அங்கயற்கண்ணி மண்டபத்தின் வாசலிலே அமர்ந்து விட்டார். செந்திலுக்கு அவமானமாக இருந்தது. அவனை கோபப்படுத்தும் விதமாக, “மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னுபோச்சே…. இனிமே செந்திலோட வாழ்க்கை அவ்வளவுதான்….” என்று ஒரு சிலர் அவன் மீது இரக்கம் காட்டுவது போல, அசிங்கப்படுத்தினர்.
இன்னும் சிலர், “யாருன்னே தெரியல்லையே, அவன் பாட்டுக்கு வந்தான், அந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டி கூட்டிட்டு போயிட்டானே.. இனிமேலாவது அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்….” என்று ஒரு சிலர் பேசினர்.
அங்கிருந்த கழுத்தில் போட்டிருந்த மாலையை கழட்டி எறிந்து, கதிரைகளை உதைத்து தள்ளி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியே போனான் செந்தில். அங்கயற்கண்ணியும் காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். ஊர் மக்களும் நடந்ததை பேசிக் கொண்டு, அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
இங்கே காரை பெரும் யோசனையோடு ஓட்டிக் கொண்டு இருந்தான் யுவராஜ். நான் இந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. அப்பிடி இருக்க, இவ என்னை தெரியும்னு சொல்றா….?” என யோசித்தவனுக்கு போன் பண்ணினார் சந்திரமோகன்.
“ஹலோ சார், ரொம்ப நன்றி.. அந்த பொண்ணோட வாழ்க்கையையே காப்பாத்திட்டீங்க….”
“சார் நீங்க என்னை தப்பா எடுத்துக்க வேண்டாம்…. நான் இவங்களை காப்பாத்தத்தான் வந்தேன்… ஆனால் அவங்க தப்பா பேசினதாலதான், நான் தாலி கட்ட வேண்டியதாயிடுச்சி…..”
“இல்லை சார், நான் அப்படி எல்லாம் நினைக்கலை… கெட்டதிலையும் ஒரு நல்லது நடந்திருக்கு சார்…. நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்கல….”
“கேளுங்க சார்….” என்றான் யுவராஜ்.
“இல்லை சார், அவங்க தப்பா பேசினதால கல்யாணம் பண்ணிட்டீங்க…. அந்த பிள்ளையை உங்ககூட கூட்டிட்டு போறீங்க சார், பாதியிலேயே கைவிட்டுட மாட்டீங்களே…..” என்று தயங்கித் தயங்கி கேட்டார்.
அவரின் கேள்விக்கு தயக்கம் இன்றி சட்டென்று பதில் சொன்னான் யுவராஜ். “நீங்க என்னை நம்பலாம்… தாலி கட்டும் போது என் வாழ்க்கை முழுவதும் இவகூடத்தான்னு நினைச்சிதான் கட்டினேன். கவலைப்படாதீங்க அவ நினைச்ச மாதிரி அவளை ஒரு டாக்டராக்கிறன்… கார்த்தியாயினி இனிமேல் என்னோட பொறுப்பு…”
யுவராஜ் சொன்னதைக் கேட்டதும் நெகிழ்ந்து விட்டார் சந்திரமோகன். “ரொம்ப சந்தோசம் சார்…. நான் பிறகு பேசுறன்….” என்றவர் போனை வைத்தார்.
யுவராஜ்ஜூம் போனை வைத்துவிட்டு திரும்பி பார்த்தான், இன்னும் மயக்கம் தெளியாது படுத்திருந்தாள் கார்த்தியாயினி. முதலில் அவளை எழுப்ப வேண்டும் என நினைத்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, கையில் தண்ணீர் போத்தலோடு வந்து பின்பக்க கதவை திறந்தான்.
படுத்திருந்தான் கார்த்தியாயினியை தூக்கி சீட்டில் சாய்த்து வைத்தான். அவளருகில் இருந்தவன் போத்தலில் இருந்த தண்ணீரை தனது கையில் எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் அவளிடம் அசைவு தெரிந்தது.
கண்களை மெல்ல திறந்தாள் கார்த்தியாயினி. கண்களை திறந்தவள் முதலில் பார்த்தது யுவராஜ்ஜைத்தான். அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், “இப்போ ஓகேவா…? பயப்படாத நீ பாதுகாப்பாக இருக்க….” என்றான்.
அவனைப் பார்த்தவள், “எனக்கு ரொம்ப பசிக்குது மாமா..” என்றாள். அவளது மாமா என்ற அழைப்பு அவனை ஏதோ செய்தது. அவள் பசி என்றதை கேட்ட யுவராஜ்க்கு ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்கின.
