13. நேசம் கூடிய நெஞ்சம்

4.9
(14)

நெஞ்சம் – 13

நிமிர்வாக பேசிவிட்டு வந்தாளே தவிர, அடுப்படியில் வந்து வாயில் துப்பட்டாவை வைத்து அமுக்கி கொண்டு அழுது தீர்த்தாள் மலர். வலிக்க வைக்காமல், புலம்ப வைக்காமல் இருக்குமா உண்மை காதல்? எப்படி என் காதலை எளிதாக கூறிவிட்டான்! பல நண்பர்கள் இருக்கும் அவனின் பெண் தோழிகள் அப்படி இருந்தால், நானும் அப்படி இருப்பேனா? அவன் திருமண விஷயம் இப்படி என் மனதை அரிக்கிறதே? அவனுக்கு ஏன் புரியவில்லை, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது என்னுடன் இப்படி நடந்து கொண்டது என் மேல் அன்பு இல்லாமலா? மாலில் என்னை நோக்கிய விழிகளில் ஆசை இல்லையா? அவனை குத்திக் காட்டி விடக்கூடாது என்று நான் இருக்க, அவன் என் அன்பை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லையே…. எனக்கு அந்த அளவு  தகுதி இல்லை என்று நினைப்பானோ…. நான் என்ன என்னை திருமணமா செய்துக் கொள்ள கேட்டேன்? நான் ஒரு வேலைக்கார பெண் என்று நினைப்பானோ? பலவாறாக புலம்பியவளுக்கு தன்னிரக்கத்தில் கண்ணீர் கொட்டியது.

அவள் எண்ணத்தின் நாயகனும் ஒரு விதத்தில் அலமலந்து கிடந்தான். என்னடா பண்ணி வைச்சு இருக்க? அந்த சின்ன பொண்ணுக்கு எப்படி நியாயம் செய்றது? ஐயோ, ஏண்டா இப்படி பண்ணி தொலைச்சே? என்ன கேடு வந்துச்சு எனக்கு? அவனின் எண்ணம் யாவும் தவறு செய்து விட்டோம் என்பதில் மட்டுமே இருந்தது. அவன் மனம் அவளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவன் உணரவே இல்லை, உணர்வது மிக கடினம். அதை ஆராயும் அளவு அவன் அறிவு மலருக்கு முக்கியத்துவும் தரவே இல்லை! அவளின் நிலை வேறு, இவனின் நிலை வேறு! வெவ்வேறு சமூக கட்டமைப்பில் வந்தவர்களுக்கான இடைவெளி நிரம்புவது சுலபமா என்ன?

அடுத்து வந்த நாட்கள் மலருக்கு தெளிந்த நீரோடை போல் சென்றது என்றால், அர்விந்திற்கு குழம்பிய குட்டை போல் இருந்தது. அரவிந்துடன் தன் வாழ்வை பிணைத்து கொள்ளவெல்லாம் தனக்கு வாய்ப்பு இல்லை, இங்கே அவன் வீட்டில் இருக்கும் வரையாவது அவனை கண்களிலும் மனதிலும் நிரப்பிக் கொள்வோம் என்று இருந்தாள் மலர். அவனுடன் ஒரே வீட்டில் இருப்பது சுகமாக இருந்தது அவளுக்கு. இங்கு இருந்து சென்ற பின் அவள் வாழ்வில் மீண்டும் அவனை பார்க்கக் கூட முடியாதே!

கண்களால் அவனை தொடரும் மலரை அறிந்தே இருந்தான் அர்விந்த். தன்னை காதலிக்கிறேன் என்ற சொன்ன அவளின் பார்வை, அதுவும் குறிப்பாக அந்த விழிகள் வீட்டிற்குள் அவனை இயல்பாகவே இருக்க விடவில்லை. மலரை பார்க்கும் நேரமெல்லாம் அவளை அவன் முத்தமிட்டதே நினைவுக்கு வந்தது. கூடவே அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட அந்த நெருக்கத்தின் உணர்வுகளும், ஏன் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டான் என்ற அவமானமும் சேர்ந்து அவனை படாய்ப்படுத்தியது.

