அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 24🔥🔥

5
(10)

பரீட்சை – 24

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

கனவில் நினைத்தது 

கை கூட வில்லை

என்று 

கவலை கொள்ளாமல் 

கிடைத்ததை ஏற்று  

களித்திருக்கும் 

மகளை

பெற்ற நானும் 

பெரும் 

பாக்கியசாலி..

 

யாரோ மிரட்டி

அவள் செய்த

தவறுக்காய்

யோசிக்காமல் 

பூமகள் அவளை 

தண்டித்து 

துன்புறுத்திய 

யுவன் அவனை

 

சந்தித்து பேசி

செய்தது 

பிழையென

விளங்க வைத்து

அருமை

மகளுக்காய் 

வாதாடும்

முடிவோடு

தேடி சென்றேன்

முரடன் அவனை..

 

#################

 

மகள் எனும் தேவதை…!!

 

தேஜூவை ராகிங் செய்தவள் கன்னத்தில் ஐந்து விரலும் பதியுமாறு ஒரு அறை விழுந்திருந்தது…

எதிரே அருண் நின்றிருந்தான் ருத்ரமூர்த்தியாய்…!!

 

“ஏய்.. உன் பேர் என்ன..? ஹான்..மித்திலாவா.. நித்திலாவா..?” 

 

புருவத்தை நீவியபடி யோசித்தவன் “ஏதோ ஒன்னு.. இருந்துட்டு போகுது.. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா.. அந்த பொண்ணு கிட்ட என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண சொல்லி இருப்பே.. நீ ராகிங் பண்ணு… இல்ல.. ஜாகிங் பண்ணு.. என்னவோ பண்ணி தொலை… ஆனா என்னை இந்த மாதிரி சீண்டற வேலை வச்சுக்கிட்ட.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. ஜாக்கிரதை” 

 

தன் சுட்டு விரலை நித்திலாவின் முகத்துக்கு நேரே காட்டி அவளை கண்களாலேயே எரித்து பொசுக்கி விடுவது போல் முறைத்து விட்டு சென்றான் அருண்..

 

நித்திலா இன்னும் கோபமாக தேஜூவின் பக்கம் திரும்பி முறைக்க அவள் தன் கன்னத்தை கையால் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து “என்னடி.. கிண்டலா? அவன் என்னை அறைஞ்சதுக்கு நீ கன்னத்தில கையை வச்சிட்டு இருக்க?” என்று கேட்க அப்போது கன்னத்தில் இருந்து கையை எடுத்துக் காட்டினாள் தேஜூ.. அவள் கன்னத்திலும் அருணின் ஐந்து விரலும் பதிந்து இருந்தது..

 

தான் அடி வாங்கி இருந்தாலும் அவள் கன்னத்தில் அருணின் கைவிரல் பதிவை பார்த்தவள் உடனே குபுக்கென சிரித்தாள்..

 

“ஓ.. ஏற்கனவே உன் கன்னத்தை பஞ்சர் பண்ணிட்டானா?” 

 

அவள் நக்கலாய் சிரித்து கேட்க “ஆமா மேடம்.. நான் அங்க போயி நின்னு ஐ லவ் யூ சொன்ன அடுத்த நிமிஷம் அவர் படிச்சுட்டிருந்த புக்கை மூடி வச்சுட்டு “என்னை யாருன்னு உனக்கு தெரியுமா? என் பேர் உனக்கு தெரியுமா?”ன்னு கேட்டாரு..” 

 

அவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல.. “ம்ம்ம்.. அப்புறம்.. என்ன ஆச்சு? அதுக்கு நீ என்ன சொன்ன?” கதை கேட்கும் ஆர்வத்தோடு கேட்டாள் நித்திலா..

 

“வேற என்ன சொல்லுவேன் மேடம்..? நான் எனக்கு தெரியாதுன்னு தான் சொன்னேன்” என்று அவள் இழுக்க “மேல சொல்லு..” என்றான் நித்திலாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த சரண்..

 

“உடனே என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வச்சாரு.. அதுக்கப்புறம் “என் பேரே தெரியலைங்குற.. அப்ப யார் சொல்லி இந்த வேலை பண்ற? உனக்கு சொந்தமா அறிவு இல்லையா? யார் என்ன சொன்னாலும் செஞ்சிடுவியா?”ன்னு கேட்டு இன்னொரு அடி கொடுக்க வந்தார்.. இன்னொரு அடி விழப்போகுதுன்னு பயந்து நான் கண்ணை இறுக்க மூடிட்டு நீங்கதான் என்ன அனுப்பிச்சிங்கன்னு உங்க பக்கம் கை..ய கா…ட்டிட்டேன்..” தயங்கி தயங்கி சொன்னவளை அப்படியே எரித்து விடுவது போல் பார்த்தாள் நித்திலா..

