அன்னமே 8 

3.4
(5)

அன்னமே 8 

 

மக்களே ஒண்ணு கேட்கணுமே. நான் அதிகம் ஸ்டார் கமெண்ட் எல்லாம் தர சொல்லி கேட்கரதே இல்லைதானே. விருப்பம் இருந்தா தாங்கன்னுதானே சொல்லுவேன். ஆனால் எல்லாருமே படிச்சுட்டு சைலன்ட் ரீடரா இருக்கறதுதான் என்னை சோர்வடைய செய்யுதுன்னு தோணுது. லைக் கமெண்ட் இதெல்லாம் தரலாமே 🤗

கடைக்கு வரும் போகும் மக்களில் ஆயிரக்கணக்கான பேரைப் பார்த்துவிட்டார் கருணா. நல்லவன் கெட்டவன் மொள்ளமாரி குடிகாரன் என ஊரில் இருக்கும் மொத்த வரலாறும் தெரியும் அவருக்கு.

“மனசுல பட்டத சொல்லிப்புட்டேன் கண்ணப்பா. இனிமேட்டு உன்பாடு பாத்துக்கோ” எதார்த்தமாக சொல்லிவிட்டார்.

பெத்தவனுக்கோ அடிவயித்துல நெருப்பைக் கட்டுன மாதிரி இருந்தது கருணாவின் அறிவுரை. அதற்கு மேல் அங்கே இருக்க முடியாம செருப்பை மறந்து வீட்டை நோக்கி கிளம்பிவிட்டார்.

நண்பனை பார்த்த கருணாவுக்கு, கருப்புச்சாமி வீட்டில் வேலை செய்யற அருக்காணி சொன்ன விஷயம் உறுத்தியது. கண்ணப்பனிடம் அதைச் சொல்லாமல் விடுத்தார்.

“சுலோச்சனாம்மாக்கு செவ்வந்தி புள்ளைய கண்டாவே புடிக்கல, எப்ப பாத்தாலும் கரிச்சுக் கொட்டுறாங்க. என்னமோ பையனை வளைச்சுப் போட வந்த மாதிரி சாடை பேசிட்டு இருக்காங்க புள்ளன்னு” கருணா வீட்டம்மா அம்சாகிட்டே சொல்லியிருந்தாள். 

இதை கண்ணப்பன்கிட்ட சொன்னா செவ்வந்தியை ஒரேயடியா முடக்கிப் போடுவான் என மனதில் மறைத்தார்.

“ஏனுங்க மாமா இப்படி பண்ணிப்புட்டீங்க. நானு என்னவோ வாயிருக்கா பாட்டுக்கு சொல்லிப்புட்டேன். நீங்க அதைப் போய் அந்தப்பிள்ளை அப்பன்கிட்ட போட்டுக் கொடுத்துப்புட்டீங்க. இப்ப அந்த மனுஷன் வீட்டுல போய் அந்தப் புள்ளைய வாட்டி வதைப்பான். உங்களுக்கெதுக்கு இந்த வேலை? நமக்கும் செவ்வந்தி வயசுல பொண்ணு இருக்கா நினைவிருக்கட்டும்” அம்சா விசனப்பட்டாள்.

“கண்ணப்பன் பொண்ணு மேல உசிரையே வச்சிருக்கான் அம்சா. அமுதாகிட்ட சொன்னா பிள்ளையை பாடா படுத்துவான்னு என்கிட்டவே சொல்லிட்டு இருந்தவன். அவன் போய் கோபப்படுவானா. நிதானமான மனுஷன் அவன்”

“எனக்கு மனசே கேக்கல மாமா. நான் சொன்னதை இப்படி போட்டு பானையை உடைக்கிற மாதிரி உடைச்சுட்டு ஒண்ணுமில்லன்னு சமாளிக்காத”

கூறு பத்தாத மனுஷன், இப்படி பண்ணிட்டானே செவ்வந்தியை நினைத்து நினைத்து சஞ்சலமானார்.

செவ்வந்தி வீட்டில்,

விடுவிடுவென வீட்டை சுத்தி போடப்பட்ட வேலியின் படலை திறந்து உள்ளே போன கண்ணப்பன் அப்படியே நின்றுவிட்டார்.

துவைக்கிற கல்லு மேல சோர்ந்து அமர்ந்திருந்த மகளை பார்க்க கோபம் குறைந்தது.

“கோட்டிக்கார கழுதையை வச்சுக்கிட்டு ஒரு கோயில் குளம்னு போவ முடியுதா? நாளைக்கு ஏகாதசி விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு போவலாமுன்னு இருந்தன்” அடுப்பில் தண்ணி காய, தென்னமட்டையை உடைத்து வைத்தார்.

“ம்மா சும்மா அனத்திட்டே இருக்காதம்மா. வயிறு வலிக்குது. அப்பனுக்கு போனு பண்ணி சோடா வாங்கிட்டு வரச் சொல்லு” முனங்கியவளை பார்க்க வீட்டுக்கு தூரமாயிருக்கா அதான் அப்படி எதிர்க்க நிக்கறது யாரு என்னன்னு பாக்காம சோர்ந்து வந்துருக்கா நினைச்சவருக்கு நெஞ்சை பிசைந்தது.

அவசரப்பட்டு எதையாவது பேசியிருப்பேன். புள்ளய இன்னும் உடைச்சுருப்பேன். உள்ளே போகாது படியில் உட்கார்ந்தார்.

“மாமா வந்துட்டீயா. அவளுக்கு வயிறு வலிக்குதாமா அண்ணன் கடையில சோடா ஒன்னு வாங்கிட்டு வா”

“ஏய் தண்ணி விளாவி வச்சுட்டேன். எந்திருச்சு குளிச்சுட்டு வா, துணிய எடுத்துட்டு வரேன்” அமுதா வீட்டுக்குள் போனார்.

கண்ணப்பன் சைக்கிளில் ஏறி கடைக்கு போனார் மகளுக்கு சோடா வாங்க. மனம் அப்போதைக்கு சமாதானம் ஆனாலும் கருணா சொன்னதில் நியாயம் இருப்பதாய் அவர் மனது அடித்துச் சொன்னது. 

இன்னும் வீடு போய்ச் சேராமல் கட்டிலை குடிசைக்கு வெளியே தூக்கி போட்டு படுத்துவிட்டான் கருப்புச்சாமி.

தலைக்கு கைக்கொடுத்து மல்லாக்க படுத்து வானத்தை பார்த்தவன் முகத்தில் அசட்டு சிரிப்பும் வெட்கமும் நெளிந்தது.

அடிக்கடி உதட்டை கடித்துச் சிரித்தவன் புரண்டு புரண்டு படுத்தான். மழைச் சாரல் உடலை நனைக்க சொரணை இல்லாம படுத்துக்கிடந்தான்.

அங்கே பாயில் படுத்திருந்த செவ்வந்திக்கும் அவன் நினைவுதான்.

காதல் விதை நெஞ்சில் விழுந்த தருணம்.

பார்வையில் பதிந்து நினைவுகளில் அலைபாய்ந்து

என்னதிது என உள்ளங்கள் தடுமாறி திகைத்து நிற்கும்.

என்னவோ இல்ல இதுதான் காதல் நெஞ்சம் உணர,

இருவர் அல்ல ஒருவர்தான்

என விதையானது காதலாய் உறுமாறி உரக்க கூறும். 

இது காதல் விதி.

இவர்கள் மனதில் போடப்பட்ட விதையை மண்ணில் ஊறும்முன்னே வெட்டி எரிய தடைகள் உருவாகிவிட்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அன்னமே 8 ”

Leave a Reply to Gowri Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!