சற்று நேரத்தில் சுற்றம் புரிந்து சுயத்திற்கு திரும்பியவள் எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னிடம் அப்படிக் கூறிச் சென்றிருப்பான் என்ற கோபம் மேலோங்க தோட்டத்தில் இருந்து வீட்டின் உள்ளே வேகமாகச் சென்றாள்.
‘நான்தான் அரவிந்தனைக் காதலிக்கிறேன்னு அவனுக்கு நல்லாவே தெரியுமே… அப்புறம் நீதான் என்னோட மனைவி… இதுதான் கல்யாணம்னா நான் என்ன பண்றது..? எல்லாமே நாடகம்னு சொல்லித்தானே பண்ணினேன்…” என கோபத்தில் கொந்தளித்தவாறே வேகமாக அவன் தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றவள் கதவைக் கூடத் தட்டாது அவனுடைய அறைக் கதவைத் திறந்து கோபத்தோடு உள்ளே நுழைய,
அங்கே குளிப்பதற்காக இடுப்பில் துவாலையைக் கட்டியவாறு நின்ற ஷர்வாவோ திடீரென தன்னுடைய அறைக்குள் நுழைந்த மோஹஸ்திராவைக் கண்டு புருவம் உயர்த்தினான்.
ஏதோ ஒரு வேகத்தில் உள்ளே நுழைந்தவள் வெற்று மேனியில் துவாலையை மட்டும் கட்டி அறையின் நடுவே நின்ற ஷர்வாவைக் கண்டதும் அதிர்ந்து போனாள்.
தான் என்ன பேச வந்தோம்..?
எதற்காக கோபமாக வந்தோம் என்பதே மறந்து விட தன்னுடைய பார்வையைத் தழைத்துக் கொண்டவள் அடுத்த கணமே அந்த அறையை விட்டு வெளியே செல்வதற்காகத் திரும்ப ஷர்வாவோ சட்டென நெருங்கி வந்து அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டான்.
பிடித்தது மட்டுமல்லாமல் அந்த அறையின் கதவையும் பூட்டி விட்டு அந்தக் கதவின் மீது சாய்ந்து நின்று விட அவளுக்கோ உள்ளம் பதறியது.
“என்ன மேடம் இவ்வளவு அவசரமா என்னைத் தேடி வந்துட்டு எதுவுமே சொல்லாம திரும்பிப் போனா என்ன அர்த்தம்..?” என அவன் சிறு சிரிப்போடு வினவ,
தன் விழிகளை ஒரு கணம் இறுக மூடித் திறந்தவள்,
“ப்ச்… கைய விடுங்க…” எனச் சீறியவாறு தன்னுடைய கையை உதறி விடுவித்துக் கொண்டாள்.
கரத்தை விடுவித்த கணமே அறையை விட்டு வெளியேறுவதற்காக கதவை திறக்க முயற்சி செய்ய அவனோ வழி விட முடியாது என்பதைப்போல இன்னும் நன்றாக கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டான்.
“உங்க கூட பேசுறதுக்கு எனக்கு எதுவுமே இல்லன்னு அர்த்தம் போதுமா..? போங்க முதல்ல போய் ட்ரஸ்ஸ போடுங்க…”
“ஏன்… இதுக்கு என்னடி குறைச்சல்..?”
“என்னது டியா..?” என அவனை முறைத்துப் பார்த்தவள்
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு…” என்றாள்.
அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட சிரமப்பட்டு சிரிப்பதை கட்டுப்படுத்தி விட்டு அவளையே இமைக்காது பார்க்க அவளுக்கோ உடல் படபடக்கத் தொடங்கியது.
“மேடம் இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்கப் போறீங்க..?” என்றவன் சட்டென அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்து வந்து படுக்கையில் அமர வைக்க,
அவளோ பதறி அவனுடைய கரத்தை வேகமாக தட்டி விட்டு படுக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டாள்.
“நான் தொடாம வேற யார்டி உன்னைத் தொட முடியும்…?” என அவன் கேட்டதும் அந்தக் கேள்வியில் அவளுக்கோ முகம் மாறியது.
