வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து நின்ற மதுமதி,
“அண்ணா என்னை இங்க இருந்து ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” ஆதித்யாவின் ஆட்கள் யார் கண்ணிலும் மாட்டிக்கொள்ள கூடாது என்கிற பதைபதைப்புடன் அக்கம் பக்கம் பார்த்தபடி கெஞ்சி கேட்டாள்.
” மேடம் அதுக்கு முன்னாடி இந்த ஃபோனை கொஞ்சம் பாருங்க ” என அவர் தன் கைபேசியை அவளிடம் நீட்ட, ஒருவித தயக்கத்துடன் அவரை பார்த்தவள். இதயம் பயத்தில்,
‘ படபடக்க ‘ கைபேசியை வாங்கி அதில் இருந்த வீடியோ பதிவை பார்த்தாள் .
அவ்வளவு தான் அவளது கரம் தானாக நடுங்கியது. அவளது ஒரே தோழி சந்தியா மருத்துவமனையில் தலையில் கட்டுடன் கண் மூடி படுத்திருக்க, அவள் அருகே மருத்துவர் உடையில் ஒருவன் சந்தியாவை குறிவைத்தபடி தன் கையில் இருக்கும் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து கொண்டு நிற்கும் படியான லைவ் வீடியோ காட்சி கண்டு அரண்டு போனவள், கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக இறங்கியது .
அப்பொழுது காரின் பின் சீட்டில் இருந்து இறங்கிய வீரா மதுவின் கையில் இருந்த அலைபேசியை வாங்கிவிட்டு,
” வண்டியில ஏறுங்க மது” என்று தன்மையுடன் கூற, ஏற்கனவே ஆதித்யா மீது கோபத்தில் இருந்தவளுக்கு, இந்த காட்சியை பார்த்ததும் இன்னும் கோபம் வந்துவிட,
ஆவேசத்தில் வீராவின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அடித்தவள்,
” என் ஃப்ரண்ட என்னடா பண்ணுனீங்க ” வீராவின் சட்டையை இறுக்கமாக பிடித்து உலுக்கிய படி கதறி அழுதாள்.
ஆனால் அவனோ அதற்கு எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவள் கொடுத்த அடியை வாங்கி கொண்டு இயந்திரம் போல அசையாமல் நின்றவன்,
‘ உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. கார்ல ஏறு ‘ என்பதை சொல்லாமல் செயலில் காட்டுவது போல வெறும் காரின் கதவை மட்டும் திறக்க, மதியின் கண்கள் கோபத்தில் சிவந்தது.
அழுதழுது கண்ணீர் வற்றி போய் ஏங்கியபடி அமர்ந்திருந்த மதியை பார்க்க பார்க்க வீராவுக்கு பாவமாக தான் இருக்கிறது, ஆனாலும் ஆதித்யா மற்றும் துரியனை மீறி அவனால் என்ன செய்து விட முடியும், என்பதால் அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
கார் மறுபடியும் கோட்டைக்குள் சீறி பாய்ந்தது.
” பாய் வீ ரீச்ட்.”- நாங்க வந்துட்டோம் தகவல் கூறினான் வீரா .
” இதோ வரோம் ” வீராவிடம் கத்தரித்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்த துரியனின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தன.
” வா ஆதித்யா. ” என்று மேஜை மேல் இருந்த ஆதித்யாவின் துப்பாக்கியை தன் முதுகில் சொருகிய துரியன், ஆதித்யாவின் கரங்களை வலுக்கட்டாயமாக பிடித்து கொண்டு பேஸ்மெண்டில் மதுவை அடைத்து வைத்திருக்கும், சவுண்ட் ப்ரூஃப் அறைக்கு சென்றான்.
” என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துறீங்க ” இருட்டறையில் கைகள் ரெண்டும் முதுகுக்கு பின்னால் சேர்த்து வைத்து கட்டப்பட்டிருக்க, தன் இயலாமையை எண்ணி கோபத்தில் கத்தினாள் மது.
மிகவும் சிரமப்பட்டு தப்பித்து, இறுதியில் இக்கயவர்களிடமே வந்து மாட்டிக்கொண்டோமே, என தன் விதியை நொந்தவள், குண்டடிப்பட்ட வழி வேறு உயிர் போக வலிக்கவே, “ஆ.” என்று ஆத்திரத்தில் அகோரமாக அலறினாள்.
” கடவுளே ப்ளீஸ் ஹெல்ப் மீ ” தன்னால் முடிந்த அளவு கதறினாள். வேடனிடம் அகப்பட்டுக்கொண்ட புறாவின் இறக்கை போல் அவள் இதயம் அடித்துக்கொண்டது. பயத்தில் பைத்தியம் பிடித்தது போல கத்தி கூச்சலிட்டாள் .
