42. காதலோ துளி விஷம்

4.8
(120)

விஷம் – 42

சற்று நேரத்தில் குழந்தையுடன் அறைக்குள் நுழைந்தார் அன்னம்.

படுக்கையில் சோர்ந்து போய் படுத்திருந்த தன் மகளைக் கண்டதும் அவருடைய விழிகளோ மீண்டும் கண்ணீரை தத்தெடுத்துக் கொண்டன.

யாழவனுக்காக அவள் அழுது கதறி பிரசவ அறைக்கு கூட வராமல் அடம்பிடித்தது எல்லாம் பானுமதியின் மூலமாக அறிந்து கொண்டவருக்கு தன்னிடமும் அர்ச்சனா யாழவனைப் பற்றித்தான் முதல் கேள்வியை எழுப்பப் போகின்றாள் என்பது தெளிவாகப் புரிந்தது.

இயல்பாக பதில் சொல்லக்கூடியவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டவர் குழந்தையை அவளுக்கு காட்ட,

விழிகளில் ஊறிக் கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை வேகமாக துடைத்துவிட்டு அப்போதுதான் குழந்தையைப் பார்த்தாள் அர்ச்சனா.

பார்த்த கணம் அவளுடைய உடல் சிலிர்த்தடங்கியது.

தாதியோ அவளுடைய மார்பை சுத்தப்படுத்திவிட்டு குழந்தைக்கு பால் புகட்ட அறிவுறுத்த

செல்வமகளை வாங்கி அணைத்தவளுக்கு தேகம் நடுங்கியது.

மெல்ல குழந்தைக்கு பாலூட்டத் தொடங்கியவளின் மார்பு அதற்குள் குடியிருந்த யாழவனை நினைத்துத் தவித்தது.

இவ்வளவு நேரமும் இடைவிடாமல் அங்கிருந்த மருத்துவர் தொடக்கம் தாதி வரை அனைவரிடமும் யாழவனைப் பற்றி ஓயாது விசாரித்துக் கொண்டிருந்தவள் இப்போது அவனைப் பற்றி கேட்கவே அச்சம் கொண்டாள்.

அனைவரும் ஒரு சேர அவனைப் பற்றி கூறுவதை தவிர்த்துக் கொண்டே இருக்க அவளுக்கோ உண்மையை ஏற்றுக்கொள்ள பயமாக இருந்தது.

தனக்குப் பிடிக்காத ஒன்றைத்தான் கூறப் போகிறார்கள் என எண்ணியவள் யாழவனைப் பற்றி கேட்கவே பயந்தாள்.

அம்மம்மா…

அந்த நொடிகள் யாவும் அவளுக்கு நரகம்.

அதற்காக அவனுடைய நலனைப் பற்றி அறியாமலும் அவளால் இருக்க முடியாதே..

வார்த்தைகளை உதிர்க்க முயல்வதும் பின்பு அந்த வார்த்தைகளை உதிர்க்காமல் அப்படியே தொண்டைக்குள் விழுங்கிக் கொள்வதுமாக இருந்த தன் மகளைப் பார்த்து அன்னத்திற்கோ பெற்ற வயிறு பற்றி எரிந்தது.

அவளும் எவ்வளவு நேரத்திற்குத்தான் தன்னை அடக்கிக் கொண்டு படாத பாடு படுவது..?

ஒரு கட்டத்தில் தாங்க முடியாது “யாழ.. யாழன் நல்லா இருக்காரு தானேமா..?” என வேதனையுடன் அவருடைய விழிகளைப் பார்க்க

தடுமாறித்தான் போனார் அன்னம்.

சட்டென தன்னுடைய தடுமாற்றத்தையும் வேதனையும் மறைத்துக் கொண்டவர்,

“நீதானேடி அந்தப் பையனை வேணாம்னு சொல்லிட்ட.. அப்புறம் எதுக்கு அவரைப் பத்தி கேட்கிற..? அவர் எப்படி போனா உனக்கு என்ன..?” எனப் பேச்சை மாற்றினார் அவர்.

“ம்மா.. நா.. நான் ஏதோ கோபத்துல இருந்தேன்மா.. அதுக்காக அவரை வேணாம்னே நான் முடிவு பண்ணிட்டேன்னு அர்த்தமா..? என்னோட வலி அவருக்கும் புரியனும்னு நெனச்சேன்.. அதுக்காகத்தான் பிரிஞ்சிருக்க ட்ரை பண்ணினேன்..

ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு தடவையும் என்னை வந்து பார்ப்பேன்னு சொ… சொன்னாரு.. சத்தியமா நான் அவருக்காக வெயிட் பண்ணிட்டுதான் இருந்தேன்… ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைம்மா… எதுவா இருந்தாலும் நாம அப்புறமா பேசிக்கலாம் ப்ளீஸ்… இப்போ என்னால பேசவே முடியல.. நெஞ்செல்லாம் வலிக்குது..

