எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34

4.7
(18)

புயல் – 34

சூர்யாவே தன் கையில் அதை அணிவித்து விட்ட பிறகு அதை கழட்டும் தைரியம் வேதவள்ளிக்கு இருக்கவில்லை.

அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளின் தகுதிக்கு இது மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது.

ஆம், சூர்யாவிற்கும் இவளுக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்துவிட்டது தான்.

அவன் வசதியானவன் என்று அவளுக்குமே தெரியும். ஆனால், அவனின் பண பலத்தை பற்றி இங்கே வந்த பிறகு தான் முழுவதுமாக தெரிந்து கொண்டாள்.

அதன் பிறகு ஒரு தாழ்வு மனப்பான்மை அவளிடம்.. இந்த இடத்திற்கு நாம் சற்றும் பொருத்தம் இல்லை என்பதை உணர்ந்தவள்.

அவளின் சக்திக்கு அதிகமாக இப்படி அவளுக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுக்குள் மகிழ்ச்சி எழுவதற்கு பதிலாக பயமும், பதட்டமும் தான் எழுகிறது. இப்போதும் அதே நிலையில் தான் நின்று கொண்டிருக்கிறாள்.

அவள் கையில் அதை அணிவித்தவன் எதுவும் பேசாமல் விறுவிறுவென அறைக்கு சென்று விட்டான்.

அவனுக்குள்ளும் என்ன மாதிரியான உணர்வு என்று புரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக வேதவள்ளியை அவனின் மனம் ஏற்க தொடங்கி விட்டது.

பணத்தின் மேல் இருக்கும் ஆசையில் இவனை மணந்து கொண்ட அக்ஷ்ராவை விட வேதவள்ளி பல மடங்கு உயர்வாக தான் இவனின் கண்களுக்கு காட்சி அளித்தாள்.

பணம் தனக்கு முக்கியமல்ல என்று ஒவ்வொரு இடத்திலும் அவள் காட்டியது இவனை வெகுவாக அவளை நோக்கி ஈர்த்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

பணத்திற்காக இவனின் மனதை காயப்படுத்தி விட்டு அக்ஷ்ரா சென்று இருக்க..

அதே பணத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவனின் காயத்தை ஆற்ற வந்து விட்டாள் வேதவள்ளி..

அவளின் மனதில் சூர்யாவின் மேல் எந்த ஒரு ஈர்ப்போ, காதலோ ஒன்றுமே இல்லை. அதற்கு மாறாக அவனின் மேல் நிறையவே பயம் தான் கொட்டிக் கிடக்கிறது.

அவளும் என்ன தான் செய்வாள். அவள் மேல் தோன்றும் ஈர்ப்பை அடக்க அவன் அவளையே திட்டிக் கொண்டும், கண்டித்துக்கொண்டும் இருந்தால் அவளுக்கு இவனை பார்த்தால் பயம் தானே தோன்றும்..

சூர்யாவிற்குள் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் இருந்தது என்னவோ உண்மை தான்.

அக்ஷ்ராவின் விஷயம் தெரிய வந்தால் வேதவள்ளியின் எதிர்வினை எப்படி இருக்கும்?

மீண்டும் ஒரு பெண்ணை நம்பி ஏமாற வேண்டுமா.. என்று பல்வேறு சிந்தனைகள் அவனுக்குள் ஓடிக் கொண்டு தான் இருந்தது.

ஆனால், இப்பொழுது அது அனைத்தையுமே புறம் தள்ளி வைத்துவிட்டு அவள் தனக்கானவள் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க தொடங்கி விட்டான்.

அவளின் மனதை புரிந்து கொள்ள தொடங்கி விட்டான்.

அவளை யாருக்காகவும் இனி விட்டுக் கொடுக்க கூடாது என்று முடிவெடுத்துவிட்டான்.

அதன் விளைவே அவனின் இத்தகைய செயல்..

சட்டென அவன் இப்படி செய்தது மூவரையுமே மூன்று விதமான உணர்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்த இரண்டு நாளும் அமைதியிலேயே கழிய..

சூர்யா அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தான்.

வேதவள்ளியோ தன் துணிகளை மடித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கண்ணாடியினோடு அவளை தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கையில் மின்னும் வளையல் அவள் இந்த குடும்பத்தின் பெண் என்று உணர்த்த அவனின் இதழிலோ மெல்லிய புன்னகை.

அப்பொழுது அவனின் செல்பேசி சிணுங்க எடுத்து காதில் வைத்தவன், “பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு வேதவள்ளியின் முன்பு வந்து நின்றான்.

அவளோ அவனை ‘என்ன’ என்பது போல் நிமிர்ந்து பார்க்கவும்.

“ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் வா” என்று அவளின் பதிலையும் எதிர்பாராமல் அவளின் கையை பற்றி தன்னுடைய அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

“எங்க போறோம்?” என்று தயங்கிக் கொண்டே அவள் கேட்கவும்.

