வரம் – 12
குருவை நோக்கி ஓடிவந்த அரவிந்தனின் விழிகளோ வேகமாக மோஹஸ்திராவைத் தேடின.
குரு புரிந்து கொண்டவன் போல அவள் இருந்த அறையைத் தன் விரலை நீட்டிச் சுட்டிக்காட்ட வேகமாக அதனை நெருங்கியவனுக்கு கீழே விழுந்து கிடந்த அவளுடைய ஆடைகளைக் கண்டதும் நெஞ்சம் ஒரு கணம் உறைந்து போனது.
“வாட் த ஹெல்….*****..” என உரத்த குரலில் அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் கடகடவென அனைத்து உடைகளையும் பொறுக்கி எடுத்தான்.
நேரே அந்த அறையை நெருங்கிச் சென்று அந்த அறைக் கதவைத் தட்ட உள்ளிருந்து அவனுக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவே இல்லை.
நேரம் செல்லச் செல்ல அவனுக்கோ பதற்றம் கூடிக் கொண்டே போனது.
அங்கே ஆங்காங்கே நின்ற சிலரையும் தன்னுடைய பார்வையால் வெளியே செல்லும்படி கூறிவிட்டு கதவின் அருகே நெருங்கி நின்றவன்,
“பேபி டால்…. நான்தான்… உன்னோட அர்வி வந்திருக்கேன்… கதவைத் திற…” என கரகரப்பான குரலில் கூற சில நொடிகளில் “அர்வி…” என பலவீனமாகக் கேட்டது அவளுடைய குரல்.
அந்தக் குரலில் உடைந்துதான் போனான் அந்தக் காதலன்.
அடுத்த நொடியே குருவோ அங்கே நின்ற கொஞ்ச நஞ்ச பேரையும் அழைத்துக் கொண்டு அவனும் வெளியே சென்று விட அரவிந்தனோ அவள் கதவைத் திறந்ததும் உள்ளே செல்லாமல் அவனுடைய கரங்களில் இருந்த ஆடையை அவளுடைய கரங்களில் திணித்தான்.
சற்று நேரத்தில் ஆடைகளை அணிந்து கொண்டு அவள் வெளியே இறுகிப்போன தோற்றத்துடன் வந்து நிற்க அவளுடைய தோற்றத்தில் அவனுக்கோ உள்ளம் பதறியது.
அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவனுக்கு உடலும் உள்ளமும் கோபத்தில் கொந்தளித்தது.
“டாமிட்.. இதுக்கு மேலயும் நான் அவன சும்மா விடமாட்டேன்.. நிச்சயமா அவன் இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்…” என அவன் தன்னிலை இழந்து ஆக்ரோஷமாகக் கத்த,
அவனுடைய மார்பில் தன் முகத்தை அழுத்தமாகப் புதைத்து விழிகளை மூடி அமைதியாக நின்றாள் மோஹஸ்திரா.
அவளுக்குள் எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது.
விழிகளோ வறண்ட பாலைவனம் போல மாறிப்போனது போலும்.. சிறு துளி கண்ணீர் கூட சிந்தாது இறுகிப்போய் நின்றாள் அவள்.
அவளுடைய மொத்த முயற்சியையும் ஒட்டுமொத்தமாக குழி தோண்டிப் புதைத்து விட்டு சென்றவன் மீது கொலை வெறி எழ அவனுக்குத் தகுந்த பாடத்தை கற்பித்து தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என தனக்குள் சபதம் இட்டுக் கொண்டாள் அவள்.
அரவிந்தனோ அவளுடைய மனநிலையைப் புரிந்து கொண்டவன் போல சற்று நேரம் எதுவும் பேசி அவளை வேதனை கொள்ளச் செய்யாது அமைதியாக நின்றவன் சில நிமிடங்களுக்குப் பிறகு,
“கிளம்பு பேபிடால்… என்றான்.
“ம்ம்…” என்றாளே தவிர வேறு ஒரு வார்த்தையைக் கூட அவள் தன் வாயில் இருந்து உதிர்க்கவே இல்லை.
அரவிந்தன் அவளைத் தோளோடு அணைத்தவாறு தன்னுடைய காருக்குள் அழைத்துச் செல்ல வெளியே வாயிலில் அவளுக்காக காத்திருந்த குருவோ அவர்களுக்கு வழிவிட்டு விலகி நின்றான்.
அவனைக் கண்டதும் சட்டென நின்றாள் அவள்.
“மே… மேடம்….?”
