என் பிழை நீ

4.8
(13)

பிழை – 8

மருத்துவமனையின் கேண்டினிற்கு தான் அரவிந்தை அழைத்து வந்திருந்தாள்.

முதல் முறை பாரிவேந்தனை அழைக்காமல் தன்னை மட்டுமே தனிமையில் பேச வேண்டும் என்று அழைத்து வந்த விதுஷாவை எண்ணி மனம் நிறைய மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான் அரவிந்த்.

“என்னடி என்னமோ பேசணும்னு சொன்ன இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்.. என்ன விஷயம்னு சொல்லு”.

“அது வந்து.. அரவிந்த் நான் இப்படி சொல்றேனு நீ என்னை தப்பா நினைக்க கூடாது” என்று தயக்கத்தோடு அவள் ஆரம்பிக்கவும்.

“என்னடி பேசுற நான் எப்படி உன்னை தப்பா நினைப்பேன். உனக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா..” என்று அவள் தயங்குவதையும் அவன் கிண்டல் செய்ய.

“சும்மா இருடா நானே ரொம்ப கன்ஃபியூஷன்ல இருக்கேன் தெரியுமா”

“எதுக்கு கன்ஃபியூஷன்?”.

“அது வந்து.. வீட்ல எனக்கும் பாரிக்கும் மேரேஜ் பண்ணலாம்னு பேசிக்கிட்டு இருக்காங்க”.

அவ்வளவு தான்.. அவனின் மனதிற்குள் எழுந்த மொத்த மகிழ்ச்சியும் வடிந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் கூறுவதை கேட்டு அவனின் முகம் இறுக தொடங்கியது.

“எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலடா.. இதுவரைக்கும் நான் பாரியை அப்படி பார்த்ததில்லை. ஆனா எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். அண்ட் ஆல்சோ இப்போலாம் அவனை பத்தி யோசிச்சாலே ஸ்டொமக்ல ஏதோ பட்டர்ஃபிலைஸ் பறக்கிற மாதிரி இருக்கு.

அவனை பேஸ் பண்ணவே கொஞ்சம் ஒரு மாதிரி பீல் ஆகுது டா. நான் என்ன பீல் பண்றேன்னு எனக்கே புரியல.. இந்த விஷயத்துல என்ன டிசைட் பண்றதுன்னே தெரியல ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு”.

இவள் கூறி முடித்தும் கூட அப்படியே அவளை அதிர்ந்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் கையை பிடித்து உலுக்கிய விதுஷா, “என்னடா ஏதோ கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்க”.

“என்ன விது இப்படி எல்லாம் சொல்ற” என்றான் அதிர்ச்சி மாறாத குரலில்.

“பாத்தியா.. உனக்கே எவ்வளவு ஷாக்கிங்ஆ இருக்கு. இதையெல்லாம் போய் நான் பாரிகிட்ட சொன்னா அவன் என்னை பார்த்து சிரிப்பானோனு பயமா இருக்குடா. அதான் உன்கிட்ட பேசலாம்னு உன்னை கூப்பிட்டு வந்தேன்”.

தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பத்தை இவன் எதிர்பார்த்து கொண்டிருக்க..

அவளோ வேறொருவனின் மேல் இருக்கும் உணர்வை இவனிடமே கூறிக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது என்ன செய்வது என்று அரவிந்துக்கு சற்றும் விளங்கவில்லை.

பாரிவேந்தனின் மேல் அவனுக்கு கோபம் எல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் விதுஷாவா பாரியா என்று வந்துவிட்டால் அவன் நிச்சயமாக விதுஷாவை தான் தேர்ந்தெடுப்பான். அதில் எந்த ஒரு ஐயமும் கிடையாது.

அவனின் காதல் கொண்ட மனம் கொஞ்சம் கொஞ்சமாக விதுஷாவின் வார்த்தைகளில் நொறுங்கிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் அறியாத விதுஷாவோ அவனிடம் தன் மனதில் இருப்பதை எல்லாம் கூறி புலம்பி கொண்டு இருந்தாள்‌.

“உனக்கு என்ன தோணுது பாரிக்கு ஓகே சொல்லிடலாம்னு தோணுதா”.

“நான் வேண்டாம்னு சொன்னா உங்க வீட்ல நீ வேண்டாம்னு சொல்லுவியா” என்று சந்தேகமாக அவளை அவன் பார்க்கவும்.

அவனின் பார்வையில் தன் தலையை தாழ்த்திய விதுஷா ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தாள்.

