ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2)

4
(4)

 

“என்னடி இவள் சிட்டா பறந்துட்டாள்” என்ற மிதுனாவிடம்,  “லேட்டா போனால் அவளோட சித்தி சூடு வச்சு விட்டுருமே” என்றாள் உத்ரா.

“எப்படி டீ அவளால் இப்படி இருக்க முடியுது அவளுக்கு இருக்கிற பிரச்சனையில் லவ் வேற அதுவும் ஒன் சைடு” என்று மிதுனா கூறிட , “அது தான் யாழி ,எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுக்கு என்று இருக்கிற சந்தோசத்தை இழக்க கூடாது என்று போராடுவாள்” என்ற உத்ராவும் வீட்டிற்கு கிளம்பினாள்.

அந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தனது ஸ்கூட்டரை நிறுத்தியவள் லிஃப்ட்டிற்குள் நுழைய உடன் அவனும் நுழைய அவ்வளவு தான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் ஆ வென அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவனுக்கு தான் கடுப்பாகிப் போனது.

“இப்போ ஏன் என்னையே பார்த்துக் கொண்டு இருக்க” என்று கேட்டே விட்டான் வித்யுத். “அழகை ரசிக்கனும் சார்” என்றாள் யாழிசை. “இதோ பாரு இசை” என்று அவன் ஏதோ கூற வர அதற்குள் லிஃப்ட் அவள் செல்ல வேண்டிய தளத்தில் நின்றிட, “ஸாரி சார் எதுவாக இருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு தன் வீடு நோக்கி சென்று விட்டாள்.

செல்லும் அவளைப் பார்த்தவனுக்கு கோபமும் வந்தது அதே நேரத்தில் அவள் செய்யும் செயல்களைக் கண்டு சிரிப்பும் வந்தது.

வீட்டுக்கு வந்தவன் தன் அறைக்குள் அடைந்து கொண்டான். அவனுக்கு என்று பெரிய குடும்பமே இருக்கிறது ஆனால் அவர்களுக்கு அவன் தேவை இல்லை. அவன் சில வருடங்களாகவே தனியாகத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

“என்ன டீ இது தான் வீட்டிற்கு வரும் நேரமா” என்றாள் ரோகிணி. யாழிசையின் சித்தி. “காலேஜ் விட்ட உடனே தான் வந்துட்டேனே” என்று அவள் கூறிட அவளது காதைத் திருகினாள் ரோகிணி. “ஆ ஆ அம்மா” என்று கத்தியவளிடம் , “உன் கிட்ட எத்தனை முறை டீ சொல்லுறது சித்தின்னு சொல்லாதே அம்மான்னு சொல்லுன்னு என்னை சித்தி, சித்தின்னு கூப்பிட்டு உன் அப்பாவுக்கு நான் இரண்டாம் தாரம் என்று ஊர் முழுக்க தெரிய வைக்கனும் அது தானே” என்ற ரோகிணியிடம், “நீங்க என் அப்பாவுக்கு இரண்டாம் தாரம் தானே” என்றாள் யாழிசை.

“உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி டீ ரொம்ப நாள் ஆச்சுல அதான்” என்ற ரோகிணி “ராகவ்” என்று அழைத்திட, “என்னக்கா” என்று வந்தான் ரோகிணி யின் உருப்படாத தம்பி ராகவ். “அடுப்பில் காய வைத்து இருக்கிற அந்த கம்பியை எடுத்துட்டு வா” என்றதும் அவனும் எடுத்து வந்து தன் சகோதரியிடம் கொடுத்தான்.

“ஏன் டி உனக்கு எவ்வளவு கொழுப்பு அம்மா என்று கூப்பிட சொன்னால் வேண்டும் என்றே சித்தி , சித்தின்னு கூப்பிடுற” என்று கூறிவிட்டு அவளை கீழே தள்ளி விட்டு, “ராகவ் அவளை ஓட விடாமல் பிடித்துக்கோ” என்று கூறினாள் ரோகிணி. அவனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.

“சித்தி வேண்டாம் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிட , “இப்போ கூட சித்தின்னு தானே டீ சொல்லுற” என்ற ரோகிணி  அவளது காலில் நன்றாக பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு போட்டு விட்டார்.

அவ்வளவு தான் “ஆ ஆ அம்மா ஆ ஆ” என்று அவள் கத்திட அவளை விட்டான் ராகவ். தன் அம்மாவும், மாமாவும் சென்ற பிறகு தன் சகோதரியின் அருகில் வந்தான் யஷ்வந்த்.