“போனா உனக்கே தெரியும்” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் வண்டி ஓட்டுவதில் கவனமாகி விட்டான்.

அவனிடமிருந்து இதற்கு மேல் வார்த்தைகளை பிடுங்க முடியாது என்று எண்ணியவளும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கார் நேரே அவர்களின் குடோனிற்குள் பயணப்பட்டது. அந்த இடத்தை பார்க்கவே அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. சினிமாக்களில் எல்லாம் வில்லன்கள் குடியிருக்கும் இடம் போல் தோன்றியது.

அந்த இடத்தையே மிரட்சியாக சுற்றி சுற்றி பார்த்தாள்.

காரில் இருந்து கீழ் இறங்கியவன் அவளின் புறம் கதவை திறந்து விடவும். அவனை பயந்த பார்வை பார்த்துக் கொண்டே இறங்கியவள். சுற்றி முற்றி பார்க்கவும்..

அவளின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டவன். அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவளின் இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க தொடங்கியது.

‘என்ன இது இந்த இடத்தை பார்த்தாலே ஏதோ படத்துல எல்லாம் வர மாதிரி ரொம்ப டெரரா இருக்கு. பார்க்கவே பயமா இருக்கு. இங்க எதுக்காக இவர் நம்மளை கூப்பிட்டு வந்திருக்காரு’ என்று எண்ணி பயந்து கொண்டே அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

சற்று தூரம் நடந்து சென்றதும் பெரிய ஹால் ஒன்று அமைந்திருந்தது. முழுவதும் தூசியும் பழைய சாமான்களுமாக கிடந்தது.

அங்கே இரண்டு நாற்காலியில் இருவர் கட்டப்பட்ட நிலையில் தலை தொங்க அமர்ந்திருந்தனர்.

இருவரின் முகத்தையும் கருப்பு துணி கொண்டு மூடியிருந்தனர்.

ஏனோ, வேதவள்ளிக்கு அதற்கு மேல் நடக்க முடியவில்லை.

பயத்தில் கால்கள் இரண்டும் துவண்டு போய் விடுவது போல் ஆகிவிட்டது.

வியர்த்து வழிய தொடங்கி விட்டது..

கை, கால்கள் எல்லாம் சில்லிட்டு விட்டது..

ஒரு கை சூர்யாவின் பிடியில் இருக்க.. தன் மற்றைய கையால் சூர்யாவின் கரத்தை அழுந்த பற்றி கொண்டவள். அதற்கு மேல் முன்னேறாமல் நின்று விட்டாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன், “என்ன ஆச்சு?” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வி கேட்கவும்.

“எனக்கு பயமா இருக்கு சா.. சூ.. சூர்யா.. நான் கார்ல இருக்கவா” என்று பதட்டத்தில் தந்தி அடிக்க பேசியவளை பார்த்து புன்னகைத்தவன்.

அவளின் தோளை சுற்றி கையை போட்டவாறு அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு அவர்களை நோக்கி மேலும் முன்னேறினான்.

அவர்களின் முன்னே வேதவள்ளியோடு வந்து நின்றவன், “ரிமூவ் பண்ணுங்க” என்றதும் அவர்களின் முகத்தை மறைத்திருந்த கருப்பு துணியை அங்கிருந்த அடியாட்கள் அகற்றினார்கள்.

அவர்களின் முகத்தைப் பார்த்த வேதவள்ளியின் விழிகள் இரண்டும் அதிர்ந்து விரிந்து கொண்டன.. அதிர்ச்சியோடு தன்‌ கைகளால் வாயை பொத்திக் கொண்டாள்.

ஆம், அங்கே கட்டப்பட்டு இருந்தது நாராயணமூர்த்தியும், சடகோபனும் தான்.

அவர்களை நன்கு அடித்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உடல் முழுவதும் ஆங்காங்கே ரத்த காயங்களாகவும், வீங்கி போயும் காட்சியளித்தது. அவர்களை பார்க்கவே வேதவள்ளிக்கு அவ்வளவு பயமாக இருந்தது.

மேலும், சூர்யாவோடு ஒன்றி போய் நின்று கொண்டாள்.

“உன்ன இவங்க ரெண்டு பேரும் நிறையவே ஹர்ட் பண்ணி இருக்காங்க இல்ல.. அதுக்கு என்ன பண்ணலாம்?” என்று அவளை குனிந்து பார்த்து அவன் கேட்கவும்.

அவளோ அவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அதற்குள் நாராயணமூர்த்தி, “எங்கள மன்னிச்சிடுமா வேதவள்ளி.. உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணது தப்பு தான். தயவு பண்ணி எங்கள மன்னிச்சிடு. உன் புருஷன் கிட்ட சொல்லி எங்களை ஒன்னும் பண்ண வேண்டாம்னு சொல்லுமா.. எங்களை விட்டுட சொல்லு நாங்க எங்கேயாவது போயிடுறோம்” என்று கெஞ்ச தொடங்கி விட்டார்.