அவளை இதமான பார்வை பார்த்து விட்டு,”பக்கத்தில ஏதாவது கடையில சாப்பாடு வாங்கித் தர்றேன் சரியா…?” என்றான் சிறுபிள்ளையிடம் கேட்பதை போல.. அவளும் தலையசைக்க, முன்னால் வந்து காரை எடுக்க போனவன், “நீ முன்னாடி வந்து உட்காரு….” என்றான். கார்த்தியாயினியும் மறுப்பு சொல்லாது முன்னால் வந்து இருந்தாள்.
ஒரு பத்து நிமிட பயணத்தின் பின் ஒரு ஹோட்டல் தென்பட்டது. காரை பார்க் பண்ணிவிட்டு அவள் பக்கம் வந்து கதவை திறக்க, அவளும் வெளியே வந்தாள்.
கீழே இறங்கிய கார்த்தியாயினி அந்த ஹோட்டலை தனது கண்களை விரித்து பார்த்தாள். அவள் பார்ப்பதை பார்த்த யுவராஜ்க்கு சிரிப்பு வந்தது. பின் போகலாம் என்றவாறு அவன் முன்னால் நடக்க, இவளோ தடுமாறியவாறு நடந்தாள். அவளது தடுமாற்றத்தை பார்த்தவன், அவளது தோளின் மீது கையை போட்டு அவளுடன் நடக்க, அவளும் தயக்கமின்றி அவனது இடது கையை தனது கையால் பிடித்தபடி நடந்தாள்.
உள்ளே சென்று ஒரு மேசையில் அமர்ந்தான். “உனக்கு என்ன வேணும்னு சொல்லு….”
“நான் இப்பிடி ஹோட்டல் வர்றது இதுதான் முதல் தடவை. இங்க என்ன சாப்பிட இருக்கும்…..?” என்றாள்.
“இங்க எல்லா வகையான சாப்பாடும் கிடைக்கும். உனக்கு என்ன பிடிக்கும்….?”
“எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாது…. அத்தை சொல்றதை சமைப்பேன். அதையே சாப்பிடுவன்….” என்றாள்.
அதைக் கேட்ட யுவராஜ்க்கு ஒரு மாதிரியாகிவிட்டது. “சரி எனக்கு நெய் தோசை ரொம்ப பிடிக்கும்… ரொம்ப நல்லா இருக்கும்… நீ அதை சாப்பிடுறியா…? இல்லை,தோசை, இட்லி, இடியாப்பம் ஏதாவது சொல்லட்டா…? “
“எனக்கு நெய் தோசையே போதும்…” என்றாள்.
“சரி…” என்றவன் வெயிட்டரை அழைத்து, இருவருக்கும் நெய் தோசை கொண்டு வரச் சொன்னான். சிறிது நேரத்தில் அவன் கொண்டு வந்த நெய் தோசையை இருவருக்கும் பரிமாறினான்.
“சாப்பிடு…..” என்றான். கார்த்தியாயினிக்கு சாப்பாட்டை பார்த்ததும் மேலும் பசி எடுத்தது. நெய்யின் வாசமும் மூக்கை துளைக்க ஒரு கட்டு கட்டினாள். அவள் பசியில் வேகமாக சாப்பிடுவதைப் பார்த்தவனுக்கு அங்கயற்கண்ணி மீது கோபம் கரைபுரண்டது.
இருவரும் சாப்பிட்ட பின் கார்த்தியாயினியிடம், “நீ வாஷ்ரூம் போகணுமா… ?” என்றான்.
அவனை தயக்கத்துடன் பார்த்தவள், “போகணும்.. ஆனால் பயமா இருக்கு.. நீங்க கூட வர்றீங்களா…?” என்றாள்.
“கேர்ள்ஸ் வாஷ்ரூமுக்கு நான் எப்படி வர முடியும்….? நீ போ நான் இங்க நிற்கிறன்.. எதுக்கும் பயப்படாத என்னை மீறி உனக்கு எதுவும் நடக்காது சரியா…”
“ம்..” என்றவள் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள்.
அவள் சென்ற சில நிமிடங்களில் யுவராஜ்க்கு அழைத்தான் அமுதன்.
“சொல்லு அமுதா….”
“என்ன சொல்லு அமுதா….? எங்கடா இருக்க நீ காலையிலேயே உன் வீட்டுக்கு வந்தன்… உன்னை காணலை..”
“இந்த காலையில என்ன தேடி வர்ற அளவுக்கு என்ன நடந்திச்சி…?”
“என்ன நடந்திச்சினா கேட்கிற…? நேற்று காலையில காணாமல் போன பொண்ணோட டெட்பாடி, சிட்டி ஓரத்தில இருக்கிற குப்பைகளோட குப்பையா இருக்கு.. அந்த பொண்ணை கொலை பண்ணி, ஒரு மூட்டையில கட்டி போட்டுட்டு போயிருக்கானுங்க.…”