விஷம் – 40
குழந்தையை தூக்கி வைத்திருந்தவாறு அர்ச்சனாவின் விழிகள் வேகமாக அந்த மருத்துவமனையை அலசிய நொடி அவளுடைய விழிகளில் தென்பட்டு விடக்கூடாது என மறைந்து நின்ற யாழவனின் இதயமோ தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.
தன்னவள் என்னுடைய இருப்பை உணர்கிறாள் என்ற உண்மை அவனைப் பெரிதும் தாக்கியது.
விழிகளை மூடினால் எங்கே மறைந்து விடுவாளோ என இமைகளை சிமிட்டாது மறைந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளுடைய தேடல் பார்வையில் பதறித்தான் போனான்.
எங்கே அவள் தன்னைப் பார்த்து விடுவாளோ என அஞ்சி அருகே இருந்த அறையின் கதவோடு மறைந்து நின்றவனுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது.
ஆம் யாழவன் இந்தியாவில்தான் இருக்கின்றான்.
அர்ச்சனாவை இந்தியாவில் விட்டுச் சென்றதன் பின்னர் ஆறு மாதங்களாக யாழவனோ லண்டன் திரும்பவேயில்லை.
அவனுடைய உயிர் உலகம் அனைத்தும் இங்கே இருக்கும் போது எப்படி அவனால் அவர்களை விட்டு லண்டனுக்குச் செல்ல முடியும்..?
அவனுடைய வீட்டிற்குக் கூட அவன் செல்லவில்லை.
அன்னையின் அழைப்பையும் அவன் ஏற்கவில்லை.
அவரோ இடைவிடாது தொடர்ந்து அவனுக்கு அழைத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவருடைய அழைப்பை ஏற்றவன் அவர் அவனை வீட்டிற்கு அழைத்தும் செல்ல மறுத்து விட்டான்.
அன்னையின் அழைப்பை துண்டிப்பதற்கு முன்னர் “என்னோட பிள்ளையையும் அச்சுவையும் நல்லா பாத்துக்கோங்க ப்ளீஸ்..” என்பது மட்டும்தான் அவன் உதிர்த்த வார்த்தைகளாக இருந்தன.
அதன் பின்னர் அவன் அவனுடைய அன்னையின் அழைப்பை ஏற்கவே இல்லை.
அவர் மீது கோபம் எல்லாம் அவனுக்கு இல்லை.
தனிமையைப் பழகிக் கொண்டான்.
எப்போதாவது தந்தையுடன் பேசுவான்.
அவன் கூறியதால்தான் அர்ச்சனாவை வற்புறுத்தி மீண்டும் தன் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்திருந்தார் சார்ள்ஸ்.
தன்னுடைய இருப்பு இந்தியாவில்தான் என்பதை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் யாரோ ஒருவனைப் போல அர்ச்சனாவிற்கே தெரியாமல் அவளைப் பின் தொடர்வதை தன்னுடைய வாடிக்கையாக்கிக் கொண்டான்.
அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஓடிச்சென்று இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல அவனுடைய கைகள் பரபரக்கும்.
ஆனால் அவளுடைய நிம்மதியை கெடுத்து விடக் கூடாது என மிக சிரமப்பட்டு தன்னை அடக்கி கொள்வான் யாழவன்.
சில நேரத்தில் அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பாக இருக்கும்.
சிறுவிடலைப் பையன் போல வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டுவிட்டு பைத்தியக்காரத்தனமாக ஒரு பெண்ணின் பின்னே சுற்றுகின்றோமோ என்றெல்லாம் அவனுக்குத் தோன்றும்.
அடுத்த நொடியே அந்த சிந்தனையை அகற்றிவிட்டு தன்னவளைப் பற்றியும் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்த அவளுடைய வயிற்றில் வளரும் தன் குழந்தையைப் பற்றியும் அவனுடைய எண்ணங்கள் சூழ்ந்து விடும்.
அர்ச்சனாவிற்குத் தெரியாமல் அவளைப் பின் தொடரும் போது ஒருமுறை பானுமதியிடம் பிடிபட்டுக் கொண்டான் யாழவன்.
அன்றிலிருந்து அவனுடைய மனம் புரிந்து அவளும் அவனுக்கு உதவி செய்யத் தொடங்க அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அவளிடம் வேண்டி கேட்டுக் கொண்டான் அர்ச்சனாவின் காதல் கணவன்.
கடந்த ஆறு மாதங்கள் இப்படியே அவனுக்குக் கழிந்தன.
இடையில் கிளாராவின் டெலிவரி நெருங்குவதை உணர்ந்து குழந்தையை பொறுப்பேற்கும் பொருட்டு லண்டனுக்குச் சென்றவன் குழந்தை பிறப்பதற்கு முன்னரே கிளாராவின் மரணத்தை அறிந்து அதிர்ந்து போனான்.
விடயம் அறிந்து அவன் மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றிருந்தும் கூட இறந்த கிளாராவின் உடலை மட்டும்தான் அவனால் பார்க்க முடிந்தது.
