எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38

4.7
(15)

புயல் – 38

வேதவள்ளியோ புரியாமல் விழிக்கவும்.

“என்ன நான் என்ன பேசுறேன்னு உனக்கு புரியலையா.. உன் புருஷன் உன்ன பெட்ல திருப்தி படுத்துறானானு கேட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அவள் சற்று அழுத்தம் கொடுத்து கேட்கவும்.

அவள் கூறுவதை கேட்கவே அனைவரின் முன்னிலையிலும் வேதவள்ளிக்கு சங்கடமாக இருந்தது.

‘என்ன இவள் இப்படி எல்லாம் பேசுகிறாள்’ என்று அருவருப்பாகவும் இருந்தது.

சூர்யாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, “நீ எல்லாம் என்ன மாதிரியான பொண்ணு? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்படி எல்லாம் பேசுற? இப்படி எல்லாம் பேச உனக்கு வெக்கமா இல்லையா?” என்றான் கர்ஜனையாக.

“நான் எதுக்காக வெக்கப்படணும்? ஒரு பெண்ணுடைய வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே நாசமா போறத பாத்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது” என்று அழுத்தமாக கூறியவள் வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு உன் புருஷனுடைய ஃபர்ஸ்ட் வைஃப் நான் தான்! அதாவது உனக்கு தெரியுமா தெரியாதா.. நீ அவனுக்கு இரண்டாம் தாரம் தான்” என்றாள் அழுத்தமாக.

அவளால் இவள் கூறுவதை எல்லாம் சற்றும் நம்ப முடியவில்லை. நம்ப முடியாத பார்வை பார்த்தவள், ஸ்தம்பித்து நின்றிருந்தாள். அவளின் வார்த்தையில் கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது.

“தேவையில்லாம பேசாதீங்க மேடம்.. என்ன பேசுறீங்க நீங்க சூர்யா சாருக்கு இப்போ தானே ஃபர்ஸ்ட் டைம் வேதவள்ளியோட கல்யாணம் ஆகுது. நீங்க என்னெல்லாமோ பேசுறீங்க?” என்று கோபமாக கேட்டாள் சீதா.

“நீ சொல்றதெல்லாம் உண்மையானு சூர்யா கிட்ட கேளு.. சொல்லு சூர்யா உனக்கு வேதவள்ளியோட நடந்திருக்கிறது தான் முதல் கல்யாணமா?” என்றாள் ஆச்சரியமாக கேட்பது போல்.

அவனிடம் அதற்கு பதில் இல்லை. தன் பற்களை கடித்துக் கொண்டு முகம் இறுக நின்றிருந்தான்.

ராம்குமாரை பார்த்த சீதா, “இங்க என்ன ராம் நடக்குது? அப்போ சூர்யா சாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா? வேதவள்ளியோடு நடந்தது இரண்டாவது கல்யாணமா?” என்று அதிர்ச்சியோடு கேட்கவும்.

“ஆமா, ரெண்டாவது கல்யாணம் தான். நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க”.

“என்ன ராம் பேசுறீங்க.. நீங்க இவ்வளவு நாள்ல ஒரு நாள் கூட இந்த உண்மையை எங்க யார்கிட்டயும் சொல்லல.. இப்ப இவங்களா வந்து சொன்ன பிறகு இப்போ ஏதோ சொல்ல போறேன்னு சொல்றீங்க.. நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை ராம்” என்றாள் கோபமாக.

“ஒரு நிமிஷம்..” என்று அவன் கூறும் பொழுதே இவர்களை பார்த்து நக்கலாக சிரித்த அக்ஷ்ரா, “நெனச்சேன் இந்த விஷயத்தை கண்டிப்பா சூர்யா உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டான்னு எனக்கு அப்போவே தெரியும். எப்படி சொல்லுவான்? நடந்த எல்லாத்தையும் நானே உங்களுக்கு விளக்கமா சொல்றேன். நானும் சூர்யாவும் சும்மா ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது இவனால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாதுனு. அப்பா ஆகுற தகுதி இவனுக்கு இல்லை. இவனால எந்த ஒரு பொண்ணையுமே சேடிஸ்பை பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னை ஏமாத்தி முட்டாள் ஆக்கி கல்யாணம் பண்ணி இருக்கான்னு அதுக்கப்புறம் தான் எனக்கு தெரிய வந்தது. இந்த உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகு தான் நான் இவனை டைவர்ஸ் வாங்கிட்டு பிரேமை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று பொய்யையும் உண்மையையும் கலந்து கதை கட்டி அழகாக கூறினாள்.

அவள் பேச பேச வேத வள்ளியின் விழிகள்‌ சூர்யாவிலேயே தான் நிலைத்திருந்தது.

