அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள், “நான் இனிமேல் அதை யோசிக்க மாட்டேன் மாமா….” என்றாள்.
“வாலு….. வாலு….” என்று தலையில் கொட்டியவனிடம் பழிப்பு காட்டி விட்டு ஹாலுக்கு சென்றாள்.
அப்போது, “யுவா…” என்று கூப்பிட்டவாறு வந்தான் அமுதன். அவனைப் பார்த்தவள், “உள்ளே வாங்க அண்ணா…” என்றாள்.
“அடடா கார்த்தியாயினியா….? இன்னைக்குதான் மா இந்த வீட்டுக்கு நான் வரும்போது உள்ள வாங்கனு ஒரு சத்தம் காதில தேனா பாயுது….” என்றான்.
“ஏன் சாரை நான் உள்ள வாங்கனு கூப்பிட்டதில்லையோ…?” என்றவாறு வந்த யுவராஜ்ஜை பார்த்து ஈஈஈஈ என்றான். அதற்கு, “சிரிக்காத சகிக்கல….” என்ற யுவராஜின் தோளில் அடித்தான்.
“கார்த்தியாயினி இது அமுதன் என்னோட உயிர் நண்பன்…..” என்று அவளிடம் அறிமுகப்படுத்தினான். அமுதனை பார்த்து, “அண்ணா உங்க நண்பருனு எனக்கு தெரியும். உங்க றூம்ல இருந்த போட்டோல பார்த்தன்….” என்றாள்.
அதைக் கேட்ட அமுதன், “பரவாயில்லையே யுவா…. உன்னைப் போலவே உன்னோட மனைவியும் புத்திசாலிதான்….” என்றான்.
இருவரும் சிரிக்க, அமுதன் தன்னிடம் இருந்த ஒரு கவரை அவனிடம் கொடுத்தான். அதை வாங்கிய யுவராஜ். “சரிடா நீ ஸ்டேஷன் போ… எனக்கு வெளிய வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வந்திடுறன்…” என்றான். அதற்கு தலையசைத்து விட்டு, கார்த்தியாயினியிடம் சொல்லிவிட்டு அமுதன் சென்றான்.
கார்த்தியாயினியை அழைத்துக் கொண்டு காரை எடுத்தான். எதுவும் பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு வருபவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தான். அப்போது அங்கே ஒரு முருகன் கோயில் தெரிய, அதைப் பார்த்தவள், “மாமா, மாமா காரை நிறுத்துங்க…..” என்றாள்.
அவள் கத்திய சத்தத்தில் பயந்து காரை நிறுத்தியவன், “என்ன கார்த்தியாயினி….?” என்று கேட்க, கையால் வெளியே தெரிந்த கோயிலைக் காட்டியவள், “கோயிலுக்கு போயிட்டு போகலாம் மாமா….” என்றாள்.
கோயிலுக்கு செல்வதில் நம்பிக்கை இல்லாத யுவராஜ், கார்த்தியாயினிக்காக போகலாம். என்று காரை பார்க் பண்ணி விட்டு கோயில் அருகே வந்தான். கார்த்தியாயினி அங்கிருந்த பூக் கடையில் அர்ச்சனை தட்டும் பூவும் வாங்க, இவன் பணத்தை கொடுத்து விட்டு அவளருகில் வர, அவனிடம் பூவை கொடுத்தவள், “மாமா பூ வச்சி விடுறீங்களா…..?” என கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டவளிடம் இருந்த பூவை வாங்கி அவளுக்கு வைத்து விட்டான்.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடு யுவராஜ் கையை பிடித்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். அங்கே மூலஸ்தானத்தில் வீற்றிருந்த முருகனைப் பார்த்து கைகூப்பினாள். அர்ச்சகரிடம், யுவராஜின் ராசி நட்சத்திரத்தை அவனிடம் கேட்டு சொல்லி, தன்னுடையதையும் கூறி விட்டு கண்களை மூடி, “இந்த வாழ்க்கை எப்போதும் எனக்கு நிலைத்து நிற்க வேண்டும்…..” என வேண்டிக் கொண்டாள். யுவராஜ் அவள் வேண்டிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
அர்ச்சகர் வந்து விபூதி கொடுக்க அதை வாங்கி, முதலில் யுவராஜ்க்கு வைத்து விட்டு, தானும் வைத்துக் கொண்டாள். பின் குங்குமத்தை வாங்கி அதை யுவராஜ் பக்கம் நீட்டினாள். அவன் என்ன என்று கேட்க, வச்சிவிடுங்க மாமா. என்றாள்.