 

“அவன் கேட்டா நீ சொல்லிடுவியா? நானா தான் வந்து சொன்னேன்னு சொல்ல வேண்டியது தானே?” 

 

 “அது எப்படி மேடம்.. எனக்கு அவர் யாருன்னே தெரியாது.. நானா போய் எப்படி அவர்கிட்ட ஐ லவ் யூ ன்னு சொல்லுவேன்?” என்று கேட்டாள் தேஜூ..

 

அதற்குள் அவளுடைய இன்னொரு பக்கம் உட்கார்ந்திருந்த சார்மி என்ற பெண் “இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு.. அப்புறம் அங்க போயி எங்களை போட்டு கொடுத்துட்டு வந்துரு..” என்று சொன்னவள் “இவ செஞ்ச வேலைக்கு இவளை என்ன பண்ண வைக்கலாம் நித்தி?” என்று கேட்டாள்..

 

“ம்ம்ம்ம்.. போ.. நீயும் போயி அதோ ஒருத்தி சைக்கிள் ஓட்டிட்டு இருக்கா பாரு.. அவளோட சேர்ந்து இன்னும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டிட்டு அப்புறம் கிளாசுக்கு போ..” என்று சொன்னாள் நித்திலா.. 

 

அவள் நண்பர்கள் புடை சூழ அங்கிருந்து கிளம்பியவள் போகும்போது திரும்பி பார்த்து “நாங்க போயிட்டோமே.. இப்படியே கிளாசுக்கு போயிடலாம்னு நினைச்சுறாத.. இந்த கிளாஸ் முடிஞ்சு அரை மணி நேரம் கழிச்சு நான் வந்து பார்ப்பேன்.. நீங்க ரெண்டு பேரும் இப்படியே சைக்கிள் ஓட்டிட்டு இருக்கணும்.. நான் வந்து சொன்னப்புறம் தான் நீங்க கிளாசுக்கு போகணும்.. புரியுதா?” என்று கேட்டவளிடம் “புரிகிறது..” என்பது போல் தலையாட்டினாள் தேஜு..

 

அந்த பெண்ணின் பக்கத்தில் சென்று தானும் காற்றில் மிதிவண்டி ஓட்டுவது போல் செய்ய அந்தப் பெண் தாங்க முடியாமல் சிரித்தாள்..

 

“சாரிங்க.. நான் உங்களை பார்த்து சிரிச்சேன்னு தானே நீங்க இப்ப என்ன பாத்து சிரிக்கிறீங்க?” 

 

 தேஜு பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க “அதுக்காகவும் தான்.. ஆனா என் சிரிப்புக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு.. அந்த நித்திலா காலையிலிருந்து ஃபர்ஸ்ட் இயர்  ஜாயின் பண்ற ஃப்ரஷர்ஸை ரேக் பண்ணி பாடா படுத்திகிட்டு இருக்கா.. நான் வரும்போது எனக்கு முன்னாடி இன்னும் இங்க ரெண்டு பசங்களும் மூணு பொண்ணுங்களும் உட்கார்ந்து இதே மாதிரி என்ன என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க.. நீ அடி வாங்கினாலும் அவளுக்கு வாங்கி வச்ச பாரு.. ஒரு அடி.. என்னா அடி…? அடியா அது..? இடி..!! எனக்கு அப்படியே உச்சியில இருந்து பாதம் வரைக்கும் குளுந்து போச்சு.. பேச்சா பேசுறா அவ.. காலையிலிருந்து அவ பேசினதெல்லாம் கேட்டு என் காதுல ரத்தமே வந்துருச்சு.. எனக்கு முன்னாடி ரேக் பண்ணின பசங்க எல்லாம் இப்பதான் கெஞ்சி கூத்தாடி கிளாசுக்கு போனாங்க.. அவங்க போயி என்னை இன்னும் பத்து நிமிஷத்துல ரிலீஸ் பண்ணிடுவாங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.. சரியா வந்து நீ மாட்டிக்கிட்ட.. ஐயோ பாவம்.. கன்னம் எப்படி சிவந்து போச்சு.. பலமான அடியோ?” போலியாய் பாவம் பார்ப்பது போல் முகம் சுருக்கி உதட்டை பிதுக்கினாள் அந்த பெண்..

