அன்று….
கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில்,
“மதர் மதர்” கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக குடில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மதர் மேரியை, கத்தி அழைத்தபடி தேவாலயத்திற்குள் நுழைந்தான் அவன்.
குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்த மேரி தன்னை நோக்கி ஓடி வரும் அச்சிறுவனை புன்னகையுடன் பார்த்தவர்,
“என்னாச்சு டா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர” என்று வினவினார்.
“மதர் அது” வேகமாக ஓடி வந்ததில், தன் இடையில் கை குற்றி மூச்சு வாங்கியவன் சிறிது வினாடிகள் கழித்து ஆசுவாசமடைந்த பின்,
“அது மதர் நம்ம ஜீவா இருக்கான்ல அதான் புதுசா வந்திருக்கிற சமையல் ஆன்டியோட பையன் அவன் சொன்னான், இந்த உலகத்துல அப்பா அம்மா இல்லாம யாரும் வர முடியாதாம்.” என்று அவன் சொல்லும்போதே மதர் மேரியின் முகம் வாடிவிட, கையில் இருந்த மலரை கீழே வைத்து விட்டு அவன் முன் எழுந்து நின்றவர் எதுவும் பேசாது அவனையே பார்த்தார்.
மதரின் முகத்தில் வந்து போன உணர்வுகள் எதையும் படிக்க தெரியாத அச்சிறுவனோ ,
” நான் ஒன்னும் கடவுளோட குழந்தைலாம் இல்லையாம். எனக்கும் அப்பா அம்மா எல்லாம் உண்டாம்.” என்று விடாமல் பேசிக் கொண்டே இருக்க, அடுத்து அவன் கேட்ட போகும் கேள்வியை எண்ணி மதரின் உள்ளம் தவிக்க துவங்க, ‘அந்தக் கேள்வியை மட்டும் கேட்டுடாதடா’ என்று அவர் தன் மனதிற்குள் மானசிகமாக வேண்டிக் கொண்ட நொடி,
“அப்போ என் அம்மா அப்பா யாரு மதர்?” என்று அவன் கேட்டுவிட, மதர் மேரியோ பதில் சொல்ல முடியாது திணறிப் போனார்.
@@@@@@@@
இன்று..
மும்பையில்,
துரியனின் கொலை மிரட்டலால் அச்சத்தில் உறைந்திருந்த மதுமதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.
‘இனி நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு தான் ஆபத்து .
இங்கிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும்.
அவன் செய்த கொலைக்கு நாமே சாட்சி. அப்படி இருக்கும் பொழுது விட்டுவைப்பானா நம்மை?
ஆதித்யா என்ன தான் நம்மிடம் மென்மையாக நடந்து கொண்டாலும்.அவனுக்கு பொறுமை என்பது கொஞ்சமும் கிடையாது.
கோபம் வந்தால் உடனே துப்பாக்கியை எடுத்து விடுவான். அதை நாமே எத்தனை முறை பார்த்திருக்கிறோம் , எத்தனை பேரை நாம் பார்க்க அன்று அந்த பாழடைந்த வீட்டில் வைத்து கொலை செய்தான். அப்புறம் அந்த சிவகுரு. இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் அவனை போய் நம்பிவிட்டேனே .!
இது எவ்வளவு பெரிய பிழை ! ஒரு உயிரை கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன ? கொலையை குற்ற உணர்ச்சியே இல்லாமல் செய்யும் இவனை போய் நம்பிவிட்டேனே !
அத்தகைய கொடூரத்தை புரிந்தவனை போய்…’ எண்ணும் பொழுதே அவளுக்கு கண்ணீர் வர,
“எவ்வளவு நம்பினேன் ஆதி” என்று வாய்விட்டே கூறியவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆதித்யாவை பிடித்திருந்த தனது கரத்தை அவனிடம் இருந்து அவனே பிரித்துவிட்ட காட்சியே அவள் கண் முன் வந்து போக பெண்ணவள் கலங்கி தவித்தாள்.
அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பணிப்பெண், மது சாப்பிடுவதற்கு உணவை கொடுக்க,
” வேண்டாம் ” என மறுத்து விட்டாள் மது.
ஆனால் அந்த பெண்மணியோ எதுவும் பேசாமல் சாப்பாடு தட்டை அவள் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் நேரம் மதிக்கு ஒரு யோசனை தோன்ற,
” ஆ ஆ ஆ ” என்று தன் வயிறை பிடித்துக்கொண்டு அலறினாள் மதுமதி.
அவள் போட்ட சத்தத்தில் பயந்து போன பெண்மணி ‘ ஐயோ என்னாச்சு மா ‘ என்று பதற்றத்துடன் அவள் அருகில் வர.
” என்னை மன்னிச்சிருங்க மா ” என்ற மதி. அந்த பெண்மணியை கீழே தள்ளியவள் ஓடி வந்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வெளியே ஓடினாள் .
ஆதித்யா சக்கரவர்த்தி வாழும் அரண்மனை காடு, கடல் என பல அடுக்கு பாதுகாப்பை கொண்டது.