” டக்..டக் ” என்னும் பூட்ஸ் காலின் ஓசை கதவுக்கு அருகே கேட்டதும் அரக்கர்களின் வருகையை அவளது மூளை அவளுக்கு உணர்த்த, பயத்தில் மதுமதியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
கத்தி கத்தி நா உலர்ந்து போக,சில நொடிகளிலே வேகமாக திறக்கப்பட்ட கதவு ‘ டமார் ‘ என்னும் சத்தத்துடன் சுவற்றில் சென்று மோதியது .
” ஆ ” திடீர் அதிர்வில் மிரண்டு அலறியவள் , முகத்தில் பட்ட ஒளியில் தன் கண்கள் கூச அப்படியே தரையில் விழுந்தாள் .
அதி வேகமான நடையில் துரியன், ஆதித்யா சக்கரவர்த்தியுடன் உள்ளே வர , அவர்களை தொடர்ந்து வந்த இருவரில் நாகா கதவுக்கு தாளிட்டுவிட்டு கதவின் அருகே நின்றுகொண்டான். .பயப்பந்து அவளது நெஞ்சை அடைத்தது . தன்னை வேட்டையாடி தன் சதையை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து திங்கும் கொடூர பார்வையில் அழுத்தமான காலடிகளுடன் தன்னை நோக்கி நடந்து வந்த துரியனை கண்டதும் அவளது கை கால்கள் படபடவென நடுங்கியது .
துரியனை பார்க்கவே பயந்தவள் நெஞ்சில் எஞ்சி இருந்த நம்பிக்கையில் தன் பார்வையை உயர்த்தி ஆதித்யாவின் முகத்தை பார்த்தாள். மறந்தும் கூட அவன் விழிகள் இவளை சந்திக்க வில்லை. சிலையென நின்றவனின் விழியில் துளியும் இரக்கம் இல்லை. இதுவரை அவள் பார்த்த ஆதித்யா இவன் அல்ல. இவன் யாரோ ?? இவன் அரக்கன் ! இரக்கமற்ற கொலைகாரன் ! மதியின் மூளை ஆணி அடித்தது போல அவளது மனத்திற்கு உணர்த்தியது .
மதியின் இறுதி நம்பிக்கையும் உடைந்து போக இதயம் கனத்து வலித்தது.
அவளை சுற்றி இருந்த காற்றில் கூட மரணத்தின் வாசனையை உணர்ந்தவளுக்கு ஈரக்கொலை நடுங்கியது.
” எவ்வளவு தைரியம் இருந்தா தப்பிச்சு போவ. யார் சொல்லி ஆதி கூட பழகின” அடி குரலில் கர்ஜித்தான் துரியன் .
துரியனின் கேள்வி புரிந்த மறுநிமிடம் அதிர்ச்சியுடன் மறுப்பாக தலையை அசைத்தவள், ‘நான் பழகினேனா என்ன சொல்கிறான் இவன்’ என்று எண்ணியவள் ஆதித்யாவை பார்த்தபடி,
” யார் சொல்லியும் நான் அவர் கூட பழகல ” என்று இன்னும் அவசரமாக மறுத்து ஆதித்யாவை பார்த்து அழுதபடி தலையை வேகமாக ஆட்டினாள் .
” பொ….ய். பொய் சொல்ற, அதுவும் என் கிட்ட உன்னை ” திரண்டெழுந்த ஆத்திரத்தில் மதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்தான் துரியன் .
ஆதித்யாவின் விரல்களில் உள்ள கூர்மையான நகங்கள், அவனின் உள்ளங்கையில் காயம் ஏற்படுத்தும் அளவுக்கு கை விரல்கள் அழுத்தமாக மூடியிருக்க, இப்பொழுது அவன் தன் விழிகளை மட்டும் அழுத்தமாக மூடி திறந்து கொண்டானே தவிர ஆதித்யா தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை.
அவன் அடித்த வேகத்தில் தலை சுவற்றில் மோதி ரத்தம் வடிய தரையில் விழுந்தாள் மது. வலியிலும் அச்சத்திலும் வார்த்தைகள் வர மறுக்க, சத்தமாக அழுதாள் பெண்ணவள் .
தரையில் கிடந்தவளை வீரா கைத்தாங்கலாக பிடித்து தூக்கி நிறுத்தினான் .நீரற்ற மலர போல வதனம் வாடி இருந்தது. இதழ்களோ வறண்ட பாலைவனம் போல வெடிப்புடன் காணப்பட்டது,
” ப்ளீஸ். நா. ஏது…ம் ” வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக்கொள்ள. பேச முடியாமல் திணறினாள் .
” ஏய் உன் அப்பா எங்க இருக்கான் ??” – இதை கேட்டதும் அவள் உள்ளம் அதிர்ச்சியில் நின்று துடித்தது.