அவளின் செயலில் அரவிந்திற்கு தான் தன் தலையில் ஏதோ இடி விழுந்த உணர்வு.

“எனக்கு பாரியை பிடிச்சிருக்கு அரவிந்த். ஆக்சுவலி, இதுக்கு முன்னாடி எல்லாம் எனக்கு அவன் மேல எந்த ஃபீலிங்ஸும் வந்தது கிடையாது. பட், எங்க வீட்ல இதை பத்தி பேசின பிறகு தான் நான் அவனை பத்தி டீபா திங்க் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். எனக்குள்ள ஏதோ ஒரு ஃபீலிங் இருக்குடா.. இவ்வளவு நாளா நான் ரியலைஸ் பண்ணாமல் இருந்து இருக்கேன்னு நினைக்கிறேன். பாரிக்கு ஓகே சொல்லிடலாம்னு தான் தோணுது”.

“விது எதுக்கு இவ்வளவு அவசரம்.. கொஞ்சம் யோசிக்கலாமே.. நீங்க ரெண்டு பேரும் சைல்ட்வுட் ஃபிரண்ட்ஸ் பாரியும் இதுவரைக்கும் உன்னை பிரண்டா மட்டும் தான் பார்க்கிறானு நினைக்கிறேன். அப்படி அவன் உன்னை லவ் பண்ணி இருந்தா அவனே உன்கிட்ட வந்து சொல்லி இருப்பான்ல”.

“கரெக்டு தான்.. நானும் அவனை இவ்வளவு நாளா பிரண்டா மட்டும் தானே பார்த்தேன். அது தானடா பிரண்ட்ஷிப்க்கு அழகு. ஆனா இனியும் அப்படி பார்க்கணும்னு அவசியம் இல்லையே.. எங்களுக்கு தான் மேரேஜ் ப்ரொபோசல் பத்தி பேசிக்கிட்டு இருக்காங்களே” என்றவாறு அவள் தோளை குலுக்கவும்.

அரவிந்திற்கோ கட்டுப்படுத்த முடியாமல் உணர்வுகளின் பிடியில் கைகள் நடுக்கம் எடுக்க தொடங்கியது.

அழுத்தமாக தன் தலையை கோதியவன் தன்னை சற்று சமன் செய்ய முயற்சித்தவாறு, “லுக் விது! அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் பிரண்ட்ஸா பழகுறீங்க நீ போய் சட்டுன்னு ப்ரொபோஸ் பண்ணி அவன் அக்செப்ட் பண்ணலைன்னா அது உங்க பிரண்ட்ஷிப்பையும் பாதிக்கும். பஸ்ட் அவனுக்கு உன் மேல ஃபீலிங்ஸ் இருக்கானு தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்” என்று வெகுவாக சிரமப்பட்டு அமைதியாக பேசினான்.

இவன் கூறியதை கேட்டு சற்று நேரம் சிந்தித்த விதுஷா, “எஸ் யூ ஆர் ரைட்.. பட், அவன் அக்செப்ட் பண்ணலைனாலும் நான் பீல் பண்ண மாட்டேன். கடைசி வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம்”.

“அதுக்காக உடனே நீ இதை பத்தி அவன் கிட்ட பேசாத கொஞ்ச நாள் போகட்டுமே”.

“வேண்டாம் அரவிந்த் ரொம்ப நாள் இதை மனசுக்குள்ளேயே வச்சிருந்தா அப்புறம் அவன் மேல எனக்கு பீலிங்ஸ் அதிகமான பிறகு அவன் நோ சொல்லிட்டான்னா எனக்கு அது ரொம்ப ஹர்டிங்கா இருக்கும். ஆரம்பத்திலேயே எல்லா விஷயத்தையும் பேசி சரி பண்றது தான் நல்லது”.

‘நோ சொன்னா பரவாயில்ல.. பட், அவன் எஸ் சொல்லிட்டான்னா..’ என்று எண்ணும் போதே அவனின் இதயம் மிகவும் படபடத்தது.

“உன்கிட்ட பேசின பிறகு தான் மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி இருக்கு” என்று பெருமூச்சு விட்டவள், “நெக்ஸ்ட் வீக் நாம மெடிக்கல் கான்பரன்ஸ் போகிற வேலை இருக்கு இல்ல அது முடிஞ்ச பிறகு தான் வீட்ல பாரி கிட்ட பேச போறதா சொல்லி இருக்காங்க. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதும் வீட்ல பேசுறதுக்கு முன்னாடி நான் பாரிகிட்ட பேசிடலாம்னு இருக்கேன்.

