மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?
ஸ்ரீ வினிதா
நாயகன் – ஷர்வாதிகரன்
நாயகி – மோஹஸ்திரா
எதற்கும் அடங்காத ஆதிக்க குணம் கொண்ட நாயகனுக்கும்
அவனுக்கு சற்றும் சளைக்காத திமிர் கொண்ட யுவதி அவளுக்கும் இடையே நடைபெறப் போகும் அதிரடி காதல் போரே இந்தக் கதை.
எஸ் ஆன்ட்டி ஹீரோ வெட்ஸ் ஆன்ட்டி ஹீரோயின்..
கதை பல ட்விஸ்ட்டோடு நகரும்..
ஆரம்பிக்கலாமா..?
வரம் – 01
“வாட்….?” தன் காதில் விழுந்த வார்த்தைகளைக் கேட்டு நம்ப முடியாத திகைப்பில் அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தி இருந்தான் நம் கதையின் நாயகன் ஷர்வாதிகரன்.
இத்தனை வருடங்களாக மாறாதது எப்படி இன்று மாறியது….?
அவனைவிட திறமைசாலி இங்கு யார் உளர்…..?
கிட்டத்தட்ட இந்த இடத்தை பெறுவதற்காக அவன் நான்கு வருடங்கள் ஓயாது போராடி இருக்கிறான் அல்லவா….?
இந்த நான்கு வருடங்களும் அவன் மட்டுமே வெற்றிக்கனியை எய்தி இருக்க, இந்த ஐந்தாவது வருடத்தில் மட்டும் அவனுடைய வெற்றிக்கனி கைநழுவி போனதற்கான காரணம் என்ன..?
தோல்வியை சுவைக்க மறுத்து தகித்துக் கொண்டிருந்தான் அவன்.
உள்ளம் தணிய மறுத்தது.
உதிரம் ஆத்திரத்தில் கொதிக்கத் தொடங்கியது.
அவனுடைய கரத்தில் சிக்கியிருந்த கண்ணாடிக் குவளை போன்ற பேப்பர் வெயிட்டின் கதியோ இன்னும் சற்று நேரத்தில் நொறுங்கிப் போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்பட, அதற்கு மேலும் அமைதியாக நின்றால் தன்னுடைய தலைக்குக்கூட பாதிப்பு ஏற்படலாம் என்பதை உணர்ந்த நம் நாயகனின் பிஏவோ தன் திருவாயைத் திறந்தான்.
“சா.. சாரி சார்…. எனக்கு இப்போதான் இன்ஃபார்ம் பண்ணாங்க… 2024 ல சிறந்த தொழிலதிபருக்கான விருது மோஸ்திராங்கிற ஒரு பொண்ணுக்குத்தானாம்….” என அவன் பீதியோடு கூறி முடித்திருக்க, ஷர்வாவின் விழிகளோ ஏகத்துக்கும் சினத்தில் சிவந்து போயின.
“ஹவ்…? ஹவ் இஸ் இட் பாஸிபிள்..?” என நிதானம் இழந்து நெருப்பைக் கக்கும் ட்ராகனைப் போல சினத்தை உமிழ்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து இரண்டடி தள்ளி நின்ற அவனுடைய பிஏவுக்கோ இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.
கிட்டத்தட்ட அவனை அவமானப்படுத்தி விட்டதாகவே கருதினான் அவன்.
பின்னே 15 நாட்களுக்கு முன்பு வரை இந்த விருது அவனுக்குத்தான் எனக் கூறிவிட்டு, திடீரென ஒரே நாளில் அனைத்தையும் மாற்றினால் அவனுக்கு எப்படி இருக்கும்….?
அதுவும் ஒரு பெண்ணுக்கு சிறந்த தொழில் அதிபர் விருதா…..?
இந்த விருதை பெறுவதற்கு அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது….?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல் வந்தவளுக்கு எல்லாம் விருது கொடுப்பதா…..?
“ஷிட்…” என பற்களைக் கடித்து தன் ஆத்திரத்தை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் அவன்.
அவனுடைய கண்களுக்கு முன்பு வரிசையில் தொங்கவிடப்பட்டிருந்த விலைமதிப்பான ஆடைகளை அவனுடைய விழிகள் ஒரு கணம் ஆராய்ந்தன.
நாளைய விருது வழங்கும் விழாவிற்கு அணிவதற்கென அவனுக்காகவே இந்தியாவில் தரம் உயர்ந்த டிசைனரால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளே அவை.
ஷர்ட் தொடக்கம் அதற்கேற்ற கோட் பேன்ட்டென கைக்கடிகாரம் வரை ஒவ்வொரு செட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவற்றைத் தன் விழிகளாலேயே எரித்தவனுக்கு முகம் கன்றியது.