‘என் தந்தையை பற்றி ஏன் இவர்கள் கேட்கிறார்கள்? இவர்களுடன் நம் தந்தைக்கு அப்படி என்ன பழக்கம்? கடவுளே’ என்று எண்ணிய விளக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.
அதே நேரம், ” சொல்லு ம்ம்ம் ” அதட்டினான் துரியன்.
” எனக்கு தெரியாது ” அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. துரியனின் இரும்பு கரங்கள் அவளது கழுத்தை இறுக்கமாக நெரித்திருந்தது.
அவ்வளவு நெருக்கத்தில் அவனது சிவந்த விழிகளை பார்த்து அஞ்சி நடுங்கினாள் மதுமதி. இறுக்கமாய் அவன் பிடித்ததில் அவளது மூச்சு குழாய் அடைத்து கொள்ள, சுவாசத்திற்காக யாசித்த அவள் தேகம், தரையில் விழுந்து துடிக்கும் மீன் குட்டி போல அவனது கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு துடித்தது.
மதுமதியின் சிவந்த முகம் இப்பொழுது ரத்தம் இன்றி வெளிற ஆரம்பித்தது .
‘ ஆதி அவ சாக போறா ஏதாவது செய் ‘ என்றான் ஆதித்யாவுக்குள் இருந்த மனிதன்.
‘நோ டோன்ட் பீ வீக், உன் கடமைய விட உனக்கு வேற ஏதும் பெருசு இல்ல, இந்த மாதிரி பீலிங்ஸ்க்கு இடம் கொடுக்காத ஆதி. அதெப்படி அப்பா பத்தி தெரியாம இருக்கும், பொய் சொல்றா டோன்ட் ஃபால் ஃபார் ஹெர்’ உறுமினான் அவனுக்குள் இருக்கும் மிருகம்.
மனிதனும் மிருகமும் முட்டி மோதிக்கொள்ள. ஆதித்யாவின் இதயம் யுத்த களமானது. உணர்ச்சி குவியலுக்குள் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்த ஆதித்யா, மதியின் பரிதாபமான நிலை கண்டு மிகவும் வருந்தினான்.
‘ இதற்கு மேல் கொஞ்சம் அழுத்தினாலும் அவள் உயிர் இருக்காது. ‘ ஆதியின் மூளை எச்சரிக்கை விடுக்க, அவனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை, சட்டென்று துரியனின் முதுகில் சொருகி இருந்த தனது துப்பாக்கியை உருவிய ஆதித்யா துரியனை விலக்கிவிட்டு ,
” நீ ஏன் கஷ்டப்படுற துரியா. நானே இவ கதையை முடிக்கிறேன் ” என மதுவை நெருங்கினான் .
துரியனின் பிடி தளர்த்தப்பட்டதும், தரையில் சரிந்த மதுமதி தன் தொண்டை வறண்டு போக பயங்கரமாக இருமினாள். தன் கழுத்தை பிடித்துக்கொண்டு சுற்றியிருக்கும் மொத்த காற்றையும் இழுத்துக்கொள்ளும் வேகத்தில் ஆழமாக மூச்செடுத்தவள், சில மணித்துளி கடந்த பிறகே மெல்ல மெல்ல தன் இயல்பு நிலைக்கு திரும்பினாள் .
அவளது மிரண்ட விழியும் ஆதித்யாவின் மிரட்டும் விழியும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேராக சந்தித்தன, பெண்ணின் விழிகள் எதையோ அவனிடம் யாசிக்க, ஏதோ ஒன்று அவனது கட்டுப்பாட்டை உடைத்து கொண்டு அவனிடம் இருந்து நழுவி சென்றது.
ஆதித்யா மிகவும் பலவீனமாக உணர்ந்தான், ‘ இது போன்ற மெல்லிய உணர்வு, உனக்கே ஆபத்தாக முடியலாம் ஆதித்யா ‘ விடாமல் அவனது மனம் அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் அடங்க மறுக்கும் மனதை அடக்க முடியாது மிகவும் தவித்தான் அவன்.
அப்பொழுது, ” ஏய் எந்திரிடி ” ஆதித்யாவை ஒதுக்கிவிட்டு அவளை நெருங்கிய துரியன்,
” கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்குறேன். எங்க உன் அப்பா ?” – என்று வினவினான்.
” எவ்வளவு கேட்டாலும் ஒரே பதில் தான். எனக்கு தெரியாது ” அவளது பதில் துரியனை வெறியனாக்க,
“அப்போ செத்து போ ” என்ற துரியன், ஆதித்யாவின் கையில் இருந்த துப்பாக்கியை வேகமாக பிடுங்கி மதியின் நெற்றியில் வைத்து அழுத்தினான் .