இவ்வளவு போராட்டம் அவன் மனதிற்குள் இருந்தாலும், அவனே அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் அவளின் இருப்பும் அவனுக்கு பிடித்ததாக தான் இருந்தது! முன்பு போல் அவளிடம் இருந்து ஒளியவில்லை அவன், அவளை ஒதுக்கவும் இல்லை. இருவரும் பெரிதாக பேசிக் கொள்வது இல்லை. அத்தியாவசியமாக மட்டுமே பேசினர் அவர்களுக்குள் ஒன்றுமே நடக்காதது போல் ஒரே வீட்டிற்குள் அவரவர் அவர் வேலையை பார்த்தனர். சில நேரங்களில் என்னவிதமான நிலை இது என்று இருவருமே யோசிப்பார்கள்!

அந்த இரண்டாம் மாசமும் விரைந்து ஓடிக் கொண்டு இருந்தது. அருணா நன்றாக உடம்பு தேறிருந்தார். இப்போது கொஞ்சம் கொஞ்சம் அடுப்படியில் மலருடன் சேர்ந்து வேலைகள் செய்ய ஆரம்பித்தார். அவர் உடல்நிலை ஓரளவு திடம் ஆனதுமே, வீட்டில் மகனின் திருமண பேச்சை ஆரம்பித்தார். தியாகுவிடம் விரைவில் திருமண வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

இந்த பேச்சை எதிர்பார்த்தே தான் இருந்தாள் மலர்! பின் அர்விந்த் என்ன அவளையா திருமணம் செய்வான்? என்ன தான் யதார்த்தம் தெரிந்தாலும், மனதை தயார்படுத்தி வைத்து இருந்தாலும் மனசை கசக்குவது போல் வலித்தது மலருக்கு. எதற்கு எனக்கு இந்த பொருந்தா காதல் வந்தது என்று மனம் வருந்தினாள் மலர்.

அன்று நிவேதாவின் வீட்டினர் வந்து இருந்தார்கள் அருணாவை பார்க்க. அவர்கள் இருவருமே மிக மிக சாதாரணமாக, ஏதோ நண்பர்கள் வீட்டிற்கு வந்து இருந்ததை போல் பேசினார்கள். தன் மகளின் வருங்கால மாமியார் மாமனார் என்றோ, அவர்கள் இவர்களை பற்றி நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்றோ எந்த விதமான அவசியமும் இன்றி இருந்ததை அவர்களின் உடல்மொழியில் இருந்து மலரால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

மலர் அவர்களுக்கு காபி, பலகாரம் எல்லாம் கொடுக்க, அவளை கண்டவர்கள் அவள் நகர்ந்ததும், அர்விந்திடம்,

“இந்த பொண்ணை பத்தி நிவேதா நல்ல விதமா சொன்னா! நீங்க இவங்க வீட்டில கேளுங்க, மைசூருக்கு வேலைக்கு அனுப்புவாங்களானு? என் பிரண்ட் வீட்டில் ஆள் தேடுறாங்க” என்றனர்.

அவளை சொந்தக்கார பெண் போல் கவனித்து கொள்ளும் தியாகுவுக்கும்  அருணாவிற்கும் கூட கோபம் வரவில்லை, ஏனென்றால் அவள் வேலைக்கு தான் இங்கே வந்து இருக்கிறாள், அதனால் கேட்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டனர். ஆனால், அர்விந்திற்கு சுர்ரென்று உச்சியில் ஏறியது கோபம். தியாகு பேசும் முன், அர்விந்த் வேகமாக பேசினான்.

“அப்படி எல்லாம் அவ எங்கேயும் வேலை செய்ய மாட்டா அங்கிள். நம்ம வீட்டுக்கு மட்டும் தான்! தெரிஞ்ச பேமிலினு தான் வந்தா!” அவன் ஆங்கிலத்தில் பேசியதில் அவர்களுக்கு அவன் உணர்ச்சி பெரிதாக தெரியவில்லை. ஆனால் எந்த மொழியில் பேசினாலும் பிள்ளையை பற்றி பெற்றவர்களுக்கு தெரியும் அல்லவா? ஏன் மகன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

அதன் பின் அவர்கள் திருமணத் தேதி, இடம் அனைத்தும் பேசினர். அருணாவால் எதிலும் கருத்து சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். முஹுர்த்த புடவை கூட அவர்களே நிவேதாவிற்கு பிடித்தது போல் எடுத்து அனுப்புகிறோம் என்றனர். அர்விந்த் அமைதியாக கேட்டு கொண்டு இருக்க, தியாகுவும் எதுவும் சொல்லாமல் இருந்தார்.

