இதயமே இளகுமா அத்தியாயம் 4

5
(5)
பாலா மருத்துவமனைக்கு வந்தபோது, தினேஷ், கோகுல், வித்யா  மூவரும் சமர்,  பாலாவிற்காக மருத்துவமனை  வாசலில் காத்திருந்தனர்.
“என்னடா சமர் எங்கே? அவனை கூப்பிட்டு வரேன்னுதானே போன?” நீ மட்டும் தனியாக வர்ற..? என்றான் தினேஷ், சற்றே ஏமாற்றத்துடன்.
“அவன் வரலைன்னு சொல்லிட்டான்டா…” என்றான் பாலா.
அந்தநேரம், அங்கே வந்த ஆத்விகா, பாலா பேசியதை கேட்டாள், “என்ன? சமர் வரலையா? சமர் வர்றான்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த மெடிக்கல் கேம்புக்கு வர நான் சம்மதிச்சேன். சமர் வரலையென்றால், நானும் வரல!”
ஆத்விகா… சமரை கல்லூரி நாட்களில் இருந்து ஒருதலையாக காதலித்துக்கொண்டிருப்பவள். அவனது ஒவ்வொரு செயலும், வார்த்தையும் அவளுக்குள் அவன் மீது காதலை விதைத்தது. அந்த காதலுக்காவே இப்போது இவ்வளவு கோபத்துடன் பேசினாள்.
“இதைப் பாரு… உன்னை யாரும் கட்டாயப்படுத்தி வர சொல்லலை. நீயேதான் சமரிடம் நானும் வரேன் என்று சொல்லிருக்க, அதனால்தான் உன்னோட பெயரை மெடிக்கல் கேம்ப்க்கு வர்ற டாக்டர்ஸ் லிஸ்ட்ல   அட் பண்ணோம். இப்போ வர விருப்பம் இல்லையென்றாலும் தாராளமா நின்னுக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல,” என்றான் பாலா, ஆத்விகாவை பார்த்தபடி.
பாலாவிற்கு எப்போதுமே ஆத்விகாவை பிடிக்காது. பணமும், வசதியும் சமருக்கு இணையானவளாக இருந்தாலும், மற்றவர்களை அவள் எப்போதும் ஏளனமாகவே பார்த்தாள். பணத்திமிர் அவளுக்குள் எப்போதும் அதிகம்.
சமரின் குடும்பமும், ஆத்விகாவின் குடும்பமும் குடும்ப நண்பர்கள் என்பதாலேயே, சிறுவயதில் இருந்தே சமரும் ஆத்விகாவும் நல்ல நட்பில் இருந்தனர். பாலா கோயம்புத்தூரில் பள்ளி நாட்களிலேயே சமருடன் பழகியவன். சிறுவயதில் இருந்தே ஆத்விகாவை நன்றாகவே தெரிந்து கொண்டவன். அவள் சமரிடம் நல்லவளாக நடித்தாலும், சமர் இல்லாத நேரங்களில் அவளது உண்மையான முகம் தெரியும். பாலா ஆத்விகாவை கண்டுகொள்ள மாட்டான்.
பாலாவும் வசதியிலே குறைவானவன் அல்ல. விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றதால்  பெரும்பாலும் அவனை  இழிவாகவே பார்த்தாள். ஆத்விகா ஏதாவது ஏறுக்குமாறாக பேசினால், பதிலுக்கு பாலாவும் பேசி விடுவான். அதனால் அவனிடம் பெரும்பாலும் மெளனமாகவே இருந்துவிடுவாள் அவள்.
என்ன பாலா, சமர் உன் பேச்சை கேட்பான்ற திமிர்ல பேசுறியா…?. என ஆத்விகா கோபத்தில் வெடிக்க, வித்யா அவளைக் கைவைத்து நிதானப்படுத்தினாள்.
“ஆத்வி மெடிக்கல் கேம்புக்கு வாறேன்னு சொல்லி நீதான் சம்மதம் சொன்னே. நாங்க உங்கிட்ட கேட்ககூட இல்லை. இப்போ வேண்டாம்னு ஏன் சொல்ற? முதலிலேயே சொல்லிருந்தால் வேற யாரையாவது நாங்க எங்க குரூப்புல சேர்த்திருப்போம் இல்லயா?”
