தண்ணீரை வாங்கி குடிக்கும் அவனைப் பார்த்தவள், “ஏன் மாமா என்னை எழுப்பியிருக்கலாம்ல நான் பரிமாறியிருப்பேன்…..” என்றாள்.
அதற்கு அவன், “பார்சல் சாப்பாடு தானே, நானே சாப்பிடுவன்… நீ தூங்கிட்டு இருந்த உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணும்….” என்றான். அவனைப் பார்த்து சிரித்தவள். “தூங்கிட்டு தான் இருந்தேன் மாமா… அப்புறம் சத்தம் கேட்டதா, அந்த சத்தத்தில முழிப்பு வந்திட்டு…. அதை விடுங்க மாமா… நீங்க போன வேலை முடிஞ்சிதா…?” என ஆர்வத்துடன் கேட்டாள் கார்த்தியாயினி.
அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு கைகழுவி வந்தவன், “போன வேலை சிறப்பா முடிஞ்சிது….” என்றான். “சூப்பர் மாமா…” என கைதட்டி குதூகலித்தாள்.
புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், “சரி வா தூங்கலாம்… நாளைக்கு ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும்…” என்றவன் கைகளை பிடித்துக் கொண்டு, “என்னையும் கூட்டிட்டு போவீங்களா மாமா….” என்று கேட்டவளுக்கு ஆமாம் என பதிலளித்தவாறு அறைக்கு கூட்டிச் சென்றான்.
கார்த்தியாயினி எந்தவித தயக்கமும் இல்லாமல் கட்டிலின் ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள். யுவராஜ்க்குத்தான் சிறிது தயக்கமாக இருக்க, தலையை கோதிக் கொண்டு நின்றிருந்தான். “மாமா என்ன நின்னுகிட்டு இருக்கிறீங்க…? வாங்க, வந்து தூங்குங்க மாமா….” என்றாள் கார்த்தியாயினி. அவள் அழைத்த பிறகுதான் அவனது இடத்தில் சென்று படுத்தான் யுவராஜ்.
இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித படபடப்பாக இருந்தது. கண்களை மட்டும் மூடிக் கொண்டு தூங்குவது போல படுத்திருந்தனர். மெல்ல தனது ஒரு கண்ணை மூடிக் கொண்டு மறு கண்ணை திறந்த கார்த்தியாயினி, யுவராஜைப் பார்க்க அவன் நன்றாகத் தூங்குவது தெரிந்தது. மெல்ல மெல்ல தனது கையை அவனருகில் கொண்டு சென்றவள் அவனது இடது கையை பிடித்தாள். யுவராஜ்க்கு அவள் தனது கையை பிடிப்பது தெரிந்தாலும் பேசாமல் படுத்திருந்தான். அவனது கைக்குள் தனது கையை போட்டுக் கொண்டவள், “மாமா பயமா இருக்கு அதனால கையை பிடிச்சிருக்கிறன்… தப்பா எடுத்துக்காத…” என்றாள்.
அவள் இப்படி கேட்டதும் யுவராஜ்க்கு சிரிப்பு வந்தது. “சரி தப்பா எடுத்துக்க மாட்டேன் தூங்கு…” என்றான். அவனது சத்தம் கேட்க, திரு திருவென விழித்த கார்த்தியாயினி அவனது முகத்தைப் பார்க்க, சிரித்தவன் “பயமா இருந்தா சொல்ல வேண்டியதுதானே… இங்க பாரு மா நீ என்னோட மனைவி… எங்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… எதையும் போட்டு குழப்பிக்காமல் தூங்கு….” என்றவனது கையை நன்றாக இறுக்கிப் பிடித்தபடி தூங்கிப் போனாள் கார்த்தியாயினி.
……….……….……….……….……….
ரகுவரன் யுவராஜ் தன்னை அறைந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தான். அதை நினைக்க நினைக்க கோபம் வந்தது. டேய் என்னையே அடிச்சிட்டல உன்னை சும்மா விடமாட்டேன். என சபதமிட்டுக் கொண்டு இருந்தவன், தனது அறையில் இருந்த பாரினுள் நுழைந்து கொண்டான்.
அதே நேரத்தில் யமுனா தனது முதல் மகன் யுவராஜைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தார். பலமுறை அவரை கூப்பிட்ட ஜனார்த்தனன், அவர் அருகில் வந்து, தோளைத் தொட்டார். கணவனைப் பார்த்தவர், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.
