அவள் மேலும் எதுவும் பேசுவதற்கு முன்னர் காரினுள் ஏற்றிவிட்டு மறுபக்கம் வந்து அவனும் ஏறிக் கொண்டான். அருகில் யுவராஜ் இருந்ததும் தனது கைகளை கூப்பினாள் அவன் முன்னால்.
அவளது கைகளை இறக்கி விட்டவன், “என்னமா இது….? எதுக்காக இப்படி பண்ற….?” என்றான். அவன் கேட்டதுதான் தாமதம் கண்கள் உடைப்பெடுத்தன. “டாக்டராகணும்றது என்னோட இலட்சியம் மாமா…. அது கனவாகவே போயிடுமோனு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் மாமா…. என்னோட வாழ்க்கையே முடிஞ்சிதுனு நான் நினைக்கும் போது, நீங்க வந்து என் கழுத்தில தாலி கட்டினீங்க…. அதுவே எனக்கு போதுமாக இருந்தது…. இப்போ நீங்க என்னோட இலட்சியத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறீங்க…. இதை எப்பவும் மறக்க மாட்டேன் மாமா…. இப்படி பண்ற உங்களுக்கு கைமாறா நான் என்ன செய்யப் போறன்னு எனக்கு தெரியலை….” என்றாள்.
அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அது ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக் கொள்வது போல் இருந்தது. அவளது தலையை வருடியவாறு, “இங்க பாரு கார்த்தியாயினி…. நீ என்னோட மனைவி…. ஒரு கணவனாக என்னோட கடமையைத்தான் நான் செய்தேன்…. நீ கைமாறுனு என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற…? நீ நல்லா படிச்சி டாக்டராகணும் அதுதான் முக்கியம்….” என்றான்.
“நிச்சயமா மாமா… நான் ஒரு நல்ல டாக்டராக வருவேன்….” என்றாள் கார்த்தியாயினி. அவளது நெற்றியில் முட்டியவன், “சரி இப்போ நாம உனக்கு டிரஸ் எடுக்க போகலாம்…” என்று அந்த சிட்டியில் இருந்த பெரிய மால்க்கு அழைத்துச் சென்றான்.
………………………………………………
சூரியன் ஒளிக் கதிர்கள் ரகுவரனின் அறையினுள் தாம் வந்து விட்டதை உணர்த்திய பின்னரே எழுந்தான் ரகுவரன். நைட் யுவராஜ் மேலிருந்த கோபத்தில் இவன் அதிகமாக குடித்ததன் விளைவு. தலைவலி… இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தான்.
இவ்வளவு நேரமாகியும் எழுந்து வராத ரகுவரனைப் பார்க்க வந்தார் யமுனா. அவன் இருந்த நிலையை பார்த்தவர் வேகமாக மகன் அருகே வந்தார். “ரகு என்னாச்சிப்பா….? தலைவலியா….?” என்றார்.
அவரது சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன், “ஆ.. ஆமா அம்மா… ரொம்ப தலைவலியா இருந்திச்சு.. இப்போ கொஞ்சம் பரவாயில்லை அம்மா….” என்றான்.
அவனது தலையை வருடி விட்டவர். “ரொம்ப நேரம் கண்விழிக்காத ரகு… நீயே ஒரு டாக்டர்… உனக்கு நான் சொல்லணும்னு இல்லை…. ஆனாலும் சொல்றன் உடம்பை பார்த்துக்க… சரி குளிச்சிட்டு வா நான் டிபன் எடுத்து வைக்கிறன்…” என்றுவிட்டு யமுனா சென்றார்.
ரகுவரனும் ஹாஸ்பிடல் போவதற்கு நேரமாவதை உணர்ந்து குளித்து ரெடியாகி கீழே சென்றான். அங்கே ஜனார்த்தன் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, யமுனா அவர் அருகில் நின்றிருந்தார். ரகுவரன் வந்ததும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். தந்தையும் மகனும் பேசிக் கொண்டு சாப்பிட்டனர்.
ஜனார்த்தனன் ரகுவரனிடம், “ரகு நீ ஐஸ்வர்யாவை கூட்டிட்டு போய் இன்விடேஷன் செலக்ட் பண்ணி பிரிண்ட் பண்ண கொடுத்திடு…. சீக்கிரமே மற்ற மற்ற கல்யாண வேலைகளை பார்க்கலாம்….” என்றார்.
அவனும் “சரி டாட்….” என்று விட்டு தட்டில் கைகழுவி விட்டு சென்று விட்டான். இருவருமே யமுனாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. யமுனாக்கு தன்னையே சுற்றிச் சுற்றி வந்த யுவராஜ் நினைவுக்கு வந்தான்.