அவள் தற்காலிகமாக தொடர்பில் இருந்த லிவின்சன் என்பவனோ லண்டனில் மிகப்பெரும் ஆயுதங்களைக் கடத்தும் ஒரு மாபியாவை சேர்ந்தவனாக இருக்க அதுவே கிளாராவின் மரணத்திற்கு துணையாகிப் போனது.
லிவின்சனும் கிளாராவும் ஒன்றாக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது லிவின்சனுடைய எதிரிகள் காரை இடித்து தள்ளி துப்பாக்கியால் அவர்கள் இருவருடைய உயிரையும் எடுத்துவிட்டு சென்றுவிட, நொடியில் நிலைமை கைமீறிப் போனது.
அவர்களுடைய நிலையை உணர்ந்து ஓடி வந்த பொதுமக்களோ குழந்தையையாவது காப்பாற்றலாம் என்ற நல்ல எண்ணத்தில் கிளாராவை மருத்துவமனையில் விரைந்து சேர்த்திருந்தனர்.
Perimortem Caesarean Section (PMCS) அதாவது தாய் உயிரிழக்கும் சமயத்தில் அல்லது உயிரிழப்புக்கு மிக நெருக்கமான நிலைமை ஏற்பட்டவுடன் 4 முதல் 5 நிமிடங்களுக்குள் செய்யப்படும் அவசர சிசேரியனே அது.
அதைச் செய்து வைத்தியர்கள் குழந்தையைக் காப்பாற்றி விட கிளாராவோ தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை அன்றோடு முடித்துக் கொண்டாள்.
கனத்த மனதுடன் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வாங்கிக் கொண்ட யாழவன் கிளாரா மற்றும் லிவின்சனின் இறுதிக் காரியத்தில் கலந்து கொண்டான்.
அடுத்தடுத்த நாட்களில் பிறந்த குழந்தையை பராமரிக்கத் தெரியாது மிகவும் நொந்து போனான் அவன்.
தாயின் உடல் சூட்டையோ தாய்ப்பாலையோ உணராத பிஞ்சுக் குழந்தை அழும் போதெல்லாம் அவனுக்குப் பின் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலி தோன்றும்.
பணம் கட்டி தாய்ப்பாலை குழந்தைக்குப் புகட்டும் நிலை வந்தது.
மருத்துவமனையின் உதவியுடன் ஆரோக்கியமான தாய்மார்களைத் தேடி ஒரு பெண்ணைக் கண்டு கொண்டவன் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்தப் பெண்ணின் மூலமே தாய்ப்பாலை குழந்தைக்கு வழங்கினான்.
அதன் பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க்கை குழந்தைக்கு கரைத்து அவனே புகட்டி விடுவான்.
ஒருவாறாக குழந்தை அவன் கொடுக்கும் பாலை பருக பழகியதன் பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்தவனுக்கு அக்கணமே தன்னவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
மகிழ்ச்சி தூக்கம் நிம்மதி என அனைத்தையும் இழந்து தவித்தான் அவன்.
நேற்றைய தினம் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தது முதல் அவனுடைய குழந்தைக்கு காலநிலை ஒத்துக் கொள்ளவில்லையோ என்னவோ குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
தன் தந்தையிடம் கூறி அவருடைய மருத்துவமனையிலேயே குழந்தை நல மருத்துவர் ஒருவரிடம் புக் செய்தவன் அர்ச்சனா வருவதற்கு முன்னரே குழந்தையை வைத்தியர்களிடம் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று இங்கே வந்தான்.
ஆனால் குழந்தையோ அழுகையை நிறுத்தாது போக சிகிச்சை சற்றே தாமதமாகிவிட்டது.
குழந்தையை வைத்தியரிம் காட்டிவிட்டு தன்னுடைய நண்பனுடன் மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றவன் ஸ்டாஃப் ரூமில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த அர்ச்சனாவைக் கண்டு அதிர்ந்து போனான்.
தன்னையும் குழந்தையையும் கண்டால் நிச்சயம் அவளுடைய மனநிலை இந்த நேரத்தில் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து தன் நண்பனிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சட்டென அவளுடைய பார்வையில் படாதவாறு அவன் மறைந்து கொள்ள,
அவன் எதிர்பாராத விதமாக அர்ச்சனாவோ குழந்தையை நெருங்கி தூக்கிக் கொண்டதும் இல்லாமல் சந்தேகத்துடன் அவளுடைய பார்வையை சுழற்றி வீச அவனுக்கோ தேகம் படபடத்துப் போனது.
அவன் ஒன்று நினைக்க விதி ஒன்றை நினைத்து விட்டது போலும்.
யாழவனின் நண்பனோ குழந்தையை தன் கரத்தில் வாங்கிக் கொண்டு யாழவன் மறைந்திருந்த அறைக்குள் வந்துவிட, யாழவனுக்கோ இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
“தேங்க்ஸ் டா..” என்றான் யாழவன்.
