சூழ்நிலை மறந்து தன்னை மீறி விழிகளை மூடி அமைதியாக அமர்ந்தவளின் கன்னங்களைப் பிடித்திருந்தவன் அவளுடைய இதழ்களை வேகமாக நெருங்கினான்.
இன்னும் சற்று அவன் குனிந்தால் கூட இருவருடைய உதடுகளும் ஒன்றோடு ஒன்று மோதி முத்தத்தை பரிமாறிக் கொள்ளக்கூடும்.
ஆனால் இதழ்களை பட்டுப் படாமல் உரசும் தூரத்தில் அவன் நிறுத்திக் கொள்ள அவளுடைய இமைகளோ படபடக்கத் தொடங்கின.
சின்ன சின்ன வரிகள் நிறைந்த அவளுடைய தடித்த உதடுகளை ஆழ்ந்து பார்த்தவனுக்கோ அவற்றை அக்கணமே கவ்விச் சுவைக்க வேண்டும் என்ற வெறியே எழுந்தது.
கன்னத்தை பிடித்திருந்த கரத்தின் பெரு விரலோ மெல்ல கீழே இறங்கி அவளுடைய அழுத்தமான உதடுகளை வருடிக் கொடுக்க அவளுக்கு உடல் வெடவெடத்தது.
விழி மூடித் தன் தொடுகையில் தன்னை மறந்து அமைதியாக இருப்பவளைக் கண்டு சிறு காதல் நகையைச் சிந்தியவன் அவளை முத்தமிடாமலேயே விட்டு விலக இவ்வளவு நேரமும் விழி மூடி அவனுடைய முத்தத்திற்காக காத்திருந்த நம் நாயகிக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘கடவுளே என்னவாயிற்று எனக்கு…? பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதோ..?’ என்று எண்ணியவள் வேகமாகக் காரை விட்டு இறங்கி அரவிந்தனைப் பார்ப்பதற்கு உள்ளே சென்றாள்.
மனம் குற்ற உணர்ச்சியில் குறுகுறுத்தது.
அரவிந்தன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றவள் அங்கே உடலில் கூரான கத்தியால் கிழித்த காயங்களுடனும் தலையில் கட்டோடும் படுத்துக்கிடந்த அரவிந்தனைக் கண்டு துடித்துப் போனாள்.
“அ.. அர்வீஈஈ…? ஐயோ என்னடா இது..? இப்படிப் போட்டு அடிச்சு வச்சிருக்காங்க…” என அவள் அழ அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டவனுக்கோ விழிகளில் நீர் கசிந்தது.
அக்கணம் அழுது கொண்டிருந்த மோஹஸ்திராவின் தோளைச் சுற்றி தன்னுடைய கரத்தைப் போட்டு அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“டோன்ட் க்ரை மோஹி…” எனக் கூற,
அரவிந்தனின் விழிகளோ அவளை அணைத்துக் கொண்ட ஷர்வாவின் கரங்களில் அழுத்தமாகப் படிந்தன.
அதுவும் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து தாலியுடன் வந்து நிற்பவளைக் கண்டு சற்றே அதிர்ந்துதான் போனான் அரவிந்தன்.
“சாரி அரவிந்தன் இங்க நடந்ததெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்… உங்கள கொல்ல ட்ரை பண்ண வீரா டைமண்ட்டோட தப்பிச்சிட்டான்னு கேள்விப்பட்டேன்..
பட் என் பொண்டாட்டியோட அப்பா இறந்ததுனால அங்க அப்படியே எல்லாத்தையும் பாதில விட்டுட்டு என்னால இங்கே வர முடியாம போயிடுச்சு… இப்போதான் அங்க கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் செட் பண்ணிருக்கேன்… அதனாலதான் உங்களைப் பார்க்க இன்னைக்கு வந்தோம்…” என அவன் கூற,
என் பொண்டாட்டி என்ற வார்த்தையில் அரவிந்தனின் விழிகளில் சிவப்பேறியது.
உடல் இறுகியது.
“இட்ஸ் ஓகே…” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன் மோஹஸ்திராவைப் பார்த்தான்.
“ஹேய் பே… பேபி டால்… நீ அழாத… எனக்கு எதுவும் ஆகலைல்ல அப்புறம் ஏன் அழுகிற…?”
