இரவு உணவு உண்ணும் மனநிலை கொஞ்சம் கூட இருக்கவில்லை…

“அத்த, எனக்கு சரியான டயடா இருக்கு… தலையும் வலிக்குது… நான் போய் படுக்க வா” என்று கேட்க… அவருக்கோ அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது…

 அவரும் நடப்பதை பார்த்துக் கொண்டு அல்லவா இருக்கிறார்.

அவள் தன் அண்ணனின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் அறிவார்.

தன் மகனின் ஈகோவையும் அறிவார்.

 மகாதேவ் இன்று ரிசப்ஷனுக்கு வராததால் அவள் மனம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் உணர்ந்தவர், “நீ போய் முதல்ல ஃப்ரெஷ் எடு… அப்ப கொஞ்சம் உனக்கு ஓகே ஆகும்… நான் உனக்கு பால காச்சி எடுத்துட்டு வரேன்… அத குடிச்சிட்டு படு… வெறும் வைத்தோட தூங்கிடாதே” என்று அன்பு கட்டளை இட, தன் சொந்தத்தாய் போன்று பார்த்துக் கொள்பவரிடம் பிடிவாதம் பிடிக்க அவளால் முடியவில்லை.

“சரி” என்று தலையசைத்த படி தன் அறைக்குள் சென்றாள் மகிமா…

 மகிமா அறைக்குள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த அன்னபூரணி அம்மாள், ” அம்மா இல்லனாலும் ரொம்ப நல்லா வளர்ந்திருக்கா… இனி அவளை கவனமாக பார்த்துக் கொள்ளனும்” என்று நினைத்துக் கொண்டார்.

 பட்டாம் பூச்சியாக சிறகடித்து பறந்து கொண்டிருந்தவளை தன்மகனே அவள் சிறகை உடைத்து விட்டதை நினைத்து அவருக்கும் கோபமாக இருந்தது…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!