உயிர் தொடும் உறவே -25

4.9
(10)

உயிர்-25:

மீனாட்சிக்கு எல்லாமே புதிதாக இருந்தது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை தவிர‌ வேறெங்கும் சென்றிராடதவளுக்கு லண்டன் என்பது வேற்று கிரகம்‌ போல தோன்றியது.

விமான நிலையம், விமானப் பயணம், என அனைத்தையுமே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே வந்தாள்.

தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதே அவளுக்கு பெருந்துக்கமாக இருந்தது.‌

கடைசி வரை தந்தையிடம் சொல்லிக் கொள்ளலாமலேயே கிளம்பினாள் .

சங்கர பாண்டியனுக்கு சாட்டையால் அடித்த உணர்வு.

ஆசையாக வளர்த்த மகள் ஒரு முறையேனும் பேசி‌‌விட மாட்டாளா… என்ற தவிப்பு அவரிடம். காலம் கடந்த ஞானோதயம்.

கோமதியை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுதாள்.

அவரும் அப்படியே. மகளுக்கென தனியே அறிவுரை மூட்டைகளை
அவிழ்த்து விடவில்லை.

ஏனெனில் தனது மகளுக்கு எங்கு எப்போது எப்படி நடந்து வேண்டுமென நன்றாக தெரியும்.

அவரது வளர்ப்பு அப்படி.

ஆனால் ஒரு‌ தாயாக தன் மகளின் கையைப் பிடித்து கொண்டு ,“ இங்க பாரு மீனாட்சி…அம்மா உனக்கு புத்திமதி சொல்லுதேன்னு நினைக்காத. நடந்து முடிஞ்சத இனி யாராலும் மாத்த முடியாது. உடனே உன்னோட மனசை மாத்திட்டு உம் புருசனோட வாழ ஆரம்பிச்சிடுன்னு சொல்ல மாட்டேன். ஆனா ஒரு தாயாக என்னோட பொண்ணும் நல்லா சந்தோஷமா வாழனும்ன்னு ஆசை இருக்கத்தான் செய்யுது. உனக்கான நேரத்தை எடுத்துக்க…ஆனா எதுலையும் அவசரப்பட்டு முடிவெடுத்துடாதே…. யோசி…” என்றார்.

மீனாட்சியோ , “எப்படி‌மா அந்தாள் கூட போய்…சந்தோஷமா…? என்னோட சந்தோஷம் தான் எல்லாமே போச்சே…”என்றாள்‌ நா

தழுதழுக்க…

“எல்லாத்துக்குமே விரும்பின‌ வாழ்க்கை கிடைச்சிடாது. கிடைச்ச வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பு…ஆதி தம்பி ஒரு தடவை தப்பு பண்ணிடுச்சு தான்…அந்த குற்றவுணர்ச்சியே ஆதிக்கு ஆயுசு பூராவும் தண்டனைதேன்.. ரொம்பவே வாழ்க்கையை பத்தி யோசிச்சி சிக்கலாகிக்காத…” என்பதோடு‌ முடித்து விட்டார்.

மகள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு சாமான்கள் எடுத்து வைத்திருந்தார் .

அனைத்து வகையான பொடி வகைகள், அப்பளம் அனைத்தையும் சற்று பெரிய டப்பாவில் அடைத்து கொடுத்திருந்தார்.

அனைத்தையும்‌ எடை சரி பார்த்து வைத்திருந்தான்‌ஆதி.

பாண்டியன் தனது வேலையை முடித்து விட்டு வந்திருந்தான்.

அவனுக்குமே வருத்தமாக இருந்தது. அவளுடன் வம்பிளுத்து, சண்டைப் போட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கிய‌ ஞாபகங்கள் ஒன்றன் பின்னே ஒன்றாய்‌ வரிசைக் கட்டி நின்றது.

கிளம்பும் வரையிலும் ஆதியை முறைத்துக் கொண்டே இருந்தான் பாண்டியன்.

ஆதி தனது பிரம்மாண்டமான வீட்டினை தூய்மை செய்யச் சொல்லி ஆட்களிடம் கூறியிருந்தான்.

வீட்டில வேலை செய்யும் மூத்த பெண்மணி‌கள் இருவர் அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார்கள்.

தமிழ் பேசும் பெண்கள்  சிலரை உதவி செய்வதற்கென நியமித்திருந்தான்.

வீட்டினுள்ளே அடியெடுத்து வைத்தவள்‌ அதன் பிரம்மாண்டத்தை கண்டு ‌திகைத்தாள்.

ஏதோ இந்திரலோகத்திற்கு வந்து விட்டதைப்‌ போல் உணர்ந்தாள். ஆதியின் பணபலம் மற்றும் அந்தஸ்த்தையும் அக்கணமே உணர்ந்து கொண்டாள்.