அதுதான் நெற்றியில குங்குமம் இருக்கே என்றவனைப் பார்த்து, “அதில இருக்கு மாமா…. ஆனால் என்னோட தலை வகிட்டில குங்குமம் இல்லையே…. அங்கே குங்குமம் வைக்க உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கு… நீங்கதான் அங்க குங்குமம் வச்சி விடணும்…. இப்போ மட்டுமல்ல எப்பவும்….” என்றாள். அவன் தனது விரல்களால் குங்குமத்தை எடுத்து கார்த்தியாயினியின் தலை வகிட்டில் குங்குமத்தை வைக்க, ஒரு நிமிடம் சிலிர்த்தது அவளது உடல். பின் கோயிலை சுற்றி வணங்கி விட்டு வெளியே வந்து காரை எடுத்தான்.
கோயிலில் இருந்து வந்தவர்கள் நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்று காலை உணவை முடித்துவிட்டு, பயணத்தை ஆரம்பித்தனர். கார்த்தியாயினி, தான் புதிதாக பிறந்ததை போல உணர்ந்தாள். ஒரு இடத்தில் கார் நிற்க, திரும்பி யுவராஜ்ஜைப் பார்த்தாள். அவன் இறங்கு என்றதும் கீழே இறங்கினாள்.
அவளது கண் முன்னே இருந்த பெயர்ப்பலகையை பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள். கையில் அமுதன் கொடுத்த கவருடன் வந்தவன், அவளது தோளில் கை வைத்தான். அவனைப் பார்க்க, வா என்று அவளது கைப்பற்றி அழைத்துச் சென்றான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் பின்னே சென்றாள். யுவராஜ் நேராக துர்க்கா மெடிக்கல் காலேஜ்ஜின் முதல்வர் அறைக்குள் சென்றான். யுவராஜ்ஜைப் பார்த்ததும், எழுந்த தனபாலன் (காலேஜ் அதிபர்) யுவராஜ்ஜூடன் கை குலுக்கினார். அவர் உட்கார சொன்னதும், உட்கார்ந்த யுவராஜ், அருகில் கார்த்தியாயினியையும் உட்கார வைத்தான்.
இருவரும் இருந்த பின்னர் பேச ஆரம்பித்தார் தனபாலன். “சொல்லுங்க சார் என்ன விசயமா வந்திருக்கிறீர்கள்…..? இந்த பொண்ணு யாரு….?” என்றார்.
அவரது ஆர்வம் யுவராஜ்க்கு விளங்கியது. “இவங்க மிஸ்ஸஸ் யுவராஜ்…. இவங்களுக்கு உங்க காலேஜ்ல மெடிக்கல் படிக்க சீட் வேணும்…..” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டவர், “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. வாழ்த்துக்கள் சார்…. இவங்களோட சர்டிபிகேட் பார்க்கலாமா…?” என தனபாலன் கேட்க, அதற்கு பதில் சொல்ல வந்த கார்த்தியாயினியை தடுத்தவன்.
தான் எடுத்து வந்திருந்த கவரில் இருந்த அவளது சர்டிபிகேட், மார்க்ஸ் சீட் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தான். இது எப்படி இவர்கிட்ட? என யோசித்தாள் கார்த்தியாயினி. தனபாலன் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது மார்க்ஸைப் பார்த்து வியந்தார். அதுமட்டுமல்லாமல் கார்த்தியாயினியை பாராட்டினார்.
“இவங்களோட மார்க்ஸ் எல்லாம் சூப்பர்…. இவங்க எங்களோட காலேஜ்ல படிக்கிறது எங்களுக்கு சந்தோசம்…. அடுத்த வாரத்தில இருந்து காலேஜ் ஸ்டார்ட் ஆகிடும். நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்… சார் நீங்க இந்த ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுங்க…” என்று சொல்லி ஒரு ஃபார்ம்மை யுவராஜ்ஜிடம் கொடுத்தார் தனபாலன். அதை வாங்கி ஃபில் பண்ணி அவரிடம் கொடுத்து விட்டு, சில விசயங்களை பேசிவிட்டு, வெளியே வந்தனர் இருவரும்.
கார் அருகே வந்ததும், அவனது கையை பிடித்து நிறுத்தியவள். அவன் எதிர்பார்க்காத வகையில் சட்டென்று யுவராஜ் காலில் விழுந்து விட்டாள் கார்த்தியாயினி. அவள் காலில் விழுவாள் என்று நினைக்காத யுவராஜ், அவள் காலில் விழ “ஏய் என்னடி பண்ற….? முதல்ல எழுந்திரு…. நடு ரோட்டில என்ன பண்ற கார்த்தியாயினி…?” என்றவாறு அவளை எழுப்பினான்.
அன்பு பொழியும்…..
உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்