11. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(21)

வரம் – 11

தன்னுடைய பரம்பரை வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் தொலைந்தது பற்றி மோஹஸ்திரா அறிந்து வைத்திருந்தது ஷர்வாதிகரனுக்கோ பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த விடயம் இவளுக்கு எப்படித் தெரிய வந்தது என எண்ணித் திகைத்துப் போனான் அவன்.

அவனுடைய குடும்ப இரகசியம் வெளிப்பட்டு விட்டதா..?

தன்னை இவள் வேவு பார்க்கின்றாளா..?

கிட்டத்தட்ட அவனுடைய மானத்திற்கு நிகரான பெறுமதி மிக்க அந்த வைரம் தொலைந்தது பற்றி அவர்கள் குடும்பம் தங்களுடைய உறவினர்களிடம் கூட மூச்சு விடவில்லையே..!

அதனைக் கண்டுபிடிக்கும் பொருட்டு சிபிஐ மற்றும் காவல் அதிகாரிகளிடம் மட்டுமே கூறியிருந்த இரகசியம் எப்படி இவளுக்குத் தெரிய வந்தது..?

தன்னை காம அரக்கன் என வலைத் தளங்களில் அவள் பதிவிட்டதால் அவளை சாதாரணமாக மிரட்டி கதி கலங்கச் செய்துவிட்டு சென்றுவிடலாம் என எண்ணி வந்திருந்தவனுக்கு அவள் தங்களுடைய பரம்பரை கிரீடம் தொலைந்ததை அனைவரின் முன்பு போட்டு உடைத்தது மட்டுமில்லாமல் அந்தக் கிரீடத்தை காலில் போட்டு மிதிப்பேன் எனக் கூறியதும் அவனுக்கோ கோபம் இன்னும் கட்டுக்கடங்காமல் பெருகியது.

அடுத்த நொடியே சிறிதும் தயங்காமல் அத்தனை பேரின் முன்பும் அவளைத் தரதரவென இழுத்துக்கொண்டு அருகே இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தான் ஷர்வாதிகரன்.

குருவோ பயந்து போனான்.

இவ்வளவு நேரமும் இந்த பிரச்சனை அவ்வளவு பெரிதாக வெடிக்காது என்ற சிறு நம்பிக்கை அவனுக்குள் ஒட்டிக்கொண்டிருந்தது.

இத்தனை பேர் மத்தியில் ஷர்வாதிகரனால் எதுவும் செய்து விட முடியாது என்ற நம்பிக்கையை ஷர்வாவோ சுக்கு நூறாக உடைத்து விட்டு மோஹஸ்திராவை உள்ளே இருந்த அறைக்குள் இழுத்துச் சென்று கதவை அடைத்திருக்க பதறிப் போனான் அவன்.

நொடிக்கு நொடி பயத்தில் இதயமோ வேகமாக தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.

அங்கே அத்தனை பேர் இருந்தும் கூட ஷர்வாவின் பலம் தெரிந்தவர்கள் ஆகையால் அவனோடு மோதத் தயங்கி விலகி நிற்க, போலீஸை அழைத்து வரவழைக்க முயன்ற குருவின் அனைத்து திட்டங்களும் தோல்வியையே தழுவத் தொடங்கின.

மோஹஸ்திராவாக இருக்கட்டும் ஷர்வாவாக இருக்கட்டும் இருவருமே சமூகத்தில் மிகப் பெரும் புள்ளி.

இருவரில் யாரையும் பகைத்துக் கொள்வது அவர்களுக்கு நல்லதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டவர்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாது விலகி நிற்க, குருவோ வேகமாக சென்று பூட்டப்பட்ட கதவைத் தன் கரத்தால் வேகமாகத் தட்டினான்.

உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராது போக அவனுக்கோ உடல் கூட நடுங்கத் தொடங்கி விட்டது.

********
மோஹஸ்திராவை அந்த அறைக்குள் இழுத்து வந்து அவன் கதவைப் பூட்டியதும் மித மிஞ்சிய ஆத்திரத்தில் சட்டென தன்னுடைய கரத்தை உயர்த்தி அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அவள்.

“யு பொறுக்கி ராஸ்கல்… உன்னோட மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இப்படி எல்லாம் நடந்துக்கிற…? என்கிட்ட மோதுறதுக்கு முன்னாடி நீ நல்லா யோசிச்சு மோதிருக்கணும்… இனி ஏன்டா என்கிட்ட மோதிணோம்னு உன்ன அனுதினமும் கதற வைப்பேன்னு மறந்துடாத…” என அவள் ஆத்திரத்தில் திட்ட,

அவள் தன்னை அறைந்த கோபத்தில் அவளுடைய கழுத்தில் தன்னுடைய கரத்தை அழுத்தமாகப் பதித்து இறுக்கியவன் அங்கிருந்த சுவற்றோடு அவளை மோதச் செய்தான்.