 

“ஆமா.. அவர் உருவத்தை பார்த்த இல்ல.. அந்த உயரத்துக்கு அவர் அடிச்சாருன்னா இதுவே கம்மிதான்.. நான் ஏதோ கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கறதுனால அழாம இருக்கேன்” என்று சொன்னவள் “ஆமா.. உன் பேர் என்ன?” என்று கேட்டாள்..

 

“ஆமா நம்ம பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கோம்ல..? இன்ட்ரடியூஸ் ஆகல.. பை த வே ஐயம் சுமிதா அலையஸ் சுமி..தேஜஸ்வினி தானே உன் பேரு..? ஷார்ட்டா உன்னை எப்படி கூப்பிட?” என்று கேட்டாள் சுமி..

 

“தேஜூன்னு கூப்பிடலாம்” என்று இருவரும் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்திவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. தேஜு தன்னை பற்றி சொல்ல சுமி அவளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் தேஜூவிடம்..

 

சுமி அவள் தாய் தந்தையுடன் கொடைக்கானலில் இருந்தாள்.. அவளுக்கு ஒரு அண்ணனும் இருந்தார்.. அண்ணன் பெயர் ராஜ் திலக் என்றாள்.. அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.. ஆனால் அவர்கள் பாட்டன் காலத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே இருந்ததால் தமிழ் அவள் நாவில் சரளமாய் விளையாடியது.. படிப்பில் ரொம்பவும் ஆர்வம் இல்லாததால் கஷ்டப்பட்டு நிறைய பேருடைய சிபாரிசை பயன்படுத்தி இந்த கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்ததாக சொன்னாள்..

 

“ஆமா.. நீ எந்த குரூப் எடுத்து இருக்க?” 

 

 “பிஎஸ்சி மேத்ஸ் தான்.. ஆனா எனக்கு மேத்ஸே வராது.. எங்க அப்பாக்கும் அண்ணனுக்கும் ரொம்ப நல்லா மேத்ஸ் வரும்.. நீயே சொல்லு.. அவங்களுக்கு நல்லா மேத்ஸ் போட வந்தா அவங்க தானே மேத்ஸ் குரூப் எடுத்து படிக்கணும்.. ஆனா அவங்களுக்கு நல்லா மேத்ஸ் போட வருதுங்கறதுக்காக என்னை மேத்ஸ் குரூப்ல சேத்ததுல என்ன நியாயம் இருக்கு? ஏதோ இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்க்காம அதுவரைக்கும் இந்த மாதிரி ஆர்ட்ஸ் காலேஜ்ல செத்தாங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டுக்கிட்டேன்..” சுமி அயர்வான பாவனையோடு பேசிக் கொண்டு இருந்தாள்..

 

“கவலைப்படாதே.. நானும் மேத்ஸ் குரூப் தான்.. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தானே இருக்க போறோம்.. நான் உனக்கு மேத்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன்..” 

 

“ரொம்ப எல்லாம் வேண்டாம்… நான் பாஸ் பண்ற அளவுக்கு நீ சொல்லி கொடுத்தா போதும்..” 

 

உடனே பளிச்சென புன்னகைத்தவள் “நீ நல்லா ஸ்கோர் பண்ணுற மாதிரி  சொல்லி கொடுக்கிறேன்” என்றாள் தேஜு..

 

அப்போதுதான் ஏதோ நினைவு வந்தவள் போல் சுமி, “ஐயோ என்ன ரெண்டு பேரும் இப்படி உக்காந்துட்டு இருக்கோம? அந்த ராட்சசி வந்து பார்த்தான்னா அவ்வளவுதான்.. நாள் ஃபுல்லா இப்படியே சைக்கிள் மிதிக்க வச்சிருவா.. வா.. இன்னும் அவ சொன்ன டைமுக்கு பத்து நிமிஷம் இருக்கு.. இந்த பத்து நிமிஷம் சைக்கிள் மிதிச்சிட்டு க்ளாஸ்க்கு போற வழியை பார்க்கலாம்..” என்றவள் தேஜூவுடன் சேர்ந்து மீண்டும் காற்றில் மிதி வண்டி ஓட்ட ஆரம்பித்தாள்…

 

அன்று வகுப்பில் நல்லபடியாக நேரம் சென்றது தேஜூவுக்கு.. மாலை வீட்டிற்கு வந்தவள் உள்ளே நுழைய அவளைப் பார்த்த அழகப்பன் புருவத்தை சுருக்கி “கன்னத்துல என்னம்மா? யாரோ அடிச்சா மாதிரி இருக்கு?” கொஞ்சம் கவலையுடனும் பதட்டத்துடனும் கேட்டார்..