அவர்கள் கிளம்பிய பின் தியாகு மகனிடம், ஏண்டா  மலர் பத்தி கேட்டதுக்கு, அவ்ளோ பேசினே…. உன் கல்யாணம் பத்தி அவங்களே பேசுறாங்க, நீ அமைதியா இருக்க? அம்மாவுக்கு மருமகளுக்கு புடவை எடுக்க எவ்ளோ ஆசை இருக்கு தெரியுமா?” ஆதங்கமாக பேசினார்.

நிவேதாவோ, கல்யாணமோ அதை பத்தின கேள்விக்கு பதில் சொல்லாமல்,

“அப்போ அவளை அங்க வேலைக்கு அனுப்ப சொல்ல போறீங்களா?” மலரை பத்தின விஷயத்துக்கு அப்பாவிடமும் எகிறினான் அர்விந்த்.

“என்னடா நீ மறுபடி கத்துற? வேலைக்கு நல்ல ஆள் கிடைக்கிறது கஷ்டம், அதனால் அவங்க கேட்டு இருப்பாங்க, நீ ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற?” அவனின் பேச்சில் சலித்து கொண்டார் தியாகு.

அவனுக்கே தான் தெரியவில்லையே! அவள் என்று வந்துவிட்டால் வேறு மாதிரி அல்லவா ஆகிறான். அதான் ப்ரோ லவ்! நான் உங்களுக்கு புரிய வைக்கிறேன் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க ப்ரோ… மன்மதன் கெஞ்சினார். அவன் எங்கே அவரை கவனித்தான்?

“நம்ம வீட்டுக்கு அங்கிள் கேட்டதால் அனுப்பி வைச்சாங்க. நாம அவளை வேலை செய்ய வந்த பொண்ணு மாதிரியா நடத்துறோம்? இனிமே அவளை சொந்தம்னே சொல்லுங்க!” அப்பாவின் சலிப்பில் கொஞ்சம் இறங்கி வந்து பதில் சொன்னான் அர்விந்த்.

“சரிடா, இனிமே எங்க சொந்தக்கார பொண்ணுனு சொல்லிடுறேன்! ஆனா மலர் வந்த புதுசில நீ இப்படி எல்லாம் இல்லை, நியாபகம் இருக்கா என்னெல்லாம் பேசினே? அவ நல்ல மனசை புரிஞ்சுக்கிட்டு இவ்ளோ அக்கறையா இருக்க வரை சந்தோஷம்!” மகனை கிண்டல் செய்வது போல் சொன்னார் தியாகு.

அவன் அமைதியாகவே இருக்க, “சரிடா நான் கேட்டதை பத்தி சொல்லு…. அவங்க எவ்ளோ பிளான் போடுறாங்க…. உன்னால நாங்க அமைதியா இருக்கோம்! எங்களுக்கு ஆசையா இருக்கு…. இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் வைச்சுக்கிட்டு, நீ யாருக்கோ கல்யாணம் மாதிரி சாதாரணமா இருக்க…. உனக்கு ஒரு எக்சைட்மென்டே இல்லை, உன் மனசில் என்ன தான் இருக்கு சொல்லு!” என்றார் தியாகு அவனிடம் கொஞ்சம் சத்தமாக.

தியாகு அப்படி சொல்லியதும் கொஞ்சம் சகஜமாக இருந்தவனுக்குள் மீண்டும் புயல் அடித்தது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கே புரியவில்லையே…. அதுவும் தியாகு மலரின் வருகையில் அவன் மாறி இருக்கிறான் என்றதும் எரிச்சல் ஆனான் அவன்.