“நோ! இவ சொல்றதெல்லாம் நம்பாதீங்க வேதவள்ளி இவ பொய் சொல்றா” என்று எகிரிக் கொண்டு வந்தான் ராம்.

வேதவள்ளிக்கு அவள் கூறியதை எல்லாம் கேட்டு நிலை கொள்ளவே முடியவில்லை.

எதையும் நம்பவும் முடியவில்லை..

‘சூர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா.. தன்னிடம் இதுநாள் வரை அவன் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே’ என்று எண்ணும் பொழுதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

மனதிற்குள் அப்படி ஒரு வலி..

நிற்க கூட முடியாமல் கால்கள் இரண்டும் துவண்டு போவதை போல் ஆகிவிட்டது.

எவ்வளவு பெரிய உண்மை.. திருமணம் தான் எதிர்பாராத விதமாக இவர்களுக்கு நடந்து விட்டது. அப்பொழுது அவனால் கூற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

அதன் பிறகு இத்தனை நாட்களில் என்றாவது ஒருநாள் தன்னிடம் அவன் உண்மையை உரைத்திருக்கலாம் அல்லவா.. ஆனால், அவன் கூறவில்லையே என்று எண்ணும் பொழுதே அவளின் இதயத்தில் சுருக்கென்ற வலி எழுந்தது.

“இங்க பாரு வேதவள்ளி இந்த சூரியா ஒரு ஏமாற்றுக்காரன். அவன் கிட்ட இருக்குற குறையை மறைக்குறதுக்காக பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கிறானே தவிர, அவன் ஒன்னும் ஆசைப்பட்டு எல்லாம் கல்யாணம் செஞ்சுக்கல. அவனுடைய குறை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக தான் அவன் கல்யாணமே பண்ணி இருக்கான். அவனால என்னைக்குமே உன்னை சந்தோஷமா பாத்துக்க முடியாது. உனக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருத்தன் உனக்கு வேணுமானு நீயே நல்லா யோசிச்சு பாத்துக்கோ” என்று கூறியவளோ தன் கைகளை கட்டிக்கொண்டு ஏளனமாக சூரியாவை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவளை பார்க்க பார்க்க சூர்யாவிற்கு ஆத்திரமாக வந்தது. எப்படி எல்லாம் பேசுகிறாள்.. குழந்தை வேண்டாம் என்று மாத்திரையை உட்கொண்டது இவள். ஆனால், நான் ஏதோ தவறு செய்தவன் போல் என் மேலேயே இத்தனை பழியை போடுகிறாளே என்று எண்ணும் பொழுதே ஆத்திரமாக வந்தது.

ஆனாலும், அவளை பற்றி தரக்குறைவாக பேசி தன் தரத்தையும் குறைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.

“வேதா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு” என்று தன்னை பற்றி வேதவள்ளியிடம் விளக்கிவிடும் பரிதவிப்போடு அவன் தவிப்பான குரலில் அவளிடம் பேசவும்.

“உங்களுக்கு இவங்களோட ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா சூர்யா?” என்றாள் நா தழுதழுக்க.

அவளின் வார்த்தையே அவள் எவ்வளவு வலியோடு பேசுகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த அவனுக்குள்ளும் அப்படி ஒரு வலி..

அவளுக்கு ‘ஆமாம்’ என்பதை போல் தலையசைத்தான்.

நொறுங்கியே போய்விட்டாள்..

என்ன தான் அடுத்தவர் வாயிலாக இப்படி ஒரு விஷயத்தை கேட்பதும்.. தன் கணவன் வாயிலாக இப்படி ஒரு விஷயத்தை கேட்பதும் ஒன்றில்லை தானே..

அவனே ஆமாம் என்று தலையசைக்கவும் இவள் முற்றிலுமாக நொறுங்கிப் போய்விட்டாள்.

அவனின் முதல் காதல் அவளுக்கு தான் கிடைத்திருக்கிறது..

அவனின் முதல் அன்பு அவளுக்கு தான் கிடைத்திருக்கிறது..

அவனின் முதல் முத்தம் அவளுக்கு தான் கிடைத்திருக்கிறது..

அவனின் முதல் கூடலும் அவளுடன் தானே..

அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை..

“நான் சொன்னேன்ல நான் தான் இவனுடைய முதல் மனைவி.. நீ இவனுக்கு இரண்டாம் தாரம் தான். இப்படிப்பட்ட ஒருத்தன் உனக்கு தேவையானு நல்லா யோசிச்சு பாரு”.