“அக்கா” என்று அவளை அழைத்த தம்பியைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைக்க முயன்றாலும் பாதத்தில் சூடு வைத்த காயம் கொடுத்த வலியை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கொண்டிருந்தாள் யாழிசை.

“அக்கா ரொம்ப வலிக்குதா” என்று அவளுடன் அவளது தம்பியும் சேர்ந்து அழுது கொண்டிருக்க, “ஏய் யஷ்வந்த்” என்று வந்தாள் அவனது உடன் பிறந்தவள் யாமினி.

“என்ன இவள் கிட்ட உட்கார்ந்து அழுதுட்டு இருக்க இவள் மட்டும் ஒழுங்கா அம்மாவை அம்மா என்று கூப்பிட்டு இருந்தால் அம்மா ஏன் சூடு வைக்க போறாங்க. வேண்டும் என்றே அவங்களை சித்தி, சித்தின்னு கூப்பிட்டு அவங்களை கோபம் படுத்தி விட்டு இப்போது இப்படி சூடு வாங்கி உட்கார்ந்து இருக்கிறாள்” என்று கூறினாள் யாமினி.

“அக்கா நீயும் ஏன் யாழி அக்காவை திட்டிட்டு இருக்க, அம்மா தான் இரக்கமே இல்லாமல் அக்கா காலில் இப்படி சூடு போட்டு வச்சுருக்காங்க” என்று அவன் தன் அக்காவிற்கு சப்போர்ட்டாக பேசிட, “இப்படியே இவளுக்கு ஏந்து கிட்டு பேசி அம்மாவோட கோபத்திற்கு ஆளாகி நீயும் சூடு வாங்கிடாதே யஷ்வந்த்” என்று கூறிவிட்டு யாமினி சென்று விட்டாள்.

“அக்கா அவள் கிடக்கிறாள் நீ வா” என்று தன் சகோதரியின் காலில் மருந்து போட்டு விட்டான் யஷ்வந்த்.

“யஷ் என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்ற ரோகிணியிடம் , “பார்த்தால் தெரியவில்லையா மம்மி அக்காவுக்கு மருந்து போட்டுட்டு இருக்கிறேன்” என்றான் யஷ்வந்த்.

“நீ என்ன அவளுக்கு பண்ணைக்காரனா ஏன் அந்த மகாராணி அவள் காலுக்கு மருந்து போட மாட்டாளா” என்று பற்களைக் கடித்தார் ரோகிணி.

“மம்மி அவளே பாவம் ஏற்கனவே வலியில் இருக்கிறாள்” என்று கூறிவிட்டு அவன் தன் அக்காவின் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டு இருந்தான். ரோகிணி ஏதோ சொல்ல வாயெடுக்க, “அக்காவுக்கு சூடு போட்டதை அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி விடுவேன்” என்று அவன் எச்சரிக்க வேறு வழி இல்லாமல் ரோகிணி சென்று விட்டார்.

“நீ ஏன் அக்கா அவங்க உன்னை அடிக்கிறது, சூடு வைக்கிறது எதையுமே அப்பா கிட்ட சொல்லவே மாட்டேங்கிற” என்றான் யஷ்வந்த்.

“என்னை இப்படி எல்லாம் காயப் படுத்தி அவங்க சந்தோஷப் படுறாங்க சந்தோசம் பட்டுக்கட்டும்” என்று கூறிவிட்டு அவள் எழுந்து கொள்ள , “ஏய் திமிரெடுத்த நாயே மொட்டை மாடியில் துணி காயப் போட்டியே போடி போயி எடுத்துக் கொண்டு வா” என்று ரோகிணி கத்திட அவளும் தன் காலை தரையில் வைத்திட அவ்வளவு தான் காயம் பட்ட இடத்தில் வலி உயிர் போனது.

ஆ ஆ என்று கத்தியவள் வலியை பொறுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். “அக்கா நீ இரு நான் போய் எடுத்துக் கொண்டு வரேன்” என்று யஷ்வந்த் கூறிட , “யஷ் உள்ளே போ” என்று கத்தினார் ரோகிணி. அவனோ தன் சகோதரிக்கு ஆதரவாக மேலும் ஏதோ சொல்ல வர , “யஷ் எனக்கு ஒன்றும் இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற யாழிசை மெல்ல மெல்ல காலை இழுத்து இழுத்து நடந்து மாடிப் படிகளில் ஏறினாள்.