“ஏய்ய்…. பொன்னாச்சேன்னு அடிக்க கூடாதுன்னு பார்க்கிறேன்… இல்லைன்னா நடக்கிறதே வேற… யார்டி நீ…? யார் நீ…? என்ன வேவு பாக்குறியா…? என்னோட குடும்ப ரகசியம் உனக்கு எப்படி தெரிய வந்துச்சு…? நான் மறைச்சு வச்ச ரகசியத்தை எதுக்காக எல்லார் முன்னாடியும் போட்டு உடைச்ச…? மரியாதையா யார் நீன்னு சொல்லிடு.. இல்லன்னா இப்படியே உன்னோட கழுத்தை நெரிச்சு கொன்னுடுவேன்….” என அவன் கர்ஜிக்க,

அவனை அலட்சியமாகப் பார்த்தாள் அவள்.

அவளுக்கு கழுத்து வலிக்கத்தான் செய்தது. ஆனால் அவனுடைய இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் சாதாரண பெண் அல்லவே அவள்.

அவனை தைரியமாக எதிர்நோக்கியவள்,

“உன்னால என்னடா பண்ண முடியும்..?” என கேட்க அவனுக்கோ தாடை இறுகியது.

இப்படி ஒரு நிலையிலும் தன்னை எதிர்த்துப் பேசும் அவளை நினைத்து அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன கேட்ட…? என்னால என்ன பண்ண முடியும்னா…? நான் நினைச்சா இப்பவே இந்த மீட்டிங்க நிறுத்த முடியும்…”

“கிழிப்ப… நான் சொல்லும் வரைக்கும் இந்த மீட்டிங் நின்னு போகாது…” என அவள் சீறலாய் கூற,

“அப்போ உன்னோட வாயாலயே இந்த மீட்டிங்கை நிறுத்த வச்சிடலாம்…” என இகழ்ச்சியாகக் கூறியவன் அடுத்து செய்த செயலில் விக்கித்துப் போனாள் அவள்.

ஷர்வாவின் கரங்கள் அவளுடைய ஆடைகளில் படிய வேகமாக அவனுடைய கரங்களைத் தட்டி விட்டவள்,

“ஏய் ச்சீ… மேல கை வெச்சீன்னா கொன்னுடுவேன்டா பொறுக்கி….” எனத் திட்டினாள்.

“இன்னும் உனக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன்…. அதுக்குள்ள இந்த மீட்டிங் நடக்காதுன்னு வெளிய நியூஸ் போகணும்.. இல்லனா உன்னோட மொத்த ட்ரெஸ்ஸையும்………” எனக் கூற வந்தவன் அதற்கு மேல் எதுவும் கூறாது அவளை தலை சரித்து இகழ்ச்சியாகப் பார்க்க அவளுக்கோ முகம் கன்றிச் சிவந்தது.

“நீ என்ன பண்ணாலும் இந்த மீட்டிங்க என்னால நிறுத்த முடியாது… மு…. முதல்ல வெளியே போ….” என்றவள் அவனை வேகமாகத் தள்ளிவிட்டு அந்த அறைக் கதவைத் திறக்க முயன்ற கணம் அவளுடைய வெண்ணிற ஷர்ட்டினை இறுக்கப்பற்றி தன்னருகே இழுத்து நிறுத்தினான் அவன்.
அவன் இழுத்த வேகத்தில் அவளுடைய முதுகுப்புற ஆடை கிழிந்து விட அவளுக்கோ ஒரு கணம் உடல் உதறியது.

உறைந்து போனாள் மோஹஸ்திரா.

********
குருவோ கதவைத் தட்டிய பின்பும் எந்தப் பதிலும் கிடைக்காது போக இதற்கு மேலும் இப்படியே இருந்தால் ஏதாவது விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்து அந்தக் கதவை அவன் உடைக்க முயன்ற கணம் மோஹஸ்திராவிடமிருந்து குருவுக்கு அழைப்பு வர பதறி அடித்து அந்த அழைப்பை ஏற்று பதற்றத்தோடு தன் காதில் வைத்தவன்,

“ஹ… ஹலோ மேடம்… நீ… நீங்க ஓகே தானே…? எ…ன்னால கதவை திறக்க முடியல….” என அவன் திணறியவாறு கூற,

அவனுடைய எந்தக் கேள்விக்கும் பதிலை உரைக்காது,

“மீட்டிங் நடக்காதுன்னு சொல்லி எல்லாரையும் அ.. அனுப்பி வெச்சிடு குரு…” என நடுக்கமான குரலில் கூறினாள் மோஹஸ்திரா.

அவளிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளில் திகைத்துப் போனான் குரு.