“ஷர்வா போதும்… எல்லை மீறிப் பேசாதீங்க… உங்களுக்கும் எனக்கும் நடுவுல எந்த உறவும் கிடையாது…” என அவள் கோபத்தில் கத்த,
‘என்ன சொன்ன..? உனக்கும் எனக்கும் நடுவுல எந்த உறவும் கிடையாதா..?” என அழுத்தமாகக் கேட்டவன் அவளை நெருங்கி அவளுடைய பின்னந்தலையில் தன்னுடைய கரத்தைப் பதித்து அவனுக்கு மிக அருகாமையில் அவளை இழுத்துக் கொண்டவன் தன்னுடைய மற்றைய கரத்தால் அவளுடைய கழுத்தை வருட அவளுக்கு உடல் வெட வெடத்துப் போனது.
கழுத்தை வருடியவாறே தான் கட்டிய தாலியை அவன் ஆடைக்கு வெளியே எடுத்துப் போட அவளோ நடுங்கித்தான் போனாள்.
“இதைவிட வேற என்ன உரிமைடி வேணும்..?”
“இ…இதெல்லாம் பொய்… இதெல்லாம் நாடகம்…என்னைப் பொறுத்தவரை இது வெறும் கயிறுதான்…” என கத்தியவளுக்கு கண்ணில் இருந்து கண்ணீரே வழிந்து விட அவளுடைய விழி நீரை அழுத்தமாக துடைத்து விட்டவன்,
“இது வெறும் கயிறு இல்லடி… நமக்கான பந்தம்… இனி தொடரப் போகும் வாழ்க்க முழுக்க எனக்கு நீயும் உனக்கு நானும் மட்டும்தான்.. இதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது…” என்றான் அவன்.
“நீங்க நினைக்கிற எதுவுமே நடக்காது… இதெல்லாம் அரவிந்தன் வரும் வரைக்கும்தான்…”
என கோபமாக அவள் கூற “நான்தான் சொல்றேன்ல எவன் வந்தாலும் என்ன எதுவுமே பண்ண முடியாது… நான் நினைக்கிறதுதான் நடக்கும்…”
‘உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா…? நானும் அரவிந்தும் காதலிக்கிறோம்…”
‘நானும்தான் உன்ன லவ் பண்றேன்…”
“ச்சீய் உங்களுக்கே இப்படி சொல்ல அசிங்கமா இல்லையா…?”
“இதோ பார் மோஹி… இதுல நான் அசிங்கப்பட என்ன இருக்கு…? உன் மேல எதுக்காக எப்படி எப்போ காதல் வந்திச்சுன்னு சத்தியமா எனக்குத் தெரியாது…
அன்னைக்கு என்னை மீறி உன்கிட்ட நெருக்கமா நடந்துக்கிட்டது என்னோட தப்புதான்… அதுக்காக அன்னைக்கே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்…
அன்னையோட உன்கிட்ட இருந்து விலகியும் வந்துட்டேன்.. என்னதான் என்னோட மனசுல உன் மேல காதல் இருந்தாலும் கூட அதை நான் எங்கேயுமே எதுக்குமே வெளிப்படுத்தவே இல்ல… ஆனா காதல் வேற கல்யாணம் வேற… விலகிப் போன என்ன நீயேதான் கல்யாணம் பண்ணிக்க சொன்ன…
நீ லவ்வர்னு சொன்னியே அவனும் என்கிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கதான் சொன்னான்…
லவ் பண்ணப்போ விட்டுக்கொடுத்தேன்தான் ஆனா கட்டின பொண்டாட்டிய விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் கோழை கிடையாது…” என இரும்பாக இறுகி ஒலித்தது அவனுடைய குரல்.
‘எக்ஸ்கியூஸ் மீ… நீங்க யாரு என்ன விட்டுக் கொடுக்கிறதுக்கும் விட்டுக் கொடுக்காம இருக்கறதுக்கும்…? என்னோட வாழ்க்கை என்னோட முடிவு… நான் யார் கூட வாழனும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்… அரவிந்தன் வந்ததும் நீங்க கட்டின தாலிய கழட்டி எறிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன்…” என அவள் கூறிக் கொண்டே போக சட்டென அவளுடைய கழுத்தை அழுத்தமாக பிடித்து இறுக்கினான் அவன்.