“இத்தனை நேரமா கூப்பிட்டுட்டு இருக்கிறன்…. அது கேளாத அளவுக்கு என்ன யோசிச்சிட்டு இருக்க….?” என்றவரைப் பார்த்த யமுனா எதுவும் பேசவில்லை. அவரது அமைதியே ஜனார்த்தனனுக்கு அவரது சிந்தனையை உணர்த்தியது. “நீ அந்த கேடு கெட்டவனையே யோசிச்சிட்டு இரு….” என்றவர் அங்கிருந்து சென்றார்.
…………….……….……….……….………
எப்போதும் போல் நேரத்திற்கு எழுந்து விடும் கார்த்தியாயினிக்கு இன்றும் தூக்கம் கலைந்து விட எழ முயன்றாள். அவளை எழ விடாதவாறு அவளது இடையில் தன் கையை போட்டு தன்னோடு அவளை அணைத்தபடி தூங்கிக் கொண்டு இருந்தான் யுவராஜ். தனது கண்களை நன்றாக கசக்கிவிட்டு பார்க்க, யுவராஜ் தெரிந்தான். அச்சோ மாமா தூங்கும் போதும் ரொம்ப அழகா இருக்க” என்றவள் அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சியவள், மெல்ல அவனது கையை எடுத்து விட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து விட்டு வந்து, சமையலறைக்குச் சென்று டீ போட ஆரம்பித்தாள். சில நிமிடங்களில் டீ போட்டுக் கொண்டு, இருவருக்கும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள். டீ கோப்பைகளை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, யுவராஜ் அருகில் அமர்ந்தாள். அவனது நெற்றியில் விழுந்த முடிகளை கையால் கோதும்படி உந்திய தனது மனசை அடக்கியவள், “மாமா.. மாமா….” என்று அவனது தோளைத் தட்டினாள்.
அவளது அழைப்பில் கண்களை திறந்தவன், அதிர்ச்சி அடைந்தான். குளித்து விட்டு, நெற்றியில் குங்குமமும் கழுத்தில் புதிய தாலியுடன் தன்னை எழுப்பும் மனைவியை விழி இமைக்காமல் பார்த்தான். அவனது பார்வை அவளுக்கு எதையோ உணர்த்த, தலை குனிந்து கொண்டாள்.
“மாமா டீ…..” என்று டீயை எடுத்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்தவன், , “டீ ரொம்ப நல்லா இருக்கு கார்த்தியாயினி.. ” என்றான். அவள் சிரித்தாள்.
“சரி நான் போய் குளிச்சிட்டு ரெடியாகிறன்…. நீயும் ரெடியாகு வெளியில போயிட்டு வந்திடலாமா….” என்றான். அவள் அவனைப் பார்க்க, “என்ன மா…?” என்று கேட்டவனிடம், எங்க போறம் மாமா… ?” என்றாள்.
“அதை போற வழியில சொல்றன்…” என்றவன் குளிக்கச் சென்றான். அவன் உள்ளே சென்றதும், நைட் அவன் வாங்கி வந்த சுடிதாரை அணிந்து கொண்டு, தலை முடியை பின்னிவிட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துக் கொண்டு நின்றவள். அருகில் வந்து நின்றான் யுவராஜ்.
“என்ன மேடம் கண்ணாடியையே பார்த்திட்டு நிற்கிறீங்க…?” என கேட்டான். தலை சீவியபடி. கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தவள், “மாமா கண்ணாடி பார்த்து ரொம்ப நாளாச்சு. அதுதான் பார்த்தான்…”
“ஏன் அங்க கண்ணாடி இல்லையா…?”
“இருக்கு மாமா. ஆனால் என்னை பார்க்க விட மாட்டாங்க… நீ எதுக்கு கண்ணாடி பார்க்கிற கறுப்பா இருக்கிற உனக்கு கண்ணாடி பார்க்கிறதுதான் ஒரு கேடுனு திட்டுவாங்க….” என்றவள் விழியோரம் கண்ணீர் கசிந்தது.
தன் புறம் அவளை திரும்பியவன், விழியோரம் கசிந்த கண்ணீரை துடைத்து விட்டான். “இங்க பாரு மா… நீ கறுப்பா இருந்தாலும் களையாக இருக்க, உன்னோட மனசு குழந்தை மனசு டா… அப்பிடி இங்க யாருக்கு இருக்கும். அதெல்லாம் மறந்திடு….” என்றான்.
கதையின் நகர்வு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க பட்டூஸ்…