மதுமதியின் கண்கள் மௌனமாய் கண்ணீர் வடிக்க, தன் குடும்பத்தினரின் உருவத்தை தன் மனத்திற்குள் நிரப்பியவள். இறுதியாக ஆதித்யாவை பார்த்தாள். ஆனால் அவனோ அவள் படும் துன்பம் கண்டும் கரையாமல் மௌனமாய் நிற்க, விரக்தியான பார்வையை அவன் மேல் சிந்தினாள்.
‘ இனி அவ்வளவு தான்… நாம சாகப்போகிறோம் ‘ என்று பயந்தவளின் இதயம் தாறுமாறாய் துடிக்க,அழுந்த கண்களை மூடிக்கொண்ட மதுமதிக்கு அதன் பின் நடந்தது அனைத்துமே, ‘ திக் திக் ‘ நிமிடங்கள் தான் .
சில நொடிகள் மதுவையும் ஆதித்யாவையும் வெறித்து பார்த்த துரியன், மதுவை குறிவைத்திருந்த துப்பாக்கியை கீழே இறக்கி,
” நோ நான் சுட மாட்டேன்.இவளை சுட்டா உன்னை நான் நம்பாத மாதிரி ஆகிடும். என் எதிரியை பழிவாங்குறதை விட எனக்கு நம்ம நட்பு தான் முக்கியம். என்னை , நம்ம ஜித்தேரிய பாதிக்கிற மாதிரி நீ எதுவும் செய்ய மாட்டன்னு நான் நம்புறேன் ஆதி ” என்ற துரியன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட, துரியனின் திடீர் மனமாற்றத்தால் நாகாவும் வீராவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டனர்.
‘இதோ சில நிமிடங்கள் தான். கொல்ல போகிறான். ரத்த வெள்ளத்தில் சாகப்போகிறோம்.. இதோ. இதோ யு ஆர் கோயிங் டு டை.. நீ சாகப்போற மது ‘என பீதியில் கண்களை மூடி, விடாமல் ஏதேதோ முணுமுணுத்தபடி நடுங்கிக்கொண்டிருந்த மது,
” மதி. ” என்னும் ஆதித்யாவின் உரத்த குரலில் விழி திறந்தவள், ஆதித்யாவை பார்த்து,
” டோன்ட் கில் மீ ப்ளீஸ். டோன்ட். ப்ளீஸ் ” வார்த்தைகள் குழற அவனை பார்த்து கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினாள் .
” இட்ஸ் ஓகே. நீ நல்லா இருக்க ” அவன் நிதானமாகத்தான் கூறினான் .
” டோன்ட் கில் மீ ” ஆனால் அவளோ பயத்தில் அலறினாள்.
” ஓகே மா ” என மதியை ஆறுதல் படுத்த நெருங்கினான் ஆதித்யா.
” வேண்டாம் ” பீதியில் கை கூப்பி கும்பிட்டபடி அவனை விட்டு இரண்டடி பின்னால் சென்றாள் .
” மதி ரிலாக்ஸ் இட்ஸ் மீ ” அவளது பயத்தை களைந்தெரியும் நோக்கில் ஆதித்யா மீண்டும் மதியை நெருங்கினான்.
அவ்வளவு தான், ” நோ. ப்ளீஸ். டோன்ட் கில் மீ…” மூச்சு திணற பைத்தியம் போல சொன்னதையே சொல்லி கத்தியவளின் தளர்ந்த உடல் ஒரு கட்டத்தில், பார்வை மங்கி தலை தரை நோக்கிய மறுநொடி ஆதித்யா சக்கரவார்த்தியின் நெஞ்சம் மதுமதியின் மொத்த எடையையும் தாங்கிருந்தது.
சட்டென்று அவளது மணிக்கட்டை பிடித்து பார்த்தான்.
‘ துடிப்பு இருக்குது ‘ மெல்ல முணுமுணுத்தவன். தன் கண்களை இறுக்கமாக மூடி, தலையை அழுந்த கோதி, இதுவரை பயத்தில் தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை வேகமாக வெளியிட்டான். கொஞ்சம் நொடிக்கு அவன் உயிர் அவனிடமே இல்லை. வேகமாக துடித்த தன் இதயத்தை தன் கரம் வைத்து அடக்கினான். உடலின் இறுக்கம் சற்று குறைந்தது.
மதியின் கண்ணில் தெரிந்த பயத்தில் ஆதித்யாவின் மொத்த கர்வமும் அடிவாங்கியது. அவளது கண்ணீர் இவனின் பாறை நெஞ்சில் நீர் கசிய செய்தது. ‘ ச்ச ‘ கோபத்தில் தன் தடித்த உதடுகளை அழுத்தமாக கடித்தான்.முகம் விகாரமாய் மாறியது.