“ இங்க பத்து ரூம்க்கு மேல இருக்கு…உனக்கு‌ எது கம்ஃபர்ட்டபிளா இருக்குதோ …அதுல தங்கிக்க..” என்றான்.

மீனாட்சி சுற்றும் பார்த்தாள். வீட்டிற்குள்ளே ஆறு ஏழு வேலையாட்கள் அங்குமிங்கும் வேலை‌ செய்து கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு வெளியே ஐந்தாறு பேர் இருப்பார்கள் என கணக்கிட்டவள் , “ இங்க ரூமுக்குள்ள ரூம்மு இருக்குற மாதிரி எதுனாலும் இருக்கா? ஏன்னா வீட்டு விஷயம் வெளியாட்களுக்கு தெரிய வேணாம்.” என்றாள்

ஆதிக்கும் புரிந்தது.

அங்கிருந்த ஒரு‌ அறையைக் காட்டி,

“இதோ…! இது தான் கொஞ்சம் பெரிய ரூம்‌…உள் ரூம் இதுல தான் ‌இருக்கு. அதுல நீ இரு. வெளி ரூம்ல நான் ‌தங்கிக்கிறேன்…அப்பறம் சமையலுக்கு ஆட்கள் இருக்காங்க…நீ சமைக்கனும்ன்னு இல்லை. வீட்டு வேலை எல்லாத்துக்கும் ஆட்கள் இருக்காங்க…நீ எதுக்கும் கஷ்டப்படத் தேவையில்லை…” என்றான்.

அவளோ , “கொஞ்சம் ‌உள்ள‌ போய் ‌பேசலாமா..? “ என்றாள்‌

“ ம்ம்…வா…” என்றவன் அந்த பெரிய அறையினுள் நுழைந்தான்.

வேலையாட்கள் அவர்களின் பயணப் பொதிகளை அறையினுள் வைத்து விட்டுச் சென்றனர்.

“இங்க பாருங்க…இந்த பணம் பகட்டு எதுவும் எனக்கு பிடிக்காது…இதெல்லாம் என்‌ மனசை மாத்திடும்ன்னு தப்பு கணக்கு போடாதீக…என்னோட வேலைகளை நானே செஞ்சி தான்‌ பழக்கம் . இங்கேயும் நானே செஞ்சிபுடுதேன்…வேத்து ஆளுகயெல்லாம்‌ எனக்கு செய்ய வேணாம். உங்களுக்கு வேணும்னா நீங்க உங்க வேலைகளை  செஞ்சிக்கோங்க. சுருக்கச் சொன்னா உம்ம‌ வேலைகளை நீங்களே பாத்துக்கோங்க…என்னோட வேலையை நாம்பாத்துக்கிடுதேன். உங்க கிட்ட எந்த உரிமையும் கொண்டாட‌ நான் விரும்பல…” என்றவள் தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று விட்டாள்.

 

ஆதியோ அங்கிருந்த மெத்தையில் பொத்தென்று தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.

 மீனாட்சியைப் பற்றி சற்று குறைவாகவே எடை போட்டுவிட்டான் போலும். அவளது வைராக்கியம் அவனை உலுக்கிப் போட்டது.

வெள்ளைப் பளிங்கினாலான அவனது மாட மாளிகை எந்த விதமான சிறு சலனத்தையும் அவளிடம் ஏற்படுத்தவில்லை.

அனைத்தும்‌ அவளுக்கு புதுமையாக இருந்ததே தவிர ஆசையை ஏற்படுத்தவில்லை.

மெத்தையில் அப்படியே சரிந்து படுத்தான்.

அவனது கையும் காலும் ‌வலித்தது தான்.

சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கச் சொல்லி மருத்துவர் கூறியிருந்தார்.

தினமும்  தானே தான் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் .

 

ஏனோ லண்டன் வந்த பிறகு தானும் மீனாட்சியும் மட்டுந்தான் என்பதால் அவளிடம் உதவி கேட்கலாம், உறவினை மேம்படுத்தலாம் என்று நினைத்திருந்தவனின் எண்ணத்தில் மண்‌ விழுந்தது.

உடற்சோர்வுடன் மனச்சோர்வும் அழுத்தியது.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

சட்டென்று எழுந்தவன் சமயலறைக்கு சென்று ஃப்ரிட்ஜில் என்ன இருக்கிறது என்று பார்த்தான்.

வள்ளியம்மா மாவு அரைத்து வைத்திருந்தார்.

அவன் சமயலறைக்கு நுழைவதைக் கண்ட வள்ளியம்மா, “ தம்பி என்ன சாப்பிட செய்யனும்…? சொல்லுங்க நிமிஷத்துல பண்ணிடுறேன்…” என்றார்.