வித்யாவின் வார்த்தைகளால் மேலும் எரிந்த ஆத்விகா,
“இதோப் பார் வித்யா, உனக்கு நல்லாவே தெரியும்… நான் சமரை விரும்புறேன். கேம்ப்க்கு வர்ற இடத்துலே நான் அவனோட பேசி, எப்படியாவது அவனிடம் என் காதலை சொல்லணும் என்கிற எண்ணத்தால்தான் நான் சம்மதிச்சேன். கேம்ப் நடத்துவது எல்லாம் எனக்கு விருப்பமே கிடையாது.” நான் டாக்டர் படித்தது சமர் படிக்கிறான்ற ஒரே காரணத்தால் மட்டும்தான். நான் சம்பாதிக்கனும்னு எந்த அவசியமும் கிடையாது‌. ஆனாலும் நான் இங்கே வேலைக்கு வாறேன்னா அது சமர் இங்கே இருக்கான்னுதான். அதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க..! என்றாள் ஆத்வி.
அதைக் கேட்டு பாலா வெகுவாக கோபமடைந்தான். அவன் அவளிடம் பேச வந்ததற்குள், அவனின் மற்றொரு நண்பனான கோகுல் அவனைக் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“விடுடா அவள் எப்போதும் அப்படித்தான் தெரியும்லடா… திரும்பவும் அவள்கிட்டையே சண்டைக்கு போற.
நாம ஒன்னும் அவளை வாழை இலை விருந்து வச்சு, மகாராணியாரே  நீ வந்தால்தான் கேம்ப் நடக்கும் வான்னு கூப்பிட்டோமா? அவளேதான் வாறேன்று சொன்னாள், இப்போ என்ன ஏறுக்குமாறா பேசிட்டு இருக்காள்! நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசிட்டு இருக்கீங்க…”
.
“டேய் முதல்ல  நீ உண்மையை சொல்லு டா… சமர் இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணிட்டு, கண்டிப்பா வராமல் இருக்க மாட்டான் என தினேஷ் கேட்க…
அவன் வருவான். ஆனால் இன்னைக்கு இல்ல… நாளைக்கு ஈவினிங் அங்க இருப்பான்.”
“அதானே பார்த்தேன், சமர் ஒரு முடிவெடுத்தால் அதுல இருந்து பின்வாங்க மாட்டானே‌” என கோகுல் சொல்ல….
பாலா சொன்னான், “நம்ம இன்னைக்கு ஈவினிங் 6 மணிக்கு கிளம்புறோம். நாளைக்கு காலையில அங்க போயிடுவோம். நாளைக்கு எங்க ஊரு திருவிழா. எங்க அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பையன். சமர் சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் இவ்வளவு தாமதமாக கிளம்பறேன். இல்லனா ரெண்டு நாளுக்கு முன்னாடியே நான் கிளம்பியிருப்பேன்.” என பாலா மற்றவர்களையும் முறைத்தான்.
“சரி டா கூல்… நாம எல்லாரும் இன்றைக்கு ஆறு மணிக்கு கிளம்புறோம். நீ வரியா, வரலையா?” என ஆத்வியிடம் தினேஷ் கேட்டான்.
அதற்குப் பதிலாக ஆத்விகா, சற்று அடங்கிய குரலில், “நான் சமரோட வரேன்,” என்றாள்.
“உடனே தினேஷ், பாலாவிடம், “அவனுக்கு போன் பண்ணி ஆத்வி  உன்னோட வரேன்னு சொல்றான்னு சொல்லு, சமர் என்ன சொல்றான்னு கேட்போம்” என்று சொல்ல,
பாலா சமருக்கு அழைத்தான். கடைசி அழைப்பில் போனை அட்டெண்ட் பண்ணினவனிடம் பாலா விஷயத்தை சொல்ல, ஆத்வியை உங்க கூட கூப்பிட்டு போடுங்க,” என்றான் ஒரே பதிலாக.