எனக்கே இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு தெரியுமா.. ஐ காண்ட்‌ எக்ஸ்ப்ளைன் வாட் ஐ அம் ஃபீலிங்.. ஒரு மாதிரி நர்வஸா இருக்கு” என்று வெட்கத்தோடு கூறியவள் தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்துக் கொண்டு, “ஓ காட்! ரவுண்ட்ஸ்க்கு டைம் ஆயிடுச்சு வா அரவிந்த் கிளம்பலாம்”.

“நீ போ விது ஐ நீட் டு யூஸ் வாஷ் ரூம்” என்றவன் அவளின் முகத்தையும் பாராமல் அவளின் பதிலையும் எதிர்பாராமல் விறுவிறுவென எழுந்து சென்று விட்டான்.

விதுஷாவிற்கும் அவனின் நடவடிக்கை பெரிதாக வித்தியாசமாக தெரியவில்லை. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.

அங்கே மாட்டப்பட்டிருந்த கண்ணாடியினோடு தன்னை வெறித்து பார்த்துக் கொண்டே சற்று நேரம் நின்றிருந்தவனின் கண்கள் தானாக கலங்கியது.

ஆம் அழுகிறான்..

அவளின் மேல் இத்தனை வருடங்கள் அத்தனை காதலை சேமித்து வைத்து விட்டான். இப்பொழுது தன் கண்முன்னேயே தன் காதல் கானல் நீராக மாறப் போவதை அவனால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாரிவேந்தனை உற்ற நண்பனாக பார்க்கிறான் தான். அதற்காக தன் காதலை அவனுக்கு விட்டுக் கொடுக்க அவனுக்கு சற்றும் மனமில்லை. விட்டுக் கொடுக்கும் எண்ணமே அவனுக்கு கிடையாது.

தண்ணீர் குழாயை திறந்தவன் தன் முகத்தை நன்கு கழுவினான்.

பாரி வேந்தனுக்கு விதுஷாவை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கக் கூடாது என்று அவனின் மனம் அடித்துக் கொண்டது.

தன் மனதில் விதுஷாவின் மேல் இருக்கும் எண்ணத்தை பாரிவேந்தனிடம் வெளிப்படையாக கூறிவிடலாமா என்றும் எண்ணம் எழுந்தது.

பாரி வேந்தனிடம் ஏன் கூற வேண்டும் விதுஷாவிடமே கூறிவிட்டால் என்ன என்றும் கேள்வி எழ.

சற்று நேரத்திற்கு முன்பு விதுஷா பாரி வேந்தனை பற்றி பேசும்பொழுது அவளின் முகத்தில் எழுந்த உணர்ச்சிகளை பற்றி சிந்திக்கலானான்.

இப்பொழுது தன் மனதில் இருக்கும் எண்ணத்தை பற்றி அவளிடம் கூறினால் நிச்சயமாக அவள் சம்மதிக்க மாட்டாள். அவளுக்கு தன்னையும் அறியாமல் பாரியின் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் விளைவே அவளிடம் இந்த மாற்றம்..

முதலில் பாரிக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் அந்த மெல்லிய ஈர்ப்பை தகர்த்தெறிய வேண்டும். அதன் பிறகு தன் காதலை கூறினால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவுடன் அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்து என்ன என்ற சிந்தனை அவனின் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அன்று முழுவதுமே ஏதோ ஒரு தடுமாற்றத்துடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

அடுத்த வாரம் மருத்துவ ரீதியான கான்ஃபரன்ஸ் ஒன்று கேரளாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு பாரி விதுஷா அரவிந்த் என மூவருமே செல்லவிருக்கின்றனர்.

அந்த கான்ஃபரன்ஸிற்கு பிறகு தான் பாரி விதுஷாவின் திருமண விஷயத்தை பற்றி யாராக இருந்தாலும் பாரியிடம் பேசுவார்கள். ஏனெனில், இந்த கான்ஃபரன்ஸ் பாரியின் மருத்துவ வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.

அவன் வெகு தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் அவனிடம் திருமணத்தை பற்றி பேசி அவனின் மனதை கலைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் விதுஷா உட்பட யாருமே அவனிடம் இதை பற்றி பேசவில்லை.

ஆனால் கான்ஃபரன்ஸ் முடிந்ததும் நிச்சயமாக அவனிடம் பேசி விடுவார்கள். கான்ஃபரன்ஸ் முடிவதற்குள்ளாகவே இந்த பேச்சை நிறுத்த வேண்டும் என்று கடகடவென அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துக் கொண்டு இருந்தான் அரவிந்த்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “என் பிழை நீ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!