வீராவும் , நாகாவும் அவனையே பார்த்தார்கள். நாகாவின் சந்தேக பார்வை ஆதித்யாவை கேள்வி கேட்டது .
அனைவரின் பார்வையையும் தவிர்த்தவன். மதுவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு வேகமாக நடந்தான் .
நன்றாக இருண்டிருந்த இரவு வேளை. ! அனைவரும் உறக்கத்திற்கு ஆயத்தமாகிருக்க. துரியன் மட்டும் அந்த உடற்பயிற்சி கூடத்தில் தன்னை மறந்து கண்மூடித்தனமாக பயிற்சி செய்துகொண்டிருந்தான். இரவு உணவிற்கு துரியன் சாப்பிட வராததால் அவனை தேடி வந்த ஆதித்யா ஜிம் ரூமில் வெளிச்சம் வருவதை பார்த்து உள்ளே சென்றான். அங்கே துரியன் த்ரெட் மில்லில் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து வேகமாக அவன் அருகில் வந்த ஆதித்யா ,
” துருவ் ! ஸ்டாப் இட் ப்ரோ. ஹே ஜஸ்ட் ஸ்டாப் இட் மேன்” வலுக்கட்டாயமாக கூறிய பிறகு வேகத்தை குறைத்து தன் நிதானத்திற்கு வந்த துரியன் ஆதித்யாவிடம் எதுவும் பேசாமல் மீண்டும் த்ரெட் மில்லில் ஓட, ஆதித்யாவுக்கு கோபம் தான் வந்தது.
” இன்னைக்கு இது போதும் வந்து சாப்பிடு ” கோபத்தை மறைத்து கொண்டு துரியனை அழைத்தான்.
“……… “
” துருவ். என்ன சொல்லணுமோ நேரடியா என்கிட்ட சொல்லிடு. இந்த மாதிரி உன்னை நீயே வருத்திக்காத ” – என கோபத்துடன் கேட்டான் ஆதித்யா .
” ஆதித்யா நான் உன் மேல நிறைய அன்பு வச்சிருக்கேன். ஆனா நான் முட்டாள் இல்லை.என் மூளை இன்னும் வேலை செய்யுது.” என்றான் தன் கன்னங்கள் அதிர.
” துருவ் ” என ஆரம்பித்த ஆதித்யாவை தன் கரம் உயர்த்தி தடுத்த துரியன் ,
” நான் இன்னும் பேசி முடிக்கல ” என்று மேலும் தொடர்ந்தான்,
“ஆதி காதலிக்கிறது தப்பில்லை. ஆனா யாரை காதலிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம்.உன்னால யாரை கண்ட்ரோல் பண்ண முடியுமோ அவங்களை தான் நீ காதலிக்கனும். எப்போ உன் காதல் உன்னையே கண்ட்ரோல் பண்ணுதோ. யோசிக்காம அதை நீ அழிச்சிடனும் ” த்ரெட் மில்லில் ஓடியபடி அழுத்தமாக கூறினான் துரியன்.
” நான் யாரையும் காதலிக்கல.” உடனே மறுத்தான் ஆதித்யா .
” அப்போ ஏன் அவளை என்கிட்ட இருந்து காப்பாத்துன ? ” ஆவேசத்தில் கத்தினான் துரியன்.
” நான் எங்க. “சொல்லி முடிக்கும் முன் ஆதித்யாவின் கரங்களில் ஆதித்யா மதுவை சுட சொல்லி தன்னிடம் கொடுத்த ஆதியின் துப்பாக்கியை அவனிடமே கொடுத்த துரியன்,
” தோட்டா இல்லைன்னு எனக்கு தெரியும் ஆதி ” அமைதியாக கூறினான்.
” —————————– ” பதில் பேச முடியாமல் நின்றான் ஆதித்யா.
” துப்பாக்கில தோட்டா இருக்கா இல்லையான்னு கூட தெரிஞ்சிக்க முடியாத அளவுக்கு , நான் ஒன்னும் முட்டாள் இல்லை ஆதி…” துரியனின் பார்வை ஆதியின் முகத்தை விட்டு அகலவில்லை .
” ஆமா நான் காப்பாத்தினேன் தான். எந்த தப்பும் பண்ணாதவ ஏன் சாகணும்ன்னு நினைச்சேன் ” நிமிர்ந்து துரியனின் கண்களை நேருக்கு நேராக பார்த்து கூறினான் ஆதித்யா .
” தப்பு பண்ணலையா. அவ தயாளனுக்கு பொண்ணா பிறந்ததே பெரிய தப்பு தான் “
” துரியா “
” அவ மேல உனக்கு விருப்பம் இல்லைன்னா. அவளை ஏன் இங்க கூட்டிட்டு வந்த.?? அப்படியே செத்து போட்டும்ன்னு விட்ருக்கலாமே?” மீண்டும் விட்ட இடத்திற்கே புதிய கேள்வியுடன் வந்தான் துரியன் .