‘இனி இதற்கெல்லாம் அவசியமில்லை..’ என அவனுடைய மனம் உள்ளுக்குள் அலற,
தனக்கு எதிராக நின்ற திவாகரை அழுத்தமாகப் பார்த்தவன்,
“இந்த ட்ரெஸ் எல்லாத்தையும் இப்பவே எரிச்சிடு…” எனக் கட்டளை இட, திவாகருக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘என்னது எரிக்கணுமா….? ஒவ்வொரு ட்ரெஸ்ஸும் பல லட்சங்களை விழுங்கியதாயிற்றே…. எப்படி இவற்றை எரிப்பது….?
இவற்றை எரிப்பதும் வைரங்களைக் கொண்டு போய் குப்பையில் கொட்டுவதும் ஒன்றல்லவா….?’ என எண்ணியவனுக்கு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“இது எல்லாத்தையும் எரிச்சிடுன்னு சொன்னேன்…..” என அவன் மீண்டும் அழுத்திக் கூற, இனி ஒரு கணம் தாமதித்தாலும் விளைவு வேறு மாதிரியாகிப் போகும் என்பதை உணர்ந்த திவாகர் அழகாக நிற வரிசையில் தொங்கவிடப்பட்டிருந்த அனைத்தையும் அள்ளி எடுத்து தன்னுடைய கரங்களில் அதக்கிக் கொண்டவன்,
“இப்பவே போய் எல்லாத்தையும் எரிச்சிட்டு வரேன் பாஸ்…” எனக்கூற ஷர்வாவின் விழிகளோ, கூர்மையாகின.
அந்தப் பார்வையின் பொருளா புரிந்த அடுத்த நொடியே அவனுடைய கரங்களில் இருந்த ஆடைகளை அப்படியே கீழே போட்டவன், பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து அந்த இடத்திலேயே அனைத்தையும் போட்டு எரித்துவிட, அந்தத் தீ கொழுந்து விட்டு எரிவதைப் போலவே அவனுடைய விழிகளிலும் சினம் சீறிப்பாய்ந்து எரிந்து கொண்டிருந்தது.
“எல்லோரும் சேர்ந்து என்ன ரொம்ப நல்லா இன்சல்ட் பண்ணிட்டாங்க..
இதுக்கு அவங்க எல்லாரும் பதில் சொல்லித்தான் ஆகணும்… நாளைக்கு அந்த அவார்ட் ஃபங்ஷன்….” எனக் கூறிக் கொண்டிருந்த ஷர்வா வார்த்தைகளை கூறி முடிப்பதற்கு முன்னரே,
“அந்த அவார்ட் பங்க்ஷன் நாளைக்கு நடக்கக்கூடாது அதானே பாஸ்..?” என முந்திரிக்கொட்டை போல கேட்டடான் திவாகர்.
“நோ… நாளைக்கு அந்த அவார்ட் பங்ஷன் நடக்கணும்.. யாருக்கு அவார்ட் கொடுக்கணும்னு அவங்க நினைச்சாங்களோ…. அந்தப் பொண்ணு அந்த ஃபங்ஷனுக்கு வரவே கூடாது…
லட்சமோ கோடியோ எவ்வளவு செலவானாலும் சரி…. நான் சொன்னதை நீ பண்ணி முடிச்சிரு…..” என்றதொரு கட்டளையை திவாகருக்குக் கொடுத்துவிட்டு, எரிந்து முடிந்த ஆடைகளின் சாம்பலின் மீது தன்னுடைய ஷூ அணிந்த பாதங்களை வைத்து அவற்றை மிதித்துக் கடந்து சென்றவன் அந்த அறையை விட்டு வெளியேறி விட,
இவனுக்கோ வீட்டுக்குள் அடித்த புயல் இப்போதுதான் வீட்டைக் கடந்து சென்றதைப் போல நிம்மதியாக இருந்தது.
எத்தனையோ தொழிலதிபர்கள் கூடும் அந்த மாபெரும் விருது நிகழ்வுக்கு அந்தப் பெண்ணை வரவிடாமல் எப்படித் தடுப்பது..?
‘அம்மாடி நீ நாளைக்கு அவார்ட் வாங்க வராதம்மா..’ எனக் கூறினால் சரிங்க எனக் கேட்டு விடுவாளா என்ன..?
ஆனால் எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டுமே.
அந்தப் பெண் விருது வாங்கக் கூடாது என்றால் என்ன செய்வது என்றெல்லாம் தன் மூளையைக் கசக்கி சிந்திக்கத் தொடங்கினான் அவன்.
‘கட்டளையை மட்டும் இட்டுச் சென்றால் போதுமா…..? என்ன செய்ய வேண்டும் என அதையும் சற்றே விம்போட்டு விளக்கி விட்டுச் சென்றிருந்தால் என்ன….? என குறைபட்டுக் கொண்டான் அவன்.