“ இல்ல வள்ளியம்மா…நானே எங்க ரெண்டு பேருக்கும் தோசை வார்த்துக்கிறேன்…அப்பறம் …”என ஏதோ கூற வந்தவன் சரி பிறகு அதை சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

“சரி தம்பி…மதியத்துக்கு என்ன சமைக்குறது…?” என்றார்.

“ அது மீனாட்சிக்கிட்ட கேட்டு சொல்றேன்…” எனக் கூறி கொண்டு இருக்கும் போதே மீனாட்சி சமையலறைக்குள் நுழைந்தாள்.

“ வாம்மா…என் பேரு வள்ளியம்மா.‌.இங்கன தான் அஞ்சாறு வருசமா வேலை செய்றேன். பாக்க மஹாலட்சுமி கணக்கா இருக்கீக. என் சொந்த ஊரு தேனி பக்கந்தேன். தம்பி தான் இங்கன அழைச்சிட்டு வந்து வேலை போட்டு கொடுத்துச்சு…உங்களுக்கு என்ன மாதிரி சமைக்கனும்ன்னு சொல்றீங்களோ..அது மாதிரியே சமைச்சிபுடுதேன்‌‌” என வெள்ளந்தியாய் பேசினார்.

அவளோ சிரித்தபடி, “ நா உங்கள் விட வயசுல சின்னவதானே சும்மா வா..போன்னே கூப்புடுங்க…அப்பறம் என்னால வேலையெல்லாம் செய்யாம சும்மா இருக்க முடியாது…ரெண்டு நாளைக்கு மட்டும் நீங்க சமைச்சு கொடுங்க..இங்கன இந்த அடுப்பு …மிக்சி.. இதெல்லாம் எப்படி உபயோகப்படுத்தனும்ன்னு சொல்லிக் கொடுத்திட்டீகன்னா நானே சமைச்சிடுவேன்…நீங்க மத்த வேலையை பாத்துக்கலாம்…” என்றாள்.

“ சரி தாயி…” என்றவர் வெளியே சென்றிரார்.

தோசை ஊற்றிக் கொண்டிருந்தவனருகே வந்தவள் , “ ஒரு நிமிஷம்…” என்றாள்.

அவனோ என்னவென்பது போல நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ‌.

“ நான் எனக்கு ஒரு ஆளுக்கு சமைக்குறது எப்படியும் மீந்து போகும்…சாப்பாட்டை வீணடிக்கக்கூடாது… அதனால நீங்க வேணும்னா சாப்பிட்டுக்கோங்க…தேவையில்லாம எல்லார் முன்னையும் படம் ஓட்ட வேணாம்…நா சொல்றது உமக்கு புரியும்ன்னு நினைக்கேன்…” என்றாள்.

தங்களுடைய அந்தரங்கத்தை மற்றவர்களிடம் விளம்பரப்படுத்த விரும்பவில்லை அவள்.

“ ம்ம்…” என்றவன் இரு தோசைகளை வார்த்து பொடியையும் எண்ணெய்யும் வைத்து அவளிடம் கொடுத்தான்‌.

அவள் ஏதோ கூற வரும் முன், “ என்னோட வேலைகளை நான் செஞ்சு தான் பழக்கம். நீ சொன்ன மாதிரி இந்த கிட்சன் உனக்கு பழகும் வரைக்கும் மார்னிங் ஃபிரேக்பாஸ்ட் நான் பண்ணிடுறேன். நல்லா எல்லாப் பொருட்களையும் யூஸ் பண்ண தெரிஞ்சதுக்கப்பறம் நீ‌ பண்ணிடு. இப்ப இதை சாப்டுக்கோ..” எனத் தட்டை அவள் புறம் நீட்டினான்.

அதனை வாங்கியவள் அவளுக்கு இருந்த பசியில் தட்டிலிருந்த தோசையை வினாடியில் காலியாக்கினள்.

மற்றொரு தோசை வேண்டுமென்று இருந்தது.

ஆனால் அதைக் கேட்க அவளது சுயமரியாதை தடுத்தது.

அவள் கடைசி‌ விள்ளலை எடுத்து வாயில் வைக்கவும் இன்னொரு தோசை அவள் தட்டில் விழவும் சரியாக இருந்தது.

“ம்ம்ச்…எதுக்கு இப்ப இன்னொன்னு போட்டீக..? நாங்கேட்டனா..? என் எகிறினாள்.

“ இல்லை எனக்கு அதிகமாகிடுச்சு…அதான்…உனக்கு வச்சேன்…” என்றான்.

அவனுக்கு அவளுக்கு போதவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது.

ஆனால் அவள் வாயைத் திறந்து கேட்க மாட்டாள் என்பதால் அவனே அவளது தட்டில் மற்றொன்று வைத்து விட்டான்.

அதை அழகாகவும் சமாளித்து விட்டான்.