” துரியா உனக்கு எப்படி புரிய வைக்கிறது ” கோபத்தில் ஆதித்யா தன் தலையை அழுந்த கோதினான் .
” சொல்லு புரிஞ்சிக்கிறேன் ” கைகளை கட்டிக்கொண்டு துரியன் ஆதித்யாவை நோக்கினான் .
“அவளுக்கு மட்டும் தான் அவ அப்பா எங்க இருக்கான்னு தெரியும் “
” அதான் தெரியாதுன்னு சொல்றாளே “
” சொல்ல வைக்கணும் “
” அப்போ வா . இப்போவே போய் நம்ம ஸ்டைல்ல விசாரிப்போம் “
” விசாரிச்சு.! கம் ஆன் மேன். போன வாரம் இதே ரூம்ல ராகேஷை நீ தான விசாரிச்ச. ஒரு வார்த்தை சொன்னானா. ?? அந்த ராகேஷ் யாரு ??தயாளன் கிட்ட கூலிக்கு வேலை பார்க்கிறவன். அவனே தயாளனை காட்டிக்கொடுக்காம செத்து போய்ட்டான்.
மதுமதி தயாளனோட சொந்த பொண்ணு, அவ அவளுடைய அப்பாவை காட்டிக்கொடுப்பாளா ?? சத்தியமா மாட்டா, உயிரை கூட விடுவா ஒரு வார்த்தை சொல்ல மாட்டா. ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ அவளை எவ்வளவு பயங்கரமா டார்ச்சர் பண்ணின , ஏதாவது சொன்னாளா.??
மதுமதி கிட்ட இப்படியெல்லாம் பண்ணி உண்மைய வாங்க முடியாது. அவ கிட்ட அன்பா பேசி. அவளுடைய நம்பிக்கைய சம்பாதிச்சு தான், உண்மைய தெரிஞ்சிக்க முடியும். அதுவரைக்கும் அவ இங்க தான் இருக்கனும் “
” அவளை பார்த்தாலே எனக்கு கொலை வெறி வருது “
” ஒரு மனுஷனுடைய மிகப்பெரிய எதிரியே அவனுடைய கோபம் தான். !அதுவும் நாம பார்க்கிற வேலைக்கு இருக்க கூடாத ஒன்னு கோபம் ! அதீத கோபம் ஒரு மனுஷனை முட்டாள் ஆக்கிடும் ! கோபத்தை கண்ட்ரோல் பண்ண கத்துக்கோ. இல்லைனா அது ஒருநாள் உன்னையே அழிச்சிடும் .
துரியா !
துரியன் ஜித்தேரி வெறும் பெயர் கிடையாது. இட்ஸ் யுவர் ஐடென்டிட்டி (அது உன் அடையாளம் ).. நீ ஜித்தேரிக்கே ராஜா ! நீ செய்யிற ஒரு தப்பு கூட எல்லாரையும் பாதிக்கும். நமக்குன்னு (ஜித்தேரி ) சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கு. அதுல முதல் விதிமுறையே சரியான காரணம் இல்லாம பொண்ணுங்க கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண கூடாது என்கிறது தான்.
இன்னைக்கு அவளை இப்படி நாம ட்ரீட் பண்ணினது நம்ம கொள்கைக்கு எதிரானது .
ஆயிரம் இருந்தாலும் அவ மேல நீ கை வைச்சிருக்க கூடாது. நீ என்பதற்காக மட்டும் தான் நான் அங்க பொறுமையா இருந்தேன், வேற யாரும்ன்னா நான் என்ன பண்ணிருப்பேன்னு உனக்கே தெரியும். நெறி தவறி நடந்த எந்த ஆட்சியும் நீடிச்சதா சரித்திரம் இல்லை துரியா ! ஜித்தேரிக்கு தலைவன் ஆகுறது பெருசு இல்லை. கிடைச்ச பொறுப்பை நழுவ விடாம பார்த்துக்கணும். அதுல தான் எல்லாம் அடங்கி இருக்கு.
நாம மாஃபியா தான் ! நிழல் உலகம் ! சொந்த நிழலையே நம்ப முடியாத கொடூரமான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கோம். அதுக்காக பிடிக்காதவர்களை எல்லாம் ஷூட் பண்ண முடியாது. நமக்கு டார்கெட் தயாளன் மட்டும் தான் ! அவன் குடும்பம் கிடையாது. நெவெர் த்ரட்டன்ஸ் அ மேன்ஸ் ஃபமிலி ( என்னைக்கும் ஒரு மனுஷனை அவனுடைய குடும்பத்தை வச்சு அச்சறுத்தாதே ) அது எப்போ வேணும்னாலும் நம்மளை காயப்படுத்தும் .