இத்தனை நாட்களில் சூர்யாவிற்கு தன் மீதான அன்பை வேதவள்ளியுமே பலமுறை உணர்ந்து இருக்கிறாள்.

உண்மையான அன்பை உணர்ந்து கொள்ள முடியாதவளா அவள்..

அவளுக்குமே அவன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக காதல் துளிர் விட தொடங்கி இருக்கிறது தான்..

சூர்யாவோ தவிப்பாக அவளை பார்த்தான்.

சூர்யாவின் மேல் நிறையவே அவளுக்கு வருத்தம் இருக்கிறது தான். ஆனாலும், அக்ஷ்ராவின் முன்னிலையில் அவனை விட்டுக் கொடுத்து பேசவும் அவளுக்கு விருப்பமில்லை

“அவரால குழந்தை பெத்துக்க முடியலனாலும் பரவாயில்லை. ஆனால், அவர் என் மேல வச்சிருக்கிற காதல் உண்மையானது. அது எனக்கு தெரியும்.. குழந்தை பெத்துக்கிட்டா தான் நல்ல தம்பதிகள்னு கிடையாது. நாங்க எங்களுக்கு தேவை என்றால் குழந்தையை தத்தெடுத்து கூட வளர்த்துப்போம் இல்ல சூர்யா?” என்றாள் குளம் கட்டிய கண்களோடு அவனை பார்த்து கேள்வியாக.

அவனுக்கு இப்பொழுது என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. முன்னதாகவே இவளிடம் அனைத்து உண்மையையும் கூறி இருக்க வேண்டும் என்று இப்பொழுது எண்ணி வருந்தினான்.

இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், உணர்ந்தார்கள்..

ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் அன்பை இருவருமே பலமுறை உணர்ந்து இருக்கிறார்கள்.

அக்ஷ்ரா வேதவள்ளியை விசித்திரமாக பார்த்தவள், “என்ன பேசுற நீ? எந்த பொண்ணுமே இப்படி ஒரு கணவன் தனக்கு வேணும்னு நினைக்க மாட்டா.. உன்னால எப்படி இப்படி ஒரு புருஷனை அக்செப்ட் பண்ணிக்க முடியுது?”.

“ஒருவேளை, அவருக்கு உங்களை பிடிக்காம இருந்திருக்கலாம். அதனால உங்களோட சேர்ந்து வாழ விருப்பப்படாமல் இருந்திருக்கலாம். அதை தான் நீங்க இப்படி தப்பா புரிஞ்சுக்கிட்டிங்கன்னு நினைக்கிறேன். நிச்சயமா எங்களுக்கு குழந்தை பிறக்கும். அப்படி பிறக்கும் போது உங்களுக்கு கண்டிப்பா சொல்லி அனுப்புவோம்” என்றவள் சூர்யாவின் கையை பற்றி கொண்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டாள்.

சூர்யா எதுவுமே பேசவில்லை.. தன் மனைவியையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு அவளின் இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான்.

அவளுக்கு இவ்வளவு எல்லாம் பேச தெரியுமா என்று ஆச்சரியமாக பார்த்தான்.

சற்று தூரம் தள்ளி வந்ததும் அவன் கையை விட்டவள், “அப்போ உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு இல்ல” என்றாள் ஆதங்கமாக.

“ஏன் என்கிட்ட இத நீங்க முன்னாடியே சொல்லல?”.

“கல்யாணம் பண்ண புதுசுல நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்ட் இல்ல.. என்னுடைய பாஸ்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சா நீ நிச்சயமா ஒரு நாள் ஹர்ட் ஆகுவனு எனக்கு தெரியும். அதனால உனக்கு வேற ஒரு சந்தோஷமான லைஃப் அமைச்சு தரணும்னு நினைச்சேன். அதனால தான் உன்கிட்ட எந்த உண்மையையும் நான் சொல்லல.. ஆனா எனக்கே தெரியாம நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் டி. உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு தோணுச்சு. இந்த உண்மை எல்லாம் உன்கிட்ட நானும் சொல்லணும்னு தான் டி நெனச்சேன். அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்து போச்சு” என்று தன் மனதில் இருந்ததை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டான்.

“அப்போ.. உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் எனக்கு கிடையாது இல்ல.. அவங்களுக்கு தானே..” என்றவளின் வார்த்தையில் இருந்த வலி அப்பட்டமாக தெரிந்தது தொண்டை வேறு அடைத்துக் கொண்டது.

“முதல்ல என்ன நடந்துச்சுனு நான் எல்லா உண்மையையும் உன்கிட்ட சொல்லிடுறேன்” என்றவனோ அவர்களின் காதல் தொடக்கம் திருமணம் தொடக்கம் விவாகரத்து வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!