போன் ஸ்பீக்கரில் இருந்ததால், எல்லாரும் கேட்க முடிந்தது. ஆத்வி முகம் அவமானத்தில் சுருங்கியது.
“என்ன பணக்கார மேடம்? சமர் சொன்னது காதுல விழுந்துதா இல்லையா? இப்ப நீ எங்களோட வரியா இல்லையா? கேம்ப் கேன்சல் பண்றியா?” என பாலா கேட்டதும்,
ஆத்விகாவிற்கு, “சமர் எப்படியும் அங்கே வந்துவிடுவான் என தெரிந்ததால், நானும் வரேன், என பாலாவை முறைத்தபடியே, ஆத்வி கூறினாள்.
“கரெக்டா, ஈவினிங் ஆறு மணிக்கு இங்கே இருக்கணும். இப்போ டூயூட்டி பாக்கலாம்.” என் பாலா சொன்னதும், எல்லோரும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
                 *****
செம்பருத்தி துணி தைப்பதை பார்த்துக்கொண்டே சந்திரா வீட்டிற்குள் வருவதும் வெளியே போவதுமாக இருந்தார்.
“அம்மா உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இப்போ வீட்டுக்குள்ள வர? என்னை பாக்குற? திரும்ப வெளியே போற… மறுபடியும் வர… பார்க்கிற… வெளியே போற… என்னமா பிரச்சினை?” என கேட்டாள்.
“விடிந்தால் நம்ம ஊரு திருவிழா செம்பா, அது உனக்கு ஞாபகத்துல இருக்கா இல்லையா?”
“அது ஞாபகத்துல இருந்து நான் என்னம்மா பண்ண போறேன்?” என்றவளை தீயாக முறைத்தவர்,
“ஏண்டி சன்னியாசியா போறேன்னு  யாருக்கும் வாக்கு கொடுத்து தொலைச்சிட்டியா என்ன?” என்றதும், தன் அன்னையை புரியாமல் பார்த்தாள் செம்பா.
“என்னடி முழிக்கிற? நீ வருஷத்துக்கு ஒரு தடவை தான் துணி எடுத்துக்குவ, அதுவும் திருவிழாவோட தான் எடுத்துக்குவ, சாயந்தரம் நீனும் கோகிலாவும் டவுனுக்கு போறேன்னு சொன்னீங்க, சரி, துணி எடுக்க போறேன்னு கோகிலா சொன்னதும், திருவிழாவுக்கு தான் துணி எடுக்க போறேன்னு நினைச்சா, வேலைக்கு போறதுக்கு துணி எடுத்துட்டு வந்து இருக்க. நாளைக்கு விசேஷத்துக்கு  என்னத்த போடுவ?”
“திருவிழா ஐந்து நாள் நடக்கும். அந்த ஐந்து நாளைக்கு புது துணி நம்மளால் எடுக்க முடியுமா என்ன?” என சந்திராவை கேள்வியாகப் பார்த்தாள் செம்பா.
“ஐந்து நாளும் நம்மளால போட முடியாது தான்மா. ஆனா முதல் நாளாவது புது துணி போட்டுட்டு இருக்கலாம் இல்ல நீ?” என்றார் வருத்தத்துடன்.
எல்லா பெண்களும் பட்டுப்பாவாடையும் புடவையும் பூவுமாக திரியும் போது, தன் மகள் எப்போதும் பழைய துணிகளிலும் நல்ல துணியாக பார்த்து எடுத்துக் கட்டிக் கொண்டு நிற்பாள், என்பது அவருக்கும் தெரியும். எல்லா திருவிழாவோடும் அவளிடம் மல்லுக்கட்டதான் செய்வார். சண்டைபோட்டு முடிந்தபின் புதிய துணியை எடுத்துக் கொண்டு வருவாள். ஆனால் இந்த முறை அதுவும் இல்லை.
“என்னம்மா அப்படியே யோசிச்சிட்டு  நிக்கிற?”