யாழன் எப்படி இருக்காருன்னு சொல்லுங்க.. நான் அவரை பாக்கணும்… அவர் கூட பே.. பேசணும்… ரோட்ட பாத்து ஒழுங்கா நடக்கத் தெரியாதான்னு திட்டணும்… என்ன பாத்து எதுக்காக ஓடுனீங்கன்னு கேட்கணும்… ப்ளீஸ்மா… அவர்கிட்ட என்ன கூட்டிட்டு போங்க..” என அவள் அழுகையோடு கெஞ்ச,

அவருக்கோ மனம் தாளவில்லை.

“ஐயோ… நம்ம எல்லாரையும் விட்டுட்டு அவர் போயிட்டாரு அர்ச்சனா.. எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவர காப்பாத்த முடியலடி…” என அன்னம் அழுதவாறு கூறியதும் விக்கித்துப் போனாள் அர்ச்சனா.

அவள் கத்தவுமில்லை கதறவும் இல்லை.

அவளால் அன்னை கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்னத்தின் வார்த்தைகள், அர்ச்சனாவின் காதுகளில் துளையிட்டு இதயத்தில் நுழைந்து உணர்வுகளைச் சிதறடித்தன.

“நம்ம எல்லாரையும் விட்டுட்டு அவர் போயிட்டாரு…”

அந்த ஒரு வரி மட்டுமே அவளுடைய செவிக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அர்ச்சனாவோ பேய் அறைந்தாற் போல சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமைதியாக இருக்கவும் அன்னத்திற்கோ பயம் கவ்விக் கொண்டது.

“அம்மாடி…? இ.. இப்படி இருந்தா என்னம்மா நான் பண்ணுவேன்..? எனக்கு உன்னோட வேதனை புரியுது.. அழுதுடுமா.. அழுது உன்னோட மனசுக்குள்ள இருக்க வலிய தீர்த்திடு.. இப்படி மட்டும் அமைதியா இருக்காத..” என அழுதார் அன்னம்.

அந்த அறையின் ஓரமாக தேம்பித் தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்த கீர்த்தனாவுக்கு தன்னுடைய சகோதரியின் நிலையைக் காணச் சகிக்கவில்லை.

அப்போதும் கூட அவள் அசைவு இல்லாமல் அந்த சுவற்றையே வெறித்துப் பார்த்தவாறு இருக்க குழந்தையை எடுத்து கீர்த்தனாவிடம் கொடுத்தவர் அவளுடைய தோள்களைப் பற்றி உலுக்கினார்.

இப்போது அவளுடைய பார்வையோ தன் அன்னையின் மீது பதிந்தது.

“விட்டுட்டு போய்ட்டாரா…? யாரு… யாழனா…? நோ.. நோ மா… அவரால என்ன விட்டுட்டு இருக்க முடியாது… நீங்க பொய் சொல்றீங்க..

இல்ல.. இல்லை… அவரால என்ன விட்டுட்டு போயிருக்க முடியாது…” கூறியதையே மீண்டும் மீண்டும் உருப்போடலானாள் அவள்.

அவளுடைய பார்வை கீர்த்தனாவின் கரத்தில் இருந்த குழந்தையின் முகத்தில் பதிந்தது.

தன் உயிரின் பாதியை மூச்சாக ஏந்தியிருக்கும் அந்த சிறு முகம்…

அந்த முகத்தின் மேல் விழிகளை செலுத்தாதிருக்க அவளால் முடியவில்லை.

யாழவனின் நகங்கள் போலவே அந்தச் சிறிய விரல்களிலும் குட்டி குட்டி நகங்கள் இருந்தன.

அவனுடைய நாசி வடிவம்… அவனது பார்வை போன்ற ஈரமான விழி அமைப்பு…

தன்னையும் யாழவனையும் சேர்த்த கலவையாக பிறந்திருந்த அவளுடைய மகளை அந்த வேதனையிலும் ரசித்தாள் அவள்.

“அம்மா… அவர் இங்கதான் இருக்காரும்மா…. அவர் எங்கேயும் போகலை..” சிறு விம்மலுடன் அவள் அன்னத்தின் தோளில் சாய்ந்து மெதுவாகச் சொன்னாள்.

“அவரால போக முடியாது..

அவரோட பிள்ளைய பாக்காம அவர் போயிடுவாரா..?

நான் இங்க முடியாம வலியோட படுத்திருக்கேன்.. என்ன பாக்காம எப்படிமா அவரால போக முடியும்..?”

அன்னம் அவளது உடலை பரிவோடு தாங்கிக் கொண்டார்.

அவளுடைய வலி நிறைந்த வார்த்தைகள் யாவும் அவரையும் வலிக்கச் செய்தன.

அர்ச்சனாவால் இன்னும் அழ முடியவில்லை.

கண்ணீர் வரவே இல்லை.

புரியாத வலிகள், நம்ப முடியாத உண்மைகள், ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள்.

அவள் என்னதான் செய்வாள்..?

“கீத்தூ பா.. பாப்பாவ கொடுடி.. பால் கொடுக்கணும்..” என தன் தங்கையிடம் இருந்த குழந்தையை வாங்கி அணைத்து முத்தமிட்டவள் மீண்டும் பால் கொடுக்கத் தொடங்கிவிட,

கீர்த்தனாவால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. அழுகையை அடக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றிருந்தாள்.