ஒரு நாளைக்கே அவளுடன் களைத்துப் போய் விட்டான்.

மீனாட்சிக்கும் அனைத்து பொருட்களையும் கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.

தண்ணீர் குழாய்க்கு பதிலாக ஷவரை திறந்து விட்டு தொப்பலாக நனைந்தாள்.

எல்லாமே தானியங்கி மயமாக இருந்தது.

அவளுக்கோ கடுப்பாகி போனது .

நேராக ஆதியிடம் வந்தவள் ,” இந்த வீட்ல ஒண்ணு கூட உருப்படியா இருக்காதா…ஒண்ணொண்ணையும் புழங்கறதுகுள்ள உசுரே போகுது…. சோறு கூட உங்க சொந்த கையால் திங்க மாட்டீங்க போல …. அதுக்குமே கூட மெசினு இருந்தா வாங்கி வைங்க….” என எரிச்சல் பட்டாள்.

ஆதிக்கோ தலை சுற்றி தான் போயிற்று…சற்று நிதானித்தவன் அவள் எதையும் இலகுவாக பயன்படுத்த முடியாத ஆதங்கத்தில் தான் பேசுகிறாள் எனப் புரிந்தது.

“ புரியுது மீனாட்சி…. இதையெல்லாம் மாத்த முடியாது…இங்க இப்படிதான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நீ பழகிக்கோ…ஒரே நாள்ல எல்லாத்தையும் ஹேண்டில் பண்ண முடியாது. உனக்கு என்ன டவுட்னாலும் என் கிட்ட கேளு…நான் சொல்றேன்…” என்றான் பொறுமையாக.

யாரிடமும் இவ்வளவு பொறுமையை இழுத்துப் பிடித்து பேசுபவன் அல்லவே…

பேசும் தொனி மாறினாலே கழுத்தைப் பிடிப்பவன் அவளிடம் இல்லாத பொறுமையை இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தான்.

“ என்ன ஊரோ….? என்ன பழக்கமோ…? மனுசங்கள சோம்பேறித்தனமாக்கி மூலையில உக்கார வைக்குது. பணம் இருந்தா போன உசுரைக் கூட திரும்ப கொண்டாராலாம் போல…. எல்லாம் என் தலையெழுத்து…இப்படி வந்து மாட்டிருக்கேன்‌…ம்ம்ச்…” என அவனுக்கு குட்டு வைத்து விட்டே நகர்ந்தாள்.

தினமும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

“ இந்த அடுப்பு ஏன் இப்படி எரியுது…?”

“இந்த பாலு ஏன் இப்படி இருக்கு…? நம்ம ஊரு பாலு மாதிரி இல்ல…”

“ அய்யே…! இந்த காஃபி போடற‌ மெசினு நல்லா காஃபி போட்டு தர மாட்டிக்கு…நான் அடுப்புலயே வைக்கேன்.”

“நம்மூரு விலைக்கு பூ இம்புட்டு விலையா…?”

“தக்காளி என்ன ருசியாவே இல்லை…?”

“பச்சை மிளகா என்ன இப்படி இருக்குது…?”

“ நம்மூரு சாப்பாட்டு ருசி வரவே மாட்டக்கி…”

“ எல்லாம் பணந்தேன் இங்க.,.அதான் நீரு இல்லாத தகிடுதத்தம் ‌பண்ணி என்னைய‌ கல்யாணம்‌ கட்டினீரு…” என வாய் ஓயாமல் ஏதாவது சொல்லி அவனைக் காயப்படுத்தி கொண்டே இருந்தாள்.

அவனது பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.

நாட்கள் மாதங்களாகின. கிட்டத்தட்ட மீனாட்சி மற்றும் ஆதிக்கு முதல் வருட திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஈஸ்வரனின் கடின உழைப்பின் காரணமாக விளைச்சல் அமோகமாக இருந்தது.

பழையபடி பச்சை பசேலெனவும் முன்பை விட கம்பீரமாகவும் செழித்து நின்றாள் நில மகள்.

கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நெற்பயிர்களை பார்த்துக் கொண்டே இருந்தான்.

காயப்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது.

அவனது மனதில் சொல்ல முடியாத உணர்வுகள் ஊற்றெடுத்தது.

அவனும் அவனது நிலமும் மட்டுமே…

சில்லென காற்று வீச, அழகாக தலையசைத்து அவனை வரவேற்றது நெல் மணிகள்.

அவனது அலைப்பேசியில் “டிங்..”என ஓசை வரவும் எடுத்துப் பார்த்தான்.

” நல்லதே நடக்கும்.. இந்த நாள் இனிய  நாளாக அமையட்டும்..” என்ற வாக்கியத்தை தாங்கி வந்தது அந்த குறுஞ்செய்தி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!