என்ன சொன்ன நான் அவளை காதலிக்கிறேனா! ஹா” விரக்தியாக சிரித்த ஆதித்யா,
” துருவ் முதல் தடவை அவளை பார்க்கும் பொழுது அவ யாருன்னு எனக்கு தெரியாது. கொலையை பார்த்து மயங்கி விழுந்துட்டா. வயசு பொண்ணை அப்படியே விட்டுட்டு வர மனசு இல்லை. அவளுக்கு ஹெல்ப் பண்ணினேன்.
சிவகுரு அவளை என் கேர்ள் ஃபரண்டுன்னு நினைச்சு அவ மேல காரை ஏத்த பார்த்தான். அதனால அவளை காப்பாத்தினேன். அப்புறம் அவளை கடத்தினான் வேற வழியில்லாம காப்பாத்த போனேன். அங்க நடந்த ஷூட் அவுட்ல என்னை காப்பாத்த அவ குறுக்கே விழுந்துட்டா. அப்படியே விட சொல்றியா அது என்னால முடியாது டா. அது என் கொள்கைக்கு எதிரானது?? இதுவரைக்கும் நான் செஞ்சது அத்தனையும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவளுக்கு நான் பண்ணின உதவி மட்டும் தான்.
இதுல எங்க நீ காதலை பார்த்தன்னு எனக்கு சுத்தமா புரியல.?? இப்பவும் சொல்றேன் எனக்கு அவ மேல வெறுப்பும் இல்லை! விருப்பமும் இல்லை..!சொல்ல போனா என் மனசு முழுக்க இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு. இப்பவும் இருக்குது.
துரியா , நான் கர்ணன் கிடையாது துரியோதனன் தப்பே செஞ்சாலும், நண்பன் என்பதற்காக கைகட்டி வேடிக்கை பார்க்கிறதுக்கு. நான் ஆதித்யா ! நீ என் துரியன் !… துரியன் தப்பு செஞ்சா ஆதி கேட்பான்… நீ என் நண்பன் என்பதற்காக நீ செய்யிற தப்பெல்லாம் பார்த்துட்டு உன் வாழ்க்கை எப்படி வேணும்னாலும் போகட்டும்ன்னு என்னால வேடிக்கை பார்க்க முடியாது. ஏன்னா எனக்கு உன் பெயர் முக்கியம், உன் புகழ் முக்கியம் , நீ முக்கியம், உன் நட்பு முக்கியம் , என் துரியன் எனக்கு முக்கியம். “என தன் தலையை அழுத்தமாக கோதி ஆழமான மூச்சை வெளியிட்ட ஆதித்யா. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ,
“துரியா நம்ம நட்பு நம்பிக்கையில ஆரம்பிச்சது , எப்போ உனக்கு என் மேல நம்பிக்கை போச்சோ. எல்லாம் போச்சு. இனிமே ஜித்தேரியில எனக்கு வேலை இல்லை நான் கிளம்புறேன் ” என்று ஒரு அடி எடுத்து வைத்த ஆதித்யாவை அதற்கு மேல் செல்ல விடாமல் துரியனின் இரும்பு கரங்கள் இறுக்கமாக பிடித்திருந்தது.
” நெவர். என்னைக்கும் என்னை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாத. நான் உன்னை முழுசா நம்புறேன்.என் ஆதியை நான் சந்தேகப்பட்டது தப்பு தான் . இனிமே இப்படி நடக்காது எனக்கு தயாளன் கிடைச்சா போதும் ” என்று மனதார மன்னிப்பு கேட்ட துரியனை அணைத்து கொண்ட ஆதித்யா,
” எனக்கும் தான் ” என்றான் தன் பற்களை கடித்தபடி. அப்பொழுது அவனது முகத்தில் கொடிய அசுரனின் சாயல் தெரிந்தது .
” மன்னிச்சிட்டல ” துரியன் சந்தேகமாக ஆதித்யாவிடம் கேட்டான் .
” ஓகே மன்னிச்சிட்டேன் ஆனா. என் த்ரெட் மில்லை படுத்தி எடுத்ததுக்கு உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும் ” என்ற ஆதித்யா சிரித்தான் .
“சரி நாளைக்கு பார்க்கலாம். சின்ன பிஸ்னஸ் டீல் பத்தி பேச வேண்டி இருக்கு ” என்றான் துரியன்.
” சாப்டுட்டு போ துரியா “
” உன் வீட்டு சாப்பாடு எனக்கு செட் ஆகாது டா ” என்று சொல்லவும் ஆதித்யா சிரிக்க, ” அது மட்டும் இல்ல என் மைண்ட் இப்ப ரொம்ப சூடா இருக்கு, என்னை நான் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். அது நிச்சயம் இங்கேயும் கிடைக்காது உனக்கும் பிடிக்காது ” என்க, அவனை முறைத்த ஆதித்யா, அப்போ கிளம்பு என்பது போல கையை காட்ட, சிரித்தபடி துரியன் அங்கிருந்து வெளியேறினான்.