அன்னத்திற்கோ அவளுடைய விசித்திரமான நடவடிக்கையில் புதுவிதமான பயம் இதயத்தில் எழுந்தது.

நிஜத்தை ஏற்றுக் கொள்ளாமல் மனநிலை பாதிக்கப்பட்டவளை போல அல்லவா நடந்து கொள்கிறாள்.

எப்படி இவளை தேற்றி பழையபடி கொண்டுவரப் போகின்றோம் என்ற வேதனை அவரை ஆட்டுவித்தது.

அதன் பின்னர் அர்ச்சனா யாழவனைப் பற்றி கேட்கவே இல்லை.

யாரிடமும் பேசவும் இல்லை.

அடிக்கடி தன் குழந்தையின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

உணவு வேண்டாம் என மறுத்தவளை திட்டி உணவை ஊட்டி விட்டிருந்தார் அவளுடைய தாயார்.

அவளுக்கோ அது என்ன உணவு..? அதன் சுவை எப்படி இருந்தது..? முதலில் அவள் சாப்பிட்டாளா இல்லையா என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

அது பற்றிய தெளிவும் இல்லை.

அடுத்த நாளே அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என வைத்தியர் கூறி இருக்க குழந்தையுடன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள் அர்ச்சனா.

*****

ரூபாவதியின் முகமோ உயிர்பை தொலைத்திருந்தது.

கரத்தில் யாழவனின் குழந்தையான அரணை சுமந்து கொண்டு உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் அர்ச்சனாவின் வீட்டிற்குள் நுழைந்தார் அவர்.

அங்கே குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அர்ச்சனாவைப் பார்த்ததும் அவருக்கோ அவள் மீது அவ்வளவு கோபம் வந்தது.

இறுதிக் காரியத்திற்கு கூட அவர்களுடைய வீட்டின் பக்கம் அர்ச்சனா எட்டிக் கூடப் பார்க்கவில்லையே..

அப்படியே போனால் போகட்டும் என விட்டு விட்டாளா..?

பெற்ற மனம் தவித்துத் துடித்தது.

அடக்கிக் கொண்டார்.

யாழவனின் தந்தை வாயிலோடு நின்று கொண்டார்.

அவர்கள் வந்ததை பார்க்காதது போல அமைதியாக அமர்ந்திருந்த அர்ச்சனாவின் தோளில் கரத்தை பதித்து அழுத்தினார் அன்னம்.

“குழந்தைய என்கிட்ட கொடும்மா..” என்ற ரூபாவதியோ அர்ச்சனாவின் கரத்தில் இருந்த குழந்தையை வாங்குவதற்காக தன் கரத்தில் இருந்த அரணை அன்னத்திடம் கொடுக்க அன்னமோ அந்த இரண்டு மாதக் குழந்தையை தன் கரத்தில் ஏந்திக்கொண்டார்.

சட்டென அந்தக் குழந்தை அழத் தொடங்கி விட அப்போதுதான் அர்ச்சனாவின் கவனம் அரணின் மீது பதிந்தது.

யாழவனைப் பார்த்த அன்று அவள் தூக்கிக் கொஞ்சிய அதே குழந்தை.

அந்த சிரிப்பையும் விழிகளையும் எங்கோ பார்த்தது போல இருந்தது என நினைத்ததற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அவளுக்கு அக்கணம் புரிந்தது.

அவளுடைய குழந்தைக்காக கரத்தை நீட்டிய ரூபாவதியிடம் தன் குழந்தையை நீட்டியவள் வேகமாக எழுந்து சென்று தன் அன்னையின் கரத்தில் இருந்த குழந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

அப்படியே யாழவனை உரித்துப் பிறந்திருந்தான் அவன்.

இதோ அவளுடைய யாழவன் திரும்பி வந்து விட்டானே..!

‘என் யாழன்..’ அவளுடைய நெஞ்சம் விம்மி அடங்கியது.

அடுத்த நொடியே கிட்டத்தட்ட குழந்தையை பறித்து எடுப்பவள் போல அதை வாங்கி தன் மார்போடு அணைத்து முத்தமிட்டவளுக்கு முதல்முறையாக அழுகை வெடித்தது.

“இ… இவன் எனக்கு வேணும்… எ.. என்கிட்ட கொடுத்துடுங்க..” எனக் கதறி அழுதவளை மொத்த குடும்பமும் அதிர்ந்து பார்த்தது.

ரூபாவதியோ தன் கையில் இருந்த குழந்தையை அன்னத்திடம் கொடுத்துவிட்டு அர்ச்சனாவிடம் இருந்த அரணை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டவர்,

“என் பையன் சாகுறதுக்கு முன்னாடி இவன உன்கிட்ட கொடுத்து உனக்கு சுமையை ஏத்திட வேணாம்னு சொன்னான்மா.. சத்தியம் வாங்கிட்டு செத்துப் போய்ட்டான்மா.. சாரி.. இவன நாங்க பார்த்துக்கிறோம்..” என்றார் அழுத்தமாக.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 120

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!