அவர் கூறிய வார்த்தை, அவனே அவனுக்குள் ஒத்துக்கொள்ளும் உண்மை அது! இன்று தியாகுவும் அதை கூற அவனுக்கு அவன் மீதே நிறைய ஆத்திரம் வந்தது! அவனின் சிந்தனை பலநேரம் அவளிடம் தானே ஓடுகிறது! ஒரு கட்டத்தில் அந்த ஆத்திரம் வளர்ந்து அவள் மீது படர்ந்தது. அவள் தான் அனைத்திற்கும் காரணம் என்று நினைக்க ஆரம்பித்தான். அடேய் அடேய், இதெல்லாம் உன்னை நீயே ஏமாத்திக்க பண்ற கேவலமான விஷயம் டா! வழக்கம் போல் மனசாட்சி  கத்தியது!

ஆத்திரத்தில் இருந்தவன், அப்பாவுக்கு கல்யாணம் குறித்து பதில் சொல்லவேண்டுமே என்று, “எனக்கு என் கல்யாணம் பத்தி பெரிய கனவு எல்லாம் இல்லை பா. அதெல்லாம் பொண்ணுங்களுக்கு தான் இருக்கும். ஜனனிக்கு நீங்க எப்படி அலைஞ்சு திரிஞ்சு எல்லாம் வாங்கினீங்க.

பத்திரிக்கைக்கு  கூட அவ அவ்ளோ டிசைன் பார்த்தா. இப்போ அது மாதிரி நிவேதா வீட்டில செய்யட்டும். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை” என்று முடித்துக் கொண்டான்.

அதற்கு மேல் அவர் என்ன பேசுவது? அருணாவிடமும் மகன் பேசியதை பகிர்ந்து கொண்டவர், “நீ இதெல்லாம் பழகிக்கோ…. பெரிசா மருமக விஷயத்தில் ஆசை எதுவும் வளர்த்துக்காதே அருணா” என்று சொல்லிவிட்டார். பின் மறக்காமல் மலரை பற்றி அவன் கூறியதையும் பகிர்ந்தார். அவன் கூறியதை இருவருமே நல்ல விதமாக தான் எடுத்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் முழு தகுதியானவள் தான் மலர்!

இதை அருணா மலரிடம் பகிர, கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. அவன் காதல் சொல்லி இருந்தால் கூட இப்படி நெகிழ்ந்து இருக்க மாட்டாள், தன் குணத்தை மெச்சி, தன்னை அவன் குடும்பத்துள் ஒருத்தியாய் ஏற்றுக் கொண்டு இருக்கிறான் அல்லவா அவளின் நாயகன்! அது போதுமே! அவள் அருணாவிற்கும் நன்றி சொல்ல, அசட்டு பொண்ணே, போய் வேலையை பாரு என்று சொல்லிவிட்டர் அவர். அர்விந்திற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் மலர். அவன் மனதில் தன்னை குறித்து அன்பு இருப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவளுக்கு.

அவள் மேல் அவன் வளர்த்த ஆத்திரம் தெரியாமல் போய் மாட்டிக்கொள்ள போகிறாள் மலர்!

இப்போதெல்லாம் மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளுக்கு சென்று பழகி இருந்தாள். ஒரு பதினைந்து நிமிட நடையில் நிறைய கடைகள் உண்டு அங்கே. சூப்பர் மார்க்கெட் போல் இருந்தால், அங்கு எல்லாம் தான் பேச தேவையே இல்லையே! போனோமா, பில்லை கட்டி பொருளை வாங்கினோமா என்று வந்து விடலாமே. அவளின் இந்த முன்னேற்றத்தை பற்றி தெரிந்தாலும் அதை பற்றி பேசியதில்லை அர்விந்த்.

அன்று அப்படி தான் கடைக்கு சென்றிருந்தாள் மலர்.