இந்த வாய்ப்புக்காக அவள் எவ்வளவு காத்திருந்தாள் என்பதை முழுதாக அறிந்து வைத்திருந்தவனுக்கு ஒரு நிமிடம் என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

ஆனால் உள்ளே பெரிதாக ஏதோ நடந்திருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டவன்,

“மே.. மேடம் நான் போலீஸுக்கு போன் பண்ணினேன்.. பட் யாருமே சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல.. நான் வேணும்னா வேற ஏதாவது பண்ணட்டுமா..? ந.. நம்ம ஆளுங்களை வர வைக்கட்டுமா..?” என கரகரப்பான குரலில் கேட்டான் அவன்.

“இடியட் டூ வாட் ஐ சே…” என அழுகையுடன் சீறினாள் மோஹஸ்திரா.
அடுத்த நொடியே அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு விட அங்கு வந்திருந்த அனைத்து பெரும்புள்ளிகளிடமும் தனித்தனியாக மன்னிப்பை வேண்டியவன் இன்று இந்த மீட்டிங் நடக்காது எனக் கூறி அனைவரையும் அனுப்பி வைக்கத் தொடங்கினான்.

மீட்டிங்கிற்கு வந்தவர்கள் அந்த கான்ஃபிரன்ஸ் ஹாலை விட்டு வெளியே செல்வதற்கு முன்னரே ஷர்வாதிகரனும் மோஹஸ்திராவும் சண்டை போட்டது வீடியோவாக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகத் தொடங்கியது.

அவனுடைய பரம்பரை வைரம் தொலைந்த விடயமும் அதை அவள் காலில் போட்டு மிதிப்பேன் எனக் கூறியது இன்னும் பேச பொருளாக்கப்பட்டு வெளியே பேசப்பட்டது.

அங்கே மீட்டிங் நிறுத்தப்பட்டதும் சற்று நேரத்தில் வெளியே வந்த ஷர்வாதிகரனின் கரத்தில் மோஹஸ்திரா அணிந்திருந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு திணறிப் போனான் குரு.

அதிக சீற்றத்தோடு வெளியே வந்தவன் அவளுடைய ஆடைகளை அந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் சிதறி விழும்படி தூக்கி எறிந்து விட்டு வெளியேறிவிட அதிர்ந்து போய் நின்று விட்டான் குரு.

உள்ளே என்ன நிலமையில் மோஹஸ்திரா இருக்கிறாள் என்பது புரியாமல் உள்ளே செல்வதா இல்லை இங்கேயே நிற்பதா என தவித்துப் போனான் அவன்.

அடுத்த நொடியே என்ன செய்வது எனப் புரியாது மோஹஸ்திராவுக்கு அவன் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்க அவளோ அவனுடைய அழைப்பை ஏற்கவே இல்லை.

அதன் பின்னரும் தாமதிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவன் அரவிந்தனுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கடகடவென கூற,

அரவிந்தனோ “குரு லிசின்… அங்கேதான் நான் வந்துகிட்டு இருக்கேன்… நீ அங்கேயே இரு… அவளைக் கொஞ்சம் பாத்துக்கோ…” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான்.

அவனுடைய குரலில் இருந்த பதற்றமும் நடுக்கமும் மறுபக்கம் பேசிக் கொண்டிருந்த குருவுக்கு தெளிவாகப் புரிந்தது.

யாராவது சிறிது திட்டினாலே அதற்கு எதிராக பெரும் பாதிப்பை அவர்களுக்கு கொடுக்கும் மோஹஸ்திரா தன்னை இந்த நிலையில் நிறுத்தி விட்டுச் சென்ற ஷர்வாதிகாரனை நிச்சயம் சும்மா விடமாட்டாள் என்பதை நினைத்து இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றதோ என எண்ணி அச்சம் கொண்டான் குரு.

அதே கணம் வெளியே வந்த ஷர்வாதிகரனின் முகமோ கோபத்தில் இறுகிப் போய் இருந்தது.

வெளியே அவனுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த திவாகரைப் பார்த்தவன்,
“காரை எடு…” எனக் கூற அடுத்த நொடி அங்கிருந்து வேகமாக புறப்பட்டது அவனுடைய கார்.

“பா… பாஸ் உள்ளே நடந்த எல்லாத்தையும் யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிட்டாங்க….

டைமன் பத்தில்லாம் எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும் பாஸ்…”

“நான் பாத்துக்குறேன்…” என ஒற்றை வரியில் தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டவன் அதன் பின்னர் பேசவே இல்லை.

அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்து முகம் முழுவதும் இறுகிப் போய் இருக்க சட்டென தன் வாயை இறுக மூடிக்கொண்டான் திவாகர்.

🔥💜🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!