“உங்க அப்பா ஒரு நல்ல நிலைமையில் இருந்து வேலைக்கு போயிருந்தால் இன்னைக்கு என் பொண்ணும் நல்ல அழகா அலங்காரம் பண்ணிட்டு எல்லா பிள்ளைகளையும் மாதிரி சந்தோஷமா இருந்திருப்பாள் இல்லையா?” என்றவரின் குரல் கமரியது.
“ம்மா இப்போவும் சந்தோஷமாதான் இருக்கேன். திருவிழாவுக்கு புதுசு போடலைன்னா ஒன்னும் ஆகப் போறதில்லை…” என்றவள், துணியை தைய்த்துக் கொண்டிருக்க கோகிலா உள்ளே வந்தாள்.
“என்ன அத்தை, மகளுக்கும் அம்மாக்கும் பட்டிமன்றம் நடக்குது போல!”
“ஏண்டி, நீயும் அவ கூட போக தானே? செய்த ஒரு நல்ல புடவை எடுத்துட்டு வந்து இருக்கலாம் இல்ல?”
“ஆமா, உன் மக… நான் சொன்னதை கேட்டுட்டு தான் மறு வேலை பாப்பா. போ அத்தை,” என அங்கே இருந்த திண்ணையில் அமர்ந்தாள் கோகிலா.
“வந்து வாச்சிருக்கீங்க பாரு! ரெண்டு பேரும் ஒன்னு போல இருக்கிங்க,” என சமையலறை பக்கம் சென்று விட்டார் சந்திரா.
“செம்பா, நான் உன்கிட்ட எத்தனை தடவ சொன்னேன், ஒரு புடவை, விலை கம்மியா கூட, ஒன்னு எடுக்கலான்னு. நீ ஏன் கேட்கவே இல்லை பாரு, அத்தை முகத்தில் எவ்வளவு வருத்தம் தெரியுது!”
“நீ வேற சும்மா இருடி! அதற்கு டிரஸ் எடுத்தோம்னா, ஹாஸ்பிடல்ல யூனிபார்ம்‌க்கு காசு காணாது. சாதாரண துணி நாம எடுத்தோம்னா உடனே கிழிஞ்சிடும். அப்புறம் மறுபடியும் வாங்கணும். அதுக்கு நம்மளுக்கு காசு வேணும். அதான் நல்ல துணியா, கொஞ்சம் கூட விலைக்கு இதை நான் எடுத்துக்கிட்டேன். உன்ன, நான் வேற ஒரு புடவை எடுத்துக்கோனு சொன்னேன், நீ ஏன் கேக்கல?”
“நானும் உன் நிலைமைல தானே இருக்கேன். எனக்கு மட்டும் ஏன் புதுசு?” என முகத்தை வெட்டிக் கொண்டாள் கோகிலா.
அப்போது வீட்டிற்குள் வந்தார் ராசாத்தி.
“செம்பா!” என அழைத்தபடியே உள்ளே வந்தார்.
தன் அத்தை வந்ததும் எழுந்து வெளியே வந்தாள் செம்பருத்தி.
“என்னத்தை…” என்றவளின் பார்வை, அவர் கையில் இருந்த பைக்கு சென்றது.
“இந்தா, இதுல உனக்கும் கோகிலாவுக்கும் துணி இருக்கு. ராத்திரிக்குள்ள சட்டையை தச்சிடுவல்ல என்கவும்…” வந்தார் சந்திரா.
“ராசாத்தி, உனக்கு ஏது காசு?”
“நம்ம வீட்ல அத்து போன வெள்ளி கொடி ஒன்னு கிடந்தது. அதை கொண்டு போய் கடையில வித்துட்டு, இரண்டு பேருக்கும் துணி எடுத்துட்டு வந்தேன் மதனி.”
“அதை ஏன் கொண்டு வித்த?” என சந்திரா கோபமாக கேட்டார்.
“என்ன மதினி, அத வச்சு நான் என்ன பண்ண போறேன்? நம்ம பிள்ளைங்களாவது நாலு நல்ல துணி போடும் இல்ல,” எப்படியும் இவளுங்க, புது துணி எடுக்க போறதில்லைன்னு எனக்கு தெரியும். அதான் நானே போய்ட்டு வந்தேன்‌ என்றதும், கோகிலா அம்மாவின் கையில் இருந்த பையை வாங்கி எடுத்து பார்த்தாள்.