……………………………….…………………சின்னக் குழந்தை முதன் முதலில் மால்க்கு வந்தால், எப்படி அங்குள்ளவற்றைப் ஆச்சரியமாக பார்க்குமோ, அது போல கார்த்தியாயினியும் பார்த்துக் கொண்டு வந்தாள். அவளைப் பார்த்து சிரித்தவாறு வந்தான் யுவராஜ்.
அந்த மாலில் உள்ள இடங்களை எல்லாம் சுற்றிக் காட்டினான். அங்கிருந்த டிரஸ் பாயிண்ட்க்கு அழைத்துச் சென்று டிரஸ் எடுக்க சொன்னான். கார்த்தியாயினி தயங்கியபடி நின்றாள். “என்ன மா டிரஸ் எடுக்க வந்திட்டு ஏன் தயங்கி தயங்கி நிற்கிற…..?” என்றான்.
அவனைப் பார்த்தவள், “மாமா நான் ஊர்ல பாவாடை தாவணிதான் உடுத்துவன்…. இது நீங்க எடுத்து கொடுத்ததனால போட்டிருக்கிறன்…. இந்த சுடிதார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…. ஆனால் எங்க ஊர்ல கல்யாணம் பண்ணவங்க புடவைதான் கட்டுவாங்க…. அதுதான் என்ன வாங்கலாம்னு குழப்பமா இருக்கு….” என்றவளது தலையை ஆட்டியவன்,
“ஏய் லூசு, உனக்கு எது உடுத்த பிடிச்சிருக்கோ அதையே எடுத்துக்க…” என்றவனது கைகளை பிடித்துக் குதித்தவள், “நெஜமாவா மாமா….?” என மீண்டும் சந்தேகத்துடன் கேட்டாள்.
“ஆமா, நீ எடுத்துக்க….” என்று யுவராஜ் சொல்லியும் அவனது கையை பிடித்துக் கொண்டு குனிந்தவாறு நின்றாள். அவளது நடுங்கும் விரல்களை அவனது விரல்களை கண்டுகொண்டன. அவளை அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைத்து அருகில் அவனும் அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும், தான் இருக்கும் இடத்தை மறந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். இத்தனைக்கும் அவளது முகத்தை அவனிடம் காட்டவில்லை. தனது தோளில் ஈரத்தை உணர்ந்தவன், அவளது முகத்தை நிமிர்த்தினான். அழுது கொண்டு இருந்தாள் கார்த்தியாயினி.
அவளது கண்ணீரை தனது கைக்குட்டையை எடுத்து துடைத்து விட்டு, “எதற்காக இந்த கண்ணீர்….? இவ்வளவு நேரமும் நல்லாத்தானே இருந்த மா….?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இல்லை மாமா. இது வரைக்கும் நான் ஆசைப்பட்டு எந்த துணியும் எடுத்தது கிடையாது… அத்தை எது எடுத்து தர்றாங்களோ அதைத்தான் போட்டுக்குவன்…. எனக்கும் துணிக் கடைக்கு போகணும் துணி எடுக்கணும்னு ஆசை இருக்கும். ஆனால் அதை அத்தையிடம் சொல்ல முடியாது…. அதுதான் ஞாபகம் வந்திச்சு. சாரி மாமா…. “
அவளது நிலமை யுவராஜ்க்கு புரிந்தது. “சரி இப்போதான் நீ டிரஸ் எடுக்க பெரிய மாலுக்கே வந்திருக்க… அப்புறம் என்ன…? வா வந்து உனக்கு பிடிச்சதை எடு…” என்று அவளது கைப்பற்றி அழைத்தான்.
அவன் பின்னால் செல்லும் போது, “மாமா எனக்கு டிரஸ் எடுக்க ஒரு மாதிரி இருக்கு…. இந்த தடவை நீங்களே எனக்கு எடுத்து கொடுங்க…. அடுத்த தடவை நான் செலக்ட் பண்ணுறன்….” என்றவளை பார்த்து, “சரி…” என்றவன் அவளுக்கு தேவையான சாரி, சுடிதார், டாப், எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்தான்.
ஒரு வழியாக அவளுக்கு எடுத்து முடிந்ததும் பில் போட சென்றவனை நிறுத்தி, அவனையும் புது ட்ரெஸ் எடுக்க வைத்த பின்னரே பில் போட விட்டாள். சரியாக மாலிலிருந்து வெளியே வரும் போது அங்கிருந்த சூழல் யுவராஜ்க்கு வித்தியாசமாகப்பட்டது. ஏதோ ஒன்று புரிந்தது. வேகமாக கார்த்தியாயினியை இழுத்துக் கொண்டு வந்து காரினுள் ஏற்றிவிட்டு, மறு புறம் வந்து ஏறி காரை எடுத்தான்.