சிஸ்டர் நீங்க தமிழா என்றான் ஒருவன். அவன் கேட்டவுடன் சட்டென்று இவளும் தமிழில் பேசிவிட்டாள் அவனிடம். பேசிய உடனே அய்யோயோ தெரியாத ஆளுகிட்ட போய் பேசிட்டோமே என்று உணர்ந்து அவனிடம் இருந்து நகர்ந்து விட்டாள் மலர். ஆனால் அவன் அவளையே தொடரவும் பயந்து போனவள், சாமான் கூட வாங்காமல் வேகமாக கடையை விட்டு வெளியேறினாள். அவனும் மலர் பின்னேயே வந்தான். கடைக்கு தானே என்று அவள் போன் எடுத்து வரவில்லை அவள். அவன் தொடர்வதை கண்டு மிகவும் பயந்து போனாள் மலர். வேகமாக நடக்க அவனும் வேகமாக நடந்தான். இருந்த பதட்டத்தில் வீட்டுக்கு செல்லும் ரோட்டில் திரும்பாமல் வேறு கிளை ரோட்டில் திரும்பி விட்டாள். ரோடு வேறு மாதிரி இருக்கிறதே என்று உணர்ந்து இன்னும் பயந்து போனவளுக்கு அழுகையாக வந்தது. அவன் வேறு தொடர, அங்கு ஒரு அபார்ட்மெண்ட் இருக்க, அழுது கொண்டே அங்கு இருந்த செக்யுரிட்டிகளிடம் அந்த பொறுக்கியை காட்டி அழுதாள். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும், அவனை நோக்கி என்ன என்று கேட்டு மிரட்ட, ஓடிப்போனான் அவன். இவளிடம் வீடு எங்க என்று கேட்க, தெரு பேர் கூட தெரியாத தன் முட்டாள் தனத்தை நொந்து கொண்டாள் மலர். என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை இவளுக்கும் தெரியவில்லை. மறுபடி அந்த சூப்பர் மார்க்கெட் சென்றால் வழி தெரிந்து விடும் என்று யோசித்தாலும், அந்த பொறுக்கியை நினைத்து அங்கு இருந்து நகரவே பயமாக இருந்தது.

இதிலேயே ஒரு மணி நேரம் ஆகி இருக்க, அவளை காணோம் என்று பயந்த அருணா வீட்டில் இருந்த மகனிடம் கூறினார்.

“என்னமா இவ்ளோ லேட்டா சொல்றீங்க?” அவனுள் டென்ஷன் ஏறியது.

அந்த அபார்ட்மெனண்ட் அருகிலேயே இருந்து யாராவது வந்தால், தமிழ் தமிழ் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் மலர். நடந்து போகிறவர்கள் சொற்பமே அதனால் அவளுக்கு யாரும் கிடைக்கவில்லை.

பைக்கை எடுத்துக் கொண்டு அந்த சூப்பர் மார்க்கெட் சென்று பார்த்தவன், அவள் போட்டோ காட்டி அங்கே விசாரிக்க, கேமராவில் அவள் சென்றது இருந்தது. மறுபடி பைக்கில் அவன் அந்த ஏரியாவையே சுற்றி வர, முக்கால்மணி நேரங்கழித்து அவன் கண்ணில் பட்டாள் மலர். இவனை கண்டதும் அழுதுகொண்டே இவனிடம் ஓடிவந்தவள், ரோடு என்று பாராமல் தாயை கண்ட கன்று போல் அவனை அணைத்துக் கொண்டாள்.

“இப்படி கட்டிப்பிடிச்சுக்க ஆசையா இருந்தா சொல்லு, நானே கட்டிபிடிக்கிறேன் வீட்டிலேயே…. அதுக்காக டிராமா பண்ணி, எங்களை எல்லாம் டென்ஷன் பண்ணாதே. அம்மா எவ்ளோ பயந்து போயிட்டாங்க தெரியுமா?” இருந்த ஆத்திரம், எரிச்சல் எல்லாம் வடிகால் தேடி ஓடியது.

அவனின் பேச்சில், தீச்சுட்டாற் போல் பதறி விலகி துடித்து கலங்கி நின்ற விழிகளுடன், இப்படி பேசுகிறாயே என்று நம்ப முடியாமல் நோக்கினாள் மலர்.

 

ஹாய் டியர்ஸ், நெக்ஸ்ட் episode ஒரு வாரம் கழிச்சு தான் வரும். அதுக்கு அப்புறம் ரெகுலர் எபி போட்டுருவேன். no delay after one week , சாரி டியர்ஸ்!

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!