“அம்மா, இதுல நிறைய புடவை இருக்கு!”
“என்ன கோகிலா சொல்ற?” என  செம்பா அந்த பையை வாங்கி பார்த்தாள். நான்கு புடவைகள், வயது  பெண்கள் கட்டுவது போலவும், இரண்டு ஓரளவு நடுத்தர வயது பெண்மணி கட்டுவது போலவும் எடுத்திருந்தது. அவளுக்கு புரிந்து போனது நான்கு புடவை, அவளுக்கும், கோகிலாவுக்கும், மற்றது சந்திரா, ராசாத்திக்கும் என்பது.
“அத்தை, இப்போ இது நமக்கு…”
“மறுபேச்சு பேசாத! சட்டை தைச்சுருவியா எப்படி?” அதை முதல்ல சொல்லுடி என் மருமகளே…!
அத்தை, ஏன் வீணா காசு செலவு பண்ணிருக்க..?
ஏன் உன் அத்தை வாங்கித் தந்தால் கட்டிக்க மாட்டியா…?
“ம்ம்ம், என ராசாத்தியை முறைத்தவள், நாளைக்கு உன் மருமகள் இந்த புடவையைதான் கட்டிட்டு நிற்பேன் நல்லா பார்த்துக்கோ” என்றாள்.
ராசாத்தி சந்தோஷமாக சிரித்தார்.
கோகிலா தன் அம்மாவின் கையில் இருந்த இன்னொரு பையை பார்த்து “அது என்னது?” என கேட்டாள்.
“நம்ம எல்லாருக்கும் துணி எடுத்து இருக்கேன். என் அண்ணனுக்கு எடுக்கலைன்னா நல்லா இருக்காது இல்ல? அது மனசு வருத்தப்படும். அதான் என் அண்ணனுக்கும் சேர்த்து ஒரு துணி வாங்கிட்டு வந்து இருக்கேன்.”
அதை வாங்கிப் பார்த்தாள் கோகி, வெள்ளை நிற சட்டையும் வேஷ்டியும் இருந்தது.
“நல்லா இருக்கும்மா. மாமாவுக்கு இது சூப்பரா இருக்கும்!” என்றாள் கோகிலா.
“ராசாத்தி இந்த திருவிழாவுக்கும் வேலாயுதம் வரமாட்டானா..? என கேட்ட சந்திராவிடம்…”
“ அவனுக்கு வர விருப்பம் இருக்கும்தான் மதனி. ஆனால் அவன் பொண்டாட்டி விடனும்ல, பொண்னே கிடைக்கலைன்னு கிடைச்ச பொண்ணை பிடிச்சு கல்யாணம் முடிச்சு வச்சோம், நம்மகூட இருக்க அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லை. நம்ம கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாள். நம்ம புள்ள சந்தோஷம் தானே மதனி நமக்கு முக்கியம். பாவம் அவன் நமக்கு தந்து அவன் குடும்பத்துக்குள்ள சண்டை வந்துட கூடாது பாருங்க, அதான் நானும் எதுவும் கேட்கல, அவன் போன் பண்ணாலும் எதுவும் சொல்லல மதனி” என்றார் ராசாத்தி.
“சரி விடு ராசாத்தி, எங்கே இருந்தாலும், அது நம்ம புள்ளைதானே, என்னைக்கும் நம்ம கிட்ட வந்து சேர தான் செய்யும்.”
“ம்ம்ம் ஆமா மதனி, அண்ணன் எங்க காணோம்?” என கண்களால் வீட்டில் தேடினார்.
அவர் சாயந்திரம் போனவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
“அந்த மனுஷன் வர நேரம் தான்… நீ இங்கே இரு. வெளியே போயிட்டு வந்திருக்கல்ல, எப்படியும் சமைச்சிருக்க மாட்ட. இங்கே சாப்பிடு ராசாத்தி,” என சமையலறைக்குள் சந்திரா செல்ல, அவருக்கு உதவியாக ராசாத்தியும் சென்றார்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!