முதல் அடுக்கு மின்சாரம் பொருத்திய பெரிய கோட்டை சுவர்.அங்கே சுமார் இருபதில் இருந்து முப்பது வகையான வேட்டை நாய்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலாளிகள் எந்நேரமும் விழிப்புடன் இருப்பர்.
அவர்களை தாண்டி அடர்ந்த கொடிய மிருகங்களை கொண்ட காடு. பிறகு கடல், இறுதியாக அவனுக்கு உரிமையான சாலை ஆக அது ஒரு தீவு.
அந்த தீவுக்குள் ஆதித்யாவின் அரண்மனை மட்டும் இல்லை. அவனது அரண்மனைக்கு பக்கத்தில் தான் துரியனின் அரண்மனையும் உள்ளது அவனுடன் தான் விக்டர் தேசாய் வசிக்கிறார். வீரா மற்றும் நாகா ஆதித்யாவுடன் தங்கிருக்கின்றனர்.
ஆக இது அரண்மனை அல்ல ஜித்தேரியின் மரண வாயில். ஆனால் இது எதை பற்றியும் அறியாமல். அவனது பலத்தை பற்றி தெரியாமல். குருட்டு பூனை விட்டதில் ஏறின கதையாக பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் தப்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்ட மதுமதி,கோரப் பற்களை கொண்ட நாய்களையும், துப்பாக்கி ஏந்திய வீரர்களையும் பார்த்தே மிரண்டு விட, பார்வையற்ற பூனை எப்படி வீட்டின் விட்டதின் மேல் ஏறி எங்கே குதிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் விட்டத்திலேயே நின்று கொண்டிருக்குமோ, அது போல அந்த அறையில் இருந்து ஒருவித குருட்டு தைரியத்தில் தப்பித்த மது அதன் பிறகு எங்கே எப்படி செல்வது என்று புறியாமல் அப்படியே நின்றுவிட்டாள் .
பிரம்மாண்டமான அந்த அரண்மனையில் உள்ள பெரிய பெரிய சிற்பங்களும், அறைகளும் அவளை மேலும் திக்குமுக்காட வைக்க, சில நொடிகள் எந்த திசையில் செல்லவது என்று குழம்பினாள்.
பின்பு, ‘ இப்படியே நின்றால் மாட்டிக்கொள்ள கூடும் ‘ என்பதை உணர்ந்து, ஒவ்வொரு மறைவான இடத்திலும் பதுங்கி பதுங்கி யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி எச்சரிக்கையுடன் தோட்டத்திற்குள் சென்று ஒரு அடர்ந்த புதருக்குள் மறைந்தாள் .
ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு கொண்டு விழிப்புடன் இருக்க , எப்படியோ ஒளிந்து மறைந்து அந்த வீட்டை கடந்த மது மதி , தன் உயிரை கையில் பிடித்து கொண்டு காட்டு பகுதிக்குள் ஓட ஆரம்பித்தாள் .
சிறிய ஒளிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட அந்த அடர்ந்த வனத்துக்குள். இருளின் கை ஓங்கி இருந்தது. இருட்டில் பாதையும் புலப்படவில்லை. உடலிலும் சக்தி இல்லை. போதாகுறைக்கு ஆங்காங்கே விட்டு விட்டு கண்ணடித்த மின்கல விளக்குகள் அவளுக்கு ஆதித்யாவின் காவலர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை எச்சரிக்கை விடுக்க, நடுக்கத்துடன் தட்டு தடுமாறி அந்த இருட்டுக்குள் ஓடினாள். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் கதையாக சருகுகள் மிதிபடும் சத்தம் கூட அவளை மிகவும் அச்சுறுத்த, போதாகுறைக்கு குண்டடிப்பட்ட காயதில் வேறு ரத்தம் கசிந்து, காயம் உயிர் போக வலித்தது.
இதில் மிருகங்களின் சத்தம் வேறு அவளை பயம்காட்ட,
” பாதையே தெரியலையே எப்படி போறது ” திசை தெரியாமல் திணறினாள் .
” ஒருவேளை அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா ??” என்று அவள் எண்ணிய மறுநொடி. நடுக்கத்தில் மூச்சு வேகமாக வாங்க, இதயம் காற்று பட்ட ஜன்னல் போல ‘ படார் படார் ‘ என்று அடித்துக்கொண்டது. வாயில் வந்த கடவுள் பெயரை எல்லாம் சொல்லி வேண்டினாள்.
” ஒரு வெளிச்சம் கூட இல்லையே. எந்த டைரெக்ஷ்ன்ல போனா ரோட் வரும் எவ்வளவு நேரமா போறோம். கடவுளே கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சா நல்லா இருக்கும் ” என்றபடி நடந்தவளுக்கு தொலைவில் ஹெட் லைட் வெளிச்சம் தெரிந்தது. உடனே வெளிச்சம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினாள்.
ஆதித்யாவின் அலுவலக அறைக்குள் வேகமாக ஓடி வந்த வீரா,
” மதுமதி ஹஸ் எஸ்கேப்ட்” மதுமதி தப்பித்துவிட்டாள், என்று மூச்சிரைக்க கூறினான்.
” ம்ம் அதான் பார்த்துட்டு இருக்கோம் ” என்ற துரியன், ஆதித்யாவின்
அறையில் இருக்கும் பெரிய தொலைக்காட்சி பெட்டியை காட்டினான் .
மது பதுங்கி பதுங்கி யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து செல்லும் காட்சிகள் லைவாக ஓடிக்கொண்டிருந்தது.
” நமக்கு தெரியாம போறாங்களாம். !! அதான பார்த்தேன் தயாளன் பொண்ணு எப்படி பயந்த சுபாவம் உள்ளவளாக இருக்க முடியும்ன்னு ?? அப்பனை மாதிரியே மறைஞ்சு ஓடுறா ” எள்ளலுடன் கூறிய துரியனின் பார்வை ஆதித்யாவின் முகத்தில் தெரியும் உணர்வுகளை, படிக்கும் ஆர்வத்துடன் ஆராய்ந்தது .
ஆனால் ஆதித்யா ஒரு வார்த்தை கூட பேச வில்லை. கைகள் ரெண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு உணர்வுகள் அற்ற விக்கிரகம் போல நின்றான். இல்லை அப்படி காட்டிக்கொண்டான் ! அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவனை ஏதோ ஒன்று கட்டிப்போட்டது.
அது துரியனின் நட்பா !இல்லை அவன் வகிக்கும் பொறுப்பா! இல்லை வேறு எதுவா! தெரியவில்லை ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் போல இறுக்கத்துடன் நின்றான் .
” இப்போ என்ன சொல்ல போற ஆதி?? ” ஆதித்யாவின் விழிகளை
பார்த்தபடி தன் கன்னங்கள் அதிர கேட்டான் துரியன் .
” ஷி வில் பீ பக். அவள் திரும்பி வருவாள் ” புயலை உள்ளடக்கிய ஆதித்யாவின் குரலில் அவனது மொத்த இயலாமையும் ஆத்திரமாக வெளிவந்தது.
வெளிச்சம் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடி வந்தவள், கடலின் கரையை பார்த்து எச்சில் விழுங்கினாள்.
கடலிலா குதிக்க முடியும், நீச்சலும் தெரியாதே, அவ்வளவு தானா! கண்ணீர் வழிய இயலாமையுடன் சுற்றி முற்றி பார்த்தவள் கொஞ்ச தூரத்தில், யாச்ட் எனப்படும் ஒரு வகையான படகை பார்த்தவள், அதை நோக்கி ஓடினாள்.
படகை நெருங்கும் பொழுது தான் இதுபோல நிறைய வித்யாசமான படகுகள் இருப்பதை கவனித்த மது, அதன் அருகே வாட்ட சாட்டமாக கருப்பு உடையில், அலைபேசியில் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தாள். அவனது தோற்றம் அச்சமாக இருந்தாலும் வேறு வழியின்றி அவன் அருகே சென்றவள்,
“அண்ணா ப்ளீஸ் என்னை கரை பக்கம் கொண்டு போக முடியுமா” மூச்சிரைக்க வினவினாள்.
அவனோ மதுவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், அலைபேசியை அணைத்துவிட்டு, சரி என்பதாய் தலையசைத்து, அவள் உள்ளே ஏற உதவி செய்தான்.
மதுவுக்கு அவனது அழுத்தமான பார்வை பயத்தை கொடுத்தாலும், கரையை அடைய வேறு வழியும் இல்லாததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சில மணி தூர பயணத்தின் முடிவில் கரையை அடைந்த மது, அவனுக்கு நன்றி கூறிவிட்டு, சாலையை நோக்கி மகிழ்ச்சியுடன் ஓடினாள்.
தப்பித்து செல்ல வாகனங்கள் ஏதும் வருகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். கண்ணுக்கு தெரிந்த வரை எந்த வாகனமும் வராததை எண்ணி கவலையுற்ற மது,
” அவங்க நம்மளை தேடி வர்றதுக்குள்ள நாம இங்க இருந்து கிளம்பணுமே , இப்போ என்ன பண்றது ?? ” மூச்சு ஒரு பக்கம் வாங்க, மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவர்கள் வந்தால் கூட எழுந்து ஓட உடம்பில் தெம்பில்லாமல். இறைவன் மீது பாரத்தை போட்ட மது அப்படியே மடிந்து சாலையில் அமர்ந்தாள்.
வெகு நேரமாகியும் வாகனங்கள் எதுவும் வராமல் போக கவலையுடன் இருந்தவளுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது போல அவளுக்கு எதிரே ஒரு கார் வருவது தெரிய. சட்டென்று எழுந்தவள் ‘ கடவுளே ரொம்ப நன்றி. எப்படியோ தப்பிச்சிட்டேன் ‘ என மகிழ்ச்சியுடன் வேகமாக காரின் முன்னால் நின்று தன் கைகை குறுக்கே நீட்டி வேகமாக ஆட்டினாள்.
காரும் சில தூரம் தள்ளி சென்று பிரேக் போட்டு நிற்க, வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து,
” அண்ணா என்னை இங்க இருந்து ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” கெஞ்சி கேட்டாள் .
– காதல் சொல்வானா?
Post Views: 384