இது எல்லாவற்றையும் ஷர்வாவின் முன்பு அவனால் வாய் திறந்து கேட்டு விட முடியாது.
அவன் என்ன சொன்னாலும் சரி எனத் தலையாட்டினால் மாத்திரமே தலை தப்பும்.
அப்படி இருக்கையில் அவனிடம் விளக்கம் கேட்டால் அதோ கதி தான்..’ என எண்ணியவன் அடுத்த நொடியே, அந்தப் பெண்ணை விழாவுக்குச் செல்லாமல் எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற முடிவை எடுத்தவன் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினான்.
********
அவனுடைய மிகப் பிரமாண்டமான இல்லத்திற்குள் அவனுக்கென இருக்கும் ஆபீஸ் அறையிலிருந்து வெளியே வந்த ஷர்வாதிகரனுக்கோ வாழ்க்கையில் முதல் முறையாக தோல்வி தன்னைச் சூழ்வது போல இருந்தது.
உலகில் உள்ள எத்தனையோ நாடுகளை வாங்கி சொந்தம் கொண்டாடும் அளவிற்கு செல்வத்தில் செழித்தவன் அவன்.
அவன் இதுவரை தோல்வியை சுவைத்ததே கிடையாது.
ஆனால் சமீப காலமாக தோல்வி அவனைத் துரத்துவதை உணர்ந்தவனுக்கு தலைவலிக்கத் தொடங்கியது.
அவர்கள் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த “ரெட் ரீபெல்” எனப்படும் மிக விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடமோ இரண்டு வாரங்களுக்கு முன்னரே பலத்த பாதுகாப்பில் இருந்த போதும் கூட களவு கொடுக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்து தொடங்கியது அவனுடைய தோல்வி.
எத்தனையோ போலீஸ் தொடக்கம் சிபிஐ வரை அந்த வைரக்கீரீடத்தை கண்டுபிடிப்பதற்காக அவனுடைய கட்டளையை தாங்கி இன்றுவரை தம் பணியை செய்து கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால் அந்த வைரத்தை கண்டுபிடிக்கத்தான் யாராலும் முடியவில்லை.
அந்தத் தலைவலி இன்னும் தீராது இருக்க அதற்குள் இன்னொரு தலைவலி ஒரு பெண்ணின் மூலம் வந்து சேர்ந்துவிட, அவனால் அதைத் தாங்க முடியவில்லை…
எரிச்சலோடு தன்னுடைய படுக்கை அறையினுள் நுழைந்தவன் அணிந்திருந்த ஆடையை வேகமாக களைந்து விட்டு தொடைவரை இருந்த ஷார்ட்சை எடுத்து அணிந்து கொண்டவன், அறையின் வலது பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து அங்கிருந்து ஜிம்மிற்குள் நுழைந்தான்.
‘இழந்த அனைத்தையும் நான் நிச்சயம் திரும்ப பெற்று விடுவேன்…’ என அவனுடைய கண்கள் கர்வத்துடன் கண்ணாடியில் தெரிந்த அவனுடைய பிம்பத்தை பார்த்துக் கூற, இவ்வளவு நேரமும் தொலைந்து போயிருந்த அவனுடைய அழுத்தமான புன்னகையோ அக்கணம் அவனுடைய அதரங்களில் மீண்டும் தோன்றியது.
******
“பளார்ர்ர்….” என்ற சத்தத்தில் அந்த அறையே ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.
“என்ன சொன்ன…. மறுபடியும் சொல்லு…” எனக் கேட்டவாறு மீண்டும் தன் கையை ஓங்கி ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாள் அவள்.
அவள் நம் நாயகி மோகஸ்திரா…!!
எங்கே அவள் மீண்டும் தன்னை அடித்து விடுவாளோ என்பதைப் போல பல அடிகள் பின்னால் நகர்ந்து சென்று நின்றான் குரு.
அவனுக்கோ உள்ளம் உள்ளுக்குள் கதறியது.
‘சொன்னாலும் அடிவிழும்… அவள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் அடி விழும்… இவளிடம் வேலை பார்ப்பதும் நேராக வந்து கொண்டிருக்கும் புகையிரதத்தில் தலையை வைத்து படுத்துக் கிடப்பதும் ஒன்றுதான்…’ என எண்ணியவன் தன் விழிகளில் அப்பட்டமாக தெரிந்த பயத்தை விலக்கப் போராடியவாறு அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.
“ஓஹோ நான் கேள்வி கேட்டா உன்னால பதில் சொல்ல முடியாதா….?” என்றவள் தன்னுடைய ஹீல்ஸ் அணிந்த பாதங்களை அழுத்தமாக தரையில் ஊன்றி அவனை நெருங்கி வர, அவனுக்கு தொண்டை வறண்டு போனது.