“இன்னைக்கு நின்னு போன மீட்டிங்கை ரீஅரேஞ் பண்ண முடியுமான்னு வந்தவங்க எல்லார்கிட்டயும் கேளு குரு… நான் அவ்வளவு சீக்கிரமாக தோத்துப் போக தயாரா இல்ல… நான் ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டதா எல்லார்கிட்டயும் சொல்லு… முடிஞ்சா நாளைக்கு இதே மீட்டிங்கை ஏற்பாடு பண்ணு.. எல்லார்கிட்டயும் பேசிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணு..” என அந்த நிலையிலும் அவனுக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு அவள் கம்பீரமாக நிற்க வியந்துதான் போனான் குரு.
நிச்சயமாக இவள் ஒரு சிங்கப்பெண்தான் என்றே அவனுக்குத் தோன்றியது.
அவனுடைய வியப்பான பார்வையில் எரிச்சல் அடைந்தவள் “வாட்…?” என சற்றே அதட்டலாகக் கேட்க, இமை தட்டி விழித்தவன் சட்டென இயல்புக்கு வந்தான்.
“இன்னைக்கே எல்லாரையும் மீட் பண்ணி கன்வின்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்னு தோணுது மேடம்… சம் டைம் சிலர் அவங்க நாட்டுக்கு கூட கிளம்பி போற வாய்ப்பு இருக்கு… அப்படி இருக்கும்போது எல்லாரையும் இன்னைக்கு நைட்குள்ள கன்வின்ஸ் பண்ணி நாளைக்கு வர வைக்கிறது முடியாத காரியம்னு தோணுது…” என நிதர்சனத்தை எடுத்துக் கூறினான் குரு.
“நீ சொல்றதும் சரிதான்.. ஓகே எல்லாரோட மெயில் ஐடிக்கும் நான் அனுப்பினதா ஒரு இன்விடேஷனை சென்ட் பண்ணு.. இன்னைக்கு நைட் எல்லாருக்கும் என்னோட பார்ட்டின்னு சொல்லிடு.. பாட்டி செலிப்ரேஷன்னா கண்டிப்பா எல்லாரும் கலந்துப்பாங்க… அந்த டைம்ல எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணிடலாம்.. நானும் பார்ட்டிக்கு வந்துர்றேன்.. எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணிடு…” என்றாள் அவள்.
‘வாவ் செம பிளான்…’ என உள்ளுக்குள் மெச்சிக்கொண்டான் குரு.
அவளுடைய தோளை அழுத்தமாக அணைத்திருந்த அரவிந்தனுக்கோ அவளுடைய வார்த்தைகளில் உடல் சிலிர்க்கத்தான் செய்தது.
“தட்ஸ் மை கேர்ள்…” என ரசித்துக் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய காரை நோக்கிச் சென்றான்.
*********
தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த ஷர்வாவின் விழிகளோ அவனுடைய அலைபேசியின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த அலைபேசியில் ஓடிக்கொண்டிருந்த காணொளியில் அவனுடைய மனம் அமைதியை இழந்து மன நிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்தது.
அரவிந்தனோ மோஹஸ்திராவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவாறு காருக்குள் அழைத்துச் செல்வதை அவனுடைய ஸ்பை ஒருவன் வீடியோ எடுத்து அவனுக்கு அனுப்பியிருக்க, அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் கண்டு மனம் நொறுங்கியதைப் போன்ற ஒரு உணர்வை உணர்ந்தான் ஷர்வாதிகரன்.
எவ்வளவோ முயன்றும் அந்தக் காணொளியில் இருந்து தன்னுடைய விழிகளை அவனால் திருப்பிக் கொள்ளவே முடியவில்லை.
அவன் எப்படி அவளுக்கு முத்தமிடலாம்…?
எப்படி அவளை இப்படி அணைத்து அழைத்துச் செல்லலாம் என்றெல்லாம் அவனுக்குள் கேள்விகள் தாறுமாறாக எழுந்த வண்ணமே இருக்க நிலையின்றி தவிக்கத் தொடங்கினான் அவன்.
நிச்சயம் மனிதனின் மனம் ஒரு குரங்குதான் போலும்..
இவ்வளவு நேரமும் அவளை வாட்டி வதைத்து விட்டு வந்தவனுக்கு இக்கணமே அவளைத் தன்னோடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வேகமாக எழ அதிர்ந்துதான் போனான் அவன்.
“நோ அவள் அரவிந்தனின் காதலி…”
எச்சரிக்கை செய்தது அவனுடைய மனம்.
“எனக்கு மோஹியை பிடிச்சிருக்கு…” என தன் மனதிற்கு புரியும் படி அழுத்திக் கூறினான் அவன்.