“இந்த வயசான காலத்துல எங்களுக்கு இதெல்லாம் தேவையா மா. நீ கேட்டேனு உனக்கு பண உதவி செஞ்சதுக்கு எங்களை இப்படி பண்றீங்களே” என்று சடகோபன் வேறு பாவமாக பேசவும்.

“என்னது பணம் கொடுத்து உதவி பண்ணியா.. அதுக்கு தான் இவகிட்ட தப்பா நடந்துக்க பாத்தியா.. வாயை திறந்து ஒரு வார்த்தை பேசின சாவடிச்சிடுவேன் உங்க ரெண்டு பேரையும்” என்று கர்ஜிக்கும் குரலில் சீறியவன்.

வேதவள்ளியை பார்த்து, “நீ சொல்லு இவங்களை என்ன செய்யலாம்?”.

அவனின் குரலில் தான் எத்தனை மாற்றங்கள்.. அவர்களிடம் கர்ஜித்தவன்.. அப்படியே இவளிடம் மென்மையாக பேசினான்.

அவளுக்கோ வார்த்தைகளே எழவில்லை. பயத்தில் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

சூர்யாவின் அணைப்பில் ஏதோ கோழி குஞ்சியை போல் நடுங்கி கொண்டு நின்று இருந்தாள்.

அவளின் நிலையை உணர்ந்தவன், “நீ ரொம்ப சாஃப்ட் ஹார்ட்.. அதான் இவங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு கூட தெரியாம முழிச்சுகிட்டு இருக்க. ஆனா, நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது. தப்பு பண்ணவங்களுக்கு அதுக்கு தகுந்த பனிஷ்மென்ட் நிச்சயம் கொடுப்பேன்” என்றவனோ சட்டென்று தன் பின்பக்கம் சொருகி இருந்த துப்பாக்கியை கையில் எடுத்து ஒரு சுழற்று சுழற்றவும்.

வேதவள்ளிக்கோ சப்த நாடியும் அடங்கி விட்டது.

அவன் கையில் வாகாக சுழலும் துப்பாக்கியிலேயே அவளின் பார்வை பதிந்திருக்க..

நொடி நேரத்தில் அவளை தனக்கு முன்னே நிறுத்தியவன். அவளை தன்னோடு நெருக்கமாக நிற்க வைத்துக்கொண்டு அவளின் கையை பற்றி அந்த துப்பாக்கியை பற்றச் செய்து அவர்களை நோக்கி காட்டினான்.

நொடியில் நடந்தேறிய செயலில் வேதவள்ளி வெடவெடத்து போய்விட்டாள்.

“ஐயோ! வேண்டாம்.. விட்ருங்க” என்ற வார்த்தைகள் அவளையும் மீறி வெளிவந்தது.

அவளை நோக்கி குனிந்தவன் அவளின் காது மடலில் கிசு கிசுப்பாக, “உன்ன நிறைய ஹர்ட் பண்ணி இருக்காங்க.. அவங்கள ஒன்னும் பண்ண வேண்டாமா.. ஷீட் பண்ணு” என்றது தான் தாமதம் அவ்விருவரும், “எங்களை விட்டுடுங்க” என்று கதற தொடங்கி விட்டனர்.

அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், “பயமா இருக்கு சூர்யா.. ப்ளீஸ்..” என்றாள் தன் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு.

அவளின் விழிகளோ அவளே அறியாமல் அவனை மொத்தமாக தனக்குள் சுருட்டிக் கொண்டது.

அவளை பார்த்து புன்னகைத்தவன், அவளை பார்த்துக் கொண்டே இரண்டு, மூன்று குண்டுகளை அவர்களை நோக்கி சுட்டான்.

வேதவள்ளியோ அழுத்தமாக பயத்தில் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளின் முகமே வெளிறி போய்விட்டது. இதழ்களிலும் மெல்லிய நடுக்கம்.. அவளின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவன்.

சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டே தன்னிலை அடைந்தவாறு தங்களுக்கு எதிரே கட்டப்பட்டிருந்தவர்களை பார்த்தான்.

அவர்களோ மொத்தமாக பயந்து போய் விட்டனர்.

“இவ யார் தெரியுமா? என்னுடைய வேதா.. என் பொண்டாட்டி.. இன்னொரு தடவை இவ மேல மட்டும் இல்ல வேற எந்த பொண்ணு மேலயாவது தப்பா கை வைக்கணும்னு நினைச்சீங்க.. இப்படி கூப்பிட்டு வந்து கட்டி போட்டு மிரட்டிட்டு எல்லாம் இருக்க மாட்டேன். பார்க்கிற இடத்திலேயே சூட் பண்ணிட்டு போயிடுவேன்” என்று கர்ஜித்தான்.

“பண்ண மாட்டோம் சார்.. பண்ண மாட்டோம் சார்” என்று அவ்விருவரும் பயத்தில் கத்த தொடங்கி விட்டனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!