அதைக் கேட்ட ஜேபி, “மற்றைய போலிஸ்காரனுங்க போல இவனை நினைச்சிடாதீங்கடா…. இவன் ரொம்ப மோசமானவன். சரக்கு பத்திரமா நான் சொன்ன இடத்துக்கு போகணும்… ஏதாச்சும் தப்பு நடந்திச்சி உங்களை உயிரோட விடமாட்டன்….” என்றார்.
“இல்லை சார், விவரம் தெரிஞ்சதில இருந்து இந்த தொழில் பண்ணிட்டு இருக்கிறம்… எங்களுக்கு தெரியாது. நீங்க கவலையே படாதீங்க… நீங்க சொன்ன வேலையை கச்சிதமாக முடிச்சிடுறம்….” என்றவர்கள் லாரியை எடுத்துக் கொண்டு சென்றனர்.
செக் போஸ்டில் அமுதனுடன் நின்று கொண்டு இருந்த யுவராஜ். தனது பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான். இதை பார்த்த அமுதன், “ஏன் யுவா இந்த சிகரெட்டை உன்னால விட முடியாதா….? முன்னாடி சிகரெட் பிடிக்கிறவங்களையே உனக்கு பிடிக்காது…. இப்போ நீயே சிகரெட் பிடிச்சிட்டு இருக்க…” என்றான் கவலையுடன்.
அமுதன் தோள் மீது கையை போட்ட யுவராஜ், “காலம் தந்த காயத்தின் விளைவு இது….” என்றான் கசந்த புன்னகையுடன்.
போன் வர அதை எடுத்து காதில் வைத்தான். அந்தப் பக்கம் சொன்ன செய்தியைக் கேட்டவன், கண்கள் சிவந்தன. வேட்டையாடும் சிங்கத்தின் தோற்றத்தில் இருந்தவன், அமுதன் பக்கம் திரும்பி, “அமுதா ஜேபியோட ஆளுங்க சரக்கோட வர்றானுங்க….” என்றான்.
யுவராஜ் சிகரெட்டை காலின் கீழே போட்டு, அதை தனது ஷூவால் அணைத்து விட்டு, அமுதனைப் பார்த்து சிரித்தான். அவனது சிரிப்பை பார்த்த அமுதனுக்கு யுவராஜ் ஏதோ ஏடாகூடமாக செய்யப் போகிறான் என்று தோன்றியது.
“யுவா, ஏதாச்சும் செஞ்சி வச்சிடாதடா… அப்புறம் அந்த கமிஷனர்கிட்ட திட்டு வாங்க என்னால முடியாது…. நிற்க வச்சி அரைமணி நேரம் லெக்சர் எடுப்பாரு…” என்றான் அமுதன்.
யுவராஜ் எதுவும் சொல்லாமல் ஜீப்பில் ஏறியவன், அமுதனையும் ஏறச் சொல்ல, “ஆத்தி இவன் என்ன செய்யப் போறான்னு தெரியலையே…” என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினான். செக் போஸ்டில் இருந்து கொஞ்ச தூரத்தில், நடு வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கி வந்து, அதன் முன்பக்கம் ஸ்டைலாக கால்மேல் கால் போட்டுக் கொண்டு, மீசையை ஒரு கையால் முறுக்கிக் கொண்டு இருந்தவனைப் பார்த்து தனது தலையில் கைவைத்து கொண்டு இருந்தான் அமுதன்.
செக் போஸ்டுக்கு அருகில் வந்த லாரி நின்றது. ஒருவன் தனது தலையை லாரியில் இருந்து வெளியே விட்டு போலிஸ் இருக்கானு பார்த்தான். அவனது கண்களுக்கு யாரும் தென்படவில்லை. உள்ளே இருந்தவனிடம் போலிஸ் யாரும் இல்லடா என்றான். சரி என்றவன் மீண்டும் லாரியை ஸ்டார்ட் செய்தான்.
கொஞ்ச தூரத்தில் போலிஸ் ஜீப்பை நிறுத்தி விட்டு, அதில் ஸ்டைலாக இருந்த யுவராஜ்ஜை பார்த்தவன், தனக்கு அருகில் இருந்தவனிடம், “என்னடா இவன் இப்பிடி நடு ரோட்ல ஜீப்பை நிறுத்தி வச்சிருக்கிறான்…. என்ன பண்ணலாம்… ?” என்றான்.
அதற்கு மற்றவனோ, “நம்மளோட லாரியில அடிபட்டு சாகணும்னு அவனுக்கு விதி போல…. நீ பேசாம நடுரோட்ல நிற்கிறவனை அடிச்சு தூக்கிட்டு போ…” என்றான்.