*******************************************
‘ தப்பு பண்ணலையா. அவ தயாளனுக்கு பொண்ணா பிறந்ததே பெரிய தப்பு தான் ‘ துரியனின் வரிகள். காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது .
‘அவ தயாளனுக்கு பொண்ணா பிறந்தது அவ தப்பில்லை தான். ஆனால் அவ தயாளன் பொண்ணு அதை இனிமேல் மாற்ற முடியாதே. இந்த உண்மை தெரிந்தும், இப்படி ஒரு பலவீனத்துக்கு எப்படி நீ இடம் கொடுக்கலாம். நீ யார் ஆதித்யா ?? உன் ஆதிக்கம் என்ன? அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு பலவீனமானாய்’ என அவனுக்குள் இருக்கும் மிருதன் உறுமினான்.
‘ நான் அந்த பொண்ணை காதலிக்கல, இப்பவும் சொல்றேன் எனக்கு அவ மேல வெறுப்பும் இல்லை! விருப்பமும் இல்லை..!சொல்ல போனா என் மனசு முழுக்க இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு. இப்பவும் இருக்குது.’
இப்படி கூறி எளிதாக துரியனை சமாளித்துவிட்டான் .
ஆனால் உள்ளே இருந்து கொண்டு அவனை கேள்வியால் வதைக்கும் அவனது மனதினை சமாளிப்பது எப்படி ? விடை தெரியாமல் திணறினான் ஆதித்யா.
தோட்டா இல்லாத துப்பாக்கியை துரியனிடம் கொடுத்த தன் அறிவை ஊனமாக எண்ணிய ஆதித்யா, ஆத்திரத்தில் பற்களை நறநறத்தான்.
துரியன் யார் ? ஜித்தேரியின் வாரிசு.துப்பாக்கியில் கரைகண்டவன். அவனிடம் போய் காலி துப்பாக்கி நீட்டிய தன் அறிவை அவனுக்கு வேறு எப்படி சொல்வது என்று தெரிய வில்லை.
” அப்படி ஒரு முட்டாள் தனத்தை எப்படி செய்தோம் ??. நிஜமாகவே நம்ம மனசு முழுக்க , இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் இருக்குதா?? “என தன்னையே கேட்டுக்கொண்டவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை .
” இல்லை அவ மேல நமக்கு இருப்பது வெறும் மனிதாபிமானம் மட்டும் தான். பலவீனம் எல்லாம் இல்லை ” என்று ஆதித்யா தனக்கு தானே கூறி கொள்ள,
அவன் ஆயிரம் சொன்னாலும். ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்துவிட்டது. ‘மதிக்கு ஒன்று என்றால் அவனால் தாங்க முடியாது. அவளுக்காக துணிச்சலுடன் தன் உயிரையும் பணயம் வைப்பான். முட்டாள்தனமாக, துப்பாக்கியிலே பிறந்து வளந்தவனிடம் காலி துப்பாக்கியையும் நீட்டுவான்’ இது பலவீனம் அல்லாமல் வேறு என்ன ?
இது எவ்வளவு மோசமான பலவீனம் ! இவன் செய்யும் ஒரு தவறு எத்தனை பேருடைய உயிரை குடித்துவிடும்.அவனுடைய மொத்த ராஜ்யமும் ஆட்டம் கண்டுவிடுமே !
‘தன்னை கட்டுப்படுத்தும் மதுமதியின் நினைவுகளை விட. அதற்கு இடமளித்த தன்னை எண்ணி தான் மிகுந்த கோபம் கொண்டான்.’
‘உன்னால யாரை கண்ட்ரோல் பண்ண முடியுமோ அவங்களை தான் நீ காதலிக்கனும். எப்போ உன் காதல் உன்னையே கண்ட்ரோல் பண்ணுதோ. அப்போ அதை நீ அழிச்சிடனும். ‘ துரியனின் ஆக்ரோஷமான வரிகள், அப்பொழுது தவறாக தெரிந்த ஆதித்யாவுக்கு. இப்பொழுது சரியாக தோன்றியது.
” அழிச்சிடுறேன், யஸ் ஷீ காண்ட் கண்ட்ரோல் மீ. “- அவளால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று அவன் கூறிய மறுநிமிடம் ,
” போ. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அரண்மனையே அதிர்ந்தது. ஆதித்யாவின் மனமும் தான் .
” மதி ” ஆதித்யாவின் கால்கள் இப்பொழுது தானாக அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடியது .