மிரா போகச் சொல்லியும் சிபின் போகாமலே இருக்கவும், விழிகள் திறந்து அவனைப் பார்த்தவள் துடித்துப் போனாள். என்றுமே அவன் கலங்கி நின்று பார்த்ததே இல்லை. தந்தையின் தொழிலை திறம்பட கவனிப்பவன் அதில் வரும் விளைவுகளையும் தனி ஒருவனாகவே சமாளிப்பான். அவனுக்கு அறிவுரை சொல்லும் அவசியம் என்றுமே வந்ததே இல்லை.
தவறு செய்த குழந்தை ஓரமாய் நின்று தாயையே பார்த்து நிற்கும், “அவளாய் வந்து பேசுவாளா, தங்கமேன்னு என்னைக் கையில் தூக்கிக்குவாளா? எனக்கு ரொம்ப பசிக்குதே சாப்பாடு ஊட்டி விடுவாளா?” என்று ஏக்கமாய் மிரள மிரள பார்க்குமே அது போலவே நின்றிருந்தான்.
சிபின் எப்பொழுதுமே இப்படித்தான், மிரா அதிசயமாய் என்றாவது இப்படிக் கோபமாய் ஏதாவது சொல்லிவிட்டால், பின்னாடியே வந்து கொஞ்சவோ கெஞ்சவோ மாட்டான், மிரா கண்ணில் படும்படி நடமாடிக் கொண்டே இருப்பான்.
மிராவே மனசு மாறி இங்க வாடா கண்ணா என்று அழைத்தால், அப்போதே வந்து மடியில் படுத்துக் கொள்வான். தப்பு செய்தவனை மிராதான் சமாதானப்படுத்த வேண்டியதாகிப் போகும்.
மகனின் கலங்கிய விழிகளைக் கண்டவளுக்கு அதற்கும் மேல் அவன் மீதான வருத்தத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள் “என் தங்கமே” வலது கையை உயர்த்தி அவனை வா என்பது போல அழைக்க.
“மாம்” ஒரே எட்டில் தாயின் அருகில் விரைந்து வந்தவன், அவரது மடியில் படுத்து கண்ணீர் விட ஆரம்பித்தான்.
“மாம் நான் தப்பு பண்ணுறேன். அது எனக்குத் தெரியுதும்மா. பூ மாதிரி இருக்காம்மா. எந்தத் தப்புமே பண்ணாம சாரி கேக்கறாம்மா எங்கிட்ட. என்னால அவளோட கண்ணீர்! மைகாட் தாங்கிக்கவே முடியலைம்மா” தாயின் கைகளைப் பற்றிக் கொண்டவன் குலுங்கி அழ.
“கண்ணா!” மிராவுக்கு மகன் அழுவதைக் காணப் பொறுக்கவே இல்லை. பெற்றால்தான் பிள்ளையா? பிள்ளைகளின் வலி பெத்தவளுக்குத்தான் தெரியும்னு சொல்வாங்க. பெறாத தாய் மிராவுக்கும் வலித்தது. மகனின் கண்ணீர் அவரை வதைத்தது.
“அப்பா சொன்னதும் உண்மைதான் போலம்மா. பூ மாதிரி இருக்கற பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கணுமான்னு சொன்னாரு. அது ரொம்ப சரிம்மா. நான் பாவிம்மா. யாருக்குமே என்னைப் பிடிக்காதும்மா” மிராவின் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்து ஏக்கமாய் சொல்ல.
“அப்படியெல்லாம் இல்ல கண்ணா. நான் அப்பா துருவ் எல்லோருமே உன் மேல உயிரை வச்சிருக்கோம்டா. நளிராவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் டா. நீ உன் கோபத்தை விட்டுட்டு அவக்கிட்டே பழகிப் பாரேன். உன் மேல அவளுக்கு அத்தனை பிரியம்டா” மகனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினாலும் புத்திமதி சொல்ல மறக்கவேயில்லை.
“ப்ச் மாம். நான் அவளைக் கட்டாயப்படுத்தி லவ் பண்ணச் சொன்னேன். இப்பவும் அவளை மிரட்டிக்கிட்டுதான் இருக்கேன். என்னைப் பாத்தாவே மிரண்டு ஓடுவா மாம்” என்று சொன்னவனின் குரலில் அத்தனை குற்ற உணர்வு.
“ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லித் தராதது என்னோட தப்புதான் சிபின். துருவ் கூட உன்னை மாதிரிதான் போலடா. அவனும் அப்படித்தானே பிடிவாதமா நினைச்சிருக்கான். விரும்பிய பொண்ணு கிடைக்கலைன்னா அவளை தூக்கிட்டுப் போய் பலவந்தப் படுத்தனும். இல்லைன்னா மூக்கு முட்டக் குடிச்சுட்டு போதையில எங்கேயாவது இடிக்கணும், இல்லையா அந்தப் பொண்ணுக்கு வாழ் நாள் முழுவதும் மறக்கவே முடியாத அளவுக்கு நரக வேதனையைத் தரணும். ஆசிட் அடிக்கறது, நடுரோட்டுல வச்சு கத்தியால காயப்படுத்தறது, அவளோட நடத்தையை கேள்விக்குறி ஆக்குறதும் எவ்வளவு அசிங்கமான செயல் தெரியுமா?” மிரா ஆவேசமாய் பேசியதில் மூச்சு வாங்கிட.
“மாம் பிளீஸ், ரிலாக்சா பேசுங்களேன்” என்று அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
“உங்க ரெண்டு பேரையுமே நான் ஒழுங்கா வளர்த்தலை சிபின். உனக்கு மனிதத் தன்மையே சில நேரம் இருக்கறது இல்லை. அவனுக்கோ கொஞ்சமும் பொறுப்பே இல்லை. பயமா இருக்குடா. இதுல பாவம் அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையை உன்னோட கையில தந்து தப்பு பண்ணிட்டம்னு பயமா இருக்குடா” மிராவின் கண்ணீர் அவனை உருக்குலைய வைக்க.
“மாம் மாம் பிளீஸ். இனிமேல் அவளை அழ வைக்கவே மாட்டேன் நம்புங்க” என்று அவருக்கு வாக்குத் தந்தான் சிபின்.
“இதை நான் நம்பனுமாடா” மிரா நம்பாது பார்த்தார்.
“மாம் நம்புங்க. உங்க மேல சத்தியம்” தாயின் தலை மீது கைவைத்து சத்தியம் செய்தான் சிபின்.
அதில் சற்றே சாந்தப்பட்ட மிரா அமைதியாக.
“மாம் ஒரு பாட்டு பாடுங்களேன், துருவ்க்கு பாடுவீங்களே அந்தப் பாட்டு” சிபின் சொல்ல.
“அதை நீ கேட்டிருக்கியா கண்ணா?” ஆச்சரியமாகக் கேட்டாள் மகனிடம்.
தனித்து நின்ற உயிருக்கு நானும் துணையென வந்தேனடா கண்ணா. எனக்கு நீ உனக்கு நானென்று ஓருயிராய் இணைந்தோமடா, இதுவே நிறைவு என அன்பில் குளிக்கும் தருணத்தில் இளங்கதிர்களாய் ஈருயிரின் பந்தத்தில் இணைந்து, இதயத்தின் சுவாசமாய், உயிர்கொடுத்த தெய்வமாய் வந்தாய் கண்ணா… உயிர் உருக்கும் குரலில் தன் மனதில் இருப்பதை மிரா மிருதுவாய் பாடிட.
தாயின் தாலாட்டுப் பாடல், மனதை இதமாய் வருடிட. மனதில் ஒரு தெளிவும் பிறந்திட, தாயின் மடியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் சிபின்.
.. .. .. .. ..