“நோ ஷர்வா… இதெல்லாம் சரியா வராது… உன்னோட முக்கியமான நோக்கமே நம்ம ரெட் பெல் டைமண்ட்டை கண்டுபிடிக்கிறது மட்டும்தான்… வேற எதுலயுமே நீ உன்னோட கவனத்தை சிதற விடக்கூடாது..
இன்னும் ஒரு மாசத்துல அந்த டைமண்ட் எப்படியாவது உன்னோட கைக்கு கிடைச்சாகணும்..
நார்வேல நடக்கப்போற டைமண்ட் எக்சிபிஷன்ல மட்டும் நம்ம ரெட் ரீபெல் இடம் பிடிக்கலைன்னா எல்லாமே சொதப்பிரும்… அந்த எக்சிபிஷனுக்கு முன்னாடி எப்படியாவது நீ நம்ம டைமண்ட்டை கண்டுபிடிக்கணும்.. அதுக்கு அப்புறமா அவளைப் பத்தி திங்க் பண்ணலாம்…” என தனக்குத்தானே அறிவுரையை கூறி அதை அழுத்தமாக புத்தியில் ஏற்றிக் கொண்டவன் தன் அலைபேசியில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை அனைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
ஆனால் உணர்வுகளில் தோன்றிய அழுத்தம் மட்டும் அவனுக்கு சிறிதும் குறைந்த பாடே இல்லை.
வெகு சிரமப்பட்டு அவளைப் பற்றி எழுந்து கொண்டிருந்த சிந்தனைகளை திசை திருப்பியவன் யார் தங்களுடைய வைரத்தை திருடியிருக்கக்கூடும் என்ற வகையில் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான்.
இப்படியான சிந்தனைகள் எல்லாம் அவனுக்கு பலரின் மீது சந்தேகத்தை விதைக்கும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இவர் தான் திருடியிருக்க கூடும் என எண்ண முடியாது மீண்டும் தன் தலையை இறுகப் பற்றிக் கொண்டான் அவன்.
பேங்க் லாக்கரை விட பத்திரமாக பாதுகாக்கப்பட்டு அவனுடைய வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அந்த வைரம் பதித்த கிரீடமோ மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரம் தங்களுடைய குலதெய்வ கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக வெளியே கொண்டு வரப்படும்.
அது தெரிந்த யாரோ ஒருவன்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து அன்று பூஜைக்காக வெளியே எடுத்து வந்தபோது அதை திட்டம் போட்டு அதைப் போலவே போலி கிரீடத்தை வைத்து விட்டு நிஜத்தை திருடி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தன்னையே நொந்து கொண்டான் அவன்.
அவன் மட்டும் அன்று பூஜை நடக்கும் போது இருந்திருந்தால் நிச்சயம் இந்த குளறுபடி நிகழ்ந்திருக்க விட்டிருக்கவே மாட்டான்.
நடந்து முடிந்ததைப் பற்றி இனி நொந்து கொள்வது தவறு… அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவன் எப்படியாவது வைரத்தையும் அதைத் திருடியவனையும் கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணியவாறு அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“யார்டா நீ…? யார் நீ….? நீ ஆணா பொண்ணா..? தெரிஞ்சவனா தெரியாதவனா ஐ டோன்ட் க்நோ… பட் என்கிட்ட உன்னோட கை வரிசையக் காட்டினதுக்கு நீ ரொம்ப வேதன படப்போற.. என்னோட பரம்பரை பொக்கிஷத்தை தொலைச்சிட்டு நான் எந்த அளவுக்கு டென்ஷன்ல இப்போ அழைஞ்சுகிட்டு இருக்கேனோ அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தான் ஆகணும்..
நீ யாருன்னு நான் கண்டுபிடிக்கும் போது மரண பயம்னா என்னன்னு நான் உனக்கு காட்றேன்… என்னோட பொருளுக்கு ஆசைப்படுறவனுக்கு என்ன தண்டனைனு உன்னைப் பார்த்து இந்த உலகம் கத்துக்கட்டும்.” என தனக்குள் வஞ்சத்தோடு கூறிக் கொண்டான் ஷர்வா.
யார் அந்தத் திருடன்…?
இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருக்கக் கூடும்..?
வைரத்தை விற்று விட்டு அளவு கடந்த பணத்தை வாறி இறைத்து பண மேட்டின் மீது படுத்திருக்க கூடுமோ..?
ஆம் அவன் மேட்டின் மீதுதான் படுத்திருந்தான்.
பண மேடு அல்ல.
அது குப்பை மேடு..!!