“எ… எப்படிடா அழாம இருக்க முடியும்…? உடம்பு முழுக்க கத்தியால கிழிச்சு வச்சிருக்கானே அந்தப் பாவி…”
“சரி விடு பேபி… கஷ்டப்பட்டு யார் திருடினாங்க கிரீடம் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சாச்சு… இனி அவன் இந்த உலகத்தோட எந்த மூலைக்குப் போய் மறைஞ்சாலும் என்கிட்ட இருந்து அவனால தப்பிக்க முடியாது.. நான் சொன்ன மாதிரியே உங்க டைமண்ட்டை இன்னும் கொஞ்ச நாள்ல உங்ககிட்ட ஒப்படைச்சிடுவேன் மிஸ்டர் ஷர்வா…” என்றான் அரவிந்தன்.
“பேபி உன்னோட அப்பாவுக்காகத் தானே இந்தக் கல்யாண நாடகம் எல்லாம் நடந்துச்சு…. அப்பாவும் இப்போ இல்ல… சொத்தும் உன்னோட பேருக்கு மாறிடுச்சு… அதுக்கப்புறம் எதுக்காக இந்தத் தாலியை நீ சுமந்துகிட்டு வந்திருக்க…? அப்புறம் நெத்தி வகிட்டுல இந்த குங்குமம் வேற… வை…? இதெல்லாம் அவாய்ட் பண்ணி இருக்கலாமே…?” என பொறுக்க முடியாமல் அரவிந்தன் கூறி விட இப்போது அவனைக் கொல்லும் வெறியோடு பார்த்தான் ஷர்வாதிகரன்.
“எக்ஸ்கியூஸ் மீ… என்னோட பொண்டாட்டி நான் கட்டின தாலிய சுமக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை..? முட்டாள் தனமா பேசுறத நீங்க நிறுத்தினா எல்லாருக்கும் ரொம்ப நல்லது… முக்கியமா உங்களுக்கு ரொம்ம்ம்பபபப நல்லது….” என ஷர்வா கூற அவனை முறைத்துப் பார்த்தான் அரவிந்தன்.
“அவ என்னோட காதலி… அது மறந்துட்டு நீ பேசாத…” என்றான் அரவிந்தன்.
“வாட் உன்னோட காதலியா…? தப்பு தப்பு தப்பு… நான் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அவ உன் காதலியா இருந்தா.. டாட்… அது பாஸ்ட்… இப்போ அவ என்னோட மனைவி… சோ எது பேசுறதா இருந்தாலும் யோசிச்சு நிதானமா பேசு… ஒரு வார்த்தை எல்லை மீறினாக் கூட அதுக்கான பதிலடி ரொம்ப மோசமா இருக்கும்…” என ஷர்வா கிட்டத்தட்ட மிரட்டுவதைப் போலக் கூற கொதித்துப் போனான் அரவிந்தன்.
இருவருடைய உரையாடலிலும் திணறிப் போனாள் அவள்.
“ஐயோ தயவு செஞ்சு ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க… அர்வி இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… முதல்ல உங்க உடம்ப பாருங்க…” என பதற்றத்தோடு கூறினாள் அவள்.
“என்ன பாத்துக்கிறது எல்லாம் இருக்கட்டும்… உனக்கு நான் முக்கியமா இல்ல அவன் கட்டிருக்க தாலி முக்கியமா…?” என அரவிந்தன் நேராகவே கேட்டுவிட அதிர்ந்து போனாள் அவள்.
திணறிப் போனவள் தன் காதலனை கை காட்டும் நோக்கில் கையை உயர்த்த உயர்ந்த அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்ட ஷர்வாவோ அவளுடைய கன்னத்தை அழுத்தமாகப் பற்றி தன்னுடைய உதட்டருகே கொண்டு வந்தவன் அவள் சுதாரிக்கும் முன்பு அவளுடைய இதழ்களில் அழுத்தமான முத்தத்தை பதித்திருந்தான்.
அவள் திணறிப் பதறி விலக முயற்சிக்க, சற்று நேரத்தில் அவனாகவே அவளை விடுவித்தான்.
அடுத்த நொடி அவமானம் தாங்க முடியாது அவள் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிச் சென்று விட இப்போது அரவிந்தனும் ஷர்வாவும் ஒருவரை ஒருவர் கோபத்தோடு பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்.