மெல்ல மெல்ல படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தாள். நல்ல வேளையாக அங்கு யாரும் இல்லாமல் போக வலி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தாள். அவளுக்கு வலி உயிர் போனது. தன் தம்பி மருந்து போட்டு விட்டாலும் வலி குறையவே இல்லை. எங்கே ரோகிணி முன்பு கதறி அழுதாள் அதைப் பார்த்து அவள் சந்தோசம் அடைவாள் என்று அறிந்தவள் தனியாக வந்து அழுது கொண்டிருந்தாள்.

“அம்மா அம்மா வலிக்குது” என்று அவள் அழுது கொண்டிருக்க, யாரோ வரும் அரவம் கேட்டதுமே அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு வேக வேகமாக எழுந்தாள்.

“ஹலோ சொல்லுங்கள்” என்று சிரித்துக் கொண்டே யாரிடமோ போனில் பேசிக் கொண்டே வந்தான் வித்யுத் அபிமன்யு.

அவனைக் கண்டவள் புன்னகை முகத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே காயப் போட்டு இருந்த துணிகளை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்தாள்.

அவன் அவளை கண்டு கொள்ளாமல் போனில் சந்தோஷமாக யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான். அவள் தன்னை பார்க்கிறாள் என்று தெரிந்தாலும் அவன் கண்டுகொள்ளாமல்  தன் வேலையை பார்த்தான்.

“யாழி” என்று வந்த ராகவ், “எவ்வளவு நேரம் தான் துணிகளை எடுத்துட்டு இருப்ப  அக்கா உன்னை வரச் சொன்னாங்க” என்று கூறிட, “துணியை மடித்து விட்டு தானே எடுத்துட்டு வர முடியும்” என்று பற்களைக் கடித்தாள்.

அவன் வித்யுத் இருந்ததை கவனிக்க வில்லை. அவள் மட்டும் தனியாக இருக்கிறாள் என்று நினைத்து அவளை பின் புறமாக இருந்து அணைக்க வர அவளது உள்ளுணர்வு ஏதோ சொல்ல வர திரும்பியவள் பட்டென்று அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.

அவள் அறைந்த சத்தம் கேட்டு வித்யுத் திரும்பிட ராகவ்வை விரல் நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தாள்.

“இந்த மாதிரி என் கிட்ட நெருங்க நினைச்ச அப்படீன்னா உடனே என் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிக் கொடுத்திருவேன். உன் பொறுக்கித் தனத்தை என் கிட்ட காட்டின அவ்வளவு தான்” என்று எச்சரித்தவள் துணிகளை எடுத்துக் கொண்டு காலை கிந்திக் கொண்டு நடக்க வித்யுத் அதைக் கவனிக்க தவறவில்லை.

“என்ன ஆச்சு அவளோட காலுக்கு லிஃப்ட்ல இருந்து போகும் போது கூட நல்லா தானே நடந்து போனாள்” என்று நினைத்தவனுக்கு ஏனோ ராகவ்வை பார்க்க பார்க்க எரிச்சல் மண்டியது.

இவன் ஏதோ அவளிடம் மிஸ் பிகேவ் செய்து தான் அடி வாங்கி இருக்கிறான் என்று அறிந்தவன் அவனை முறைத்துக் கொண்டே சென்று விட்டான்.

“இவன் எப்போ வந்தான் இவன் இங்கே இருந்ததை கவனிக்காமல் அவள் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்துட்டு அடி வாங்கி இருக்கிறேனே” என்று நினைத்தவன், “யாழி உன்னை சும்மா விடவே மாட்டேன் டீ” என்று கருவினான்.

“இசை” என்று அவன் அழைத்திட சந்தோஷமாக திரும்பினாள் யாழிசை. “இது விழுந்து விட்டது” என்று அவள் தவற விட்ட துப்பிட்டாவை அவன் நீட்டிட அதை வாங்கிக் கொண்டவள் , “தேங்க்ஸ்” என்றாள். “என்னாச்சு உன் காலுக்கு” என்று அவன் கேட்டிட , “ஒன்றும் இல்லையே” என்று புன்னகைத்தவள் தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.

அவளுக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் ஏனோ அவன் அவளை இசை என்று அழைத்து விட்டால் போதும் மனது தன் வலிகளை மறந்து விட்டு வானில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்து  விடும் அவளுக்கு.

அவளது தந்தைக்கு பிறகு அவளை இசை என்று அழைப்பது அவன் மட்டுமே அதனால் தானோ என்னவோ அவன் மீது அவளுக்கு தனிப் பிரியம். தன்னவனை நினைத்துக் கொண்டே வலியை மறந்தவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!