“என்ன சொன்ன..? கம் அகைன்…? தாலிய கழட்டி எறிவியா…? உன்னால முடிஞ்சா பண்ணிப் பாரு… அடுத்த நிமிஷம் உன்ன மட்டும் இல்ல நீ லவ் பண்றேன்னு சொன்ன அவனக் கூட உயிரோட விடமாட்டேன்…
நான் ஒன்னும் மஞ்சமாக்கான் கிடையாது… யார் என்ன சொன்னாலும் கேட்டுட்டு போறதுக்கு… நான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன்னா உனக்காக மட்டும்தான்… ஆல்ரெடி அப்பாவ பறி கொடுத்துட்டு வேதனைல இருக்கிற உன்ன கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன்.. என்னோட அமைதியை தப்பா எடை போட்டுடாத.. என் பொறுமைக்கும் அளவு இருக்கு அஸ்திரா…” என்றவன் அவள் வலியில் துடிப்பதைக் கண்டு சட்டென தன்னுடைய கரத்தை விலக்கினான்.
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன் திடீரென ஆக்ரோஷமாக மாறி கர்ஜித்ததில் அவளுக்கோ உடலும் உள்ளமும் உறைந்தே போனது.
எந்த பதிலும் கூறாமல் முட்டைக் கண்களை விரித்து அவனை அவள் அதிர்ந்து பார்த்த வண்ணம் நிற்க அந்தப் பார்வையில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் அவளுடைய இடையில் கரம் பதித்து தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.
“சாரிடி…. இன்னொரு தடவை என்னை கோபப்பட வைக்காத மோஹி ப்ளீஸ்…” என அவன் மென்மையாகக் கூற இவளுக்கோ ஆத்திரமாத்திரமாக வந்தது.
அவனைத் தள்ளி விட்டவள்,
“என்னத் தொடக்கூடாது….” என சீறினாள்.
அவனோ அதை சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது அவளை இழுத்து வந்து அந்த அறையில் இருந்த கண்ணாடியின் முன்பு நிறுத்தியவன்,
“நீ ரொம்ப அழகுடி..” என்றான்.
“ரொம்ப அழகா இருக்க… ஆனா குங்குமம் வச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்கும்…” என அவளுடைய நெற்றி வகிட்டைப் பார்த்த வண்ணமே கூற இவளுக்கோ இன்னும் கோபம் பெருகியது.
“இங்க குங்குமம் கிடையாது… இருந்தாலும் வைக்க மாட்டேன்..” எனச் சீறி விட்டு அவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க அக்கணம் மீண்டும் அவளை இழுத்து தன்னுடைய கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளுடைய தலையில் இருந்த சிறிய ஹேர் பின்னை உருவி அதை தன்னுடைய பெருவிரலில் அழுத்திக் குத்த அவனுடைய பெரு விரலில் இருந்தோ உதிரம் கசியத் தொடங்கியது.
“ஓ காட் என்ன பண்றீங்க..? ரத்தம் வருது…” என அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க அந்த உதிரத்தை எடுத்து அவளுடைய நெற்றி வகிட்டில் அழுத்தமாக வைத்தவன்,
“இப்போ பெர்ஃபெக்ட்டா இருக்கு…” எனக் கூற அவளோ விக்கித்துப் போனாள்.
“ஐ ஹேட் யூ ஷர்வா..” என்றவளின் கண்ணீர் கன்னத்தைத் தொட அவனை வேகமாக தள்ளிவிட்டு அவனுடைய கையணைப்புக்குள் இருந்து வெளியே வந்தவள் அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள்.
“அடியே புருஷன் இருக்க இடத்துலதான் பொண்டாட்டி தூங்கணும்… நைட் இந்த ரூமுக்கு வந்துரு… இல்லன்னா நான் அங்க வரேன்…” என அவன் கத்தியது காற்றோடு கரைந்தது.