 

“ஐயையோ.. அப்பா பாக்கறத்துக்குள்ள ரூமுக்குள்ள ஓடிடணும்னு நினைச்சேனே.. பார்த்துட்டாரே..” என்று நினைத்தவள் “அது ஒன்னும் இல்லப்பா.. அது..” என்று இழுக்கவும் “எந்த பொய்யும் சொல்லி சமாளிக்கலாம்னு நினைக்காத தேஜூ.. உண்மையா என்ன நடந்தது? சொல்லு..” என்றார் அழகப்பன் தீர்க்கமாக..

 

“சொல்றேன் பா..” 

 

 கல்லூரியில் நடந்த அத்தனையும் சொன்னாள்..

 

“இதுவரைக்கும் நானே உன் மேல கை வச்சதில்லை.. என்ன தைரியம் இருந்தா அந்த பையன் உன் மேல கை வைப்பான்? நாளைக்கு நான் வரேன்.. உங்க காலேஜுக்கு.. அவனை என்ன பண்றேன் பாரு..”

 

 அழகப்பன் கோவமாக சொல்ல “அப்பா.. அதெல்லாம் வேணாம் பா.. நான் பார்த்துக்குறேன் பா.. இனிமே அவனை மீட் பண்ணவே மாட்டேன்.. ” தேஜூ சமாளிக்கும் விதமாக சொன்னாள்..

 

“ஆனா அவன் மேல முழு தப்பும் சொல்ல முடியாது தேஜு.. ரேகிங் பண்றதாவே இருக்கட்டும்.. அவங்க யார்கிட்டயாவது போய் ஐ லவ் யூ சொல்லுன்னா போய் சொல்லிடுவியா? அந்தப் பையன் என்ன மனநிலையில் இருந்தானோ? நீ அப்படி சொன்னதும் அவனுக்கு அவ்வளவு கோவம் வந்திருக்கு.. ஏதாவது காரணம் இருக்கும்.. நீயும் யாரோ சொல்றாங்கன்னு சொல்லி கண்ணை மூடிட்டு போய் சொல்லி இருக்க கூடாது.. எதிர்த்து கேள்வி கேட்டு இருக்கணும்.. ஆனாலும் அதுக்காக இப்படி அடிக்கறது.. அதுவும் பொம்பள புள்ளையை அடிக்கிறது.. ரொம்ப தப்பு.. அதுக்காகவாவது அந்த பையன் கிட்ட வந்து நான் பேசணும்..” என்றார் அழகப்பன்..

 

பெருமூச்சு விட்டவள் “ஐயோ இந்த பிரச்சனை ஏன் இவ்வளவு பெரிதாக ஆகிறது?” என்று நினைத்து கவலைப்பட்டாள்..

 

அதை பார்த்த அழகப்பன் “நீ ஒன்னும் கவலைப்படாதே.. நான் அவனை ஒன்னும் திட்ட மாட்டேன்.. அவன் கிட்ட சாந்தமா பேசி பொண்ணுங்க மேல கை வைக்க வேண்டாம்னு சொல்லுவேன்.. அவ்வளவுதான்.. அதுக்கப்புறம் நீ அந்த சுமி பொண்ணை பத்தி சொன்னியே.. ரொம்ப சுவாரசியமா இருக்கா அவ.. ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா..” 

 

 “ஆமாம்பா.. அவ பார்த்த உடனே ஒட்டிக்கிட்டா என்னோட..” சுமியைப் பற்றி அன்று நடந்தது முழுக்க மேலும் மேலும் கண்கள் விரித்து சொல்லிக் கொண்டிருந்தாள் தேஜு..