அவளுடைய அழகிய நகச்சாயம் பூசப்பட்டிருந்த வெண்டைப் பிஞ்சு விரல்களோ உள்ளே இருந்த பிஸ்டல் ஒன்றை எடுத்து தடவிக் கொடுக்க, அதற்கு மேலும் பேசாமல் இருக்க அவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது….?
அவளிடம் அடி வாங்குவதற்கு தயாராக நிமிர்ந்தவன் கடகடவென அனைத்தையும் கூறத் தொடங்கினான்.
“மே.. மேடம் உ… உங்க உ.. உ…. உயிருக்கு ஆபத்துன்னு தகவல் வந்திருக்கு..”
பற்கள் தந்தி அடிக்க வார்த்தைகள் திணறக் கூறி முடித்தவனோ அவளுடைய கரத்தில் இருந்த துப்பாக்கியைப் பார்த்து பதறி நிற்க, “இஸ் இட்…?” எனக் கேட்டவள், அழகான சிரிப்பை அவனை நோக்கிச் சிந்தினாள்.
“அவ்ளோ சீக்கிரம் என்னை யாராலயும் கொல்ல முடியாதுன்னு உனக்குத் தெரியாதா குரு….?”
“தெ…ரியும்…. தெரியும் மேடம்….”
“முதல்ல ஸ்டெடியா நில்லு…” என அவள் அழுத்தமாக கூற, தன்னுடைய கால்களை நிலத்தில் அழுத்தமாகப் பதித்தவன், அவள் சொன்னது போல ஆடாமல் அசையாமல் சிலை போல நின்று விட, மீண்டும் அவளுடைய இதழ்களில் மிளிர்ந்தது கர்வப் புன்னகை.
‘மேல சொல்லு…’ என்பதைப் போல அவள் அவனைப் பார்த்து வைக்க, “நாளைக்கு அந்த அவார்ட் பங்ஷனுக்கு உங்களை போகவிடாம தடுக்குறதுக்கு பிளான் பண்றதா நம்ம ஸ்பைகிட்ட இருந்து நியூஸ் வந்திருக்கு… நீங்க ஜாக்கிரதையா இருக்கணும் மேடம்…”
“வாட்…? கம் அகெய்ன்..?” சீறினாள் அவள்.
“அ.. அவங்க அவங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும் மேடம்…” என அவசர அவசரமாக அவன் கூறியதை திருத்தி மீண்டும் கூறினான் குரு.
மீண்டும் அவளுடைய காஜல் இட்ட அழகிய விழிகளோ மேலே சொல்லு என்பது போல அசைய,
“மு… முடிஞ்சா அந்த ஃபங்ஷனுக்கு போறதை அவாய்ட் பண்ணிடலாம்… அங்க என்ன வேணாலும் உங்களுக்கு நடக்கலாம்னு நம்ம ஸ்பை டீம் சொ.. சொன்னாங்க…” என சிரமப்பட்டு திக்காது அவன் நிறுத்தி நிதானமாகக் கூற,
“இப்போதான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு குரு… நாளைக்கு நீயும் என் கூட வர்ற… அப்படி யாரு நம்மள என்ன பண்ணி கிழிச்சுடறாங்கன்னு நானும் பார்க்கிறேன்…..” என்றவள் அதிர்ந்து நின்றவனைப் பார்த்து இதழ்களைப் பிதுக்கி விட்டு ஒய்யாரமாக நடந்து சென்றுவிட, குருவோ விக்கித்துப் போய் நின்றான்.
‘ஆத்தி இவங்களைப் பத்திரமா இருக்க சொல்லி, வார்ன் பண்ணினா…. என்னையும் இவங்க கூட ஆபத்துல மாட்டி விட்டுட்டுப் போறாங்களே…. இன்னையோட இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊருக்கே ஓடிப் போய் விடலாமா….?’ என எண்ணியவனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் மோகஸ்திரா தன்னை விட்டு விட மாட்டாள் என்பது புரிய கதி கலங்கிப் போனான்.
‘கடவுளே நாளைக்கு எந்த பிரச்சனையும் வராம நீ தான் பாத்துக்கணும்…’ என அதிக கடவுள் நம்பிக்கை கொண்ட குருவோ இறைவனை மானசீகமாக பிரார்த்திக்கத் தொடங்கினான்.
நாளை அவர்களுடைய முதல் சந்திப்பு அவர்களை மகிழ வைக்குமா….?
மரிக்க வைக்குமா….?
இல்லை மகிழ்ந்து மரிக்க வைக்குமா..?
💜🔥💜
ஆரம்பமே ரொம்ப சூப்பரா இருக்கு ஸ்ரீமா 💜💜💜💜💜🤩🤩🤩🤩