மறுநாள் மதியத்துக்கும் மேல் ஆரியனும் மிராவும் சிபினையும் நளிராவையும் அழைத்துப் பேசினார்கள் “சிபின் உனக்கு ஹனிமூன் போகறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நாங்களே பண்ணிட்டோம். அம்மாதான் அந்த ப்ளேஸ் ஓகே பண்ணினா” ஆரியன் சொல்ல.
“உங்களுக்கான டிரெஸ் நாங்களே பார்த்து வாங்கிட்டோம். அண்ட் நீங்க கிளம்பினா மட்டும் போதும். ரெண்டு மாசம் உங்களைப் புரிஞ்சுகிட்டு ஒத்துமையா கிளம்பி வாங்க” மிரா சொல்லவும், சிபின் முகத்தில் சந்தோஷம். அவனும் போக நினைத்ததுதான்.
“சரிப்பா நானும் அப்பாவும் துருவ் பக்கத்துல இருக்கலாம்னு பார்க்கறோம். எப்போ வேணாலும் கண் முழிக்க வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. இப்பவே கிளம்பிட்டோம்” என்ற மிரா நளிராவின் வாடிய முகம் பார்த்து அவளை அருகில் அழைத்தார்.
“அத்த எங்க கூடவே இருங்களேன்” அவரிடம் நளிரா கேட்டுக் கொள்ள.
“சிபின் உன்னை நல்லா பார்த்துக்குவான்மா. தனியா இருந்தீங்ன்னா உங்களுக்குள் புரிதல் வரும். அவனுக்கும் உரைக்கும் படி புத்தி சொல்லி வச்சிருக்கேன்” அவளுக்கு புரிய வைத்த மிரா சிபினுக்கு கண் காட்டினாள்.
“ஓகே மாம் நாங்க வெளியே கிளம்பறம். நீங்க கவனமா இருங்க” என்று கூறிய சிபின் “நீ வா அம்மாவை அழ விடாதே” என்று அழைத்துப் போக.
நமக்கு இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு ஹனி. அண்ட் உன்னைப் பார்த்தால் என்னோட உணர்வுகள் இன்னும் கிளர்ந்து எழனும். அப்பதானே நம்மோட தனிமை இன்னும் சுவாரசியமா இருக்கும். எனக்குப் பிடிச்ச மாதிரி உடுத்திக்கோயேன்டி. பிளீஸ் ஹனி. உன்னை எப்படியெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கேன் தெரியுமா?’ மயக்கும் குரலில், விழிகளில் அவளுக்கான காதல் வழிந்திட, கட்டை விரல் அவளது கீழ் உதட்டை அழுத்தமாய் வருடி விட. மகுடிக்கு மயங்கும் சர்பமாய் முற்று முழுதாக மயங்கிப் போனாள் பாவையவள்.
இதற்கு மேல் மறுப்பாளா அவள். மறுபேச்சில்லாது அவன் தந்த உடையை அணிந்து கொண்டு கிளம்பினாள்.
அணிந்திருந்த புடவைக்கு தக்க அலங்காரம் செய்து தன் முன் நின்றவளை எச்சில் விழுங்கிட தாபமாய்ப் பார்த்தான் கள்வன்.
மூங்கில் தோள்களில் கரங்களைப் பதித்தவன், அதன் மென்மையாய் வன்மையாய் சோதித்திட, இதழ்களோ கழுத்தில் சூடாய் உரசிட, “ஹனி பேசாம இங்கயே செக்கண்ட் நைட் கொண்டாடுவோமா” என்றவன் அவள் இதழ்களை வன்மையாய் தன் இதழ்களால் கொய்தான்.
என்னவோ செய்துகொள் என்று அவனிடம் தன்னை ஒப்புவித்தாள் பாவையும்.
ஒருவரை ஒருவர் தழுவி நின்ற நிலையைப் பார்க்க அத்தனை அழகு. சர்பங்கள் இரண்டும் சூடான மூச்சுக்களோடு ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து வளைந்து நிற்குமே. அதுபோல ஒரு நிலையில் இருவரும் விலகவே மனமில்லாமல் நின்றனர்.