“சரி…” என்றவன் லாரியின் வேகத்தை கூட்டினான். லாரி வேகமாக வருவதை பார்த்தும் அமைதியாக இருந்தான் யுவராஜ். ஆனால் அமுதன் பயந்து விட்டான். “யுவா இந்த பக்கம் வாடா… அவனுங்க வர்ற வேகத்தில உன்னை இடிச்சிட போறானுங்க…” என்றான்.
லாரி பக்கத்தில் வந்ததும் தனது துப்பாக்கியை எடுத்து லாரியின் டயரை குறிவைத்து சுட்டான். இன்றும் அவனது குறி தவறவில்லை. லாரி தடுமாறிய படி போய் ஒரு மரத்தில் முட்டி நின்றது. லாரியில் இருந்து கீழே இறங்கி ஓட முயன்றவர்களை பிடித்தனர் அமுதனும் யுவராஜ்ஜூம்.
அமுதனிடம் அவர்களை ஜீப்பில் விலங்கு மாட்டி விட்டு வரச் சொன்னவன். பெட்ரோல் எடுத்து அந்த லாரியின் மீது ஊற்றினான். பின் அதை தீயிட்டு கொழுத்தினான். ஒரு லாரி போதைப் பொருள் பாக்கெட் போதைப் பொருளும் எரிந்து சாம்பலானது.
ஜீப்பில் இருவரையும் விலங்கு போட்டு விட்டு திரும்பிய அமுதனுக்கு தீப்பற்றி எரியும் லாரிதான் முதலில் தென்பட்டது. ஒரு நிமிடம் பதறி விட்டான். வேகமாக யுவராஜ் அருகில் வந்தான். அவனைப் பார்த்து சிரித்தவனிடம், “என்னடா பண்ணி வச்சிருக்க….?” என கேட்க, யுவராஜ் வழமை போல ஒரு புன் முறுவலை உதிர்த்தான். அதைப் பார்த்து கடுப்பாகிய அமுதன். “நீ என்னடா நினைச்சிட்டு இருக்க…? சரக்கோட இருக்கிற லாரியை வச்சி ஜேபியை அரெஸ்ட் பண்ணியிருக்கலாம்லடா..” என்றான்.
அதற்க்கு யுவராஜ், “நாம அரெஸ்ட் வாரண்ட்டோட போறதுக்கு முன்னாடியே அவன் பெயிலோட நிற்பான்…. அவன் கையும் களவுமாக மாட்டுவான்…. அப்ப இருக்கு அவனுக்கு, இந்த போதைப் பொருள் மட்டும் சிட்டிக்குள்ள போயிருந்தா எத்தனையோ பேருக்கு பாதிப்பு வந்திருக்கும்…. அதை தடுத்திட்டம். அவ்வளவும் போதும்…. இவனுங்களை நம்மளோட இடத்தில கட்டி வை. காலையில பார்க்கலாம்….”
யுவராஜ் சொன்னதை கேட்டதும் அமுதன், “சரிடா நீ சொல்ற மாதிரியே பண்ணிடலாம்….” என்று சொல்லிவிட்டு அவர்களை ஜீப்பில் ஏற்றுக் கொண்டு யுவராஜ் சொன்ன இடத்திற்கு சென்றான். யுவராஜ் தனது வண்டியை எடுத்து வர போன் பண்ணிவிட்டு நிற்க, சிறிது நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் வண்டியை எடுத்து வந்தார். யுவராஜ் அதில் குவாட்டஸ்கு வந்தான்.
கதவில் கைவைக்க கதவு திறந்து கொண்டது. ‘இந்த டைம்ல கதவை பூட்டிட்டு இருக்கலாம்ல. அப்பிடி என்ன பண்ணிட்டு இருக்கா?…. போகும் போது சொல்லிட்டு தானே போனேன்…’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தான். அங்கே சோபாவின் கீழே அமர்ந்து கால்களை தனது கையால் கட்டிக் கொண்டு சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டு இருந்தாள் கார்த்தியாயினி.
அவளைப் பார்க்க சிரிப்புதான் வந்தது. மெல்ல அவள் அருகில் வந்தான். அவன் வந்ததும் தெரியாமல் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை எழுப்ப நினைத்தவன், பின் எழுப்பாமல் தனது கைகளில் தூக்கிச் சென்று படுக்க வைத்து விட்டு குளித்து வந்தான்.
குளித்து விட்டு வந்தவனுக்கு பசி எடுக்க, ஹாலுக்கு வந்து, சாப்பாட்டை எடுத்து பிரித்து உண்ண ஆரம்பித்தான். சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு விக்கல் எடுத்தது. பசியினால் தண்ணீர் எடுக்காமல் இருந்துவிட்டான். அப்போது ஒரு கரம் அவனுக்கு தண்ணீர் போத்தலை நீட்டியது. நிமிர்ந்து பார்க்க, அவன் மனைவி குழந்தை முகத்துடன் நின்றிருந்தாள்.