 

தன்னால் பொறியியல் கல்லூரியில் படிக்க முடியவில்லை என்று ரொம்பவும் வருத்தத்தோடு இருப்பாளோ என்று நினைத்த அழகப்பனுக்கு அவள் அவ்வளவு மகிழ்ச்சியாய் பேசியது சந்தோஷத்தையே வரவழைத்தது.. சிரித்துக் கொண்டே அவளை பார்த்தவர் அவள் பேசி முடிக்கும் வரை அவள் கதையை முழுதாக கேட்டார்.. 

 

மறுநாள் காலையில் தேஜுவோடு கிளம்பி கல்லூரிக்கு சென்றார் அழகப்பன்.. தேஜுவோடு அவர் உள்ளே நுழைய தேஜூவின் கண்ணில் முதலில் பட்டவள் நித்திலா..  

 

“அப்பா.. அவதான் நித்திலா… நேத்து என்னை ரேகிங் பண்ணவ..” 

 

 அவள் மெதுவாக சொல்ல அழகப்பன் நேரே அவளிடம் சென்றார்..

 

“அம்மா நித்திலா..” 

 

அவர் அழைக்க தன் கூட்டாளிகளோடு மரத்தடியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி பேசிக் கொண்டு இருந்த நித்திலா ஒரு அலட்சிய பார்வையோடு அவர் பக்கம் திரும்பினாள் .. 

 

“யார் நீ?” என்பது போல் அவள் பார்த்த பார்வைக்கு “நான் தேஜூவோட அப்பா.. நீ ராகிங் இவங்க கூட எல்லாம் ஃப்ரெண்டாகறதுக்காக பண்றேன்னா அதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லை.. நீ தேஜூவை சைக்கிள் மிதிக்க சொன்னேன்னு சொன்னா.. அந்த மாதிரி நீ ராகிங் பண்றதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா தெரியாத பையன் கிட்ட போயி ஐ லவ் யூ ன்னு சொல்ல சொல்றது அவ்வளவு நல்லா இல்லமா.. அதனால என்ன விளைவுகள் வரும்னு தெரிஞ்சும் நீ அப்படி சொல்லி இருக்கே.. என்னால இன்னைக்கு போய் உங்க பிரின்சிபல் கிட்ட உன்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணி இருக்க முடியும்.. ஆனா நான் அதை பண்ண விரும்பல.. நீயும் தேஜுவும் நல்ல நண்பர்களா இருக்கணும்ன்னு தான் நான் நினைக்கிறேன்.. இனிமே இந்த மாதிரி முகம் சுளிக்கிற மாதிரி ராக்கிங் எல்லாம் பண்றதை நிறுத்திக்கோம்மா” என்றார் அழகப்பன்..

 

நித்திலாவோ அவருக்கு எதுவும் பதில் சொல்லாமல் திமிராய் அவர் பக்கம் ஒரு பார்வை செலுத்திவிட்டு தேஜுவை முறைத்து விட்டு அங்கிருந்து எப்போதும் போல அவள் நண்பர்கள் புடை சூழ நகர்ந்து சென்றாள்..

 

 “அங்கிள் அவ எல்லாம் திருந்தவே மாட்டா.. பாருங்க.. நீங்க இவ்வளவு தூரம் எடுத்து சொல்றீங்க.. எங்கேயாவது உங்க பேச்சைக் காது கொடுத்தாவது கேக்குறாங்களா?” சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் வந்தாள் சுமி..

 

“ஆமா நீ தான் சுமியாம்மா?” என்று கேட்டார் அழகப்பன்.. 

 

“பரவாயில்லையே கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே.. அந்த அளவுக்கு என்னை பத்தி சொல்லி வெச்சி இருக்காளா தேஜூ?” 

 

 “அவ சொன்னதிலேயே உன்னை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு‌… நீயும் அவளை மாதிரி எனக்கு ஒரு பொண்ணு தான் மா..” அழகப்பன் சொல்லி அவள் கன்னத்தை வாஞ்சையாக வருடினார்..

 

“தேங்க்ஸ் அங்கிள்.. ஏ.. தேஜூ.. அங்க பாரு.. நேத்து நீ ஐ லவ் யூ சொன்ன அந்த பையன் அதே மரத்தடியிலே.. அதே மாதிரி நிக்கறான்..இவன் கிளாசுக்கு போக மாட்டானா..? இந்த மரத்தடியிலேயே தான் இருப்பானோ..?” 

 

அப்போது “அது யார்?” என்று அந்த பக்கம் பார்த்த அழகப்பன் நேரே நடந்து அருணிடம் சென்றார்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!