“இட்ஸ் ஓகேடா.. உன்கிட்டயும் என்கிட்டயும் இருக்கும்போது இவன் அழுதுகிட்டே இருந்தான்ல.. ஆனா உன் பொண்டாட்டி தூக்கினதும் டக்குனு சிரிச்சான் பாரு எனக்கு ஷாக் ஆயிருச்சு..”
இன்னும் யாழவனின் முகம் தெளியாது இருப்பதைக் கண்டவன் “நீ வேணும்னா உன்னோட வைஃப்கிட்ட ஒரு தடவை பேசிப் பாரேன்..” என்றான் அரவிந்த்.
*இல்லடா அவ இப்பதான் என்ன மறந்து கொஞ்சம் நிம்மதியா இருக்கா.. இப்போ போய் அவ முன்னாடி குழந்தையோட நின்னா அத அவளால தாங்கிக்கவே முடியாது… இந்த டைம்ல அவ டென்ஷனாகாம இருப்பததான் நல்லது.. அவ கண்ணுல படாம இங்க இருந்து முதல்ல வெளியே போகணும்…” என்றான் யாழவன்.
“சரி நீ குழந்தையோட வர வேணாம்.. குழந்தைய என்கிட்ட கொடு.. நான் காரை ஸ்டார்ட் பண்ணிட்டு கார்ல வெயிட் பண்றேன்.. நீ ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வெளியே வா..” என்ற அரவிந்தனோ யாழவனின் குழந்தையை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
யாழவனுக்கோ நிஜமாகவே இந்த வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம் என்றுதான் இருந்தது.
இப்படி மறைந்து பிடித்த வாழ்க்கையை வாழ முடியாமல் ஏதோ ஒரு இயந்திரம் போல வாழும் தன்னுடைய வாழ்க்கையை அறவே வெறுத்தவன் இறந்து போவதை மேல் எனவும் நினைத்தான்.
நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன..?
ஐந்து நிமிடங்கள் வரை அந்த அறையின் உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்தான் அவன்.
அவனுடைய கெட்ட நேரமோ என்னவோ அர்ச்சனாவோ கைகளில் கிளவுஸ் அணிந்தவாறு அவனை நோக்கி நேராக வர அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
சட்டென தன் கரத்தில் இருந்த தொப்பியை தலையில் மாட்டியவாறு வேகமாக அவன் வெளியேறும் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்க,
உள்ளுணர்வின் உந்தலில் சட்டென திரும்பிய அர்ச்சனாவுக்கோ யாழவனின் பின்புறம் மட்டுமே விழிகளில் விழுந்தது.
அதிர்ந்த விழிகளை விரித்தவள், “இது யாழனா..?” எனத் திகைத்தவாறு வேகமாக அவனைப் பின்தொடர,
அவனுடைய நடையின் வேகமோ அதிகரித்தது.
அவனோ வேகமாக வெளியே வீதிக்கு வந்தவன் வீதியின் மறுபக்கம் அரவிந்தனின் கார் நிற்பதை கண்டு நிம்மதி பெரு மூச்சோடு தன்னுடைய நடையைத் தொடர,
“யாழவன் அது நீங்கதானே..?” என்ற அர்ச்சனாவின் குரல் சற்று தொலைவில் கேட்பதை உணர்ந்து எங்கே அவள் தன்னை நெருங்கி வந்து விடுவாளோ என அஞ்சியவன் வீதியில் கவனத்தை பதிக்காமல் விரைந்து அந்த வீதியைக் கடந்து செல்ல முயன்ற கணம்,
அதி வேகமாக வந்த காரோ அவனை இடித்து தூக்கி எறிந்தது.
மோதிய வேகத்தில் வீதியில் தேய்த்தவாறே சில அடி தூரம் பின்னால் நகர்ந்து சென்றது யாழவனுடைய உடல்.
யாழவனைப் போல இருக்கின்றதே என்ற சந்தேகத்தில் வீதியை நோக்கி ஓடி வந்தவளுக்கு அந்த நபர் காரில் மோதி தூரமாக சென்று விழுந்ததும் உடல் முழுவதும் வியர்த்து நடுங்க ஆரம்பித்துவிட்டது.
‘இல்ல அது என்னோட யாழன் இல்லை…’ என மனதிற்குள் உருப்போட்டவாறு நடுங்கிய கால்களை மெல்ல நகர்த்தி விபத்து நடந்த இடத்தை நெருங்கியவள் முகம் முழுவதும் உதிரத்துடன் உதிர வெள்ளத்தில் கிடந்த தன் கணவனைக் கண்டு விக்கித்துப் போனாள்.
அடுத்த கணமே அவள் பெரும் குறல் எடுத்து “யாழாஆஆஆஆ..” என அலற,
அவளுடைய அடிவயிற்றில் சுருக்கென்ற வலி ஆரம்பமானது.
அரவிந்தனோ குழந்தையுடன் ஓடிவந்து யாழவனின் நிலையைப் பார்த்துக் கதற,
அர்ச்சனாவின் கால்களோ தொய்ந்தன.
தாங்க முடியாத வலியில் அப்படியே வீதியில் சரிந்தாள் அவள்.
💜💜
Super super super super.