“தப்பு பண்ற ஷர்வா.. நீ ரொம்ப பெரிய தப்பு பண்ற…”
“இட்ஸ் ஓகே கெட்டவனாவே இருந்துட்டுப் போறேன்…” எனச் சிரித்தான் அவன்.
“அவ எனக்கு வேணும்… அவள விட்ரு…”
அடுத்த கணம் அவனுடைய கரமோ படுக்கையில் கிடந்தவனின் கழுத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது.
“லிசின்… என்னோட பொண்டாட்டிய பத்தி இப்படி எல்லாம் இனி பேசினா உன்னோட உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது… உன்னோட காதல் அத்தியாயம் 4 நாளைக்கு முன்னாடியே முடிஞ்சு போயிடுச்சு…
இப்போ இருக்கிறவ இந்த ஷர்வாதிகரனோட மனைவி… என்னோட பொண்டாட்டி…. அவளைத் தொடுறதோ அவளப் பத்தி நினைக்கிறதோ இனி இருக்கக் கூடாது.. அவள் வேணும்கிற வார்த்தைக் கூட உன் வாயிலிருந்து இனி வரவே கூடாது.. அவள நீ நெனச்சுக் கூடப் பாக்க கூடாது.. புரியுதா…?” என கிட்டத்தட்ட அந்த அறையில் இருந்து கர்ஜித்தவன் அடுத்த நொடியே எழுந்து வெளியே வந்து விட அங்கே அவனுடைய காரில் சாய்ந்து கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மனைவி.
அவள அருகே நெருங்கி வந்தவன் “இப்போ எதுக்காக அழுதுகிட்டு இருக்க..? கார்ல ஏறு… போகலாம்…” எனக் கூற அடுத்த நொடி அவனை மிகவும் வேகமாக ஓங்கி அறைந்திருந்தாள் மோஹஸ்திரா.
“ச்சீ… உன்னால எப்படி இவ்வளவு கேவலமா நடந்துக்க முடிஞ்சுது…? அவ்வளவு பேர் முன்னாடி அரவிந்தன் முன்னாடி எப்படி நீ என்ன கிஸ் பண்ணலாம்…?”
“அப்போ அரவிந்தன் இல்லனா நான் உன்ன கிஸ் பண்ணலாமா…?”
“வாய மூடு ஷர்வா… சே… உனக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது…? உன்னைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு.. ஐ ஹேட் யூ ஷர்வா…. ஐ ஹேட் யூ… உன்ன மனசால வெறுக்கிறேன்… என்ன தொட்ட உன்னோட கைய உடைக்கணும் போல இருக்கு… அத வெட்டி நெருப்புக்குள்ள போடணும் போல வெறியா வருது….” என விம்மி வெடித்தவாறு அழுகையோடு கூறியவள் சுற்றி நிற்பவர்களெல்லாம் அவர்களை பார்க்கத் தொடங்க வேதனையோடு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஒரு நொடி தன் விழி மூடி அமைதியாக வீதியில் நின்றவன் தன்னை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டு காருக்குள் வந்து அமர்ந்து கொண்டான்.
அவன் உள்ளமும் உடலும் தகித்தது.
எதுவும் பேசாது அரை மணி நேரம் காரில் அமைதியாக அமர்ந்திருந்தவன் அவள் அழுது முடித்து கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்ததன் பின்னர் காரை தன்னுடைய வீட்டை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.
ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை
அவளோ வீதியை வெறித்துப் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ஷர்வாவின் இல்லம் வந்து விட, அவனுடைய அன்னையோ இருவரையும் வரவேற்று ஆரத்தி சுற்றினார்.
“உள்ளே வாம்மா…” என அவர் அழைக்க அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தாள் மோஹஸ்திரா.
“கண்ணா என்னப்பா ஏன் உன்னோட முகமே இவ்ளோ டல்லா இருக்கு..? ஏதாவது பிரச்சனையா…?” என அவனுடைய வாடிப் போன முகத்தைக் கண்டு பதறியவாறு அவனுடைய அன்னை கேட்க அவளுக்கோ அங்கே நொடி நேரம் கூட நிற்க முடியவில்லை.
“ஆன்ட்டி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமா….. ரொம்ப டயர்டா இருக்கு.?” எனக் கேட்டாள் அவள்.